இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, ஜூலை 15, 2018

தண்ணீர் சாமி

ஓவியம்: வெங்கி
வெகுளி வெள்ளைச்சாமி ஆயா உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் ஊர் பேர் தெரியாத ஆளாகத்தான் இருந்தான். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பான். வாடிக்கையாளர்களிடம் டிப்ஸ் வாங்கிய காசிலேயே தனி உணவகம் கட்டும் அளவுக்குச் சம்பாதித்துவிட்டான் என்று அவனுடைய எதிரிகள் சொல்வார்கள். வாடிக்கையாளர்கள் பத்து தோசை, இருபது இட்லி, பத்து காபி சாப்பிட்டால் வெள்ளை பில்லில் இரண்டு தோசை, ஐந்து இட்லி, இரண்டு காபி என்று குறிப்பிட்டுவிடுவான். ஆகவே, வாடிக்கையாளர் தாங்கள் அடைந்த லாபத்தில் பெரும்பகுதியை வெள்ளைக்கு டிப்ஸாகத் தருவார்கள். இந்த வேலையில் வெள்ளை நிம்மதியாக இருந்தான். ஆயா உணவகத்தில் எப்போதும் கூட்டம் ஜேஜே என்று இருந்ததால் உணவகத்தை நடத்திய ஆயாவுக்கு வெள்ளையின் கேப்மாரித்தனம் பற்றித் தெரியவே இல்லை. ஆயாவின் தங்கை சின்ன ஆயாவுக்கோ வெள்ளையின் மீது அபார நம்பிக்கை. தனக்கேற்ற அடிமையாக சின்ன ஆயா வெள்ளையை நம்பினார்.

அதே நேரம் ஆயாவின் நம்பிக்கைக்குரிய பணியாளாகத் தண்ணீர் பாண்டி இருந்தான். ஆயாவின் எதிரே தண்ணீர் பாண்டி நிமிர்ந்தே நின்றதில்லை. தண்ணீர் பாண்டிக்கு முதுகு நேரானதா இல்லை பிறவிலேயே கூன் விழுந்துவிட்டதோ எனச் சந்தேகப்படும் அளவுக்கு அத்தனை கச்சிதமாகத் தண்ணீர் பாண்டியின் முதுகு வளையும். ஆயா எங்கு சென்றாலும் பொறுப்பைத் தண்ணீர் பாண்டியிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வார். தண்ணீர் பாண்டியும் மிகவும் பணிவாக நடந்துகொள்வான். கணக்குவழக்குகளைக் கச்சிதமாகப் பராமரிப்பான். டிப்ஸ் கணக்குகளைக்கூடச் சொல்லிவிடுவான். காலையில் வேலையைத் தொடங்கும் முன்னர் ஆயா இருக்கும் திசை நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடுவான்.

ஆனால், தண்ணீர் பாண்டி லேசுபட்டவனல்ல. அவன் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களின் பர்ஸில் கைவைத்துவிடுவதில் சமர்த்தன். ஆள் பார்ப்பதற்கு அப்பாவியாக இருப்பானே ஒழிய தண்ணீர் பாண்டி பயங்கரமான தந்திரக்காரன். காலில் விழ வேண்டுமென்றால் காலில் விழுவான் கழுத்தைப் பிடிக்க வேண்டுமென்றால் கழுத்தைப் பிடிப்பான். காலில் விழுவதை வெளிச்சத்தில் செய்யும் தண்ணீர் பாண்டி, கழுத்தைப் பிடிப்பதை இருட்டில் செய்வான். அதுதான் அவனது சாமர்த்தியம்.  ஆகவே, வெள்ளை, தண்ணீர் பாண்டியிடம் எந்தப் பிரச்சினையும் வைத்துக்கொள்ள மாட்டான். தண்ணீர் பாண்டியும் வெள்ளையின் விஷயத்தில் தலையிடுவதில்லை. வெள்ளைக்கு உடம்பு வளர்ந்த அளவு மூளை வளரவில்லை. எது வளருமோ அது தானே வளரும் என்று வெள்ளையும் அப்படியே விட்டுவிட்டான். ஆனால், தண்ணீர் பாண்டியைவிடத் தான் அறிவாளி என்று நினைத்துக்கொள்வான்.

திடீரென்று ஒரு நாள் ஆயா உணவகத்து உரிமையாளரான ஆயா எங்கேயோ தொலைதூர தேசம் சென்றுவிட்டார். அவர் எங்கே போனாரென யாருக்குமே தெரியவில்லை. ஆதரவற்ற நிலைக்குச் சென்றது ஆயா உணவகம். வாடிக்கையாளர்கள் கலங்கிப்போனார்கள். மூன்று நேரமும் ஆயா உணவகத்திலேயே சாப்பிட்டு உடம்புவளர்த்த கவிஞர் பாம்பன் ’ஆயா எங்க ஆயா போன? எங்களுக்குத் தேவ பாயா… வந்துடு ஆயா வந்து தந்திடு பாயா’ என்று ஒரு கவிதையே பாடிட்டார். அந்தக் கவிதையை யாரோ ஆயா காதில் போட்டுட்டாங்களோ என்னவோ ஆயா பயந்துபோய் திரும்பிவரவே இல்லை. இந்தச் சூழலில் ஆயா உணவகத்தின் பொறுப்பைத் தான் ஏற்கலாமெனத் தண்ணீர் பாண்டியும் வெள்ளையும் தனித் தனியாகத் திட்டம் போட்டார்கள். ஆனால், உணவகத்தின் பொறுப்பைத் தானே ஏற்கலாம் எனச் சின்ன ஆயா தயாரானபோது வெள்ளையும் பாண்டியும் அமைதியாகிவிட்டார்கள்.

ஆனால், சின்ன ஆயாவால் உணவகப் பொறுப்பை ஏற்க முடியாத அளவுக்கு உடல்நலம் மோசமாகிவிட்டது. ஆயா உணவக உணவை அதிகமாக உண்டதால் அப்படியாகியிருக்கலாம் என அம்மஹை மருத்துவமனை மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். ஆகவே, சின்ன ஆயா உடல்நலம் சரியாகும்வரை பொறுப்பை வெள்ளையிடம் ஒப்படைத்துவிட்டார். தண்ணீர் பாண்டி என்னவெல்லாமோ யுத்தம் நடத்திப் பார்த்தான் ஒன்றும் பாச்சா பலிக்கவில்லை. வேலைன்னு வந்துட்டா வெகுளி வெள்ளைச்சாமி நிஜமாகவே வெள்ளைக்காரன் என்பது தெரிந்தது. ஆகவே, வெள்ளையிடம் சமாதானமாகப் போய்விடலாம் என்று முடிவெடித்து தண்ணீர் பாண்டி வெள்ளைக்குச் சமாதானக் கொடி காட்டினான். அதன் பின்னர் ஆயா உணவகத்தில் ரெண்டு உரிமையாளர்கள் என்பது போல் வெள்ளையும் பாண்டியும் ஆனார்கள். எங்கு போனாலும் இருவரும் ஒன்றாகத்தான் போனார்கள். ஒன்றுக்குக்கூட அவர்கள் தனித்தனியாகப் போனதில்லை. அப்படியொரு மாற்றாராக மாறினார்கள். அவர்களைத் தனித் தனியாக யாராவது பார்த்தார்கள் என்று சொன்னால் சொன்னவர்கள் கண்ணில் கோளாறு என்றே பொருள். அதன் பின்னர் அந்த ஊர்க்காரர்கள் நகமும் சதையும் போல் என்று சொல்வதற்குப் பதில் பாண்டியும் வெள்ளையும் போல் எனச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். வெகுளி வெள்ளைச்சாமி தனது பெயரில் சாமி இருப்பதால் தன்னைச் சாமியாக நினைத்துக்கொண்டான். ஆனால், வாடிக்கையாளர்கள் அவனைப் பூதம் எனக் கேலிசெய்வார்கள். அது வெள்ளைக்குத் தெரியாது. வெள்ளையும் பாண்டியும் ஒன்றுசேர்ந்தது ஆயா உணவகத்துக்குக் கேடுதான் என்று நீண்ட கால வாடிக்கையாளர்கள் பேசிக்கொள்வது அவர்களுக்குத் தெரியுமோ தெரியாதோ?

சனி, ஜூலை 07, 2018

பரதனை இனிப் பார்க்க முடியாது!

‘ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஒரு புல்லாங்குழல் வார்த்தைக்குள் வராத சோகத்தை வாசித்துக்கொண்டுதானிருக்கும்’ என்பார் ‘முதல் மரியாதை’ திரைப்படத்தின் ஆடியோ கேசட்டின் தொடக்க உரையில் இயக்குநர் பாரதிராஜா. அந்தத் திரைப்படத்தை தென்காசியில் பரதன் தியேட்டரில் பார்த்தேன். அந்த பரதன் இப்போது இடிக்கப்படுகிறது. சில காலம் இயங்காமல் இருந்த பரதன் தன் கடைசி மூச்சையும் இழந்துகொண்டிருக்கிறது.

எண்பதுகளில் அந்த இடைநிலை நகரத்தில் பொழுதுபோக்குவதற்கு இருந்த இடங்கள் திரையரங்குகள் மாத்திரமே. அப்போது பக்தர்களுக்கு காசி விஸ்வநாதர் ஆலயம் என்றால் ரசிகர்களுக்கு ஸ்ரீபாக்யலட்சுமி, பரதன், வாஹினி ஆகிய திரையரங்குகள்தாம் கவலை தீர்க்கும் இடங்கள்.


காலத்தின் மாற்றம் வாஹினியிலிருந்து திரைப்படத்தைப் பிரித்தது. பின்னர் ஸ்ரீபாக்யலட்சுமி பிஎஸ்எஸ் காம்ப்ளெக்ஸ் ஆனது. இப்போது பரதன் மறையப்போகிறது. தற்போது நாற்பது, ஐம்பது, அறுபது சொச்ச வயதுகளில் இருப்பவர்களுக்குத் திரையரங்குகள் அளித்த ஆசுவாசம் புரியும். நினைத்த மாத்திரத்தில் நினைத்த படத்தைக் கையடக்கக் கைபேசியில் பார்க்கும் வசதி அப்போது இல்லை. நடிகை ஒருவரின் மந்தகாசப் புன்னகை இடம்பெறும் ஒரு ஷாட் ரசிகருக்குப் பிடித்திருந்தாலும் அந்த ஷாட்டை மறுபடியும் ஒருமுறை பார்க்க விரும்பினால் திரையரங்குக்குத்தான் செல்ல வேண்டும்.

அதனால்தான் திரையரங்குக்கு அவர்களது வாழ்வில் முக்கிய இடம் இருந்தது. ஒவ்வோர் ஊரிலும் ஏதாவது ஒரு சினிமா பாரடைஸ் ரசிகர்களுக்குச் சொர்க்கத்தைக் காட்டிக்கொண்டிருந்தது. அப்படி ஒரு பாரடைஸ் பரதன் தியேட்டர். இந்தத் திரையரங்கை நீங்கள் ‘தூள்’, ‘கில்லி’ போன்ற படங்களில் பார்த்திருக்கலாம். இந்த வரிகளை எழுதுபவனைப் போல் நீங்களும் அந்த தியேட்டரின் கதகதப்பை உணர்ந்திருக்கலாம்.


அது எண்பதுகளின் தொடக்க காலம். டி.ராஜேந்தரின் ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படத்தை இந்தத் திரையரங்கில்தான் நண்பர்களுடன் பார்த்தேன். காலைக்காட்சி டிக்கெட் எடுத்து உள்ளே சென்றால் குதிரையில் எம்.கே.தியாகராஜபாகவதர் வருகிறார். ஏதேனும் டிரெயிலரோ என்று நினைத்து சில காட்சிகளைக் கடந்த பிறகு தான் காலைக் காட்சி மட்டும் ‘ஹரிதாஸ்’ படம் என்பது தெரியவந்தது.

என்ன செய்வது? ‘ஹரிதா’ஸைப் பார்த்துவிட்டு அடுத்த காட்சி ‘உஷா’வையும் பார்த்துவிட்டுத்தான் திரும்பினோம். பக்கத்து வீட்டு அக்காவுடன் ‘நவக்கிரக நாயகி’ பார்த்ததும் இந்தத் திரையரங்கில்தான். அந்த அக்கா இப்போது இல்லை, நினைவில் தங்கிவிட்டார்.

அப்படியே தூள் தூளாகச் சிதறிக்கொண்டிருக்கும் பரதனும் நினைவுகளில் படிந்துவிடும். அதன் ஒரு துகள் சொல்லும் நூறு கதைகள். பரதனில் டிக்கெட் கவுண்டரில் இரும்புக் கிராதிகளைத் திறக்கும்போது, சொர்க்கத்தின் வாசல் திறந்தது போல் இருக்கும். கவுண்டரில் கையை நீட்டி டிக்கெட்டைப் பெறும்போது கிடைக்கும் பேரின்பத்துக்கு ஈடேது. இடைவேளைகளில் திறந்தவெளி மூத்திரைப் பிறை அருகில் இருந்த கேண்டீனில் குற்றால அருவியில் பிடித்தது போன்ற டீயையும் ஓமப்பொடி முறுக்கையும் சுவைத்த நாட்கள் நினைவுகளில் சுழன்றுகொண்டே இருக்கும். அது ஒரு சுகமான சூறாவளி. பாரதிராஜாவும் ரஜினியும் இணைந்து அளித்த ‘கொடி பறக்குது’ தீபாவளி அன்று வெளியாக இருந்தது. அந்தத் தீபாவளி தியேட்டரில்தான் விடிந்தது. பல தீபாவளிகள் பரதனிலும் பாக்யலட்சுமியிலும்தான் தொடங்கியிருக்கின்றன. ‘கொடி பறக்குது’ பெட்டி தீபாவளிக்கு வரவில்லை. மறுநாள்தான் வந்தது. ஆனாலும் சைக்கிளை எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் செல்லாமல் பரதனுக்கு வந்து ‘கொடி பறக்குது’ பார்த்தேன்.



தளபதி வெளியானபோது முதன்முதலாக டிக்கெட்டை வழக்கத்துக்கு மாறாக, சற்று அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதிருந்தது. அதிக விலை என்றால் அதிக விலை அல்ல ரூ. 20தான். ஆனால், அதுவரை தென்காசியில் எந்தத் திரையரங்கிலும் ரிலீஸுக்கென்று விலையைக் கூட்டி விற்றதில்லை. கோவில்பட்டி, தூத்துக்குடி போன்ற ஊர்களில் அது அப்போது சாதாரணம்.

பாக்யலட்சுமியில் ரஜினியின் ‘மாவீரன்’ வெளியானபோது, பரதனில் ‘அம்மன் கோவில் கிழக்காலே’ வெளியானது. ‘மாவீரன்’ தென்காசியில் முதல் ரிலீஸ் ஆனால், ‘அம்மன் கோவில் கிழக்காலே’ செகண்ட் ரிலீஸ்தான். ஆனால் அதுதான் ‘மாவீர’னைவிட அதிக நாட்கள் ஓடியது. ‘மாவீர’னில் அக்கா அம்பிகா ரஜினியைச் சாட்டையால் அடிப்பார். ‘அம்மன் கோவில் கிழக்காலே’ படத்தில் தங்கை ராதா விஜய் காந்தை சாட்டையால் அடிப்பார். இந்தத் தகவல்கள் ஏன் என் மன வெளியில் தங்கின?

கடைசியாக அங்கே ‘சுப்ரமணியபுரம்’ படம் பார்த்தேன். அதன் பின்னர் அந்தத் திரையரங்குக்குச் செல்லவே இல்லை. அந்த வழியே செல்லும்போது கடந்துபோகும் காதலியைப் பார்ப்பது போல் ஏக்கப் பார்வை வழியவிட்டபடியே செல்வேன். காலத்தின் புழுதி படிந்ததால் சோபை இழந்த சித்திரங்களில் ஒன்றாக பரதன் தியேட்டர் ஆகிவிட்டது சோகம்தான். நாளை பரதன் இருந்த இடத்தில் ஒரு புதிய காம்ப்ளெக்ஸ் கண் சிமிட்டக்கூடும். இந்தச் சோகமும் தொலைந்துபோய்விடலாம்.

2018 ஜூன் 30 அன்று சொந்த வீடு இணைப்பிதழில் வெளியானது.

ஞாயிறு, ஜூன் 24, 2018

அறுபத்தியெட்டு அங்குலத் தொப்பைக்காரர்

ஓவியம் வெங்கி

நிலைக்கண்ணாடி முன்னே நின்று தன்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டான் வெகுளி வெள்ளைச் சாமி. தன்னை எல்லோரும் வெகுளி என அழைப்பதை எண்ணிச் சிரித்தானோ என்னவோ. சிரித்தபடியே நின்றுகொண்டிருந்த அவனை அவனுடைய உதவியாளன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டான். செல்ஃபி பிரியனான வெள்ளைக்கு செல்ஃபி எடுக்க சிரமாக இருக்கும் என்பதால் அதற்காக ஓர் உதவியாளனை வைத்திருந்தான். அவன்தான் வெள்ளையை விதவிதமாக செல்ஃபி எடுப்பான். செல்ஃபிக்களைத் தனது சுவீட்டர் பக்கத்தில் வெள்ளை பகிர்ந்துகொள்வான். பகிர்ந்த உடனேயே அது பத்தாயிரம் பேரால் விரும்பப்படும். ஒவ்வொரு க்ளிக்கும் பத்தாயிரமாகப் பெருக சில மணித்துளிகளில் கோடிக்கணக்கான பேரால் அது பார்க்கப்பட்டதாகக் காட்டிக்கொள்வதில் ஒரு பெருமை வெள்ளைக்கு. அவனுடைய வளர்ச்சி தத்துவமும் அதுதான்.

இன்று ஆணவபுரத்தின் நகராட்சித் தலைவராகத் தலைநிமிர்ந்து நடக்கும் வெள்ளச்சாமி ஒரு காலத்தில் ஆணவபுரத்தின் பஜாரில் எடுபிடியாக இருந்திருக்கிறான். டீ வாங்கி வருவது, கடைகளைப் பெருக்குவது போன்ற எடுபிடி வேலைகளைத் தான் முதன்முதலில் செய்தான். அந்தப் பழக்கம் காரணமாக ஊரில் உள்ள வர்த்தகர்களின் நண்பனான் வெள்ளை. அதை வைத்தே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அந்த நகராட்சிக்கே தலைவராகிவிட்டான். முதன்முதலாக அவன் நகராட்சித் தலைவராக ஆன போது பயபக்தியுடன் நகராட்சி வாசலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கும்பிட்டு முத்தமிட்ட காட்சியைப் பார்த்தவர்களுக்கு அவனுடைய கடமை உணர்வு மெய்சிலிர்க்கச் செய்தது. அந்த அர்ப்பணிப்பு உணர்வுதான் வெள்ளைச்சாமியின் பலம். தான் அடைய விரும்பியதை அடைய என்ன வேண்டுமானாலும் செய்வான்; வெட்கப்படவே மாட்டான். இல்லாவிட்டால் யார் யாரோ போட்டி போட்ட நகராட்சிக்கு அவன் தலைவராகியிருக்க முடியுமா?

ஆணவபுர நகராட்சியின் தலைவராக விரும்பிய பெரியவர் குத்போனியை அவன் ஓரங்கட்டியதை எல்லாம் குத்போனியால்கூட நம்ப முடியவில்லை. இவ்வளவுக்கும் டவுசர் போட்டுக்கொண்டு அந்த ஊரின் ’பிறர் சேவை மன்ற’த்தில் வெள்ளை எடுபிடியாக இருந்தபோதே குத்போனி அதன் தலைவராக இருந்தவர். ஆனாலும் இன்று வெகுளி வெள்ளைச்சாமி நாடறிந்த நகராட்சித் தலைவர். அவனுடைய சுவீட்டர் பக்கம் உலகத்திலேயே அதிகம் பேரால் பின் தொடரப்படுகிறது. அவன் போகாத நகரங்களே நாட்டில் இல்லை. புதிதாக உருவாகும் பக்கத்து மாநில நகரத்துக்கு அடுத்த ஆண்டு வரப் போவதாக இப்போதே முன் பதிவு செய்துகொண்டான் வெள்ளை. என்னதான் பெரிய ஆளானாலும் வெள்ளையின் மனசில் அந்த டவுசர் காலம் நிறைந்திருந்தது. தான் போட்டிருந்த டவுசரைப் பத்திரமாக வைத்திருந்தான். அதைத் தினம் தோறும் தொட்டுக் கும்பிட்டுவிட்டுத்தான் வெளியவே கிளம்புவான்.

மாதந்தோறும் நகராட்சி வானொலியில் பேசுவது வெள்ளைச்சாமிக்கு வாடிக்கை. அந்தப் பேச்சுகளை ஊரில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் கேட்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருந்தான் வெள்ளை. எடுபிடியாக இருந்த தன்னாலேயே இந்த அளவு உயர முடிந்தால் ஒழுங்காகப் படிக்கும் மாணவர்கள் எந்த அளவு உயர முடியும் என்ற தன்னம்பிக்கையை அவர்களுக்கு அந்தப் பேச்சின் வழியே அளித்தான் வெள்ளை.

தான் மூணாங்கிளாஸ் தான் படித்திருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மை வெள்ளைக்குக் கிடையவே கிடையாது. உலகத்திலேயே தான்தான் அறிவாளி என்று காட்டிக்கொள்வான். அவன் மூணாங்கிளாஸ் படித்ததற்கே ஆதாரம் இல்லை என எதிர்க்கட்சியினர் சொல்வார்கள். அதை எல்லாம் காதிலேயே போட்டுக்கொள்ள மாட்டான் வெள்ளை. வெள்ளையின் மூளைதான் காலியாக இருக்குமே தவிர வெள்ளையின் வயிறு எப்போதும் நிறைந்தே இருக்கும். அவனது தொப்பையின் அளவைப் பத்திரிகைகளில் கிண்டலடிப்பார்கள். உணவு சாப்பிடுவதற்கு முன்னர் இருப்பதைப் போல் இரு மடங்கு அதிகமாகிவிடும் சாப்பிட்ட பின்பு அவனது தொப்பை. 68 அங்குலத் தொப்பைக்காரன் என்பதில் அவனுக்கு பெரிய மகிழ்ச்சி.

இந்த நேரத்தில் தான் பக்கத்து ஊர் கபடி ஆட்டக்காரர் பிரட் போளி வெள்ளையால் ஏதாவது உடற்பயிற்சியில் ஈடுபட முடியுமா என்று விளையாட்டாகக் கேட்டுவிட்டார். அதை ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்ட வெள்ளை தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவைத் தனது சுவீட்டர் பக்கத்தில் வெளியிட்டான். அதைப் பார்த்த ஆணவபுரத்துக்காரர்களே அசந்து போய்விட்டார்கள். உடற்பயிற்சியின் ஒரு பகுதியாக அமைதியாட்சி கோவிலின் மரத்தை வெள்ளை சுத்திவரும் காட்சியைக் கண்ட பலர்மீது அம்பாளே வந்து இறங்கிவிட்டார். அந்த அளவு ஆன்ம சுத்தியுடன் உடற்பயிற்சி செய்தான் வெள்ளை. ஒரு பெரும் பாறை மீது மல்லாக்கப்படுத்து அந்தப் பாறையுடன் சேர்ந்து பத்து முறை உருண்டான் வெள்ளை. ஆனாலும் அவனுடைய தொப்பைக்கு எந்தக் கோளாறும் ஏற்படவில்லை. அது பாறைக்கே சவால்விட்டது. சின்ன வயதில் டவுசர் போட்டுக்கொண்டு ’பிறர் சேவை மன்ற’த்தில் உடற்பயிற்சி செய்த காலம் அவன் நினைவில் எழுந்தது. இந்த வீடியோவை சுவீட்டர் பக்கத்தில் உலக நாட்டில் உள்ளவர்கள் எல்லாம் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தனர். சுவீட்டர் தொடங்கிய காலம் முதல் இதுவரை வெளியான அனைத்து  வீடியோக்களையும்விட அதிகம் பேரால் பார்க்கப்பட்டது வெள்ளையின் உடற்பயிற்சி வீடியோ.

செவ்வாய், ஜூன் 19, 2018

அவரை நீங்க பாத்திருக்கீங்களா?

ஓவியம்: வெங்கி

வெகுளி வெள்ளச்சாமி எப்படியோ யார் யாரையோ, கையைக் காலைப் பிடித்து ஒரு செய்தியாளர் ஆகிவிட்டான். ஒரு முறை தற்செயலாக செண்டிரல் ரயில் நிலையத்தில் நடிகர் குஜினியைச் சந்தித்தான். அவர் அவசர அவசரமாக சமயமலைக்குத் தியானத்துக்குச் சென்று கொண்டிருந்தார். வழக்கமாக விமானத்தில் செல்லும் குஜினி ஒட்டுத்தாடி, முகத்தில் மரு என்ற மாறுபட்ட கெட்டப்பில் இருந்தாலும் வெள்ளச்சாமியின் கண்களின் கூர்மைக்கு முன்னர் அவர் தப்பிக்க இயலவில்லை. சட்டென்று அவர் முன் சென்று மைக்கை நீட்டினான் வெள்ளை. ’என்ன என்ன’ என்று பதறினார் நடிகர். ’ஒண்ணுமில்ல சார் இங்கே கிடைக்காத அமைதி சமயமலையில் உங்களுக்குக் கிடைக்கிறதா?’ என்று முதல் கேள்வியை ஒரு கத்தியைப் போல் சொருகினான் வெள்ளை. குஜினிக்கு ஒரு நிமிஷம் உடம்பே சுத்தியிருச்சு. கிறு கிறுன்னு வந்துருச்சு. அவர் பதற்றத்தில் ’ஏய் ஏய்’ என்று மட்டும் சொன்னார். வெள்ளை பயந்து நடுங்கிவிட்டான். ’என்னடா வம்பாப் போச்சு நாம ஏதோ கேக்கப் போய் இந்த ஆளு கையக் கால நீட்டிட்டாருன்னா நம்ம பாடு பெரும்பாடாப் போயிருமே’ன்னு சத்தமில்லாம, பதில் பற்றிக் கவலைப்படாமல் மைக்கை எடுத்துட்டு வந்துட்டான். தன்னோட சேனலில் கூடச் சொல்லல. ஆனால், இதை எவனோ வீடியோ எடுத்து வேஸ்ட் அப்பில் பரப்ப வெள்ளை நாடறிந்த செய்தியாளர் ஆகிவிட்டான்.

அதன் பின்னர் நடிகர் சீஸ்அர் லூஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டார். அந்தப் பதிவை அவருடைய நண்பர் பேரிக்காவிலிருந்து அனுப்பியிருந்தார். அதைப் படித்த நடிகர் சீஸ்அர் அது என்ன ஏது என்று புரிந்துகொள்ளாமல் அதை அப்படியே லூஸ்புக்கில் பகிர்ந்துவிட்டார். அவ்வளவுதான். அதைப் பார்த்த அனைவரும் கொதித்து எழுந்தார்கள். நடிகர் சீஸ்அருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்கள். அவர்கள் கோரிக்கையில் இருந்த உண்மையைக் கண்டு நடிகர் சீஸ்அரே தன்னைக் கைது செய்வதுதான் சரியான நடவடிக்கை என்று அறிக்கை வெளியிட்டார். ஆனால், அவர் எங்கே இருக்கிறார் என்பதைக் காவல் துறையால் கண்டே பிடிக்க இயலவில்லை. இவ்வளவுக்கும் அவர் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். ஒட்டுத்தாடி, மரு போன்ற மாறுபட்ட கெட்டப்பில் எல்லாம் அவர் நம்பிக்கை வைக்கவில்லை. அதனால் எந்த மேக்கப்பும் இன்றி நடமாடினார். அதனாலோ என்னவோ அவருடன் வரும் காவலருக்குக்கூட அவரை அடையாளம் தெரியவில்லை.

காவல் துறையும் அவரது அடையாளத்தைச் சொல்லி பத்திரிகையில் விளம்பரம் எல்லாம் கொடுத்தது. அவரது சட்டையில் கீழ் பொத்தான் கிடையாது என்றும் வலது கையை ஆட்டிக்கொண்டே இருப்பார் என்றும் தகவல்கள் எல்லாம் தந்திருந்தனர். ஆனாலும் காவல் துறையினரால் மட்டும் அவரைப் பார்க்கவே இயலவில்லை. சாதாரண மனிதர்களின் கண்களுக்குத் தட்டுப்படும் சீஸ்அர் காவல் துறையின் கண்களுக்குத் தெரியாதவாறு அன்னை பாராசக்திதான் அவருக்குச் சக்தி கொடுத்திருக்க வேண்டும்.

நடிகர் சீஸ்அரைத் தான் ஏன் ஒரு பேட்டி எடுக்கக் கூடாது என நினைத்தான் வெள்ளை. அவருடைய வீட்டுக்கு நேரடியாகச் சென்றான். அப்போது சீஸ்அர் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அவர் உடற்பயிற்சி செய்கிறார் என்பதே அவனுக்கு வியப்புக்குரிய தகவலாக இருந்தது. பொறுமையாகக் காத்திருந்தான். நடிகர் சீஸ் அர், சுத்தமான பசும் பாலில் தயாரித்த சுவையான வடிப்புக் காப்பியைத் தருவித்து அவனுக்குத் தந்தார். குடித்து முடித்த வெள்ளை, உங்களை ஏன் காவல் துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றான். அதற்கு நடிகர் அவர்கள் வழக்கம் போல் பிற இடங்களில் எல்லாம் தேடுகிறார்கள் நானோ எனது வீட்டிலேயே இருக்கிறேன் அதனால் அவர்களால் என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்.

நீங்களே சென்று ஏன் சரணடையக் கூடாது என்றான் வெள்ளை. சட்டென்று கடுங்கோபம் கொண்டார் நடிகர் சீஸ்அர். நீங்கள் நமது காவல் துறையை அவ்வளவு இழிவுபடுத்துவதை என்னால் தாங்கிக்கொள்ள இயலாது என்று சொல்லிவிட்டு, நானே சென்று சரணடைந்தால் காவல் துறையினரின் திறமையைக் குறைத்து மதிப்பிடுவது போல் ஆகாதா என்று எதிர்க்கேள்வி கேட்டார். அவரது பதிலிலிருந்த நேர்மையை ரசித்தான் வெள்ளை. ஆகவே, எத்தனை காலம் ஆனாலும் காவல் துறை வந்து தன்னைக் கைது செய்வதுவரை தான் பொறுத்திருக்கப் போவதாகவும், தன் ஆயுள் முடிவதற்குள் கண்டிப்பாகக் காவல் துறை தன்னைக் கண்டுபிடித்து கைதுசெய்யும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் நடிகர் சீஸ்அர் முத்தாய்ப்பாக முடித்தார்.    

புதன், மே 16, 2018

இரும்புத்திரை

விஷால்
டிஜிட்டல் இந்தியாவுக்கும் சாமானிய இந்தியருக்கும் இடையிலான தொழில்நுட்ப இடைவெளியைப் பற்றிப் பேசும் படம் இரும்புத்திரை.

கடன் வாங்குவதை அறவே வெறுக்கும் கோபக்கார ராணுவ அதிகாரி கதிரவன் (விஷால்). வங்கிக் கடன் வசூலிப்பாளர் ஒருவரது தகாத செயலால் கோபம் கொண்டு அவரை அடித்துவிடுகிறார் அவர். இதற்கான துறைரீதியான நடவடிக்கையால் ஆறுவார காலம் மனநல ஆலோசனை பெறுவதற்காக மனநல ஆலோசகர் ரதி தேவியைச் (சமந்தா) சந்திக்கிறார். கதிரவனின் கோபத்துக்கான காரணத்தை அறிந்துகொள்ளும் ரதி தேவி அவரை 30 நாட்கள் குடும்பத்தினருடன் தங்கி இருக்கச் சொல்லி அனுப்புகிறார். நெல்லை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு வரும் கதிரவன். தங்கையுடனும் தந்தையுடனும் (டெல்லி கணேஷ்) நாட்களைச் செலவிடுகிறார்.

குடும்பம் என்ற ஒன்றை இதுவரை இழந்துவிட்டதை உணரும் கதிரவனுக்குத் தங்கையின் காதல் விவகாரம் தெரியவருகிறது. 10 லட்ச ரூபாய் பணப் பிரச்சினையால் திருமணம் தடைபட்டதை அறிந்த கதிரவன் பணம் புரட்ட முயல்கிறார். ராணுவ அதிகாரியான அவருக்கு அரசு வங்கிகள் கடன் தர மறுக்கின்றன. சொந்தக் காரணத்துக்காக வங்கிக் கடன் கிடைக்காத அவரிடம் வியாபாரக் காரணம் சொல்லிப் பணம் பெறலாம் என்று ஒருவர் வழிநடத்துகிறார். ஆறு லட்ச ரூபாய் கடனும் பெற்றுவிடுகிறார். நிலத்தை விற்றுக்கிடைத்த 4 லட்ச ரூபாயும் கடனாகக் கிடைத்த 6 லட்ச ரூபாயும் சேர்ந்து கிடைத்த 10 லட்ச ரூபாய் மொத்தமாக வங்கிக்கணக்கிலிருந்து திருடப்பட்டு விடுகிறது.. பணம் திரும்பக் கிடைத்ததா, தங்கையின் திருமணம் நடைபெற்றதா போன்றவற்றுக்கு விடை காண்கிறது எஞ்சிய படம்.

விஷால், சமந்தா
சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் ஓடக்கூடிய படத்தை, சிறிது தடுமாறினாலும் தடம் மாறாமலும் விறுவிறுப்புக் குறையாமலும் கொண்டு செல்கிறது. திரைக்கதை. கேஷ்லெஸ் இந்தியா எவ்வளவு கேர்லெஸ்ஸாக இருக்கிறது என்பதை உணர்த்தும் திரைக்கதை இது.. எங்கேயோ இருந்துகொண்டு தமது பணத்தை யாரோ ஒருவர் அபகரித்துவிட முடியும் என்பதை எதிர்கொள்ள முடியாத சாமானிய மனிதர் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் புகுத்தப்பட்ட டிஜிட்டல் இந்தியா என்னும் திட்டம் எவ்வளவு பெரிய மோசடி என்பதை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் புத்திசாலித் தனமாகக் குறிப்புணர்த்திவிடுகிறார்.

எளிதில் தேசத் துரோகியாக அடையாளம் காட்டப்பட்டுவிடும் கதிரவன் வேடத்தை ராணுவ அதிகாரியாக்கியது போன்ற பல சாதுர்யமான உத்திகளைக் கையாண்டு அரசு எப்படியெல்லாம் பொருளாதாரரீதியாக சாமானியர்களை வதைக்கிறது என்பதைப் படம் சுவைபடச் சொல்லிச் செல்கிறது.. போகிற போக்கில் பிக் பாஸ், ரஜினி அரசியல், ஆதார் கார்டு தகவல் திருட்டு போன்ற பல விஷயங்களை நையாண்டியுடன் தொட்டுச் செல்லும் படம் என்பதால் சில பல லாஜிக் மீறல்களைச் சகித்துக்கொள்ள முடிகிறது.

இயக்குநர் பி.எஸ்.மித்ரன், சமந்தா
வெகுளியான தந்தை வேடத்தை டெல்லி கணேஷ் தனது இயல்பான நடிப்பால் முழுமையாக்கியிருக்கிறார். ரோபோ சங்கருடன் சேர்ந்து திருநெல்வேலி பாஷையுடனான உரையாடலோடு அவர் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும் காட்சி கலகலப்பு. தொழில்நுட்பரீதியாக அதலபாதாளத்தில் இருக்கும் சராசரிக் குடிமகனுக்குச் சரியான எடுத்துக்காட்டு அவர்.

சண்டைக் காட்சிகளில் திறமையை வெளிப்படுத்தியிருக்கும் விஷால் குடும்ப செண்டிமெண்ட், காதல், வில்லனுடனான சவால் போன்ற காட்சிகளில் சற்றுப் பின்தங்குகிறார். சத்யமூர்த்தி என்ற ஒயிட் டெவில் வேடத்தில் கனகச்சிதமாக ரசிகர்களைக் கவர்கிறார் அர்ஜுன்.  

விஷால், அர்ஜுன்
மனநல ஆலோசகராக வரும் சமந்தாவுக்கு நடிக்கப் பெரிய வாய்ப்பில்லை. என்றாலும் வருகின்ற காட்சிகளில் ரசிகர்களின் மனதைத் தனது தோற்றத்தாலும் கண்ணியமான நடிப்பாலும் கவர்கிறார்.

ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவில் நெல்லையின் அழகும் சென்னையின் ஆர்ப்பாட்டமும் நன்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு காட்சியில் அதிகாலைச் சூரியனையும் குண்டு பல்பையும் ஒரே ஃப்ரேமில் அடக்கியுள்ளது போன்ற சிறு சிறு அம்சங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. விவசாயிக்கு எஃப்பியில் லைக் போடுங்க, ஆனால் லைஃப்ல உதவாதீங்க என்னும் ரீதியிலான சமகால நிகழ்வுகளைப் படம் நெடுகிலும் தெளித்து எழுதப்பட்ட வசனங்களும் எடிட்டிங்கும் பின்னணி இசையும் படத்தின் விறுவிறுப்புக்கு பேருதவி புரிந்துள்ளன.

டிஜிட்டல் இந்தியாவுக்கான உறுதியான விடை இந்த இரும்புத்திரை.

இது தி இந்து விமர்சனத்துக்காக எழுதியது. 

செவ்வாய், மார்ச் 27, 2018

ஆஸ்கர் எனும் துறக்க இயலா அழகி

ஆஸ்கர் ஆரவாரம் அடங்கி ஒடுங்கிய நிலையில் விருதுக்குரிய படங்களை நிதானமாகப் பார்க்கவும் அவை குறித்துப் பரிசீலிக்கவும் வாய்ப்புக் கிடைத்தது. 90ஆம் ஆஸ்கர் திரைப்பட விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஹாலிவுட் திரைப்படங்களைப் பார்த்தபோது, ஹாலிவுட் படங்களின் தரம் பற்றிய ஐயம் எழுகிறது. ஓர் ஆண்டில் விருது பெறும் படங்களே பெரிய ரசனைக்குரியவையாக அமையாதபோது, விருது பெறாத படங்கள் எப்படி இருக்குமோ என்னும் எண்ணம் ஏற்படுகிறது. அதேவேளையில், விருதுக்குத் தகுதியான படங்களை விருதுப் பட்டியலுக்கு வெளியே தான் தேட வேண்டுமோ என்ற எண்ணத்தையும் தவிர்க்க முடியவில்லை. இந்த ஆண்டு ‘த ஷேப் ஆஃப் வாட்டர்’, ‘டன்கிரிக்’, ‘டார்க்கெஸ்ட் ஹவர்’, ‘த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைடு எப்பிங், மிசௌரி’, ‘எ ஃபெண்டாஸ்டிக் உமன்’ போன்றவை பிரதான விருதுகளை வென்றுள்ளன. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த அயல்மொழித் திரைப்படம் ஆகியவை இவற்றில் அடங்கிவிடுகின்றன. 

‘டன்கிரிக்’ படத்துக்காக கிறிஸ்டோபர் நோலனுக்குச் சிறந்த இயக்குநருக்கான விருது கிடைக்கலாம் என அந்தப் படம் வெளியானபோது வெளிப்பட்ட ஆரூடம் பொய்த்துப்போனது. எட்டுப் பிரிவுகளின் கீழ் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ‘டன்கிரிக்’ மூன்றை வென்றெடுத்தது. ‘டார்க்கெஸ்ட் ஹவ’ரும், ‘த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைடு எப்பிங் மிசௌரி’யும் இரண்டிரண்டு விருதுகளைப் பெற்றிருக்கின்றன. வழக்கமான ஹாலிவுட் படங்களின் தன்மையிலிருந்து எந்த வகையிலும் மாறாமல் உருவாக்கப்பட்டிருந்த ‘த ஷேப் ஆஃப் வாட்டர்’ 13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 4 விருதுகளை இது வென்றிருக்கிறது.

‘டன்கிரிக்’கும் ‘டாட்க்கெஸ்ட் ஹவ’ரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை. இரண்டாம் உலகப் போர் காலத்தில் நடைபெற்ற ஆபரேஷன் டைனமோ என்னும் புகழ்பெற்ற ராணுவ நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. ஹிட்லரின் நாஜிப் படைகளால் டன்கிரிக் துறைமுகத்தில் சுற்றுவளைக்கப்பட்ட ஆங்கிலேய வீரர்கள் உள்ளிட்ட நேசப்படை வீரர்கள் ஆங்கிலேயே குடிமக்களின் படகுகள் உதவியுடன் காப்பாற்றப்பட்டதைப் பெருமிதத்துடன் காட்சிப்படுத்தியிருந்தார் கிறிஸ்டோபர் நோலன். அதன் மறு முகமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள, அமைதிப் பேச்சுவார்த்தை வலியுறுத்தப்பட்ட போதும் அதைவிடுத்து வின்ஸ்டன் சர்ச்சில் எடுத்திருந்த துணிச்சலான முடிவைப் பெருமையுடன் காட்சிப்படுத்தியுள்ள படம் ‘டார்க்கெஸ்ட் ஹவர்’. இந்த இரண்டு படங்களுமே தேசம் குறித்தான பெருமிதங்கள் நிரம்பிவழிபவை. ‘டன்கிர்க்’ திரைப்படத்தில் அரசியல் நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டு ராணுவ சம்பவங்கள் மட்டுமே திரைக்கதையில் எடுத்தாளப்பட்டிருந்தன. அதற்கு நேர்மாறாக ‘டார்க்கெஸ்ட் ஹவ’ரில் ராணுவ நடவடிக்கைச் சம்பவங்களுக்குப் பெரிய முக்கியத்துவம் தரப்படாமல் வின்ஸ்டன் சர்ச்சில் எதிர்கொண்ட நெருக்கடிகளும் அவற்றை அவர் சமாளித்த விதங்களுமே திரைப்படமாகியிருந்தன. 
 
கிட்டத்தட்ட மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலொன்றின் கேப்டன் போல் அவர் தலைமைப் பொறுப்புக்கு வந்திருந்த நேரம் அது.  ‘டன்கிரிக்’கில் தனிப்பட்ட நபர்கள் எவரும் படத்தின் மையமாகச் சித்தரிக்கப்படவில்லை. ஆனாலும், அதன் இருகரைகளிலும் ஹிட்லரும் சர்ச்சிலும் அரூப முகத்தைக் காட்டிக்கொண்டே இருப்பார்கள். ‘டார்க்கெஸ்ட் ஹவர்’ அப்படியல்ல. படம் முழுவதையும் சர்ச்சிலே ஆக்கிரமித்துக்கொண்டிருப்பார். வின்ஸ்டன் சர்ச்சிலைப் பார்த்திராதவர்கள் அந்தக் கதாபாத்திரமேற்றிருந்த ஜெரி ஓல்டுமேன் என்னும் நடிகரை சர்ச்சில் என்றே எண்ணிக்கொள்ளலாம். அந்த அளவுக்கு சர்ச்சில் போலவே தனது நடை, உடை, பாவனைகளை அவர் வெளிப்படுத்தியிருந்தார். தனது சிறப்பான நடிப்புக்காகச் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் வென்றிருக்கிறார். ‘டன்கிரிக்’கில் பெண்களின் பங்களிப்பு வெளிப்படவே இல்லை. ஆனால், சர்ச்சிலுடைய மனைவி, டைப்பிஸ்ட் ஆகியோரின் அழுத்தமான பங்களிப்பை ‘டார்க்கெஸ்ட் ஹவர்’ சித்திரித்திருந்தது.

கறாரான பார்வையாளருக்கு, ‘டன்கிரிக்’கும் ‘டார்க்கெஸ்ட் ஹவ’ரும் முழுமைபெறாத படங்களே. இந்த இரண்டு படங்களும் தம்மளவில் சில சிறப்புகளைக் கொண்டிருந்தாலும் இவற்றைச் சிறந்த படங்கள் என்று கொண்டாடிக் களிக்க முடியாது. கிறிஸ்டோபர் நோலன் என்னும் ஆளுமை ‘டன்கிரிக்’கைக் கரையேற்றினார் என்றால் ‘டார்க்கெஸ்ட் ஹவ’ரைக் கவனிக்கத்தக்க படமாக்கியதில் ஓல்டுமேனின் பங்கே முன்னே நிற்கிறது.  வரலாற்று நிகழ்வுகளைப் பரபரப்பான சம்பவங்களாக்கி திரைக்கதையை நகர்த்தியிருந்தார் நோலன். சர்ச்சில் என்னும் தனிநபர் தொடர்பான சம்பவங்களைக் கொண்டு திரைக்கதையைச் சுவாரசியப்படுத்த முயன்றிருந்தார் இயக்குநர் ஜோ ரைட். இரண்டு படங்களுமே தேசப்பற்று என்னும் அம்சத்தைத் தான் தங்கள் அச்சாணியாகக் கொண்டு இயங்கின. முதல் படத்தில் குடிமக்களின் தேசாபிமானம் வெளிப்பட்டது என்றால் இரண்டாம் படத்தில் நாட்டின் பிரதமரின் தேசப்பற்று வெளிப்பட்டது.

‘டன்கிரிக்’கும் ‘டார்க்கெஸ்ட் ஹவ’ரும் தேசத்தின் தலைமை தொடர்பான படங்கள் என்றால் ‘த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைடு எப்பிங் மிசௌரி’யும் ‘எ ஃபெண்டாஸ்டிக் உம’னும் ஒரு நாட்டின் சாதாரண மனிதர்கள் தொடர்பானவை. அவர்களின் பிரச்சினைகளைப் பேசுபவை. ‘த்ரீ பில்போர்ட்ஸ்’ படம் சமூகத்தின் பிரதானச் சிக்கல் ஒன்றை எடுத்துக்கொண்டு அது தொடர்பான சமூகத்தின் எதிர்வினைகளை, தனி நபர்களின் கோபதாபத்தை, பழிவாங்கும் எண்ணத்தை, அன்பை, வெறுப்பை இன்னும் இவை போன்ற உணர்வைப் பரிசீலித்திருந்தது. வெறுப்பு என்பதற்கும் பழிவாங்கும் தன்மை என்பதற்கும் கோபம் என்பதற்கும் ஏதாவது பொருள் உள்ளதா என்பதை மனிதாபிமானத்துடன் சீர் தூக்கிப் பார்த்திருந்தது இப்படம். பாலியல் வல்லுறவு குறித்த முற்றிலும் புதிய பார்வை ஒன்று வெளிப்பட்டிருந்த படம் இது. பாலியல் வல்லுறவுச் சம்பவம் படத்தில் காட்சியாகக் கிடையாது, வல்லுறவில் ஈடுபட்ட மனிதன் படத்தின் எந்தக் காட்சியிலும் வருவதில்லை. பாலியல் வல்லுறவில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் மனிதர் அந்தச் சம்பவம் நடைபெற்றிருந்த நேரத்தில் ராணுவப் பணியில் இருந்திருப்பார். அவர் வேறொரு பாலியல் வல்லுறவுக் குற்றத்தில் ஈடுபட்டவர் என்பதைப் படம் சுட்டிக்காட்டும். இவற்றின் மூலம் பாலியல் வல்லுறவு தொடர்பாகப் பார்வையாளரிடம் அரும்பும் சில அடிப்படையான கேள்விகள் முக்கியமானவை.

சிறந்த நடிகைக்கான விருதை மில்ட்ரெட் கதாபாத்திரத்துக்காகப் பெற்றிருந்த நடிகை ஃப்ரான்சிஸ் மெக்டார்மெண்ட் ஒரு தாய்க்குரிய பிரியத்தையும் மகளுடன் ஏற்படும் பிணக்கிலான கோபத்தையும் சராசரி தாய்க்குரிய பாங்கில் தத்ரூபமாக வெளிப்படுத்தியிருந்தார். 19 வயது நிரம்பிய தன் மகள் தன்மீது கொண்ட பிணக்கின் காரணமாக வெளியேறிய இரவன்றுதான் அந்தக் கொடுமை மகளுக்கு நிகழ்ந்தது. ஆகவே, மகளின் பாலியல் வல்லுறவுக்கும் மரணத்துக்கும் தான் ஒருவகையில் காரணமோ என்ற குற்றவுணர்வு காரணமாக வந்து சேர்ந்த இறுக்கத்துடனே படம் முழுக்க நடைபோட்டிருப்பார்.

படத்தில் நிகழும் மூன்று மரணங்கள் படத்தின் போக்கைத் தீர்மானிப்பவை. அவற்றில் ஒரு மரணம் மட்டுமே படத்தில் காட்சியாக இடம்பெற்றிருக்கிறது. அது காவல் துறை அதிகாரி வில்லியம் பில்லின் மரணம். அது ஒரு தற்கொலை.  தன் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற பாலியல் வல்லுறவுக் குற்றத்தைத் துப்பு துலக்குவதில் அவரது சுணக்கத்தைச் சுட்டிக்காட்டியே மில்ட்ரெட் விளம்பரப் பலகைகளை வைத்திருப்பார். அவை அவரது கடமையுணர்வைச் சந்தேகிப்பவை. புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவரைப் பலமாக உலுக்கும் வகையில் அந்த விளம்பத் தட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், அவரது தற்கொலைக்கு அந்த விளம்பரத் தட்டிகள் காரணமல்ல. தன் மனைவி, மக்கள் மீது கொண்ட நேசத்தாலேயே வில்லியம் பில் தன்னை மாய்த்துக்கொள்வார்.

காவல் துறையில் வில்லியம் பில்லின் கீழ் பணியாற்றும் டிக்ஸன், தன் தந்தையின் மரணம் தந்த துக்கத்தால் ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக இனம் சார்ந்த, சாராத குரோத எண்ணத்துடனான வன்முறை நடவடிக்கைகளை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பவர். எதிர்மறை மனோபாவத்திலிருந்து நேர்மறைக்கு மாறிய இந்தக் கதாபாத்திரத்தை ஏந்தியிருந்த சாம் ராக்வெல் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றுக்கொண்டார். இப்படியான மனிதர்கள் கூட்டாக வாழ்வும் ஒரு சமூகத்தில் ஏற்படும் பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்களின் பின்னணிக்குத் தனிநபர் சார்ந்த குடும்பச் சூழலும் ஒரு வகையில் காரணமாக அமைகிறது. இவற்றை எல்லாம் ஒன்றுகூட்டி பரிசீலிக்காமல் வெறுமனே பாலியல் குற்றம் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு பழிவாங்கும் எண்ணத்துடன் வாழ்வின் பயணம் தொடர்வது சரிதானா என்னும் கேள்வியை எழுப்பிவிட்டுப் படம் தன்னளவில் ஒதுங்கிக்கொள்கிறது.  பாலியல் குற்றம் தொடர்பான எந்த தீர்ப்பையும் படம் முன்மொழியவில்லை. அது தொடர்பான பரிசீலனையை மட்டுமே வேண்டி நிற்கிறது. அதனால் தான் இந்தப் படம் பிற படங்களைவிட மேலோங்கி இருக்கிறது. ஆனால், இதற்குச் சிறந்த படத்துக்கான விருது கிடைக்கவில்லை.  

சிறந்த அயல்மொழிப் படத்துக்கான விருதை வென்றிருந்தது சிலி நாட்டு, ஸ்பானிய மொழிப் படமான ‘எ ஃபெண்டாஸ்டிக் உமன்’. அந்த நாட்டில் இந்தப் படமே முதன்முறையாக ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இப்படம் திருநங்கை ஒருவரின் துன்பத்தை அவருக்கு ஏற்படும் எதிர்பாராத இன்னல்களைப் படமாக்கியிருந்தது. காட்சியமைப்புகளும் இசையும் ஒளிப்பதிவுக் கோணங்களும் இணைந்து கதாபாத்திரத்தின் உணர்வை சரியானவிதத்தில் பார்வையாளரிடம் கொண்டுசென்றன.  இதிலும் ஒரு மரண சம்பவமே படத்தின் மையம். மரணத்தைப் புரிந்துகொள்ளாதவரை தனிநபர்களால் வாழ்வைப் புரிந்துகொள்ளவே முடியாது என்பதைப் பெரும்பாலான நல்ல படங்கள் சுட்டிக்காட்டும். இந்தப் படமும் அப்படியொரு பார்வையைக் கொண்டிருக்கிறது. 57 வயதான தன் காதலர் ஓர்லாந்தோவுடன் ஒரு அபார்ட்மெண்டில் வசித்துவருகிறார் இளம்பெண்ணான மரியா. மிதமிஞ்சிய மகிழ்ச்சியுடன் கழிந்த இரவின் பின்பகுதியில் எதிர்பாராத நிகழ்வொன்றால் பரவும் சோகம் மரியாவைக் கவ்விக்கொள்கிறது.

அந்த இரவில் ஓர்லாந்தோவின் உடல்நலம் திடீரெனக் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. மாடிப்படிகளில் வேறு தவறிவிழுந்துவிடுகிறார் உடம்பிலும் தலையிலும் காயங்கள் ஏற்படுகின்றன. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பயனில்லை. மரண தேவனின் கைகோத்துச் சென்றுவிடுகிறார் ஓர்லாந்தோ. இந்த மரணத்துக்குப் பின்னர் மரியா பல துயரங்களை எதிர்கொள்கிறார். துணைக்கென யாருமில்லாமல் தனியொரு பெண்ணாக அவர் அவதியுறுகிறார். அடாத பழிகள் அவர் மீது வந்து விழுகின்றன. அத்தனையையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு வாழ்வை நம்பிக்கையுடன் நடத்திச் செல்கிறார். காதலர் இறந்ததொரு துயரம் என்றால், காதலரை மரியாவே கொலை செய்திருக்கக் கூடுமோ என்ற சந்தேகத்தால் ஓர்லாந்தோவின் குடும்பத்தினரும் காவல் துறையினரும் அவளை அலைக்கழிக்கிறார்கள். காதலரின் இறுதிச் சடங்குக்குச் செல்லும் அனுமதி மரியாவுக்கு மறுக்கப்படுகிறது. தன் பிரியத்துக்குரியவரின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்த்தால் போதும் என்று அலைபாயும் அந்த அபலைப் பெண்ணின் ஆசையை ஈவு இரக்கமே இல்லாமல் ஓர்லாந்தோவின் குடும்பத்தினர் அடக்கப் பார்க்கிறார்கள். இவை எல்லாமுமாகச் சேர்ந்து மரியாவை முடக்கிப்போட முயல்கின்றன. ஆனால், ஒடுங்க மறுத்து, மூர்க்கத்தை எதிர்த்து துணிச்சலுடனும் முழுமூச்சுடனும் போராடுகிறார் மரியா. தான் ஒரு திருநங்கை என்ற எந்தப் பரிவையும் இந்தக் கதாபாத்திரம் கோரவில்லை. ஆனால், மாற்றுப் பாலினத்தவர் மீதான சமூகத்தின் அலட்சியப் பார்வையைப் படம் காட்சிப்படுத்தியிருக்கிறது. இரு பாலினத்தவருக்கிடையே சிக்கி அல்லலுறும் மாற்றுப் பாலினத்தின் பிரதிநிதியாகவே மரியா படைக்கப்பட்டிருக்கிறார். அந்த வகையில் இந்தப் படம் ஹாலிவுட் படங்களை எல்லாம் சற்று ஓரங்கட்டிவிட்டு முன்னகர்ந்து நிற்கிறது.
 
ஆஸ்கரின் சிறந்த பட விருதைப் பெற்ற ‘த ஷேப் ஆஃப் வாட்டர்’ அக்மார்க் ஹாலிவுட் படம். ஹாலிவுட் படத்துக்குத் தேவைப்படும் வேற்றுக்கிரகவாசி போன்ற ஒரு கதாபாத்திரம், கறுப்பு வெள்ளை இனப் பாகுபாடு, அமெரிக்க ரஷ்ய அறிவியல் ஆராய்ச்சி மோதல், தன் பாலின ஈர்ப்பு, சாகசம் என எதற்கும் குறைவைக்காத படம் இது. அதனாலேயேகூட இது சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், இது சிறந்த படமா? நிச்சயமாக இல்லை என்பதே பதில். தொழில்நுட்பச் செழுமை காரணமாகப் படம் காட்சியியல்ரீதியாக வளமாகவே உள்ளது. ஆனால், திரைக்கதை பழைய அம்புலிமாமாக் கதைத் தன்மையிலேயே இருக்கிறது. படத்தின் அடிநாதம் வழக்கம்போல் காதல்தான். அதிலும் வாய் பேசா முடியாத இளவரசிப் பெண் ஒருவருக்கும் மனிதனாகவே இல்லாத அதே நேரம் மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிந்த ஒரு வினோத மனிதனுக்கும் இடையேயான காதல்.  பலவீனமான அந்தப் பெண் தொழில்நுட்ப அறிவு நிரம்பிய ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து அந்த வினோத மனிதனைக் காப்பாற்றிவிடுகிறாள். அவன் மேல் காதல் கொள்கிறாள். அவள் சொல்வதை எல்லாம் அந்த வினோத மனிதனும் புரிந்துகொள்கிறான். இருவரும் உறவு கொள்கிறார்கள். காதலுக்குத் தடை வருகிறது. எதிரிகளை அழித்து இருவரும் இணைகிறார்கள். இவற்றையெல்லாம் துல்லியமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.  ஆனால் தொழில்நுட்பத் துல்லியம் மட்டும் ஒரு படத்தைக் கரை சேர்த்துவிடுமா?

இசை, ஒளிப்பதிவு போன்ற உயர்தொழில்நுட்பத்தின் வழியே இந்த அதிசயத்தை நம்பவைக்க முயல்கிறார் மெக்ஸிகன் இயக்குநர் கில்லெர்மோ தெல் தோரோ. ஒரு குழந்தைத் தனமான மனம் இருந்தால் மட்டுமே இந்தப் படத்தை ரசிக்கவோ பார்க்கவோ இயலும். அமெரிக்க மனம் அவ்வளவு குழந்தைத் தனம் நிரம்பியதா என்று எழும் கேள்வியுடன் இந்தப் படத்தை அணுகும்போது இத்தகைய படங்களுக்குக் கிடைக்கும் விருது என்பதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?  இதை இயக்கியவரே சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெறுகிறார் என்பதிலுள்ள அரசியல் குறித்த சந்தேகம் எழுவது இயல்புதானே?

கடந்த சில ஆண்டுகளாகவே ஆஸ்கர் விருது பெற்ற சில ஹாலிவுட் படங்களைப் பார்த்தபோது அவற்றுக்கு உண்மையிலேயே ஆஸ்கர் விருதுக்குரிய தகுதி உள்ளனவா என்னும் ஐயம் வலுப்பெறவே செய்கிறது. ஒருவேளை ஆஸ்கர் பற்றிய அதீதமான புனித பிம்பம் நமது எண்ணத்தில் புரையோடிப்போயிருக்கிறதோ என்றும் தோன்றுகிறது. இவற்றை எல்லாம் கடந்து, ஆஸ்கர் விருது பெறும் படங்கள் அவை தேர்ந்தெடுக்கப்படும் விதம், அவற்றின் பின்னணியில் மறைந்திருக்கும் அரசியல் போன்றவை எப்போதுமே விவாதத்துக்குரியவையாகவே உள்ளன. ஆஸ்கர் படங்கள் பற்றிய இத்தகைய விமரிசனப் பார்வையை உலகத் திரைப்படப் பார்வையாளர்கள் மட்டுமல்லாமல் ஹாலிவுட் பட ரசிகர்களும் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், அவை குறித்த கரிசனப் பார்வையும் அவர்களிடம் உள்ளன என்பதையும் நம்மால் மறுக்க முடியாது. ஏனெனில், இன்னும் ஆஸ்கர் விருது பெறும் படங்கள் கணிசமான எண்ணிக்கையில் அமைந்த உலகத் திரைப்படப் பார்வையாளர்களால் பெரிய விருப்பத்துடன் பார்க்கப்படுகின்றன. தொடர்ந்து ஏமாற்றமளித்த போதும் ஆஸ்கர் இன்னும் மறக்க முடியாத, துறக்க இயலாத அழகியாகவே தோற்றம் கொள்கிறாள். இந்தத் தோற்றத்தின் பொலிவு மங்குமா பொங்குமா என்பதை இனிவரும் காலம்தான் முடிவுசெய்யும்.   

ஞாயிறு, மார்ச் 11, 2018

அஞ்சலி: செல்வி அர்ச்சனா என்ற மயில்

அழகு என்றால் முருகு என்பார்கள் உள்ளம் உருகும் பக்தர்கள். படத்திலே பார்த்த முருகனை நேரில் பார்த்தறியாத பரம ரசிகருக்கோ அழகென்றால் முருகனாய் அறிமுகமான ஸ்ரீதேவிதான். அவர் சிறந்த நடிகையா என்று கேட்டால் பட்டென்று பதில் சொல்ல முடியாது. ஆனால், ஸ்ரீதேவி அழகா என்று கேட்டால் சட்டென்று ஆமோதிக்கும் மனம். அவரைவிடச் சிறந்த நடிகைகள் பலரைத் திரையுலகம் சந்தித்திருக்கிறது.

அவர்கள் எவருமே ஸ்ரீதேவியைப் போல் புகழடைந்திருக்கவில்லை என்பதே ஸ்ரீதேவியைத் தனித்துக் காட்டும். தங்களின் அபிமான நடிகை திரையில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை தங்கள் அபிமான நட்சத்திரத்தைத் திரையில் பார்ப்பதே ஓர் அலாதி இன்பம். அந்த இன்பத்தை அள்ளி அள்ளித் தந்ததில் துளியும் குறைவைக்காதவர் ஸ்ரீதேவி. அவரது திரை நடிப்பைவிடத் திரை இருப்பே ரசிகர்களை அமைதிப்படுத்தியது.


தன்னை ரசிகர்கள் அழகுப் பதுமையாக ரசிக்க விரும்புகிறார்கள் என்றே அவரும் நம்பியிருக்கிறார். அறுவை சிகிச்சை செய்யாத மூக்குடன் காட்சி தந்த ஸ்ரீதேவியிடமே ரசிகர்கள் மயங்கிக் கிடந்தார்கள். ஸ்ரீதேவியோ அது போதுமென்று எண்ணவில்லை. ரசிகரை ஈர்த்த தன் அழகுக்கு மூக்கு ஒரு குறை என்று எண்ணி அதை அறுவை சிகிச்சை செய்து மாற்றிக்கொண்டார்.

அவரைப் பொறுத்தவரை ரசிகர்கள் தன்னிடம் எதிர்பார்ப்பதை அவர்கள் எதிர்பார்ப்பதற்கும் அதிகமாகத் தர வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கலாம். அதனால்தான் அவர் தொடர்ந்து தனது அழகைப் பராமரிப்பதில் பேரார்வம் காட்டியிருக்கிறார். உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து, பொலிவு கெடாமல் தன்னைப் பராமரித்துவந்திருக்கிறார்.


குழந்தைப் பருவம் முதலே திரையில் அவர் தோன்றிவந்தாலும், குமரியாக அவர் காட்சியான ‘மூன்று முடிச்சு’ அவரது வாழ்க்கைச் சம்பவங்களுடன் ஒத்துப்போகும் ஒரு திரைப்படமாக இப்போது நினைவுகளில் தங்குகிறது. கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் செல்வி என்னும் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடித்திருந்தார். படம் வெளியானபோது ஸ்ரீதேவியின் வயது 13தான். அந்தப் படத்தில் அவர் 18 வயதுப் பெண்ணாக நடித்திருந்தார்.

காதலனை நினைவில் சுமந்தபடி, குடும்பச் சூழல் காரணமாகத் தன்னைவிட அதிக வயது (46) கொண்ட ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளும் அபாக்கியவதி அவர். இப்படி ஒரு விபரீத முடிவை எந்தப் பெண்ணாவது எடுப்பாரா என்று நினைக்கச் செய்தாலும், குமரி முதல் காஷ்மீர்வரை வாழ்ந்திருந்த பெரும்பாலான இந்தியக் கன்னிப்பெண்கள் இத்தகைய துயரத்தை வேறுவழியின்றிக் கரம் பற்றியிருக்கிறார்கள் என்பதே வரலாறு. ஸ்ரீதேவியும் இதற்கு விலக்கல்ல.



மூன்று குழந்தைகளையும் கணவனையும் பொறுமையுடனும் பொறுப்புடனும் பராமரிப்பது, போதாக்குறைக்குத் தன்னைவிட வயதில் மூத்த, மகன் ஸ்தானத்தில் உள்ள ரஜினியைத் திருத்துவது - தன் மீது வெறிகொண்டலைந்த ரஜினியை, ‘போடா கண்ணா போ’ என்று விரட்டுவது, ‘டீக்கே’ என அவரது சொல்லாலேயே குத்தலாய்க் கூறுவது - போன்ற காரியங்கள் இந்தியப் பெண்களுக்கேயான குருவி தலையில் வைத்த பனங்காய் சமாச்சாரங்கள்தாம். ஆனால், அந்தக் கதாபாத்திரத்தின் பண்புநலன்களை ஸ்ரீதேவி மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியிருப்பார். இதனாலேயே ஸ்ரீதேவியும் ரசிகரின் மனத்தில் எளிதாகப் புகுந்து சிம்மாசனமிட்டிருக்கக்கூடும்.

இயக்குநர் மகேந்திரனின் ‘ஜானி’யில் ஸ்ரீதேவி ஏற்றிருந்த அர்ச்சனா என்னும் பாடகி வேடம் எந்த அளவு எளிமையானதோ அந்த அளவு வலிமையானது. ஆழ்ந்த சோகத்தில் புதைந்த விழிகள், நீடித்த மௌனத்தில் உறைந்த உதடுகள், வலது நாசியின் ஒற்றை மூக்குத்தி, மெல்லிய கழுத்தில் நீளமாகத் தொங்கும் வெள்ளைவெளேரென்ற பாசி, மேட்சிங் ப்ளவுஸ், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் புடவையை வலது தோளோடு இழுத்துப் போர்த்திக்கொள்ளும் பாங்கு என அர்ச்சனாவை அர்ச்சனைக்குரிய அம்பாளின் தெய்வ கடாட்சத்துடன் திரையில் காட்டியிருப்பார்கள் அசோக்குமாரும் மகேந்திரனும்.

அர்ச்சனாவின் பாடல் திருடன் ஒருவனைத் திருத்தியிருக்கும்; அவரது காதலோ கொலையாளி ஒருவனை மனிதனாக மாற்றியிருக்கும். இந்தப் படத்தில் ரஜினியிடம் காதலைத் தெரிவிக்கும் காட்சிகளில் அவரிடம் வெளிப்படும் முகபாவமும் உடல்மொழியும் அசாதாரணமானவை. ஏக்கம், தவிப்பு, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், பிரியம், படபடப்பு, கொஞ்சமாய்க் கோபம் இவை போன்ற உணர்ச்சிகளுடன் சின்னதாய் ஒரு குழந்தைத் தனம் ஆகியவை கலந்து ஸ்ரீதேவி வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு அர்ச்சனாவையும் அதன் மூலம் ஸ்ரீதேவியையும் ஆயுள் முழுவதும் நினைவில் நிலைத்திருக்கச் செய்யும் வல்லமை கொண்டது.


கனவுகளைக் கண்களில் தேக்கி, காதல் ஏக்கத்துடன் கிராமத்தை வலம்வந்த, பருவத்தின் நுழைவாயிலிலேயே வாழ்வின் பெரும் அனுபவத்தைச் சம்பாதித்த ‘16 வயதினிலே’ மயில் கதாபாத்திரத்தின் அத்தனை அழுத்தங்களையும் அந்தப் பிஞ்சு முகத்துடன் தாங்கியிருப்பார் ஸ்ரீதேவி. தேசிய விருதை மயிரிழையில் தவறவிட்டதாகச் சொல்லப்பட்ட ‘மூன்றாம் பிறை’, ‘மீண்டும் கோகிலா’, ‘வறுமையின் நிறம் சிகப்பு’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ எனத் தொடர்ந்துவந்த பல படங்களில் அவர் உருவாக்கிய சித்திரங்கள் ரசிகர்களுக்கும் அவருக்குமிடையிலான ஓர் உணர்ச்சிப் பிணைப்பை உருவாக்கின.

அழகுச் சித்திரங்களின் அழிவை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? கலை ரசிகர்கள் கலங்கித்தானே போவார்கள்? அதனால்தான் ஸ்ரீதேவியின் இறப்பு ரசிகருக்கு ஈடற்ற இழப்பாகியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் ஸ்ரீதேவி நிமித்தம் பொங்கிய உணர்ச்சிப் பிரவாகம் வடிய சில நாட்கள் ஆயின.ஊடகங்களும் ‘கண்ணே கலைமானே’யிலும் ‘செந்தூரப்பூவே’யிலும் ‘காற்றில் எந்தன் கீத’த்திலும் மீண்டும் மீண்டும் ஸ்ரீதேவியை உயிர்ப்பித்துக்கொண்டே இருந்தன.

இறுதி ஊர்வலத்தில்கூட ஸ்ரீதேவியின் முகத்தைப் பார்ப்பதிலேயே துடியாய் இருந்தார்கள் ரசிகர்கள். அழகிய பெண்களின் இறப்பைவிடக் கொடிது அவர்கள் அழகை இழந்துபோகும் நிலை. அந்த வகையில் ஸ்ரீதேவியின் இறப்பு சற்று மேம்பட்டது என்றே சொல்ல வேண்டும். அவர் அழகாய்ப் பிறந்தார்; அழகாய் இருந்தார்; அப்படியே இறந்தும்விட்டார். ஆக, அவருடைய வாழ்வு முழுமதி போன்றதென்றே தோன்றுகிறது.

2018 மார்ச் 4 அன்று இந்து தமிழ் பெண் இன்று இணைப்பிதழில் வெளியானது.   

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்