இந்த வலைப்பதிவில் தேடு

உளவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உளவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், டிசம்பர் 12, 2019

CIFF 2019: சப் டைட்டில் ஒழுங்கா போடுங்கண்ணே!

சென்னை சர்வதேச திரைப்பட விழா 2019


ஆண்டுக்கொரு முறை டிசம்பரில் நடத்தப்படும் சர்வதேசத் திரைப்பட விழா இன்று (டிசம்பர் 12) தொடங்கியது. காலையில் உற்சாகமாக கிளம்பிவிட்டேன். கேசினோவில் 9:45 மணிக்கு Thou Shalt Not Kill  படம் பார்க்கலாம் என்று சென்றால் தொடக்கமே தகராறுதான். சப் டைட்டில் ஓடவில்லை. கேசினோ சீரமைக்கப்பட்ட பிறகு இன்றுதான் செல்கிறேன். அந்த மினுமினுப்பு பத்திருபது நிமிடம்தானே தாங்கும். அதற்குப் பின்னர் சப் டைட்டில் இல்லாமல் படம் பார்க்க மனமில்லை. சரி இந்தப் படம் அவ்வளவு தான் என்று முடிவுசெய்துவிட்டேன். 

அடுத்ததாக, தேவி திரையரங்கில் 11:00 மணிக்கு Oh Mercy படத்துக்குச் சென்றால் அங்கேயும் அதே சிக்கல். முதல் இருபது நிமிடங்கள் சப் டைட்டில் இல்லாமல் படம் ஓடியது. அரங்கில் ஏற்பட்ட கத்தல் காரணமாகப் படம் நிறுத்தப்பட்டது. அடுத்த இருபது நிமிடங்கள் வெண் திரையை மட்டுமே பார்க்க முடிந்தது. படம் ஓடுவதாகத் தெரியவில்லை. வெளியேறிவிட்டேன். 

மீண்டும் 12:15 மணிக்கு கேசினோவில் Curiosa படத்துக்குச் சென்றேன். கேசினோவில் பால்கனியில் அமர்ந்தால் சப் டைட்டிலைப் பார்ப்பதற்கு பகீரத பிரயத்தனம் தேவைப்படுகிறது. முன்னால் இருப்பவரின் தலையைத் தவிர்த்துவிட்டு சப் டைட்டிலைப் படிப்பதற்குள் கழுத்துவலியே வந்துவிடுகிறது. படம் காதல், காமம் என்று பழகிய பாதையில் நடைபோட்டது. நாயகன் கேமராக் கலைஞன். அவனுடைய நண்பனின் மனைவிக்கும் அவனுக்கும் காதல். அவளுக்கோ கணவனைவிடக் கலைஞன் மீதுதான் காதல். சகட்டுமேனிக்குக் கட்டிப் புரள்கிறார்கள். இறுதியில் இந்த ஜோடியின் குழந்தைக்கு கணவன் தகப்பன் ஆகிறான். 1800களில் நடைபெறும் கதை. 

கேமராக் கலைஞன் பெண்கள் பலரை நிர்வாணப் புகைப் படமெடுத்து அதை ஆல்பமாக்கி வைத்திருக்கிறான். இறுதியில் நாயகி எழுத்தாளராகிவிடுகிறாள். கலாரசனையுடன் பார்க்க வேண்டிய படம். கலாரசனைக்குப் பதில் காம ரசனை என்றுகூடப் போட்டுக்கொள்ளலாம். 


அடுத்ததாக கேசினோவில் 2:45க்கு Hier என்ற படம் பார்த்தேன். இது பொறுமையைக் கோரிய படம். நாயகன் பல நாடுகளில் கட்டுமானங்களை மேற்கொள்ளும் நிறுவனம் நடத்துகிறான். வட ஆப்பிரிக்கா நாட்டுக்குப் பணி நிமித்தமாகச் செல்லும்போது அங்கே அவனுக்கு ஏற்படும் சிக்கல்கள்தான் திரைக்கதையாக விரிகின்றன.  அங்கே ஒரு பாரில் அவன் பார்க்கும் பெண்ணைத் துரத்திச் செல்கிறான். அதைத் தொடர்ந்து அவன் எதிர்கொள்ளும் விநோதச் சம்பவங்கள் கற்பனைக்கு அடங்காதவை. எங்கெங்கோ செல்கிறான். என்னென்னவோ நடைபெறுகின்றன. அந்தப் பெண் அவனை ஏமாற்றிச் சென்றவள் என்பதால் அவளைக் கண்டுபிடிக்கப் படாதபாடு படுகிறான். ஆனால், அது நடைபெறவே இல்லை. எல்லாமே ஒருவித மாயத் தோற்றமாகவே உள்ளது. உளவியல்ரீதியான சித்தரிப்புகளைக் கொண்ட படம். 

ஞாயிறு, செப்டம்பர் 27, 2015

மீண்டும் மெக்பெத்!

ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களில் பிரதானமானது ‘த ட்ராஜெடி ஆஃப் மெக்பெத்’. மத்திய கால ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மெக்பெத் மிகப் பெரிய போர் வீரன்; தன்னை உணராதவன்; மனைவியின் ஆலோசனையைக் கேட்டு மதியிழந்தவன். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆசையில் மன்னனைக் கொல்கிறான். நண்பனின் வாரிசு அரசனாகக் கூடும் என நண்பனைக் கொல்கிறான்.

மன்னனான பின்னர் அவனால் நிம்மதியாக ஆட்சி நடந்த முடிந்ததா, ஆசையில் ஆட்சியைப் பிடித்த அவனும் அவனுடைய மனைவியும் இன்பத்தை அனுபவித்தார்களா என்று கேட்டால் அதுதான் வாழ்வின் சுவாரஸ்மான திருப்பம். மன்னனைக் கொல்லத் தூண்டிய குற்றவுணர்வில் லேடி மெக்பெத் அவதியுறுகிறாள். ஆட்சி அதிகார போதையில் மெக்பெத் தன் நிம்மதியை இழக்கிறான், சீரான வாழ்வுக்குப் பதில் சீரழிவே மிஞ்சியது.

ஒரு கதையாகப் பல்வேறு திருப்பங்களையும் அதிகார போதையையும் நவீன மனிதனின் உளவியல்ரீதியான அலைக்கழிப்புகளையும் உள்ளடக்கிய நாடகம் இது. அதனால் இது எந்தக் காலத்துக்கும் பொருந்தும். ஆட்சி அதிகாரத்தின் மீது நாட்டம் கொண்டு கேடுகெட்ட செயல்களில் ஈடுபடும் மனிதர்கள் இருக்கும்வரை மெக்பெத் நாடகம் உயிர்ப்புடன்தான் இருக்கும்.

இந்தக் கதை பிடித்துப்போனதால் உலகப் புகழ்பெற்ற இயக்குநர் அகிரா குரோசோவா இதை அடிப்படையாகக் கொண்டு, அதில் ஜப்பானியக் கலாச்சார நுட்பங்களைக் கலந்துதான் ‘த்ரோன் ஆஃப் ப்ளட்’ படத்தை உருவாக்கினார். பிரபல இயக்குநர் ரோமன் பொலான்ஸ்கி இந்தக் கதையைப் படமாக்கியிருக்கிறார். இவை தவிர அநேக திரையாக்கங்களைக் கண்ட நாடகமான இது இங்கிலாந்தில் இப்போது மீண்டும் படமாகியிருக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் நடத்தியிருக்கிறார்கள். ‘ஸ்நோடவுன்’ படத்தின் மூலம் அறியப்பட்டிருக்கும் ஆஸ்திரேலிய இயக்குநர் ஜஸ்டின் கர்சல் இயக்கியிருக்கும் மெக்பெத், 2015 மே 23 அன்று கான் படவிழாவில் முதலில் திரையிடப்பட்டது. கானின் தலையாய விருதான தங்கப் பனைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ‘இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்’, ‘12 இயர்ஸ் எ ஸ்லேவ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் நடிகர் மைக்கேல் ஃபாஸ்பெண்டர் இந்தப் படத்தில் மெக்பெத்தின் வேடத்தை ஏற்று நடித்திருக்கிறார். ‘எ வெரி லாங் எண்கேஜ்மெண்ட், இன்ஸெப்ஷன் ஆகிய படங்களின் வழியே பரிச்சயமாகியிருக்கும் நடிகை மரியான் காட்டிலார்டு லேடி மெக்பெத் வேடமேற்றிருக்கிறார்.

இதன் முதல் டீஸர் 2015 ஜூன் 4 அன்று யூடியூபில் வெளியானது. அதை 26 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள். மெக்பெத்தின் கதை எத்தனை முறை படமானாலும் அத்தனை முறையும் அதைப் பார்க்க ரசிகர்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஷேக்ஸ்பியரின் படைப்புத் திறனால் அது சாத்தியமாகியிருக்கிறது. ஏற்கெனவே பார்த்த கதைதானே என ரசிகர்கள் இந்தக் கதையை ஒதுக்குவதில்லை என்பதற்கு வெளியாகியிருக்கும் பல மெக்பெத்கள் சான்றுகள்.
அதே எதிர்பார்ப்புடன்தான் இப்போது அவர்கள் இந்த மெக்பெத்துக்கும் காத்திருக்கிறார்கள். குருதியின் சேற்றில் கால் பதித்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் இந்த மெக்பெத், கத்தியின்றி ரத்தமின்றி அகிம்சை வழியில் விடுதலை வாங்கிக்கொடுத்த காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று இங்கிலாந்தில் வெளியாகப்போகிறது என்பது ஒரு முரண்நகையே. அமெரிக்காவில் டிசம்பர் மாதம்தான் திரைக்கு வரவிருக்கிறது.

செப்டம்பர் 25 தி இந்து நாளிதழில் வெளியானது

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்