இந்த வலைப்பதிவில் தேடு

கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, பிப்ரவரி 05, 2016

ஒட்டால்

அன்புள்ள தாத்தாவுக்கு..!



இருள் சூழ்ந்த அறையில்,மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், அந்தப் பிஞ்சுச் சிறுவன் கண்ணீர் நிரம்பிய எழுதுகோலால் கடிதம் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறான். திருவனந்தபுரம் சர்வதேசத் திரைப்பட விழாவில் (2015) இறுதியாகத் திரையிடப்பட்ட ‘ஒட்டால்’ இப்படித்தான் தொடங்குகிறது. பார்வையாளர்களைத் தன்வசம் ஈர்த்துக்கொண்ட ‘ஒட்டால்’ விருதுக் குழுவையும் விட்டுவைக்கவில்லை. அந்தத் திரைப்பட விழாவின் உயரிய விருதுகள் நான்கைப் பெற்றிருந்தது. இருபதாண்டு காலத் திருவனந்தபுரத் திரைப்பட விழா வரலாற்றில் வேறெந்தப் படமும் தொட்டிராத சிகரம் இது எனச் சிலாகிக்கப்பட்டது. இந்தியாவில் ஒரே நேரத்தில் முதன்முதலாகத் திரையரங்குகளிலும் இணையத்திலும் வெளியிடப்பட்ட இப்படம் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில், 10.01.2016 அன்று உட்லண்ட்ஸ் சிம்பொனி திரையரங்கில் திரையிடப்பட்டது. 

ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்காவ் 1886-ல் எழுதிய ‘வான்கா’ சிறுகதையின் அடிப்படையில் ‘ஒட்டா’லை உருவாக்கியிருக்கிறார், இலக்கியப் பிரதிகளைத் திரைப்படமாக்குவதில் வேட்கை கொண்ட இயக்குநரான ஆர்.ஜெயராஜ். கேரளாவின் குட்டநாடு பகுதியில் ஏழ்மை ததும்பும் வாழ்க்கை நடத்தும் வாத்து மேய்ப்பவரான 70 வயது தாத்தாவுக்கும் (மீனவரான குமரகோட்டம் வாசுதேவன்), 8 வயதுப் பேரனான குட்டப்பாயிக்கும் (ஆஷந்த் கே ஷா) இடையேயான உணர்வுப் பிணைப்பு, இயற்கைக்கும் அவர்களுக்குமான உறவு என்ற தடங்களின் மேலேயே படம் பயணிக்கிறது. வாத்து மேய்க்க தாத்தாவுடன் படகில் செல்லும் பேரன் இயற்கையான சூழலிலே பொழுதைக் கழிக்கிறான். சிறுவனுக்குக் கல்வி கற்க விருப்பம். ஆனால் பள்ளி செல்லவோ கல்வி கற்கவோ அவர்களது பொருளாதாரம் ஒத்துழைக்கவில்லை. ஏனெனில் கடன் தொல்லை தாள முடியாமல் குடும்பத்துடன் உயிரைவிடத் துணிந்த தகப்பனும் தாயும் அதிர்ஷ்டவசமாக மாண்டுவிட, துரதிர்ஷ்டசாலியான சிறுவன் மட்டும் பிழைத்துக்கொள்கிறான்.



ஏழைகள் பரோபகாரிகள், செல்வந்தர்கள் சுயநலவாதிகள். கற்க வழியில்லாத சிறுவர்களைக் கூலித் தொழிலில் தள்ளிவிடுவதற்காகத் திரியும் மனிதர்கள் துளிக்கூட இரக்கமற்றவர்கள். இப்படியான கொடூரர்களிடம் மாட்டிக்கொள்ளும் சிறுவர்கள் படும்பாட்டைச் சொன்னால் மாத்திரமல்ல நினைத்தாலே போதும் நெஞ்சம் விம்மும். இத்தகைய சிறுவர்கள் நம்பிக்கையுடன் வாழ்வை அணுக வேண்டும். நம்பிக்கை மாத்திரம் போதும், அவர்கள் தாமாக வளர்ந்து, எழுந்து, நிமிர்ந்துநின்றுவிடுவார்கள். காலத்தால் அழியாக் காவியமாக, கவித்துவமான கேமரா மொழியில் ஜெயராஜ் படைத்திருக்கும் ‘ஒட்டால்’ இதைத்தான் காட்சிப்படுத்தியிருக்கிறது.

இயக்குநர் ஜெயராஜ்
இயற்கையான சூழலில் குட்டப்பாயிக்குக் கிடைக்கும் வாழ்வு மகோன்னமானது. எம்.ஜே.ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவில், வலசைப் பறவைகள் வந்துசெல்லும் நீர்நிலைகள் நிரம்பிய, பசுமையான, குளுமையான, வளமான குட்டநாட்டைக் காணும்போது இப்படி ஓரிடத்தில் வாழ்க்கை அமையவில்லையே என்ற ஏக்கம் எவருக்கும் எழும். குட்டநாடு பின்புலத்தில் உயிரோட்டமான திரைக்கதையை எழுதிய ஜோஷி மங்கலாத்துக்குத் தேசிய விருது கிடைத்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவில் சிறந்த படத்துக்கான தேசிய விருதும் படத்துக்குக் கிடைத்தது. ஆனால் குட்டப்பாயிக்குக் குட்டநாட்டில் வாழக் கொடுத்துவைக்கவில்லை. தமிழகத்தின் தீப்பெட்டித் தொழிற்சாலை ஒன்றில் அவன் மாட்டிக்கொள்கிறான். தனக்குப் பின்னர் அவன் நிராதரவாக நின்றுவிடக் கூடாதே எனக் கலங்கும் தாத்தா அவனை வலுக்கட்டாயமாகப் பணிக்கு அனுப்பிவிடுகிறார்.


தீப்பெட்டித் தொழிற்சாலையில் சிறுவனுக்குச் சரியாகச் சோறு கிடைப்பதில்லை; ஓய்வும் கிடைப்பதில்லை. அந்தக் கொட்டடியிலிருந்து மீளத் துடிக்கிறான் சிறுவன். தன்னை விடுவித்துச் செல்லும்படி தாத்தாவுக்கு உணர்வுபூர்வமான கடிதத்தை அவன் எழுதி முடிக்கும்போது படமும் நிறைவுபெறுகிறது. பார்வையாளர்கள் கண்ணீர் சிந்தாமல் திரையரங்கிலிருந்து திரும்ப முடியாது என்பதில் ஜெயராஜ் கொண்ட உறுதியைக் காட்சிகள் புலப்படுத்துகின்றன. ஒருவேளை கண்ணீர் வரவில்லை என்றால் பிழை கண்களில்தான் படத்திலல்ல. இயற்கை மீதான நேசம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித நேயம், குழந்தைத் தொழிலாளர்கள் எனப் பல்வேறு சமூக அக்கறைகள் பேரொளி பாய்ச்சும் இந்தப் படம் செல்லும் இடங்களில் எல்லாம் விருதுகளை வாரி எடுத்துவருவதில் வியப்பென்ன?

சிறிய மாற்றங்களுடன் தி இந்து நாளிதழில் வெளியானது 

ஞாயிறு, நவம்பர் 29, 2015

கடிதங்கள் கூறும் கருணையின் சரிதம்!


அன்னை தெரசாவின் சேவைகள் அவருடைய மனத்தைப் போலவே எல்லையற்றவை. ஐம்பதாண்டு காலத்துக்கும் மேலாக, தன் வாழ்வின் சம்பவங்களை, அவற்றில் பல சொல்ல முடியாத சோகங்களை உள்ளடக்கியவை, தனது நீண்ட நாள் நண்பருக்குத் தான் எழுதிய கடிதங்களில் இதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தக் கடிதங்களை அன்னை தெரசா அழித்துவிட விரும்பினார். ஆனால், அவை அழிக்கப்படவில்லை, 2009-ம் ஆண்டில் ‘மதர் தெரசா: கம் பீ மை லைட்’ என்னும் பெயரில் நூலாக வெளிவந்தன. இந்த நூலை அவருடைய போதகர் பிரைய்ன் கோலொடியஜுக் தொகுத்திருந்தார்.

அன்னை தெரசாவின் இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு ‘த லெட்டர்ஸ்’ என்னும் ஹாலிவுட் திரைப்படம் ஒன்று டிசம்பர் 4 அன்று வெளியாக இருக்கிறது. வில்லியம் ரியட் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் திரைக்கதையை அவரே எழுதியிருக்கிறார். அமெரிக்காவின் இல்லினாய் மாகாணத்தைச் சேர்ந்த இந்த இயக்குநர் அநேக ஆவணப் படங்களையும் ‘ஸ்கார்பியன்’, ‘ஐலண்ட் ப்ரே’ உள்ளிட்ட திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

இருள் நிறைந்த வாழ்வில் இறை நம்பிக்கை கொண்ட பெண்ணாகவும் பின்னர் உலகமறிந்த அன்னையாகவும் அவர் பரிணமித்த முழு வாழ்வையும் இந்தக் கடிதங்கள் வாயிலாகச் அறிந்துகொள்ள முடியும். இந்தப் படம் அந்த சம்பவங்கள் அனைத்தையும் காட்சிகளாகக் கொண்டிருக்கிறது. பல சம்பவங்களை அவ்வளவு எளிதில் திரையில் கொண்டுவர முடியவில்லை. பிறப்பு முதலாக அன்னை தெரசாவின் வாழ்வை அப்படியே அறிந்துகொள்ள உதவும் வகையில் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதே போல் கத்தோலிக்க மிஷனரிகளின் தோற்றமும் வளர்ச்சியும் படத்தின் காட்சிகளின் வழியே உணர்த்தப்பட்டிருக்கிறது. அன்னை தெரசாவின் போராட்டமான வாழ்க்கையிலும் இறை நம்பிக்கையை விடாமல் தன் வாழ்நாளின் இறுதி வரை அவர் சேவையாற்றச் சிறிதும் சுணங்கியதில்லை என்ற அடிநாதத்தை வலுவேற்றும் விதத்தில் ‘த லெட்டர்ஸ்’ உருவாகியிருக்கிறது.

‘மோனலிசா ஸ்மைல்’, ‘ட்ருலி மேட்லி டீப்லி’ உள்ளிட்ட படங்கள் மூலமாக நன்கு அறிமுகமான நடிகை ஜுலியட் ஸ்டீவன்சன் அன்னை தெரசா வேடமேற்றிருக்கிறார். ரட்ஜர் ஹெவர், மேக்ஸ் வான் சிடோ, பிரியதர்ஷினி போன்ற நடிகர்கள் முக்கிய வேடங்களை ஏற்றிருக்கின்றனர். ஹாலிவுட்டின் சுயசரிதைப் படங்கள் வரிசையில் ‘த லெட்டர்ஸ்’ முத்திரை பதிக்கும் என்பதைப் படத்தின் ட்ரைலர் உறுதிசெய்கிறது. ஆகவே, படத்தைக் காண ஹாலிவுட் திரைப்படங்களின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அன்னை தெரசாவின் நேயர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

திங்கள், மே 19, 2014

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே

(2014 மே 17 அன்று தி இந்துவில் வெளியானது)


அது 1981-ம் ஆண்டின் மே மாதம் 13-ம் நாள் அன்றைய மாலை நேரம். எல்லா நாளையும் போல் விடிந்த அந்த நாள் எல்லா நாளையும் போல் முடிந்திருக்க வேண்டிய தருணம் அது. ஆனால் அந்த நாள் அப்படி முடியாததால் வரலாற்றின் பக்கத்தில் முக்கிய நாளாகப் பதிவுசெய்யப்பட்டது. மாலை மயங்கி இருள் கவியத் தயாரான அந்த மாலைப் பொழுதில் போப் இரண்டாம் ஜான் பால் திறந்த வெளி ஜீப்பில் வாடிகன் சிடியில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தின் வழியே சென்றுகொண்டிருந்தார். போலந்து நாட்டைச் சேர்ந்த போப் 1978-ல்தான் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இத்தாலி நாட்டைச் சாராத முதல் போப் ஆண்டவர் அவரே. அவர் பெருந்திரளான தனது ஆதரவாளர்களது கூட்டத்தைக் கடந்துகொண்டிருந்தார். அப்போதுதான் யாரும் எதிர்பாராத அந்த அசம்பாவிதச் சம்பவம் நடந்தேறியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் தொடர்ந்து நான்கு துப்பாக்கிக் குண்டுகள் போப்பைக் குறிவைத்துப் பாய்ந்துவந்தன. இரண்டு குண்டுகள் வயிற்றின் கீழ்ப் பகுதியைத் துளைத்தன. ஒன்று இடது ஆட்காட்டி விரலையும் மற்றொன்று வலது தோளையும் பதம் பார்த்தன. ரத்த வெள்ளத்தில் மிதந்த போப் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் போப்பின் பாதுகாவலர்கள் இருவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

போப் மீது கொலை முயற்சி

போப் இரண்டாம் ஜான் பாலை 9மிமீ ப்ரௌனிங் ஹைபவர் செமி ஆட்டோமேடிக் பிஸ்டலால் சுட்டுக் கொல்ல முயன்றவர் பல்கேரிய நாட்டின் சோபியா பகுதியைச் சேர்ந்த மெஹ்மெட் அலி அஹ்கா என்பவர். இவர் தனது பெயரை மாற்றிக்கொண்டு பொய்யான பாஸ்போர்ட் உதவியுடன் 1981 ம் ஆண்டின் மே மாதம் 10 அன்று மிலன் நகரிலிருந்து ரயில் மூலம் ரோம் நகருக்குள் ஊடுருவியுள்ளார். துருக்கியைச் சேர்ந்த ஒருவரும் பல்கேரிய நாட்டைச் சேர்ந்த இருவரும் இவருக்கு உதவியுள்ளனர். இத்தாலியில் இருந்த பல்கேரிய ராணுவ நிபுணரான ஸிலோ வாஸ்ஸிலேவ் என்பவரே திட்டத்தை அரங்கேற்றுவதற்கான கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார். போப்பை மெஹ்மெட் சுட்டுக் கொன்றவுடன் ஓரல் செலிக் என்பவர் ஒரு வெடிகுண்டை வெடிக்கச் செய்வார். அப்போது உருவாகும் களேபரத்தின் நடுவே இருவரும் தப்பித்துவிட வேண்டும் என்பது ஏற்பாடு. ஆனால் போப்பின் மீது குண்டு பாய்ந்ததை ஒட்டி ஏற்பட்ட பதற்றமான சூழலால் கவலை கொண்ட ஓரல் செலிக் பயந்து ஓடிவிட்டார். மெஹ்மெட் கூட்டத்தினிடையே தப்பிக்க வழியின்றி போலீஸாரிடம் மாட்டிக்கொண்டார்.

மன்னிப்பு தந்த மகான்

1981 ஜூலையில் மெஹ்மெட் அலி அஹ்காவுக்கு இத்தாலி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. சிறையிலிருந்த மெஹ்மெட்டை 1983-ல் போப் சென்று பார்த்துவந்தார். போப் மெஹ்மெட்டை மன்னித்து ஏற்றுக்கொண்டார். மெஹ்மெட்டின் குடும்பத்தினருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டார். மெஹ்மெட்டின் சகோதரரையும் தாயையும் சந்தித்துப் பேசினார். இந்த உறவால் போப் கேட்டுக்கொண்டதற்கிணங்க மெஹ்மெட் மன்னிக்கப்பட்டு 2000-வது ஆண்டில் துருக்கிக்கு அனுப்பப்பட்டார். ஆனால் 1979-ல் பத்திரிகையாளர் ஒருவரைக் கொல்ல முயன்ற வழக்கின் காரணமாகச் சிறையிலடைக்கப்பட்டார். இத்தாலியில் சிறையிலிருந்த நாட்களைக் கழிக்க மறுத்துவிட்டது துருக்கி நீதிமன்றம். எனவே சிறைத் தண்டனை தொடர்ந்தது. தண்டனை முடிந்த பின்னர் 2010-ம் ஆண்டு ஜனவர் 10-ல் தான் மெஹ்மெட் விடுதலையானார்.

போப் இரண்டாம் ஜான் பால் மீதான தாக்குதல் திட்டத்தின் மூளையாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைப்பான கேஜிபி இருந்ததாகச் சொல்லப்பட்டது. போலந்து நாட்டின் கூட்டொற்றுமைக்குப் பாடுபட்ட இயக்கத்திற்கு போப் தெரிவித்த ஆதரவு காரணமாக அதிருப்தி அடைந்த ரஷ்யா, போப்பைக் கொல்லச் சதி செய்தது என்று கூறப்பட்டது. இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு டாம் க்ளன்ஸி என்னும் நாவலாசிரியர் ரெட் ரேப்பிட் என்னும் புதினத்தை எழுதியுள்ளார்; கரோல்: த போப், த மேன் என்னும் தொலைக் காட்சித் தொடரும் எடுக்கப்பட்டுள்ளது. எந்தப் போப்பைக் கொல்ல மெஹ்மெட் முன்வந்தாரோ அந்த போப் 2005-ல் உடல் நலமின்றி இருந்தபோது அவர் உயிர் பிழைக்க மனமுருக பிரார்த்தித்து அவரது உடல்நலம் சீராக வாழ்த்தி கடிதம் அனுப்பினாராம் மெஹ்மெட்.

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்