சம காலத்தில் எழுதுபவர்களின் எழுத்துகளை அதிகமாக வாசித்திருக்காத நிலையில் கவிப்பித்தன் என்பவர் எழுதிய ஈமம் என்றொரு நாவலை வாசித்து முடித்தேன். அவர் ஏற்கெனவே நீவாநதி, மடவளி என இரு நாவல்களை எழுதியுள்ளார் என்கிறது நாவலின் முன்னுரை. ஒரு வித்தியாசமான களமாக, ஒரு பிணவறையில் தொடங்கிய கதை பின்னர் உயிர்த்தெழுதல், காதல், கைவிடுதல், உறவுச் சிக்கல், வாழ்வதற்கான போராட்டம் என்னும் பாதையில் சென்று மற்றொரு காதலின் தொடக்கத்தில் முடிந்தது.
நாவலாசிரியர் வருவாய்த் துறையில் பணியில் இருக்கிறார் என நண்பர் கூறினார். நாவலும் ’சக வருவாய்த் துறை அலுவலர்களுக்கு’ சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்தத் துறையில் இருந்துகொண்டு எழுதுவது என்பது பெரிய சவால் என்பதை மறுப்பதற்கில்லை. கடும்பணிச் சுமை, உளவியல்ரீதியான நெருக்கடி என அனைத்துச் சிக்கல்களையும் தாண்டி அங்கிருந்து ஒருவர் எழுதுகிறார் என்பது ஆசுவாசம் அளிக்கவே செய்கிறது.
நாவல் போகிறபோக்கில், குடியின் தீங்கையும் சொல்லாமல் சொல்கிறது. கைக்குழந்தையை வைத்துக்கொண்டு கிடைக்கும் சொற்பப் பணத்தையும் குடித்துத் தீர்க்கும் தகப்பனை நாவல் நம் முன் நிறுத்தும்போது, அப்படி என்ன தான் இருக்கிறது இந்தப் பாழாய்ப்போன குடியில் என்று தான் தோன்றுகிறது. ஓரிடத்தில், அந்தத் தகப்பன் இரவில் குடித்துவிட்டு உறங்கிவிடுகிறான். காலையில் விழிப்பு தட்டியபோது, அந்தச் சின்னஞ்சிறிய குழந்தை அவனது கால் கட்டை விரலைச் சூப்பிக்கொண்டிருக்கிறது. பிறந்து சில மாதங்களில் தாயை இழந்த குழந்தை, தந்தையைத் தவிர ஆதரவென யாருமற்ற அந்தக் குழந்தை அப்படி நிற்கும் காட்சி சட்டெனப் பதைபதைக்க வைக்கிறது. ஆனால், நாவலாசிரியர் எந்த இடத்திலும் உணர்வைச் சுரண்டும் தன்மையில் வளவளவெனச் சம்பவங்களை நீட்டிச் செல்லவில்லை. அதே வேளையில் தவிர்த்திருக்கப்பட வேண்டிய சில சம்பவங்களை விரிவாக விளக்கவும் செய்கிறார்.
ஒண்ட ஓரிடமும் கிடைக்காத, தோள்சாய ஒருவரும் இல்லாத மகேந்திரனுக்கு ஆதரவு அளிக்கும் பெரியவர் மாசானம் அவனைப் போன்ற துயரத்தை எதிர்கொண்டவர் என்பதால் அவனுக்கு ஆதரவளிக்கிறார். அவரது கதையைச் சொல்லாமலே புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், நாவலாசிரியர் அதையும் விரிவாகச் சொல்கிறார். மகேந்திரனின் தந்தை ஆனந்த மூர்த்திக்கும் சுசீலாவின் தந்தை கதிரவனுக்குமான சண்டையின் காரணமாகவே மகேந்திரன் சுசீலா திருமணத்தை நடத்தவியலாத நிலை ஏற்படுகிறது. ஆனால், ஆனந்த மூர்த்திக்கும் கதிரவனுக்குமிடையே என்ன சண்டை என்பது இறுதிவரை தெரியவில்லை.
உண்மையிலேயே மனிதர்கள் இவ்வளவு சுயநலத்துடன் தான் நடந்துகொள்கிறார்களா, சொந்தக் குடும்பமே இவ்வளவு விரோத பாவம் கொண்டுவிடுமா? இப்படியான கேள்விகளை நாவல் எழுப்புகிறது. ஒரு செய்தித்தாளில் நாம் வாசிக்கும் விநோதமான சம்பவமோ ஒரு வருவாய்த்துறை அலுவலகத்துக்கு வரும் ஒருவர் தன் வாழ்வு குறித்துச் சொன்ன கதையோ இந்த நாவலுக்கு ஊற்றுக் கண்ணாயிருக்கக் கூடும் என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது. அப்படி ஒரு சம்பவத்தை எடுத்துக்கொண்டு சம்பவங்களை முன் பின்னாகக் கோத்து சுவாரசியமான கதையாக்கியிருக்கிறார்.
நாவல் நடைபெறும் இடம் குறிப்பாகச் சுட்டப்படுகிறது. ஆரணி, குடியாத்தம், வேலூர், பெங்களூர், பம்பாய் எனப் பல இடங்கள் நாவலில் இடம்பெற்றுள்ளன. அந்த மனிதர்தம் வாழ்க்கை நாவலில் காட்டப்படுகிறது. ஆனால், நாவல் நடைபெறும் காலம் குறிப்பாகச் சுட்டப்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக நாவல் சம்பவங்களில் கிடைக்கும் தரவுகளிலிருந்து வாசகரே ஊகித்து அறிந்துகொள்ளத்தான் முடிகிறது. நாவலில் தகவல்களைப் பரிமாறத் தொலைபேசி இல்லை. கடிதப் போக்குவரத்தே உள்ளது. ஒரு கல்லறைக் குறிப்பில் மறைவு 1988 என்று வருகிறது. இவற்றை வைத்தே நாவல் இந்தக் காலகட்டத்தில் நடந்திருக்கிறது என்னும் முடிவுக்கு வாசகர் வர வேண்டியுள்ளது. காலம் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருக்கிறது என்னும் முடிவுக்கு வர எந்தத் தடயமும் தென்படவில்லை.
வாழ்வதற்கான ஆசை மனிதரை எந்தச் சூழலையும் எதிர்கொள்ளவைத்துவிடுகிறது என்னும் வகையில் நாவல் நம்பிக்கையை அளிக்கிறது. சொந்தத்துக்குள் நடந்த காதலால் பல பிரச்சினைகளை எதிர்கொண்ட மகேந்திரன் மகள் சங்கீதாவின் பார்வை வெளியில் ஒரு வாலிபன் மீது அழுத்தமாக விழும்போது, நாவல் நம்மிடமிருந்து விடைபெற்றுச் செல்கிறது. அந்தச் சங்கீதாவின் வாழ்வில் என்னவெல்லாம் துயரம் வரப்போகிறதோ என்று ஏற்படும் எண்ணத்தைத் தவிர்க்கவியவில்லை.
காதல் சிக்கலைத் தாங்கிக்கொள்ளவியலாத ஒருவன் மயில் துத்தம் குடித்துச் சாக முயல்கிறான்; காதலுடன் மணந்துகொண்ட ஒருவன் மீது கொண்ட பிணக்கு காரணமாக ஒருத்தி மரத்தில் தொங்குகிறாள். இவர்களுக்குப் பிறந்த பெண்ணும் காதலில் விழத்தான் செய்கிறாள். எவ்வளவு போராட்டம் இருப்பினும், எவ்வளவு பிரச்சினைகள் இருப்பினும் மலர்கள் மலர்வது போல் காதலும் மலர்ந்துகொண்டே இருக்கிறது. அதனால் ஏற்படும் துயரங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. வாழ்க்கை ஒரு தொடர் பயணம். அந்தத் தொடர்பயணத்தில் அருகருகே அமர்ந்த கதாபாத்திரங்கள் தொலைவுக்குச் சென்றுவிடுவதும், தொலைவில் இருந்த கதாபாத்திரங்கள் அருகருகே வந்துவிடுவதும் வாழ்க்கை நடத்திக் காட்டும் மாயமன்றி வேறென்ன?
நாவலில் பல இடங்களில் எழுத்துப் பிழைகள் காணப்படுகின்றன; ஓரிடத்தில் நாவலின் பிரதான கதாபாத்திரமான மகேந்திரனே மனோகரனாகியிருக்கிறான். என்னடா திடீரென மகேந்திரன் எப்படி மனோகரன் ஆனான் எனப் பார்த்தால் அது பிழை என்பது தெரிகிறது. ஆனால், பிழைகளைக் கடந்து நாவல் அதன் பின்னே வாசகரை அழைத்துச் சென்றுவிடுகிறது.
இந்த நாவலை வாசித்து முடித்த பின்னர் தமிழில் copy editing எவ்வளவு அவசியம் என்பதை உணர முடிந்தது. மிகவும் செறிவாகவும் கன கச்சிதமாகவும் அமைந்திருக்க வேண்டிய நாவல் நாவலாசிரியர் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிய திருப்தியில் வாசகருக்கு அளித்திருக்க வேண்டிய பரம திருப்தியில் பாதியை அள்ளிச் சென்றுவிட்டது.
ஈமம்
கவிப்பித்தன்
வெளியீடு:
நூல்வனம்
முதல் பதிப்பு: பிப்ரவரி 2021
பக்கங்கள்: 384
விலை: ரூ. 440
(2024 மே 1 அன்று ஃபேஸ்புக்கில் எழுதிய குறிப்பு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக