இந்த வலைப்பதிவில் தேடு

நடிகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடிகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மே 06, 2021

நடிகரும் ஓவியருமான பாண்டு காலமானார்

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்; ஆயிரணக்கணக்கானோர் உயிரிழக்கிறார்கள். கொரோனா பாதிப்பு பிரபலங்களையும் விட்டுவைப்பதில்லை. பிரபலப் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் தொடங்கி எண்ணற்ற திரைப் பிரபலங்கள் இதற்குப் பலியாயினர். கடந்த வாரம் இயக்குநர் கே வி ஆனந்தும் குணச்சித்திர நடிகர் செல்லத்துரையும் பலியாயினர். இன்று காலை பிரபல நடிகர் பாண்டு (74) கொரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளார். நாமக்கல் மாவட்டம் கொமார பாளையத்தில் 1947ஆம் ஆண்டு பிப்ரவரி 19இல் பிறந்திருக்கிறார் பாண்டு. 

எம்.ஜி.ஆரின் நண்பரும் பிரபல நடிகருமாக இருந்த இடிச்சபுளி செல்வராஜின் சகோதரர் நடிகர் பாண்டு. இடிச்சபுளி செல்வராஜ் 2012இல் காலமானார். ஓவியக் கல்லூரியில் படித்திருந்த பாண்டு, திரைப்படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களையும் குணச்சித்திர வேடங்களையும் ஏற்று நடித்துள்ளார். வேலை கிடைச்சிடுச்சு படத்தில் இவரது நகைச்சுவை நடிப்பு கவுண்டமணி சத்யராஜ் இருவரையும் தாண்டி ரசிக்கவைத்த ஒன்று. 1970இல் வெளியான மாணவன் படம் தொடங்கி பணக்காரன் நடிகன், சின்னதம்பி, வால்டர் வெற்றிவேல், நாட்டாமை, கோகுலத்தில் சீதை, வாலி, சிட்டிசன், கில்லி, பஞ்சுமிட்டாய் உள்ளிட்டநூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.  தான் பயின்ற ஓவியம் அடிப்படையிலான வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார் பாண்டு. இதன் மூலம் பிரபல ஆளுமைகளின் வீடுகளின் பெயர்ப்பலகைகளை அழகுற வடிவமைத்தவர் பாண்டு. குறிப்பாக, அதிமுகவின் கொடியை வடிவமைத்தவர் இவர்தான் என்பது இவரது சிறப்பு.  தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் லோகோவை வடிவமைத்துப் பாராட்டுப் பெற்றிருக்கிறார். 

ஓவியம்தான் இவரது விருப்பமான கலை. ஓவியம் வரைய தூரிகைகளைவிடத் தனது பெருவிரலையும் பிற விரல்களையும் பயன்படுத்துவதிலேயே தனக்கு மகிழ்ச்சி என்று கூறியுள்ளார் பாண்டு. கணினித் திறனைப் பயன்படுத்தி மரபுக் கலையான ஓவியத்தில் புதிய பாணியை உருவாக்கி மகிழ்ந்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஹோட்டல் அம்பாசடர் பல்லவாவில் ஓவியக் காட்சியையும் நடத்தியிருக்கிறார். 

செவ்வாய், டிசம்பர் 17, 2019

CIFF 2019: சடலத்தைப் புதைப்பது எளிதல்ல

இன்று (டிசம்பர் 14) காலை தேவியில் 11:00 Sibyl படம் பார்த்தேன். உளவியல் மருத்துவர் ஒருவர் அவரிடம் ஆலோசனைக்காக வரும் நடிகை, அவரது காதல், காதலன், மருத்துவரின் காதல், குடும்பம் எனச் செல்லும் படம் வாழ்க்கை குறித்துப் பேசியது. நடிகர் ஒருவரால் கர்ப்பமான நடிகை கர்ப்பத்தைக் கலைக்கவா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார். அது குறித்த ஆலோசனைக்காகத் தான் மருத்துவரை நாடுகிறார். மருத்துவர் ஓர் எழுத்தாளரும்கூட. தன்னிடம் ஆலோசனைக்காக வருபவர்களிடம் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் அவர் நாவலொன்றை எழுதுகிறார். நடிகைக்கு ஆலோசனை தரத் தொடங்குபவர் ஒரு கட்டத்தில் முழுவதும் நடிகை போலவே மாறிவிடுகிறார். 
நடிகை முழுவதுமாக மருத்துவரின் ஆலோசனையை நாடியே இருக்கிறார். தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்குக்கூட மருத்துவரை வரவழைத்துக்கொள்கிறார். இயக்குநருக்குப் பதில் மருத்துவரே காட்சிகளை விளக்குகிறார். படமும் எடுத்து முடித்துவிடுகிறார்கள். நடிகையின் காதலனுடன் மருத்துவருக்கு உறவு ஏற்படுகிறது. இப்படி என்னென்னவோ நடைபெறுகிறது. நவீன நகர வாழ்க்கையின் மனிதர்கள் எதிர்கொள்ளும் பல சிக்கல்களைப் பேசுகிறது படம். 

அடுத்ததாக அண்ணா தியேட்டரில் The Silence of Om என்னும் படம் பார்த்தேன். ஒரு கேங்ஸ்டரின் மகன் ஒரு குற்றத்தில் சிக்கி சிறைக்குச் செல்கிறான். சிறையில் அவனுடன் இருவர் இருக்கிறார்கள். அதில் ஒருவன் தன் தகப்பனைக் கொன்று விட்டு மரண தண்டனைக்காகக் காத்திருக்கிறான். தந்தையைக் கொன்றுவிட்டாலும் சிறையில் தான் இறந்தபின்னர் தந்தையைக் காணும் நாளுக்காகக் காத்திருக்கிறான். கேங்க்ஸ்டரின் மகனுக்கும் தந்தைமீதான பிரியம் புரிகிறது. சிறுவயதிலிருந்தே அவனை அடித்துக்கொண்டே இருப்பவர் அவர். அவன் உடம்பில் டாட்டூ குத்திக்கொள்வது அவருக்குப் பிடிக்காது. அவன் வெளியில் வந்த பின்னர் அவனுடைய காதலி அந்த டாட்டூவைப் பார்க்க பிரியப்படும் கணத்தில் விழுந்து உயிரை விட்டுவிடுகிறாள். ஆசையை விட்டுவிடுவதே நல்லது என்னும் பௌத்தக் கருத்தை உணர்த்துகிறது படம். 

இறுதியாக தேவிபாலா திரையரங்கில் Amare Amaro என்னும் படம் பார்த்தேன். இதில் இறந்துபோன தன் சகோதரனைப் புதைக்க ஒரு தம்பி மேற்கொள்ளும் முயற்சிகளே படம். இதில் நிலக் காட்சிகள் அழகாக இருந்தன. இறந்த வீடு மூன்று நாட்களுக்குத் திறந்தே இருக்க வேண்டும் போன்ற பண்பாட்டு அம்சங்கள் இருந்தன. அதிகாரம் மிக்க நகரத்தின் தலைவரான பெண்ணின் மகளை அந்தத் தம்பி காதலிக்கிறான். இறுதியில் அண்ணனைப் புதைக்கும் முயற்சியில் அந்தத் தம்பியும் அவனுடைய காதலியும் துப்பாக்கிச் சூடு பட்டு இறந்துவிடுகிறார்கள். அதிகாரத்தை எதிர்த்து சாமானியர்கள் எந்தச் செயலையும் செய்ய இயலாத நிலையைப் படம் குறிப்புணர்த்துகிறது. 

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்