சனியப்பன் பயங்கர மூட் அவுட்டில் இருந்தான். அவன் வேலை செய்யும் சேனலில் திடீரென ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். சனியப்பனுக்கு பயங்கர நடுக்கம் ஏற்பட்டபடியே இருந்தது. இதுவரை அவன் பார்த்து வந்த வேலை பறிபோகும் என்னும் பயம் அவனைப் பீடித்தது. தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வரும்போதெல்லாம் பக்பக்கென்றிருந்தது அவனுக்கு. அவன் மிகப் பெரிய முட்டாள். எதையும் ஒழுங்காகச் செய்ய மாட்டான், இந்த சிறப்பு தகுதி இருந்ததால் தான் அவனால் அந்த சேனலில் நல்ல சம்பளத்தில் வேலை தேடிக்கொள்ள முடிந்தது. இதென்ன சிறப்பு தகுதி எனப் படிப்பவர்களுக்கு தோன்றலாம். ஆனால் அவன் முட்டாளாக இருந்ததால் தான் அவனால் அவனுடைய அதிகாரிகளுக்கு கூழைக் கும்பிடு போட முடிந்தது. மூச்சுக்கு முந்நூறு முறை சார் சார் எனப் பேச முடிந்தது.
இந்த சேனல் இண்டர்வியூக்கு போன நாளை இப்போது நினைத்தாலும் அவனுக்கு படபடவென்று இருக்கும். இது வரை தொலைக்காட்சி சேனலில் வேலை பார்க்க கொஞ்சமாவது அறிவு அவசியம் என்று நினைத்திருந்தவனுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. அவனிடம் கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் அவன் தவறாகத்தான் பதிலளித்தான். அதுவும் அவனுக்குத் தெரியவில்லை. அவனை கேள்வி கேட்டவர் தான் அதையும் சொன்னார். இப்படிப்பட்டவர்கள் தான் தங்களுக்குத் தேவை என்றும் அவர்களால் தான் சொன்னதைச் செய்ய முடியும் என்றும் கேள்வி கேட்டவர் தெரிவித்தார். அவனுக்கு பரம சந்தோஷம். தான் இண்டர்வியூக்குக் கிளம்பும் முன்னர் தன் தாய் அம்மன் கோவிலுக்கு போய்விட்டு வந்து தனது நெற்றியில் வைத்த குங்குமத்தின் சக்தியை அவனால் அந்த நெருக்கடி நிலையிலும் போற்றாமல் இருக்க முடியவில்லை.
ஆனால் இப்போது சேனல் இருக்கும் நிலையில் தனது முட்டாள் தனம்கூட தன்னைக் காப்பாற்றாது என்பதால் கதிகலங்கிப் போனான் சனியப்பன். அவன் எதிர்பார்த்த அந்த நாள் வந்தே விட்டது. மனித வளத் துறையில் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. நடுங்கியபடி சென்றான். அவனது பதற்றத்தைக் கண்ட மனித வளத்துறை அதிகாரி அவனுக்கு அங்கிருந்த கண்ணாடி டம்ளரில் தண்ணீர் கொடுத்தார். தண்ணீரை வாங்கிய சனியப்பன் அதை வாயருகே கொண்டு சென்று குடிக்க எத்தனித்தான். எதிரில் இருந்த அதிகாரி பேசத் தொடங்கினார். காலியான டம்ளரை எதிரில் இருந்த மேசையில் வைத்தான். அப்போது தான் தனது தாகம் அடங்கவில்லை என்பதையும் தனது சட்டை முழுவதும் தொப்பல் தொப்பலாக நனைந்திருந்தது என்பதையும் அறிந்து பதற்றமடைந்தான். முதன்முதலில் தான் பள்ளியில் சேர்க்கப்பட்ட தினம் அவனது நினைவில் வந்தது. அன்று அவன் தனது கால்சட்டையை சிறுநீரால் நனைத்திருந்தான். தனது பால்யத்தை மீட்டெடுக்க உதவிய அந்தக் கண்ணாடி டம்ளரை நன்றிப் பெருக்குடன் பார்த்தான்.
”பாருங்க மிஸ்டர் சனியப்பன் நீங்க எதுக்கு இவ்வளவு நர்வஸாயிருக்கீங்க. கொஞ்சம் கூலா இருங்க. தண்ணியை முழுவதும் சட்டையில் கொட்டிடீங்க பாருங்க”
தான் வாயருகே கொண்டுசென்ற தண்ணீரை குடிப்பதற்குப் பதில் அதை அப்படியே தனது சட்டையில் கவிழ்த்திருந்த செயல் தான் ஒரு முட்டாள் என்பதை உறுதிப்படுத்தியதால் தனது வேலை காப்பாற்றப்பட்டுவிடும் என ஒரு கணம் அவனது மனத்தில் நம்பிக்கையின் கீற்று மின்னியது என்பது அவனது கண்களில் தெரிந்தது.
இல்ல சார். உங்க ஃபோன் வந்த உடன் எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல. வீட்டில் பொண்டாட்டி புள்ளய்ங்க ஞாபகம் வந்துடுச்சு என்றவனின் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அதிகாரி அவனருகே வந்து ஆறுதலுடன் அவனது கண்ணீரைத் தொட்டு துடைத்தார். அங்கிருந்த முருகன் படத்திலிருந்த கண்கள் பனித்திருந்ததை சனியப்பன் பார்த்தான்.
நீங்க பயப்பட வேண்டாம் மிஸ்டர் சனி. உங்களது வேலையை உடனே போக்கடிக்க நிர்வாகம் விரும்பவில்லை, உங்களுக்கு ஒரு வாய்ப்பு தரப் போகிறது. அதை நீங்கள் கவனத்துடன் பயன்படுத்தினால் உங்கள் வேலை காப்பாற்றப்பட்டுவிடும் என்றார். சனியப்பனின் கண்களில் மகிழ்ச்சியின் ஒளி தென்பட்டதை அதிகாரி கண்டுகொண்டார்.
என்ன வாய்ப்பு சார் அது என்று கேட்ட சனியப்பன் ஆங்கில எழுத்து சி வடிவில் நின்றிருந்தான். உட்காரவில்லை என்பதால் அதை நின்ற செயலில் சேர்க்கவேண்டியதிருந்தது.
தற்போது நமது நிர்வாகத்திற்கு கான்செப்ட் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தத் தட்டுப்பாட்டை போக்க வேண்டுமானால் எல்லோரிடமும் கைநீட்டி கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. எனவே உங்களிடமும் கான்செப்ட் கேட்கிறோம். உங்கள் அறிவைக் கொண்டு நீங்கள் சமர்ப்பிக்கும் கான்செப்ட் எங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்கள் வேலையில் தொடரலாம் என்று தெரிவித்துவிட்டு மௌனமாகிவிட்டார்.
கண்டிப்பா சார் ஜமாய்ச்சிட்றேன் சார் என்று சொல்லிவிட்டு கண்கலங்கியபடி வெளியே வந்தான்.
இரவு முழுவதும் அவனுக்குத் தூக்கம் வரவில்லை. அருகில் படுத்திருந்த மனைவியையும் மகனையும் வேதனையுடன் பார்த்திருந்தான். பலம் கொண்ட மனிதன் எலுமிச்சை பழத்தை தன் கையால் பிசைவது போல் தனது மூளையைப் பிசைந்துகொண்டே இருந்தான். பளீரென பல மின்னல்கள் பளிச்சிட்டன. எழுந்தான். மேசையின் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து எழுத தொடங்கினான்.
கான்செப்ட் 1: புண்ணுல ஃபன்
இந்த நிகழ்ச்சி எழவு வீட்டில் நடைபெறும் சுவாரசிய சம்பவங்களை உள்ளடக்கிய கேம் ஷோ. இதில் மொத்தம் மூன்று செக்மண்ட்ஸ்.
முதல் செக்மண்ட்: நெத்தி துட்ட சுட்டு - இந்த செக்மண்டில் பிணத்தின் நெத்தி துட்டை கூடியிருப்போர் அறியாமல் திருட வேண்டும்.
இரண்டாவது செக்மண்ட்: கால்கட்ட கழற்று - இதில் கால் கட்டை வாயால் அவிழ்க்க வேண்டும்.
மூன்றாவது செக்மண்ட்: மூக்கு பஞ்ச உறிஞ்சு - பிணத்தின் மூக்கில் வைக்கப்பட்டிருக்கும் பஞ்சை பங்கேற்பாளர் தனது மூக்கால் உறிஞ்சி வெளியே எடுக்க வேண்டும்.
மூன்று செக்மண்ட்களையும் தரப்பட்டிருக்கும் நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும்.
பின்குறிப்பு: இந்த கான்செப்ட்டுக்குப் பலம் சேர்க்க ஒவ்வொரு எபிசோடிலும் பிணமாக பிரபல நடிகரோ நடிகையோ நடித்தால் நன்றாக இருக்கும்.
கான்செப்ட் 2: ஆணி புடுங்கிய ஆன்னி
இது ஓர் அனுபவப் பகிர்வு நிகழ்ச்சி. இதில் வெளிமாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வந்து இங்கு எப்படி தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்கிறார்கள் என்பதை சுவாரசியத்துடன் விவரிக்கும். தொடக்கத்தில் பிரபலங்கள் பங்குகொண்டால் டி ஆர் பியில் நல்ல இடம் கிடைப்பது உறுதி.
பிரபலங்கள் எடுத்துக்காட்டு: நடிகை கிஸ்காய். இவர் அமெரிக்காவிலிருந்து வந்து தமிழ்ப் படத்தில் நடித்து ஆஸ்கர் பெற வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருபவர்.
கான்செப்ட் 3: மூத்திரம் அடக்கு
இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கான சிக்கல்களை பெண்களே பொது மேடையில் பகிர்ந்துகொள்வார்கள். இதில் மொத்தம் மூன்று செக்மண்ட்ஸ்.
முதல் செக்மண்டில் பல்வேறு தரப்பை சேர்ந்த பெண்மணிகள் எந்த எந்த பொழுதுகளில் தாங்கள் மூத்திரத்தை அடக்க நேர்ந்தது என்பதை கண்ணீர் மல்க விவரிப்பார்கள்.
அடுத்த செக்மண்டில் மருத்துவத் துறை நிபுணர் இப்படி மூத்திரத்தை அடக்குவதால் ஏற்படும் உளவியல் உடலியல் பாதிப்புகளை விவரிப்பார். இதில் இடம்பெறும் பவர்பாயிண்ட் ஷோவில் இந்தியா முழுவதிலும் இருந்து திரட்டப்பட்ட புள்ளிவிவரங்கள் பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படும்.
மூன்றாம் செக்மண்ட்: நிபுணர்கள் கருத்து. இதில் இருவர் இடம்பெறுவர். ஒருவர் தான் மூத்திரத்தை அடக்கியதால் அடைந்த நன்மை பற்றியும் மற்றொருவர் தான் மூத்திரத்தை அடக்கியதால் அடைந்த தீமை பற்றியும் சொல்வார்.
மூன்று கான்செப்ட்களையும் சந்நதம் வந்த சாமியாடி போல எழுதி முடித்தான் சனியப்பன். மிக அறிவுப்பூர்வமாக தான் எப்படி சிந்தித்தோம் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. எல்லாம் வல்ல இறைவன் தான் தனது அறிவுக் கண்ணை திறந்திருப்பான் என்றெண்ணி, வீட்டிலிருந்து கடவுள் படத்தின் முன்பு சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினான்.
மறு நாள் கம்பீரமாக நடந்து அலுவலகத்திற்குச் சென்றான். தன்னிடம் கான்செப்ட் கேட்ட அதிகாரியில் அறைக்கு ஓர் அரசன் செல்வது போல் இறுமாப்புடன் சென்றான். அப்போது அதிகாரி அறையில் புதிதாக வந்திருந்த ட்ரெயினிப் பெண்ணிற்கு சந்தேகத்தை தெளிவித்துக்கொண்டிருந்தார். அந்தப் பெண் சென்றதும் சனியப்பன் உள்ளே நுழைந்தான். தனது கையிலிருந்த காகிதங்களில் இருந்த கான் செப்ட்டை அதிகாரியிடம் கையளித்தான். அவற்றை படித்து முடித்த அதிகாரி அதிருப்தியுடன் காணப்பட்டார். சனியப்பன் கவலை கொண்டான். அதிகாரி அவனிடம் கவலைப்படாதே உன்னை வேலையை விட்டு எடுக்க மாட்டோம். ஆனால் இந்த கான்செப்டுகள் படுமோசம் என்று சொல்லி அவனை அனுப்பிவைத்தார்.
பின் குறிப்பு: இதே கான்செப்ட்களை தனதென்று சொல்லிய அந்த அதிகாரி நிகழ்ச்சி தயாரிப்புக் குழுவிடம் அதைத் தந்து தனது சம்பளத்தை உயர்த்திக்கொண்டார். அதன் பின்னர் தான் அந்த சேனல் தமிழகத்தில் நம்பர் ஒன் சேனலானது. இந்த மூன்று நிகழ்ச்சிகளும் பத்தாண்டுகளைக் கடந்து வெற்றிநடைபோடுகிறது.
(இந்தப் பதிவு முழுக்க முழுக்க எழுதியவரின் கற்பனையே, யாரையும் புண்படுத்துவது நோக்கமல்ல எழுதியவரின் நோக்கம் ஃபன்னே. )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக