இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, ஏப்ரல் 23, 2017

சினிமா ஸ்கோப் 31: இதயத்தைத் திருடாதே

ஒரு திரைக்கதையை அழகுபடுத்துவது உணர்வுபூர்வ சம்பவங்கள். அடுத்தடுத்த கட்டத்துக்குக் கதை நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் படம் சப்பென்றாகிவிடும். ஓடினால்தானே அது நதி, தேங்கினால் குட்டைதானே. கிட்டத்தட்ட ஒரே கதை என்றபோதும், திரைக்கதையின் பயணம் வெவ்வேறாக அமைந்த இரண்டு தமிழ்ப்  படங்களைப் பார்க்கலாம். ஒன்றைப் பிரபலமான இயக்குநர் இயக்கியிருக்கிறார். மற்றொன்றைப் பெயரறியாத இயக்குநர் இயகியிருக்கிறார்.  


முடிவல்ல ஆரம்பம் 1984-ல் வெளியான தமிழ்ப் படம். படத்தைத் தயாரித்து இயக்கியிருப்பவர் என்.மொஹியுத்தீன்; திரைக்கதையும் அவர்தான். படம் அநேகமாக ஏதோ ஒரு இந்திப் படத்தின் மறு ஆக்கமாக இருக்க வேண்டும். ஏனெனில், படத்தின் கதையை எழுதியிருப்பவர் இந்திக் கதையாசிரியரும் இயக்குநருமான சரண்தாஸ் ஷோக். 

அது ஒரு மலையோரக் கிராமம். அவள் ராதா, அந்தக் கிராமத்தில் ரோட்டோர டீக்கடை நடத்தும் பெண்மணியின் ஒரே மகள். பத்தாவதுவரை படித்திருக்கிறாள். கிட்டத்தட்ட பதினாறு வயதினிலே மயிலு போன்றவள். அவன் கண்ணையா, லாரி ஓட்டுநர். தொழில் நிமித்தமாகச் செல்லும் வழியில் அடிக்கடி டீக்கடைக்கு வந்து செல்கிறவன். இருவருக்குமே இள வயது. பார்த்தவுடன் காதல் பற்றிக்கொள்ளும் பருவம். காதல் வயப்படுகிறார்கள். கயிற்றுச் சடங்குக்கு முன்னரே இருவரையும் கலவி பிணைத்துவிடுகிறது. ராதா கர்ப்பமாகிவிடுகிறாள். கல்யாண தேதி குறித்துவிடுகிறார்கள். அதற்கு முன் தினம் இரவு தொழில் நிமித்தமாகச் சென்ற கண்ணையா திரும்பிவரவில்லை.


இந்தக் கதையைப் படிக்கும்போது, உங்களுக்குச் சமீபத்தில் வெளியான காற்று வெளியிடை ஞாபகம் வரலாம். ஆனால், இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. காற்று வெளியிடையின் திரைக்கதை பழமையானது. சொல்லப்போனால் திரைக்கதை என்ற ஒன்றே இல்லை. தொழில்நுட்பத்தால் ஊதப்பட்ட பொம்மை அது. அதனால்தான் எல்லா ஃப்ரேம்களும் அழகாக இருந்தும் படம் ஜீவனற்றுக் காட்சி தருகிறது. காற்று வெளியிடை நதியல்ல, குட்டை. வருண் பாகிஸ்தான் சிறையில் மாட்டிக்கொள்கிறான். வயிற்றில் குழந்தையுடன் லீலா இருக்கிறாள். இருவரும் இணைவார்களா என்பதே கிளைமாக்ஸ். ஆனால், வெறும் காதல், மன்னிப்பு, மீண்டும் காதல் மீண்டும் மன்னிப்பு என்று பள்ளத்தில் விழுந்த லாரி டயர் போல் படம் ஒரே இடத்தில் சுழன்றுகொண்டிருக்கும். ஆணாதிக்கம், பெண் உரிமை, போர் என்ற பம்மாத்துகள் வேறு படத்தில் துருத்திக்கொண்டிருக்கும். நுட்பமாக வெளிப்படுத்துதல் வேறு, நுனிப்புல் மேய்தல் வேறு. காற்று வெளியிடை இரண்டாவது வகையானது.

லீலா ஆப்ரஹாம் போன்ற நிலையில்தான் ராதாவும் இருக்கிறாள். ஆனால், லீலா போல் ராதாவுக்கு மூளைப் பிசகில்லை; காதலுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளத் தயாராகவும் இல்லை. அவளுக்குத் தன்னை ஏமாற்றிச் சென்ற காதலன் மீது கடுங்கோபம் உள்ளது. வாய்ப்புக் கிடைத்தால் அவனைப் பழிவாங்கவும் தயாராக இருக்கிறாள். முடிவல்ல ஆரம்பம் படத்தில் ஒரு தெளிவான திரைக்கதை இருக்கிறது. பல சுவாரசியமான முடிச்சுகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் அழகாக அவிழ்க்கப்படுகின்றன.


கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமான ராதா, குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அதை மருத்துவமனை ஒன்றின் வாசலில், இருள் விலகியிராத அதிகாலை நேரத்தில் யாருமறியாத வகையில் விட்டுவிடுகிறாள். இதுதான் தொடக்கக் காட்சி. வெளிச்சம் வந்த பின்னர், தன் பெயரை சீதா எனச் சொல்லி அதே விடுதியில் வேலைக்கும் சேர்ந்துவிடுகிறாள். அவளது குழந்தை ஜான் என்னும் பெயரிலேயே அந்த மருத்துவமனையில் வளர்கிறது. தெளிந்த நீரோடையாக இப்படிப் பல சம்பவங்கள்  தொடர்கின்றன. 

முதல் காட்சியிலேயே ரசிகர்களுக்குப் பல கேள்விகள் எழுகின்றன. யாரிந்தப் பெண்? ஏன் குழந்தையை விடுதியில் கொண்டுவந்து போடுகிறாள்? குழந்தைக்கும் அவளுக்கும் என்ன உறவு? இப்படிக் கேள்விகள் எழும் சமயத்தில் அவளது குழந்தைதான் அது என்பது உணர்த்தப்படுகிறது. அவளது குழந்தை என்பது அவளுக்கு மட்டும்தான் தெரியும். பிறருக்குத் தெரியாது. அதை வைத்து நகரும் கதையில் ராம் என்னும் மருத்துவர் உள்ளே வருகிறார். அவருக்கு சீதா மீது காதல் அரும்புகிறது. அவர் ராம்; அவள் சீதா. எனவே, பார்வையாளர்கள் மனதில் ஒரு கணக்கு வந்துவிடுகிறது. ஆனால், மணமாகாமலே சீதா குழந்தையுடன் இருக்கிறாளே, என்ன செய்வது? சீதாவிடம் திருமணம் பற்றிப் பேசுகிறார் ராம். அப்போது அவள் நினைவில்தான் அவளது காதல் கதை விரிகிறது. 


அந்தக் காதல் கதைக்குள் ஒரு பதினாறு வயதினிலே ஒளிந்துள்ளது. கண்ணையாவும் ராதாவும் காதல் வயப்பட்டுத் துள்ளித் திரிந்த ஊரில் பதினாறு வயதினிலே பரட்டை போல் லோகு எனும் ரௌடியும் வாழ்ந்துவருகிறான். அவனுக்கும் ராதா மீது ஒரு கண். அது மாத்திரமல்ல; சப்பாணி போல் ஒரு கதாபாத்திரமும் படத்தில் உண்டு. ஒரு செல்வந்தரின் மகனான அந்தக் கதாபாத்திரம் வைத்தி. சப்பாணி மயில் மேல் உயிராக இருப்பது போல் வைத்தி ராதா மேல் உயிராக இருக்கிறான். பதினாறு வயதினிலே சப்பாணி கதாபாத்திரமே டேவிட் லீனின் ரேயான்’ஸ் டாட்டர் (1970) படத்தின் மைக்கேல் கதாபாத்திரத்தை நினைவூட்டக்கூடியது. மைக்கேல் கதாபாத்திரமும் காலை இழுத்து இழுத்துதான் நடக்கும். இந்த வேடத்தை ஏற்றிருந்த ஜான் மில்ஸ் இந்தப் படத்தில் வெளிப்படுத்தியிருந்த நடிப்புக்காகச் சிறந்த துணைநடிகர் பிரிவில் ஆஸ்கர் விருதையும் கோல்டன் குளோப் விருதையும் வென்றிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் சீதாவும் ஜானும் தாயும் மகனும் என்பது அனைவருக்கும் தெரியவந்துவிடுகிறது. அதன் பின்னர், ராமுக்கும் சீதாவுக்கும் திருமணம் என்னும் சூழலில் கண்ணையா வந்துவிடுகிறார். ஒரு விபத்தில் கண் பார்வை பறிபோன நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். கண்ணையாவின் கண் பார்வையை மீட்பதற்கான அறுவை சிகிச்சையை ராம் மேற்கொள்கிறார். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தைப் போன்று காதலியின் கணவனுக்கு சிகிச்சை செய்யும் காதலன் நிலையில் ராம் கதாபாத்திரம் இருக்கும். கண்பார்வை வந்துவிட்டால் ராதாதான் சீதா என்னும் பெயரில் மருத்துவமனையில் இருக்கிறாள் என்பது கண்ணையாவுக்குத் தெரிந்துவிடும். கண்ணையாவுக்குப் பார்வை திரும்பினால் தொழில்ரீதியில் ராமுக்கு வெற்றி. ஆனால், தனிப்பட்ட வாழ்வில் தோல்வி. கண்ணையாவின் பார்வை திரும்பியதா, சீதா கண்ணையாவுடன் சேர்ந்துவிட்டாளா இல்லை ராமுக்கும் அவளுக்கும் திருமணமா என்பதே கிளைமாக்ஸ் காட்சி. இப்படி ருசிகரமான காட்சிகளால் திரைக்கதை உயிர்ப்புடன் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படம் வசூல்ரீதியாக வெற்றிபெற்றதா, இதன் இயக்குநர் வேறு ஏதேனும் படத்தை இயக்கியிருக்கிறாரா என்பவை தெரியவில்லை. படத்தின் வசனங்களில் பாலசந்தர் பாதிப்பு தெரிகிறது. 


முடிவல்ல ஆரம்பம் வெளியானது 80-கள். இப்போது 2017. முப்பது ஆண்டுகளுக்கும் பிறகு, முற்போக்கு சாயலில் பிற்போக்கான திரைக்கதை அமைத்திருக்கிறார் மணி ரத்னம். தொழில்நுட்பம் அவரது மிகப் பெரிய பலம். என்ன இருந்தும் திரைக்கதை உயிர்த் துடிப்போடு இல்லாவிட்டால் தொழில்நுட்பத்தால் ஒரு பயனும் இல்லை என்பதற்குக் காற்று வெளியிடை சரியான உதாரணம்.

< சினிமா ஸ்கோப் 30 >                < சினிமா ஸ்கோப் 32 >

ஞாயிறு, ஏப்ரல் 02, 2017

சினிமா ஸ்கோப் 30: சில நேரங்களில் சில மனிதர்கள்


சில வேளைகளில் சாதாரணப் படம் அநேகரால் ரசிக்கப்படும்; அநேகரால் புறக்கணிக்கப்படும் படம் கவனிக்கத்தக்க படமாக அமைந்துவிடும். இது சினிமாவின் மர்மமான அம்சங்களில் ஒன்று. தனிநபர் ரசனையைப் பொறுத்த அம்சம் இது என்பதால் ஏன், எதற்கு, எப்படி என்று எந்தக் கேள்வியையும் எழுப்ப இயலாது. புனைவும் யதார்த்தமும் சரியான கலவையில் அமையும்போது, அது பார்ப்பதற்கு உகந்த படமாகிவிடும். இந்தக் கலவை சமையலில் வெளிப்படுவது போன்ற ஒருவகையான கைப்பக்குவம்தான். எப்போதும் இந்தக் கைப்பக்குவம் ஓர் இயக்குநருக்குக் கைகொடுக்கும் என்று கூற முடியாது. மேலும், இப்படியான கைப்பக்குவத்துடன் படமாக்கப்பட்ட ஒரு படம் பெருவாரியான ரசிகர்களால் ரசிக்கப்படலாம் அல்லது புறக்கணிக்கப்படலாம். ஆனால், ஒரு படம் அதற்கான ரசிகர்களைச் சென்றடைவதுதான் முக்கியம். அப்படிச் சரியான ரசிகர்களைச் சென்றடைந்த படம் வெற்றிபெறும். வெற்றி என்றால் வணிகரீதியான வெற்றியல்ல; படைப்புரீதியான வெற்றி. 

சமீபத்தில் இரண்டு படங்களைப் பார்க்க நேர்ந்தது. ஒன்று பிரசாத் முருகேசன் இயக்கிய கிடாரி, மற்றொன்று சணல்குமார் இயக்கிய ஒளிவுதிவசத்து களி. கிடாரி வன்முறைப் படம் என முத்திரை குத்தப்பட்டது. ஆகவே அது பெரும்பான்மையானவர்களால் கவனிக்கப்படவில்லை. ஒளிவுதிவசத்து களியின் கதையோ இதற்கு நேரெதிர். படம் பார்க்கலையா எனத் துக்கம் விசாரிக்கும் அளவுக்குப் படம் விதந்தோதப்பட்டது. அதை ஒரு காவியம் என்றெல்லாம் கொண்டாடினார்கள்.

இந்த இரண்டு படங்களையும் பார்த்தபோது, திரைக்கதை, கதாபாத்திரங்களுக்கான நடிகர் தேர்வு ஆகியவை பற்றிய எண்ணம் எழுந்தது. கிடாரியில் பலமான திரைக்கதை உள்ளது, ஒளிவுதிவசத்து களியிலோ திரைக்கதை என்றே ஒன்றே முற்றிலுமாக இல்லை. ஒரு கல்யாண வீடியோ எடுப்பது போன்ற தன்மையுடன் படமெடுத்திருக்கிறார்கள். ஒளிவுதிவசத்து களி சொல்லும் சேதி சமூகத்துக்கு அவசியமானதே. ஆனால், அது திரைப்படம் அல்ல; வெறும் கதைப் படம்.


ஒரு திரைப்படத்துக்குத் திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் படத்தைப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம். இந்தப் படம் உண்ணி ஆர் என்னும் மலையாள எழுத்தாளரின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. இது ஒருவகையான குறியீட்டுப் படம்தான். அதனால்தான் திரைக்கதைக்குப் பொருந்தாத அந்த கிளைமாக்ஸுடன் படமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. வழக்கமான சண்டை, பாட்டு, நகைச்சுவை என்ற வகையில் அடங்காமல் புதுப் பாதையில் பயணித்த படம் இது. நான்கைந்து நண்பர்கள் அடர்ந்த வனமொன்றின் நடுவே ஒரு மாளிகையில் குடிக்கச் செல்கிறார்கள். அவர்களுக்கிடையேயான உரையாடல், சம்பவங்கள் ஆகியவற்றின் வழியே சமூகத்தைப் பற்றிய, ஜனநாயகத்தைப் பற்றிய இயக்குநரின் புரிதலை வெளிப்படுத்துகிறார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அதிர்ச்சி தரும் வகையில் படமாக்கப்பட்டிருந்தது. இந்த அதிர்ச்சி இருவகையானது சிலருக்கு எப்படியான படம் என்ற வியப்பு கலந்த அதிர்ச்சி, சிலருக்கு என்னடா படம் என்ற சலிப்பு கலந்த அதிர்ச்சி. இந்த அதிர்ச்சியை ஏற்றுக்கொள்ளும்படியான திரைக்கதை அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி அமையாமல் போனதால் அது ஒரு சராசரியான படமாகவே நிலைகொண்டிருக்கிறது. 

50 நிமிடங்களுக்கு மேலான ஷாட், ஸ்பாட் ரெக்கார்டிங் போன்ற முயற்சிகள் வெறும் கவன ஈர்ப்புக்கான அளவிலேயே பயன்பட்டிருக்கிறது. இவ்வளவுக்கும் அது இந்திய ஜனநாயகம் பற்றிப் பேசுகிறது, பெண்களின் நிலையைப் பற்றிப் பேசுகிறது, ஒடுக்கப்பட்டவர்களின் நிலைமையைப் பற்றிப் பேசுகிறது. அதெல்லாம் சரிதான். ஆனால், அது ஒரு முழுநீளத் திரைப்படமா என்று கேட்டால், அப்படிச் சொல்லிவிட முடியாது. அது மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட குறும்படம் என்ற அளவிலேயே உள்ளது. 

கிடாரி துரோகத்தின் அரசியலையும் வீரத்தின் முகவரியையும் வெளிச்சமிட்டுக் காட்டியது. சுவாரசியமான திரைப்படத்துக்குத் தேவையான அம்சங்களை அதன் திரைக்கதை கொண்டிருந்தது. மிகவும் முதிர்ச்சியான காட்சிமொழியால் காட்சிகள் திரையில் எழுதப்பட்டிருந்தன. தனக்காக வாழ்வதற்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்காக வாழ்வதற்குமான வேறுபாட்டைச் சுட்டியபடி படம் பயணிக்கிறது. தான் வாழ்வதற்காகத் தன் குட்டியை விழுங்கும் பாம்பு போன்ற தன்மையுடன் கொம்பையா பாண்டியன் வேடம் படைக்கப்பட்டிருந்தது. ஒரு சமூகமே வீரம் என்று கொண்டாடும் விஷயத்தை மிக லாவகமாகப் படம் நையாண்டி செய்திருக்கிறது. பழியும் வன்மமும் நிறைந்த வாழ்வில் துரோகம் சிலவேளைகளில் நிழல் தரும் மரமாகவே உருக்கொண்டுவிடுகிறது. நிழல் தந்த மரம் ஐந்துதலை நாகம் என்பது புரிந்துவிட்டால் எப்படி இருக்கும்? அந்த அதிர்ச்சியை அதன் கிளைமாக்ஸ் தரும். வீரம் என்பது வெறும் தந்திரம் என்பதை வெளிப்படுத்தும்போது, வீரத்துக்காக மார்தட்டும் சமூகம் தலைகுனிவதே சரியானது என்பதைப் படம் உணர்த்துகிறது. குருதி நதியில் மிதந்த சடலமாகப் படம் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம் ஆனால், படம் ரத்தமும் சதையுமாகக் கையில் நெளியும் பிறந்த சிசு போன்றது.  


கிடாரியில் பிரச்சினை இல்லையா, அவ்வளவு அற்புதமான படைப்பா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். படத்தின் மிகப் பெரிய பலவீனம் கிடாரி கதாபாத்திரத்தை சசிகுமார் வெளிப்படுத்தியிருந்தவிதம். ஒரு காட்சியில்கூடத் திரைக்கதையின், கதாபாத்திரத்தின் பளுவை அவரால் தாங்க முடியவில்லை என்பதைப் படம் பார்க்கும்போது உணரலாம். இது கிட்டத்தட்ட சுப்ரமணியபுரம், மதயானைக்கூட்டம் போன்ற படங்களை ஒத்ததுதான். சுப்ரமணியபுரத்தில் சசிகுமார் தான் ஏற்றிருந்த கதாபாத்திரத்தின் சுமையைப் பறவையின் இறகு போல் தாங்கியிருந்தார். ஆனால், கிடாரியில் அவர் சறுக்கியிருக்கிறார். சாதிப் பெருமைப் படக் கதாபாத்திரங்களின் தன்மை அவர் மீது ஒரு கறையாகவே படிந்துவிட்டது ஒரு காரணமாக இருக்கலாம். இந்த இடத்தில் த ரெவனென்ட் படத்தின் லியோனர்டோ டி காப்ரியோ நினைவுக்கு வருகிறார். படத்தின் பளுவைத் தனியொருவராக அவர் தூக்கிச்சென்றிருப்பார். அவரும் சசிகுமாரும் ஒன்றா என்று கேட்டு அடிக்க வராதீர்கள். திரைக்கதையைச் சுமக்கும் வலுக்கொண்ட நடிகர் வாய்க்காவிட்டாலும் திரைக்கதை ஜொலிக்காது என்பதைச் சொல்லவே இந்த உதாரணம்.

மொத்தத்தில், ஒரு முழுநீளத் திரைப்படம் செய்தி சொல்லலாம்; சொல்லாமல்போகலாம். அதைவிட முதன்மையான விஷயம் அது திரைப்படமாக இருக்க வேண்டும். எவ்வளவு கலைத்தரத்துடன் படைக்கப்பட்டாலும் அது பொழுதுபோக்குக்காகவே உருவாக்கப்படுகிறது; அந்தப் பொழுதுபோக்கு பயனுள்ளதாக அமைய ஒரு இயக்குநர் பிரயத்தனப்படலாம். அப்படி அமைந்துவிட்டால் அது நல்ல படமென்று சொல்லப்பட்டுவிடும். அதன் காட்சிமொழி இயல்பாகவும் பக்குவமாகவும் வெளிப்படும்போதே அது திருப்தி தரும் படமாகும். இப்படியான திருப்தியைத் தருவதற்கான அடித்தளத்தை ஒரு நல்ல திரைக்கதையால் கொடுக்க இயலும். நல்ல திரைக்கதையை அதன் கதாபாத்திரங்களுக்கு உகந்த நடிகர்களுடன் பார்ப்பதற்கேற்ற பதத்திலும் முதிர்ச்சியுடனும் நல்ல திரைப்படமாக்குவது இயக்குநரின் கைகளிலேயே உள்ளது. ஆக, கிடாரி நட்சத்திரத் தேர்வில் சறுக்கியது என்றால் ஒளிவுதிவசத்து களி திரைக்கதையில் சறுக்கியது.

< சினிமா ஸ்கோப் 29 >                     < சினிமா ஸ்கோப் 31 >

லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்

பார்வையாளர்