இந்த வலைப்பதிவில் தேடு

கிராமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிராமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, நவம்பர் 24, 2019

கே. டி. (எ) கருப்பு துரை

கல்லுப்பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் கருப்புதுரை (மு.ராமசாமி). நோயில் விழுந்து நீண்ட நாட்களாகப் படுத்த படுக்கையில் கிடப்பவரைப் பராமரிக்க முடியாமல் அவரைத் தலைக்கு ஊற்றி கருணைக் கொலை செய்துவிடக் குடும்பத்தினர் முடிவுசெய்கிறார்கள். இதைக் கேட்டு பதறும் முதியவர் வீட்டிலிருந்து வெளியேறிவிடுகிறார். செங்கோட்டை செல்லும் பேருந்தில் புறப்படும் முதியவர் அது இடையில் ஒரு கிராமத்தில் பழுதாகி நிற்கவும், அங்குள்ள கோயிலுக்கு வருகிறார். அங்குள்ள மண்டபத்தில் தங்குகிறார். அங்கே ஏற்கெனவே தங்கியிருக்கும் குட்டி (நாகவிஷால்)என்னும் ஆதரவற்ற சிறுவன் முதலில் பெரியவரைப் போட்டியாகக் கருதுகிறான். பின்னர் அவர்கள் இருவருக்குமிடையே ஆத்மார்த்தமான பிரியம் உண்டாகிறது. காணாமல் போன கருப்பு துரையைக் குடும்பத்தினர் தேடுகிறார்கள். கருப்பு துரை குடும்பத்துக்குத் திரும்பினாரா, சிறுவனுடன் எஞ்சிய வாழ்வைக் கழித்தாரா என்னும் கேள்விக்கு விடை தருகிறது கேடி எ கருப்புதுரை.

தான் ஆசை ஆசையாக வளர்த்த தன் பிள்ளைகளே தன்னைக் கொல்ல நினைக்கிறார்களே என்னும் வேதனையில் வாடும் கருப்புதுரை, குட்டியின் பிரியத்தில் நெகிழ்கிறார். குட்டிக்கும் பெரியவரின் அன்பு இனம்புரியாத இன்பம் தருகிறது. இவர்களுக்கு இடையேயான பிரியமான பயணமான திரைக்கதை எதிர்பாராத முடிவைத் தந்து முற்றுப் பெறுகிறது. வழக்கமாக இந்த மாதிரியான நெகிழ்ச்சியான பயணப் படத்தில் முடிந்தவரை ரசிகர்களை அழவைத்துவிட வேண்டும் என இயக்குநர் விரும்புவார். ஆனால், இந்தப் படம் முழுவதுமே சின்னச் சின்ன நகைச்சுவையால் சுவாரசியமாக நகர்ந்துவிடுகிறது.


கிராமத்தின் ரம்மியமான சூழலில் வாழ்வைத் தங்களுக்குப் பிடித்தவகையில் முதியவரும் சிறுவனும் கடத்தும்போது, பின்னணியில் அவ்வப்போது சென்றுகொண்டிருக்கும் ரயில் பரபரப்பான பிறரது வாழ்க்கையை உணர்த்தியபடி செல்வது அழகு.

பெரியவரைப் பிரிந்துசெல்லும்போது அவருக்கு ஒன்றும் தெரியாது கவனித்துக்கொள்ளுங்கள் எனச் சொல்லும்படி குட்டி போகும் காட்சி நெகிழ்ச்சி. என் ஆத்தாகூட என்ன இப்படிக் கவனிச்சுக்கிடலடா என்று கருப்பு துரை குட்டியிடம் கூறும் காட்சி உருக்கம். இப்படிப் பல தருணங்களை படத்தில் உருவாக்கியுள்ளார் இயக்குநர் மதுமிதா.

மு.ராமசாமி, நாகவிஷால் இருவரும்தான் படத்தை முழுவதும் தாங்கிச் செல்கிறார்கள். சிறுவனாக இருந்தாலும் பெரிய மனிதத் தோரணையுடன் நடந்துகொள்ளும் குட்டியிடம் பிரியத்தை வெளிப்படுத்தும்போது, ஒவ்வொரு முறையும் பிரியாணியைச் சுவையாக ரசித்து உண்ணும்போது,  தன் முன்னாள் காதலியை வீடு தேடிச் சென்று காணும்போது என அனைத்துக் காட்சிகளிலும் முழுமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கருப்புதுரையை கேடி எனச் சுருக்கமாக அழைப்பதில் தொடங்கி, அவரை அன்பால் மிரட்டுவது, அவரது நடவடிக்கைகளுக்குப் பொருள் புரியாமல் தவிப்பதுவரை எல்லாக் காட்சிகளிலும் ராமசாமிக்கு ஈடு கொடுத்துப் பெரிய நடிகர்போலவே நடித்திருக்கிறார் நாகவிஷால்.


கூத்துக் கலைஞராக வரும் குணாபாபு, பிரியாணிக் கடைக்காரர், கருப்புதுரையின் காதலியாக வரும் மூதாட்டி எனப் பல துணைக் கதாபாத்திரங்களும் கவனத்தை ஈர்க்கின்றன.

ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் கெம்புராஜ் கிராமத்தின் அழகை அழகாகவே காட்டியிருக்கிறார். இரவுக் காட்சிகள் ரசிக்கும்படி அமைந்திருக்கின்றன. காட்சிகளில் தென்படும் இருளும் ஒளியும் இணைந்து  நேரடியாகச் சம்பவங்களைப் பார்ப்பது போன்ற எண்ணத்தைத் தருகிறது.

விஜய் வெங்கட்ரமணனின் கச்சிதமான படத் தொகுப்பில் படம் எந்த இடத்திலும் தேவையற்ற நீட்சியைக் கொண்டிருக்கவில்லை.  பின்னணியிசையும் உறுத்தாத வகையில் அமைந்துள்ளது.

படத்தின் மிகப் பெரிய கரும்புள்ளி ஈசன் கதாபாத்திரம். அது எதற்கு என்றே புரியவில்லை. நீண்ட நாட்களாகப் படுக்கையில் கிடந்த பெரியவர் திடீரென எழுந்து பழையபடியே நடமாடுவதை நம்புவது சற்றுக் கடினமாகவே உள்ளது. நல்ல ஆரோக்கியமானவர்களைக் கருணைக்கொலை செய்வார்களா, உறவுகளிடமிருந்து விலகி வரும் பெரியவர் மீண்டும் அதே போன்ற உறவை ஏற்படுத்திக்கொள்வாரா போன்ற கேள்விகள் எழவே செய்கின்றன.

இவற்றையெல்லாம் மீறி, உறவு என்றால் எப்படி இருக்க வேண்டும், முதியவர்களிடம் ஆதரவற்றவர்களிடமும் பிறர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் போன்றவற்றை போதிக்காமல் உணர்த்தியவகையில் கே.டி.(எ) கருப்புதுரை சிறப்புத் துரையாக ஜொலிக்கிறார்.

திங்கள், ஆகஸ்ட் 26, 2019

பக்ரீத்: முழுமை பெறா பிரியாணி


அண்ணன் தம்பிகளுக்கிடையேயான வழக்கில் ஏழு ஆண்டுகள் நீதிமன்ற அலைச்சலுக்குப் பிறகு ரத்தினத்தின் பாகமான நிலம் அவன் கைக்கு வருகிறது. கையிலிருந்த பணமெல்லாம் வழக்கில் காலியாகிவிட விவசாயம் செய்ய வங்கிக் கடனுக்காக அலைகிறான் அவன். அந்த முயற்சியில் ரத்தினத்திடம் ஒட்டகக் குட்டி ஒன்று வந்து சேர்கிறது. அதன் பின்னர் ரத்தினத்தின் வாழ்வில் ஏற்படும் அனுபவங்களே பக்ரீத்.
விலங்குகள், தாவரங்கள் அனைத்தையும் குடும்ப உறுப்பினராகக் கருதி அன்பு காட்டுகிறது ரத்தினத்தின் குடும்பம். பக்ரீத் பண்டிகைக்கான ஒட்டகத்துடன் வந்து சேர்ந்த குட்டி ஒட்டகத்தை என்ன செய்வது என்று தெரியாமல் இரும்புக் கடை பாய் தவிக்கிறார். சட்டென்று அதைத் தான் கொண்டுபோய் வளர்ப்பதாகச் சொல்கிறார் ரத்தினம்.  அதற்கான காரணம் வலுவாக இல்லை. ஆனால், அந்தக்  குடும்பத்தில் ஒட்டகக் குட்டி அடியெடுத்துவைத்த பின்னர் அது அவர்களுக்குப் பல அதிர்ஷ்டத்தைத் தருகிறது. சாரா எனப் பெயர்வைத்து அதன் மீது பிரியம் காட்டுகிறார்கள்.  

பிரியத்துடன் வளர்க்கும் சாராவுக்கு உடல்நலமில்லாமல் போனவுடன் மருத்துவரை அழைத்துவருகிறார் ரத்தினம். அதற்கு சிகிச்சையளித்த மருத்துவர் அது வாழும் இடத்தில் அது இருப்பது தான் அதற்கு நல்லது. இங்கிருந்தால் அது இறந்துவிடக்கூடும் என எச்சரிக்கிறார். ஆகவே அதை ராஜஸ்தானில் கொண்டுபோய் விட முடிவுசெய்கிறார் ரத்தினம். இந்தப் பயணம்தான் படத்தின் பெரும் பகுதியாக இருக்கிறது. அதன் மூலம் வாழ்க்கை குறித்த அனுபவப் பாடத்தைச் சொல்ல ஏராளமான வாய்ப்புள்ள திரைக்கதை. ஆனால், அதைச் சொன்னவிதத்தில் பெரிய வெற்றியைப் பெறவில்லை. என்பது படத்தின் சறுக்கல்.
விக்ராந்த்துக்குப் பெயர் பெற்றுத் தரும் பாத்திரம். மிகவும் தணிவான, கனிவான குரலிலேயே பேசுகிறார். குழந்தை வாசுகி (ஷ்ருத்திகா) ஆசையுடன் கேட்கும் லேஸ் சிப்ஸை வாங்கித் தந்தும் அதைத் தின்னவிடாமல் அழகாக ஏமாற்றும் தன்மை ரசிக்கவைக்கிறது. தான் ஆசையாக வளர்த்த ஒட்டகம் காணாமல் போய்விட்ட காட்சியில் வெளிப்படும் அவரது பதற்றம் மஜித் மஜிதியின் ‘த சாங் ஆஃப் ஸ்பேரோஸ்’ படத்தில் நெருப்புக் கோழியைத் தேடி அலையும் கரீமை நினைவூட்டுகிறது. ஆனால், ரத்தினத்தின் பதற்றத்துக்கான காரணம் அவ்வளவு வலுவாக இல்லை என்பதால். இது போலச் செய்தல் ரகத்தில் அடங்கிவிடுகிறது.
ரத்தினத்தின் மனைவி கீதா (வசுந்தரா) முகம் கோணாமல் வீட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்; முகம் மலரச் சிரிக்கிறார். தனக்கான வேடத்தை ஒழுங்காகச் செய்திருக்கிறார். குழந்தையான ஷ்ருத்திகாவும் மனம் கவர்கிறார்.  மாடுகளுக்கு நண்பர்களின் பெயரை வைத்து மகிழ்கிறார்.
ரத்தினத்தின் நண்பனான சுந்தரம், இரும்புக் கடை பாய், லாரி டிரைவர், வெளிநாட்டுப் பயணி எனப் பல துணைக் கதாபாத்திரங்கள் படத்தை உணர்வுபூர்வமானதாக்குவதில் உறுதுணைபுரிந்திருக்கின்றன.
தொடர்ந்து இஸ்லாமியர்களைத் தீவிரவாதியாக சித்தரித்துவந்த தமிழ்ப் பட போக்கிலிருந்து விலகி அவர்களைச் சராசரி மனிதர்களாக நல்லுணர்வு கொண்டவர்களாகச் சித்திரித்திருக்கும் போக்கு வரவேற்கத்தக்கது.  
விவசாயக் கிராமம் என்றவுடன் மதுரை, நெல்லை, தஞ்சை எனச் செல்லாமல் சென்னைக்கு அருகில் சோழவரம் கிராமத்தைத் தேர்ந்தெடுத்தவிதம் ரசிக்கைவைக்கிறது. ஒட்டகம் என்னும் விலங்கு கதையில் கவர்கிறது. ஆனால், அதை ஒரு சாதாரண ஆடு, மாடு போன்றே பயன்படுத்தியிருக்கும் விதம் ஈர்க்கவைக்கவில்லை. மாடு பழகிய தடத்திலேயே திரும்ப வரும். ஒட்டகம் அப்படி வருமா என்ன?
ஆலங்குருவிகளா, கரடு முரடு பூவே போன்ற பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. பின்னணியிசை சற்று மட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம். பச்சைப் பசேலென்ற வயல் காட்சிகள் ராஜஸ்தான் மணல் காட்சிகள் என வடக்கையும் தெற்கையும் இணைத்துத் தந்திருக்கிறது ஒளிப்பதிவு. ஒட்டகம் என்பது புதுக் களம் ஆனால், பக்ரீத் நேரத்தில் ஒட்டகம் எதற்குப் பயன்படும் என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வளவு தொலைவு கொண்டுசேர்த்து அது பக்ரீத்துக்குப் பலியாகப் போகிறதே என்ற ரத்தினத்தின் பதற்றம் மிகையாகத் தெரிகிறது. முழுக்க முழுக்க ஒரு மனிதநேயப் படத்தைத் தந்ததில் ஜெகதீசன் சுபு கவர்கிறார்; ஆனால் அது முழுமையாக அமையாமல் குறைப்பட்டுப்போனதில் சறுக்குகிறார்.

திங்கள், ஜூன் 09, 2014

பூவரசம் பீப்பீ

பழம் சுடுகிறதா எனக் கேட்கிறார்கள் சிறுவர்கள்

பேபி சுஜிதா
பூவிழி வாசலிலே திரைப்படம் பேபி சுஜிதாவை முக்கியப் பாத்திரமாகக் கொண்டு 1987 ஜனவரியில் வெளியானது. தமிழில் அதுவரை வெளியான படங்களிலிருந்து மாறுபட்டதாக அது இருந்தது. இப்படத்தில் இடம்பெறும் கொலைக் குற்றம் ஒன்றை கேட்கும் திறனற்ற, பேச இயலாத சிறுவன் ஒருவன் பார்த்துவிடுவான். கொலைகாரர்கள் அவனைத் தேடி வரும்போது அவனது தாயும் கொல்லப்படுவாள். இரண்டு குற்றங்களுக்கும் அந்தச் சிறுவன் மட்டுமே ஐ விட்னஸ். அவனை வைத்துக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தரும் திரைக்கதையை சுவாரசியமான த்ரில்லராகப் படமாக்கித் தந்திருந்தார் பாஸில். 

தற்போது வெளியாகியிருக்கும் பூவரசம் பீப்பீ திரைப்படத்திலும் இதைப் போன்றே கிராமம் ஒன்றில் நிகழும் குற்றம் ஒன்றைச் சிறுவர்கள் மூவர் பார்த்துவிடுகிறார்கள். இங்கே சலவைத் தொழிலாளி ஒருத்தி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிப் பலியாகிறாள். குற்றமிழைத்த வர்களுக்கு எப்படிச் சிறுவர்கள் தண்டனை பெற்றுத் தருகிறார்கள் என்பதுதான் படத்தின் திரைக்கதை. இரண்டு படங்களுக்கும் இடையே சரியாக இருபத்தியேழு ஆண்டுகள் வித்தியாசம். அதுதான் பூவரசம் பீப்பீ திரைப்படத்தை இயக்கிய ஹலிதா ஷமீமின் வயது என்கிறார்கள்.

தமிழ்த் திரையுலகில் ஜெயதேவி, ஜானகி விஸ்வநாதன், ஸ்ரீப்ரியா, காயத்ரி புஷ்கர் போன்ற பெண் இயக்குநர்கள் சிலர் படங்களைத் தந்துள்ளார்கள். இவர்கள் செல்லும் வழியில் வந்துள்ள ஷமீம் தனது பாதையில் அழுத்தமான தடத்தைப் பதித்துள்ளார். குழந்தைகளின் கோடைகாலச் சாகசம் என்று வருணிக்கப்படும் இப்படம் காட்சிகளின் வடிவமைப்பு காரணமாக வழக்கமான குழந்தைப் படங்களிலிருந்து வித்தியாசப்படுகிறது. இது மிகச் சிறந்த படமல்ல. ஆனால் தன்னைத் தனித்த அடையாளத்துடன் காட்டத் தீவிரமாக முயன்றுள்ள படம் என்பதை நிரூபிக்கும் வகையில் தனது குழுவினரின் ஒத்துழைப்புடன் இதை உருவாக்கியுள்ளார் இயக்குநர். 

இயக்குநர் ஹலிதா ஷமீம்
இயக்குநர் கே. பாக்யராஜ் தனது படங்களில் அதிகமாகக் குழந்தைப் பாத்திரங்களைக் கையாண்டுள்ளார். அவரது டார்லிங் டார்லிங் டார்லிங் திரைப்படத்தில் காதல் என்பது தொடங்கும் சமயம் பால்ய பருவம். அந்த ஏழு நாட்களில் வளரிளம் பருவச் சிறுவன் காதலுக்குத் தூதாகவும் துணையாகவும் இருப்பான். முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நாயகியுடன் அலைந்து பாலியல் வசனங்கள் பேசித் திரிபவர்கள் வளரிளம் பருவத்துக் குழந்தைகள். பாக்யராஜின் திரைக்கதையை அடியொற்றிப் பயணப்படும் மணி ரத்னத்தின் அஞ்சலி திரைப்படம் நகரத்து அபார்ட்மெண்ட் குழந்தைகளை மையப்படுத்தியிருந்தது. வயசுக்கு மீறிப் பேசும் குழந்தைக் கதாபாத்திரங்களைக் கொண்ட படம் என்னும் குற்றச்சாட்டுக்கு இது ஆளானது. 
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா
இப்படியான குழந்தைகள் படங்களில் ஓரளவு மாறுபட்டதாக வெளியானது பாண்டிராஜின் பசங்க. குழந்தைகள் படமென்றாலும் அதில் பெரியவர்களின் அசட்டுத் தனங்களைக் குழந்தைகள் மூலம் சுட்டிக்காட்டியிருப்பார் அவர். முழுக்க முழுக்கக் குழந்தைகளுக்காக என வெளியான இயக்குநர் ராசி அழகப்பனின் வண்ணத்துப்பூச்சி வந்ததும் மறைந்ததும் சுவடின்றி நடந்தது. ஷாமிலி என்ற குழந்தையை வைத்து ராம.நாராயணனும் பல பக்திப் படங்களை எடுத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான கோலிசோடா வளரிளம் பருவத்துக் குழந்தைகளைக் கிட்டத்தட்ட கதாநாயகர்களாகப் பிரதியெடுத்தது. தமிழில் வெளியான இத்தகைய குழந்தைகள் படங்கள் பெரும்பாலானவற்றில் குழந்தைக் கதாபாத்திரங்கள் பிஞ்சிலேயே பழுத்து வெம்பியிருக்கும். இந்த நெடும் பயணத்தின் சுவடைப் பார்த்தோ பயந்தோ அதன் பக்கவாட்டில் தனக்கொரு பாதையைப் போட்டுக்கொண்ட படமெனப் பூவரசம் பீப்பியைச் சொல்லலாம். 


 பெரியவர்களின் உலகத்தின் தரம்கெட்ட செயல்கள் குழந்தைகள் மனத்தில் என்ன விதமான தாக்கங்களை ஏற்படுத்தும், அவர்களின் இனிமையான பால்யத்தில் எப்படிக் கழிவு நீர் கலக்கிறது போன்றவற்றைப் பாவனையின்றி, உணர்ச்சிவசப்படல் இன்றிச் சொல்ல முயன்றிருக்கிறார் ஷமீம். இப்படத்தின் வேணு கண்ணனோ, ஹரீஸோ, கபில் தேவோ வயதுக்கு மீறிப் பேசவில்லை ஆனால் வயது கடந்த ஞானம் கொண்டவர்களாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றைக் குறித்தும் பேசுகிறார்கள்; விவாதிக்கிறார்கள்; ஒரு முடிவுக்கு வருகிறார்கள், ஆனால் அவர்கள் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். புரிந்துகொள்ள முடியாத இந்த மாயமே பார்வையாளரைக் குழப்பும் அம்சமாகியுள்ளது. 

படைப்புத் திறனை ஊக்கப்படுத்தாத மொண்ணையான கல்வியை இயக்குநர் கிண்டலடிக்கிறார். நமது வீட்டிற்குள் ஊடுருவி நமது பாக்கெட்டைக் காலியாக்கும் விளம்பரங்கள்மீதும் தொலைக்காட்சிகள் மீதும் அவருக்கு விமர்சனம் இருக்கிறது. மதத்தின் பெயரால் பெருகி ஓடும் ரத்தம் அவருக்கு வாதை தருகிறது. இந்தச் சமூக அக்கறையைச் சிறுவர்களும் உணர்கிறார்கள் என்பதைப் பெரியவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல்போகிறது. ஏனெனில் குழந்தைகளுக்கு என்ன தெரிந்துவிடப் போகிறது என்னும் அலட்சியம் பெரியவர்களிடம் புரையோடியுள்ளது. வழக்கமாக மாணவர்கள் தவறு செய்வார்கள் ஆசிரியர் ஒருவர் வண்டி வண்டியாய் வசனம் பேசி அவர்களை நல்வழிப்படுத்துவார். ஆனால் இப்படத்தில் நிலைமை தலைகீழ், ஆசிரியர் அருவருக்கத்தக்க காரியத்தில் ஈடுபடுகிறார்.


சலவைத் தொழிலாளியைக் கொன்று ஆறு பலிகொண்டுவிட்டது என்று ஊரையே நம்பவைக்கிறார்கள் தகாத காரியத்தில் ஈடுபட்ட பெரியவர்கள். ஆனால் சிறுவர்கள் அந்தக் குற்றத்தைக் குற்றமென நிரூபிக்கப் பாடுபடுகிறார்கள். பெரியவர்கள் மூட நம்பிக்கையின் பக்கம் நிற்கிறார்கள்; சிறுவர்கள் பகுத்தறிவுடன் செயல்படுகிறார்கள். இது வழக்கத்திற்கு மாறானது. ஒரு குறும்படத்தை நீட்டித்திருப்பது போன்ற சாயல் தென்படுவதால் சில இடங்கள் தொய்வடைந்துபோகின்றன; ஆனால் எந்த இடத்திலும் படம் தனது பாதையை மாற்றிக்கொள்ள வில்லை. கூடப் படிக்கும் சிறுமியின் மீது சிறுவர்களுக்குப் பிரியம் இருக்கிறது. அது தொடர்பான கனவு இருக்கிறது. இதை வயதுக்கு மீறிய செயல் என்பதைத் தாண்டி அது அந்த வயதுக்கே உரிய பிரியம் அவ்வளவுதான். குடிகாரத் தந்தை நடுரோட்டில் விழுந்து கிடக்கும் காட்சி கபில்தேவை அவமானத்துக்கு ஆளாக்குகிறது. அந்தப் பிஞ்சு மனம் வேதனையால் வெதும்பிப்போகிறது. நண்பர்கள் அவனைத் தேற்றுகிறார்கள். இதெல்லாம் பெரிய மனுஷத்தனம்தான். இதை உணரச் சிரமப்படுகிறார்கள் பெரியவர்கள். 

அமராவதி நதி பாயும் அழகிய கிராமம் கண்ணில் குளுமையாய்ப் பரவுகிறது. அந்தக் கொடூரம் நிகழும் அன்று பொழியும் மழை அவ்வளவு அழகு. நதியில் கலக்கும் மழைத் துளிகளில் தென்படும் யவ்வனத்தைச் சிறிதும் வீணாக்காமல் சிறைபிடித்துள்ளது மனோஜ் பரமஹம்சாவின் கேமரா. படம் முழுவதுமே ஒருவித மர்மமான மௌனம் உறைந்து கிடக்கிறது. இந்த மௌனத்தை அவசியப்படும் காட்சிகளில் ஒலிபெயர்த்துள்ளார் இசையமைப்பாளர் அருள் தேவ்.

இசையமைப்பாளர் அருள் தேவ்
பெண்கள் பருவமெய்தும் உடலியல் நிகழ்வைக் காலகாலமாகக் கொண்டாடி தீர்த்த முகங்களில் அழகாய்க் காறி உமிழ்ந்துள்ளார் ஷமீம். சிறுவன் பருவமெய்திய காட்சி படமாக்கப்பட்ட விதம் கோபத்தைச் சிரித்துக்கொண்டே வெளிப்படுத்தும் ரகம். வன்புணர்வுக் காட்சி உண்டு படத்தில், மதக் கலவரம் உண்டு; ஆனால் எந்தக் காட்சியிலும் வன்முறையின் கோரம் பதிவாகவில்லை. வன்முறையின் பாதிப்பை உணர்த்துகிறார்; அதையும் மிகச் சன்னமாக, மிக உள்ளொடுங்கிய தொனியில். வயது ஏற ஏற அறிவு வளர்கிறது என்ற நம்பிக்கையைக் குலைத்து, வயது ஏற ஏற அறிவு தேய்கிறது என்னும் உண்மையை வெளிப்படுத்த முனைந்துள்ளார் இயக்குநர் ஹலிதா ஷமீம். இந்தத் துணிச்சல் அவரைத் தனித்து அடையாளப்படுத்துகிறது.

தி இந்துவில் வெளிவந்த கட்டுரை

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்