இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், மே 06, 2021

நடிகரும் ஓவியருமான பாண்டு காலமானார்

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்; ஆயிரணக்கணக்கானோர் உயிரிழக்கிறார்கள். கொரோனா பாதிப்பு பிரபலங்களையும் விட்டுவைப்பதில்லை. பிரபலப் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் தொடங்கி எண்ணற்ற திரைப் பிரபலங்கள் இதற்குப் பலியாயினர். கடந்த வாரம் இயக்குநர் கே வி ஆனந்தும் குணச்சித்திர நடிகர் செல்லத்துரையும் பலியாயினர். இன்று காலை பிரபல நடிகர் பாண்டு (74) கொரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளார். நாமக்கல் மாவட்டம் கொமார பாளையத்தில் 1947ஆம் ஆண்டு பிப்ரவரி 19இல் பிறந்திருக்கிறார் பாண்டு. 

எம்.ஜி.ஆரின் நண்பரும் பிரபல நடிகருமாக இருந்த இடிச்சபுளி செல்வராஜின் சகோதரர் நடிகர் பாண்டு. இடிச்சபுளி செல்வராஜ் 2012இல் காலமானார். ஓவியக் கல்லூரியில் படித்திருந்த பாண்டு, திரைப்படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களையும் குணச்சித்திர வேடங்களையும் ஏற்று நடித்துள்ளார். வேலை கிடைச்சிடுச்சு படத்தில் இவரது நகைச்சுவை நடிப்பு கவுண்டமணி சத்யராஜ் இருவரையும் தாண்டி ரசிக்கவைத்த ஒன்று. 1970இல் வெளியான மாணவன் படம் தொடங்கி பணக்காரன் நடிகன், சின்னதம்பி, வால்டர் வெற்றிவேல், நாட்டாமை, கோகுலத்தில் சீதை, வாலி, சிட்டிசன், கில்லி, பஞ்சுமிட்டாய் உள்ளிட்டநூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.  தான் பயின்ற ஓவியம் அடிப்படையிலான வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார் பாண்டு. இதன் மூலம் பிரபல ஆளுமைகளின் வீடுகளின் பெயர்ப்பலகைகளை அழகுற வடிவமைத்தவர் பாண்டு. குறிப்பாக, அதிமுகவின் கொடியை வடிவமைத்தவர் இவர்தான் என்பது இவரது சிறப்பு.  தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் லோகோவை வடிவமைத்துப் பாராட்டுப் பெற்றிருக்கிறார். 

ஓவியம்தான் இவரது விருப்பமான கலை. ஓவியம் வரைய தூரிகைகளைவிடத் தனது பெருவிரலையும் பிற விரல்களையும் பயன்படுத்துவதிலேயே தனக்கு மகிழ்ச்சி என்று கூறியுள்ளார் பாண்டு. கணினித் திறனைப் பயன்படுத்தி மரபுக் கலையான ஓவியத்தில் புதிய பாணியை உருவாக்கி மகிழ்ந்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஹோட்டல் அம்பாசடர் பல்லவாவில் ஓவியக் காட்சியையும் நடத்தியிருக்கிறார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

லேட்டஸ்ட்

லே அவுட் ஆசிரியர்

தொடர்பவர்