இந்த வலைப்பதிவில் தேடு

ஷங்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஷங்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, நவம்பர் 20, 2016

சினிமாஸ்கோப் 22: கறுப்புப் பணம்

அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்ய மகாத்மா போதித்த அஹிம்சை தேவையில்லை; வெள்ளைப் பணமோ கறுப்புப் பணமோ அவர் படம் அச்சடிக்கப்பட்ட பணம் தேவையாயிருக்கிறது. வெறும் தாள் என்றாலும் அது இல்லாதவரே இங்கு வெறும் ஆள் என்பதே சமூகத்தின் புரிதல். பணம், பணம் என ஆலாய்ப் பறக்கும் மனிதர்கள் நிறைந்த சமூகத்தில் அதன் மதிப்பை எளிதாக எடை போட்டுவிட முடியாது. பணத்தால் எந்த நிம்மதியும் இல்லை; பணத்தை ஒதுக்கி உறவை இணைத்தாலே இன்பம் போன்ற ஆலோசனைகள் தரும் சொற்பொழிவாளரும் பணம் தராவிட்டால் வந்து ஆலோசனை தரமாட்டார் என்பதே யதார்த்தம். இந்தப் பணத்தால் படாதபாடு பட்டவராக அறியப்பட்டிருப்பவர் காலஞ்சென்ற கவிஞர் கண்ணதாசன். ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையே ஒரு சுவர் போல் எழும்பி, இரு தரப்பினரையும் பிரித்து வைத்திருக்கும் இந்தப் பணத்தின் பாதிப்புகளையும் தாக்கத்தையும் உணர்ந்ததால், எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி அவர் தயாரித்த படம் கறுப்புப் பணம் (1964).   
தணிகாசலம் என்ற பெரியவர் வேடத்தில் கண்ணதாசனே நடித்திருப்பார். அத்துடன் அப்படத்தின் கதை, வசனம், பாடல்களையும் அவர் எழுதியிருப்பார். திரைக்கதையை வலம்புரி சோமனாதன் எழுத, படத்தின் ஒளிப்பதிவு, இயக்கம் இரண்டும் ஜி.ஆர்.நாதன். பொருளாதார வசதி ஒத்துழைக்காத காரணத்தால் சிறு வயதில் உரிய கல்லூரிக் கல்வி தணிகாச்சலத்துக்கு மறுக்கப்படுகிறது. அதனால் பாதிக்கப்பட்ட அவர் வளர்ந்த பின்னர் கறுப்புப் பணத்தைப் பதுக்கிவைப்பவர்களிடமிருந்து- மில் அதிபர், பஸ் முதலாளி, நடிகை போன்றவர்கள்- பணத்தைக் கொள்ளையடித்துக் கல்லூரி கட்டுகிறார். இறுதியில் அவர்தான் கொள்ளைக்காரர் என்பது தெரியவருகிறது. அவரைக் கைது செய்த காவல் துறை அதிகாரி, அவரது வழக்கை விசாரிக்கும் நீதிபதி போன்ற அனைவருமே அவரால் ஆதாயம் பெற்றவர்கள். நன்றியுணர்ச்சிக்கும் கடமைக்கும் நடுவிலே மாட்டிக்கொண்டு தத்தளிக்கிறார்கள். ஆனால். கடமையே முக்கியம் அதைச் செய்யத் தயங்க வேண்டாம் என தணிகாசலம் தெரிவிக்கிறார். நீதிமன்றத் தண்டனையை உளப்பூர்வமாக அனுபவிக்கிறார். நீதிமன்றத்தில் அவர் தரும் வாக்குமூலம் அவரது நிலையைத் தெளிவாக எடுத்துரைக்கும். 
கறுப்புப் பணம் போலவே சமூகத்தில் சிக்கலை ஏற்படுத்தும் மற்றொன்று கள்ளப் பணம். தமிழில் வெளியான ஆனஸ்ட் ராஜ் (1994) என்னும் படத்தில் கள்ள நோட்டால் நண்பர்களுக்கிடையேயான பாதிப்பு திரைக்கதையாகியிருக்கும். இதே போல் கள்ளப் பணப் பிரச்சினையைக் கையாண்ட உலகப்  படங்களில் ஒன்று த கௌண்டர்ஃபெய்ட்டர்ஸ் (The Counterfeiters, 2007). இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலான கதை இது. பாஸ்போர்ட், பணம் போன்றவற்றை அச்சு அசலாக உருவாக்குவதே சாலமோன் சாரோவிட்ச் என்னும் ஓவியக் கலைஞனது திறமை. நாஜிக்களின் வதை முகாமில் மாட்டிக்கொண்ட இவனை உயிருடன் காப்பாற்றுவது இவனது கலையே. நாஜிக்களுக்காக பவுண்ட், டாலர் போன்ற வெளிநாட்டுப் பணத்தை உருவாக்க ஜெர்மன் அதிகாரிகளால் இவன் கட்டாயப்படுத்தப்படுகிறான். உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்றால் கள்ளப்பணத்தை உருவாக்க வேண்டும். ஆனால் இவனுடன் இருக்கும் மற்றொரு கைதியான, கம்யூனிஸச் சிந்தனை கொண்ட அடால்ஃப் பர்கர் நாஜிக்களுக்கு ஒத்துழைக்கக் கூடாது என்கிறான். இருவருக்கும் இடையே கொள்கை மோதல் உருவாகிறது. அதை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்று செல்லும் படத்தின் திரைக்கதை. படம் முழுவதுமே ஒருவகையான சாம்பல் வண்ணத்தில் காட்சி தரும். இந்தப் படம் சிறந்த வெளிநாட்டுப் படம் என்னும் பிரிவில் ஆஸ்கர் விருது பெற்றது. 
கறுப்புப் பணம் கதையைப் படித்ததும் உங்கள் மனதில் கே.டி.குஞ்சுமோனின் ஜென்டில் மேன் படம் நிழலாடியிருக்கும். கறுப்புப் பணம் படம் முழுக்க முழுக்க வர்க்க பேதத்தைச் சாடி, பொதுவுடைமையை வலியுறுத்துவதாகவே அமைந்திருக்கும். கல்லூரிக் கல்வி ஓர் ஏழைக்கு மறுக்கப்படுகிறது அதன் காரணம் பணம்தான் என்று அவன் மனதில் படுகிறது. சமூக ஏற்றத்தாழ்வை அகற்ற வேண்டும் என்று அவன் படித்துணர்ந்த பாரதியார் கவிதைகள் போன்றவை அவனுக்கு உந்துதல் தந்ததால் கொள்ளையடித்தாவது ஏழைகளுக்குக் கல்வி தரத் துணிகிறான். எந்த நிலையிலும் பெரியவர் தணிகாசலம் தன் குற்றத்தை மறைக்கவில்லை; தன் நிலையைச் சரி என்று வாதாடவில்லை, சமூகத்தைக் குற்றம்சாட்டவில்லை. ஆனால் ஜென்டில் மேன் படத்தில் கிச்சா பிறரைக் குற்றம்சாட்டுவான். முதல்வரைத் தண்டிக்க கோருவான். கிருஷ்ண மூர்த்தி (கிச்சா) தானாகவே கல்லூரி கட்ட வேண்டும் என்ற முடிவெடித்திருக்க மாட்டான். அவன் ஒரு சத்ரியனாக அருவாளைத் தூக்குவான் ஆனால் ரமேஷின் தந்தை அவனைச் சாணக்யன் ஆக்குவார். திரைக்கதையில் இங்கு மிகத் தந்திரமாகச் சாதி புகுத்தப்பட்டுவிடுகிறது. ஷங்கர் தன் சகாக்களுடன் திரைக்கதையில் புரிந்த மாறுதல் இதுதான். இதன் வசனம் எழுத்தாளர் பாலகுமாரன் என்பது எல்லோருக்கும் நினைவிருக்கும். 
பணம் படைத்தவருக்கு மட்டுமே கல்வி கிடைப்பதாக இறுதிக் காட்சியில் கிச்சா ஆவேசமாக முழங்குவான். திரையரங்கில் பலத்த கரகோஷமும் கிடைத்தது. ஆனால் இந்தப் படம் வெளிவந்த காலகட்டத்தில் இப்படி ஒரு நிலைமை இல்லை. ஏனெனில் நுழைவுத் தேர்வுமுறை அமலாகிவிட்டது. அதிக மதிப்பெண் பெற்ற எல்லோராலும் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் மருத்துவக் கல்லூரிகளிலும் சேர முடிந்தது. ஆகவே மாவட்டத்திலேயே முதலிரண்டு இடங்களைப் பெற்ற ரமேஷுக்கும் கிச்சாவுக்கும் எளிதாக மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கும். அந்தச் சூழலில் பணம் ஒரு விஷயமே இல்லை. இதற்கு மாறாக, பணம் படைத்தவர் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து படித்து சமூகத்துக்குத் தீங்கிழைப்பதாக படத்தில் கிச்சா வசனம் பேசுவான். அவனது ஆவேசப் பேச்சால் ஒரு மாணவன் கொலைகாரனாகவே மாறிவிடுவான். சமூகத்தின் காலரைப் பிடித்துக் கேள்வி கேட்ட ஷங்கரின் படத்தின் கருத்தியல்ரீதியான தவறைக் கேள்வி கேட்க வேண்டாமா? 

திரைக்கதையின் மிகப் பெரிய இந்த ஓட்டையை ஷங்கர் பிரம்மாண்டத்தாலும், மயக்கும் பாடல்களாலும் கவுண்டமணி செந்தில் நகைச்சுவையாலும் சரிக்கட்டியிருப்பார். இதன் வெற்றி ஷங்கரை உச்சபட்ச இயக்குநராக்கியது. பிரம்மாண்டமும் சமூகக் கொடுமையைச் சாடுவதும் அவருடைய முத்திரைகளாயின. ஆனால் ஒரு இயக்குநர் என்பவர் சமூகப் பிரச்சினையின் வேரைக் கண்டறிய வேண்டும்; அதை ஆராய வேண்டும் உலக அளவில் போற்றப்படும் இயக்குநர்கள் அதைத்தான் செய்திருக்கிறார்கள். கடுமையான உழைப்பாளி என்றபோதும் ஷங்கரிடம் அதை நாம் எதிர்பார்க்க முடியாது, அவர் வெறும் திரைப்பட ஒருங்கிணைப்பாளர். சட்டெனச் சமூகத்தைக் கிளுகிளுக்கச் செய்யும் லஞ்சம் போன்ற சமூகப் பிரச்சினையைக் கையிலெடுத்து, அதை மேலெழுந்தவாரியாகப் புரிந்துகொண்டு கதை, திரைக்கதை எழுதி, அதில் மனங்கவரும் பாடல்கள், நகைச்சுவை என்று இட்டுநிரப்பி எப்படி வெற்றியாக்கலாம் என்று மட்டுமே கருதி செயல்படுபவர், அதுதான் அவரது பலமும்கூட. அவரை ஒரு இயக்குநராகக் கருதுவது நம் போதாமை. இவற்றை ஷங்கரே உணர்ந்திருக்கக் கூடும். அதனால்தான் குறைந்த முதலீட்டில் படங்களைப் பிற இயக்குநர்களை வைத்துத் தயாரித்துவருகிறார்.

< சினிமா ஸ்கோப் 21 >                  < சினிமா ஸ்கோப் 23 >

செவ்வாய், ஏப்ரல் 01, 2014

நிமிர்ந்து நில்

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் 90களுக்குப் பிறகு சமூக அக்கறையை வெற்றிகரமான வியாபாரமாக மாற்றிய படம் ஜெண்டில் மேன். இதன் இயக்குநர் ஷங்கர் அப்படத்தில் இட ஒதுக்கீட்டை மையமாகக் கொண்டு திரைக்கதையை அமைத்திருந்தார். அந்தப் படத்தின் வணிக வெற்றி தந்த தெம்பிலும் அடையாளத்திலுமே அவரால் இந்தியன், முதல்வன், அந்நியன் போன்ற படங்களை உருவாக்க முடிந்தது. இத்தனைக்கும் ஜெண்டில்மேன் படம் வெளியான காலத்தில் நுழைவுத் தேர்வு முறை மருத்துவ, பொறியியல் படிப்புகளின் சேர்க்கை முறைப்படுத்தப்பட்டிருந்தது. 

அரசியல்வாதிகள், அதிகாரிகள், லஞ்சம், ஊழல் ஆகிய விஷயங்கள் மீது வெகுஜனங்களுக்கு எப்போதுமே எரிச்சலும் கோபமும் உண்டு. இந்தச் சமூகக் கோபத்தின் மையத்தைத் தொடும் விதத்தில் திரைக்கதையை அமைத்தால் எளிதில் வெற்றிபெறலாம் என்பது ஒரு கணக்கு. இந்தக் கணக்கு ஷங்கர் படங்களைத் தவிர ரமணா, கந்தசாமி உள்ளிட்ட ஒருசில படங்களிலும் தப்பவில்லை. 
வெறுமனே பொழுதுபோக்குப் படங்களை எடுப்பதற்குப் பதில் அதில் சமூக அக்கறையான விஷயங்களைச் சேர்க்கும் போது திரைப்படத்திற்கும் தனி நிறம் கிடைக்கிறது, இயக்குநரும் ஆத்ம திருப்தி அடைகிறார். ஆனால் இத்தகைய படங்களை உருவாக்குவது கத்திமேல் நடப்பது போன்றது. பாலுக்கும் காவல் இருக்க வேண்டும் பூனையின் பசியையும் ஆற்ற வேண்டும். இதில் ஷங்கர் கைதேர்ந்தவர். ஜெண்டில்மேனில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பிராமணரல்லாத ஒருவர் போராடுவார். ஆனால் அது நண்பனுக்கான பழிவாங்கும் நடவடிக்கையாகத் திரைக்கதையில் அமைந்திருக்கும். இந்தச் சாமர்த்தியம்தான் ஷங்கருக்கு நாம் பிறந்த மண் என்னும் பழைய திரைப்படத்தை இந்தியன் என்னும் பெரும் வெற்றிப்படமாக மாற்ற ஒத்துழைத்தது. இந்த சட்டகத்தைத் தாண்டி எடுத்த பாய்ஸ் திரைப்படத்தில் அவர் சறுக்கலைச் சந்தித்தார். அதன் பிறகு அந்நியன், சிவாஜி என்று பழையபாதைக்கு வந்தார். 

சிவாஜி திரைப்படத்தில் ரஜினியின் தோற்றம்
பொழுதுபோக்குப் படம் என்பதைத் தாண்டி சமூக அக்கறை கொண்ட இயக்குநர் எனக் காட்டிக்கொள்ள ஷங்கர் விழைந்ததில்லை. ஆனால் தயாரிப்பாளராகப் பரிணாமம் எடுத்தபோது மாறுபட்ட படங்களை உருவாக்க உறுதுணையாயிருந்தார். அதனால்தான் வெயில், காதல், இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி போன்ற படங்களை அவர் தயாரித்தார். 

இயக்குநர்கள் சிலருக்கு வணிக ரீதியான வெற்றிப் படமும் எடுக்க வேண்டும், சமூகப் பொறுப்பையும் நிறைவேற்ற வேண்டும் என்ற விருப்பம் எழுகிறது. நியாயமான விருப்பம் தான். ஆனால் இரண்டையும் ஒரே படத்தில் நிறைவேற்ற முயலும்போது இயக்குநரின் பணி கடுமையாகிவிடும். திறம்படச் சமாளித்தால் மட்டுமே சமாளிக்க இயலும். அப்படித் தப்பித்த படத்திற்கு எடுத்துக்காட்டாக கமலஹாசனின் கதை, திரைக்கதையில் வெளியான தேவர் மகனைச் சொல்லலாம். இயக்குநர் பரதனின் செய்நேர்த்தி படத்தின் நாயகன் கமலுக்குக் கைகொடுத்தது. பெரும்பாலான இயக்குநர்கள் இப்படியான இரண்டு குதிரைச் சவாரியில் திறனை வெளிப்படுத்த இயலாமல் திணறுகிறார்கள்.

நிமிர்ந்து நில் திரைப்படத்தில் அப்படி ஒரு சவாரியை இயக்குநர் சமுத்திரக்கனி மேற்கொண்டுள்ளார். இந்தப் படமும் ஊழலுக்கு எதிரான சமூகக் கோபத்தையே அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. அரவிந்த் சிவசாமி வெளியுலகம் தெரியாமல் ஆசிரமத்தில் வளர்ந்த பிள்ளை. வெளியே வந்து புற உலகில் கலக்கும்போது அவன் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அவனைச் சமூகப் போராளியாக மாற்றுகிறது. சமூகத்தில் புரையோடிய ஊழல் அவனை நேரடியாகப் பாதிக்கிறது. பூனை புலியாய் மாற வேண்டிய நிர்ப்பந்தம். அநீதி கண்டு எரிமலையாகிறான். இயக்குநரின் சமூக அக்கறையை எளிதில் உணர்ந்துகொள்ள முடிகிறது. அமலா பால் போன்ற கதாநாயகி இருந்தும் கூட காதல் காட்சிகளில் ருசியில்லை. ஏனெனில் படத்தின் அடிநாதமான சமூகக் கோபம் கொண்ட கதாநாயகனை மடைமாற்ற இயக்குநருக்குப் பிரியமில்லை. ஆனால் இரண்டு குத்துப் பாடல்கள் இடம்பெறுகின்றன. 

பொழுதுபோக்கை எதிர்பார்த்து வரும் ரசிகர்களைக் கருத்து சொல்லி ஏமாற்றக் கூடாது என எண்ணி இயக்குநர் மேற்கொண்ட திரைக்கதைப் பயணம் சரியான திசையில் செல்லவில்லை. ஊழலுக்கு எதிரான படம் திரைக்கதைக்குத் தொடர்பே இல்லாமல் இலங்கைத் தமிழர் அனுபவித்த இன்னல்களைப் பேசுகிறது. ஆனால் மரண தண்டனையை ஆதரிப்பது போல் கடுமையான தண்டனைகள் இருந்தால் தவறுகள் குறையும் என்கிறது. உலகெங்கிலும் மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையான தண்டனைகள் களையப்பட வேண்டும் எனப் போராடுகிறார்கள். கடுமையான தண்டனைகளால் குற்றங்கள் குறையும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று கூறுகிறார்கள். ஆக ஊழலைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் நிதானம் காட்டப்பட்டிருக்க வேண்டும். 
நிதானத்தோடும் ஆழ்ந்த புரிதலோடும் ஊழலெனும் சமூக சிக்கலைக் களையும் வழிமுறைகளில் கவனம் செலுத்தியிருந்தால் இந்தப் படம் இதுவரையான படங்களிலிருந்து மாறுபட்ட படமாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தி இந்து நாளிதழில் வெளியானது

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்