இந்த வலைப்பதிவில் தேடு

அண்ணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அண்ணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, பிப்ரவரி 24, 2019

சர்வதேசத் தாய்மொழி நாள் பிப்ரவரி 21


மொழிரீதியான பன்மைத்துவத்தை மேம்படுத்தவும், பல்மொழிவழிக் கல்விக்காகவும் ஆண்டுதோறும் சர்வதேச தாய்மொழி நாள் பிப்ரவரி 21 அன்று கொண்டாடப்படுகிறது. 2019-ம் ஆண்டைத் தொல்மொழிகளுக்கான சர்வதேச ஆண்டாக ஐநா அறிவித்துள்ளது. தாய்மொழியின் அவசியமும் அருமையும் நமக்கு நன்கு தெரியும்.  ஏனெனில் நாம் நம் தாய்மொழியைக் காப்பாற்றுவதற்காகப் பெரும் போராட்டம் நடத்தி மொழியுணர்வை வெளிப்படுத்தியிருக்கிறோம். முதல் மொழிப் போராட்டம் 1938-ல் தொடங்கி 1940வரை நடைபெற்றிருக்கிறது.  

சென்னை மாகாணத்தின் முதல்வராக 1937-ல் பொறுப்பேற்றுக்கொண்ட ராஜாஜி 1938 ஏப்ரல் 21 அன்று பள்ளிகளில் இந்தி பயிற்று மொழி என்னும் ஆணையைப் பிறப்பித்தார். இதை அடுத்து தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் இந்த ஆணைக்கு எதிராகவும் இந்தித் திணிப்பு, இந்தி ஆதிக்கம் ஆகியவற்றை எதிர்த்தும் பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நடராஜன் (1939 ஜனவரி 15 அன்றும்), தாளமுத்து (1939 மார்ச் 11 அன்றும்) ஆகிய இருவர் உயிர் தியாகம் செய்தார்கள். இத்தகைய போராட்டத்தின் பயனாக, சென்னை மாகாண அரசு 1940 பிப்ரவரி 21 அன்று பள்ளிகளில் இந்தி பயிற்றுமொழி என்னும் ஆணையைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. 

இந்த பிப்ரவரி 21தான் சர்வதேசத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், அது கொண்டாடப்படுவதற்கான காரணம் நமது மொழிப் போர் அல்ல. அது வேறொரு வரலாற்றைக் குறிக்கிறது. வங்க தேசத்தில் தங்கள் மொழிக்காகப் போராடி உயிர்நீத்த வங்காளிகளை நினைவுகூரும் வகையிலேயே சர்வதேசத் தாய்மொழி நாளாக பிப்ரவரி 21 கொண்டாடப்படுகிறது.

மேற்கு பாகிஸ்தானில் ஆட்சிமொழியாக இருந்த உருது 1948-ல் மொத்த நாட்டுக்குமான ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கிழக்கு பாகிஸ்தானின் (இப்போதைய வங்க தேசம்) பெரும்பான்மையான மக்களால் வங்க மொழியே பேசப்பட்டது என்பதால் இந்த அறிவிப்பு பலத்த எதிர்ப்பைச் சந்தித்தது. இதையடுத்து பெரிய போராட்டம் வெடித்தது. தாக்கா பல்கலைக் கழக மாணவர்களும் தாக்கா மருத்துவக் கல்லூரி மாணவர்களும் 1952 பிப்ரவரி 21 அன்று நடத்திய போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். இந்த நாளை நினைவுகூரும் வகையில் பின்னர் வங்க தேசம் ஆண்டுதோறும் மொழி இயக்க நாளைக் கொண்டாடியது. இந்த நாளை அங்கீகரிக்கும் வகையில் ஐநாவின் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ 1999-ல் பிப்ரவரி 21-ஐ மொழிரீதியான பன்மைத்துவத்தைக் கொண்டாடுவகையில் விடுமுறை நாளாக அறிவித்தது. இந்த நாள்தான் சர்வதேசத் தாய்மொழி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 


நமது தாய்மொழியாம் தமிழைக் காக்க அடுத்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1965-ல் தொடங்கி நடைபெற்றது. இந்தப் போராட்டம் ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே விளங்கும் என்பதை எதிர்த்தது. 1950-ம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பு அமலுக்குவந்தபோது 15 ஆண்டுகளுக்கு மட்டுமே ஆட்சிமொழியாக இந்தியுடன் ஆங்கிலம் இருக்கும் என்றும் அதன்பிறகு இந்தி மட்டுமே ஆட்சிமொழியாக நீடிக்கும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது. இதையொட்டியே 1965 ஜனவரி 25 முதல் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஓராண்டுக்கும் முன்பே, 1964 ஜனவரி 25 அன்றே சின்னசாமி என்னும் மொழிப்போர் வீரர் இந்தியின் ஆதிக்கத்தை அகற்றக் கோரி திருச்சியில் உயிரை மாய்த்துக்கொண்டார். அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் சாரங்கபாணியும் தாய்மொழி தமிழுக்காகத் தன்னுயிரைத் தந்தார். இது போக இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 

1968-ம் ஆண்டு சட்டப் பேரவையில் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்படுவது குறித்துக் குறிப்பிட்டுப் பேசும்போது ”இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் தமிழ் ஆட்சிமொழியாகவும், பயிற்றுமொழியாகவும் ஆக்கப்படும்” என உறுதியளித்தார்.  இதனாலேயே அடுத்து 1969-ல் முதல்வர் பொறுப்புக்கு வந்த மு.கருணாநிதி கல்லூரிக் கல்வி வரை தமிழ் பயிற்று மொழி என்று அறிவித்தார். கோவை அரசுக் கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் பயிற்று மொழி என்பது முதன்முதலில் நடைமுறையானது. இன்னும் உலகில் 40 சதவீத மக்கள் தாங்கள் பேசும் புரிந்துகொள்ளும் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்க இயலாத நிலையிலேயே உள்ளனர் என்பதே உண்மை.


மொழி என்பது மனிதர்களின் கல்வி, மேம்பாட்டுக்கு உதவும் தகவல் தொடர்புக் கருவி மாத்திரமல்ல அது பண்பாட்டு அடையாளம். உலகெங்கும் அடையாளம் காணப்பட்டிருக்கும் சுமார் 6,000 மொழிகளிலும் 43 சதவீத மொழிகள் அழியும் நிலையிலுள்ளன. இவற்றில் பல மொழிகளைப் பேசுவோரின் எண்ணிக்கை வெறும் ஆயிரத்துக்குள்ளேயே இருக்கும். சில நூறு மொழிகள் மாத்திரமே பொதுமக்கள் பயன்பாட்டிலும் கல்வியைப் பயிற்றுவிப்பதிலும் வழக்கிலுள்ளது. அதிலும் நூற்றுக்கும் குறைவான மொழிகளே நமது டிஜிட்டல் உலகில் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சூழலில் நமது மொழி குறித்து நாம் எவ்வளவு கவனம் கொள்ள வேண்டும் என்பதே இந்த நாள் நமக்குத் தரும் பாடம்.

சனி, செப்டம்பர் 15, 2018

அண்ணா எனும் திராவிடப் பேரறிஞர்


பெரியாரும் அண்ணாவும்

தமிழர்களால் அண்ணா என அன்போடு அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாத்துரை 1909ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 அன்று காஞ்சிபுரத்தில் பிறந்தார். ஆய்த எழுத்தைக் கொண்ட தமிழ் மொழியை ஆயுதமாகப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக மற்றும் அரசியல் விடுதலைக்கு பாடுபட்டவர் அறிஞர் அண்ணா. ஏழை எளியவர்களின் நலம் காக்க பாடுபட்டதாலேயே மக்கள் அவர் பெயரில் உள்ள துரையை அகற்றி விட்டு அண்ணா என்றே பிரியத்துடன் அழைக்கின்றனர்.

ண்ணாவுக்கென்று பெரிய குலப்பெருமை எதுவுமில்லை. ஆனாலும் தமிழ்நாட்டில் வர் புகழைப்பாடாத அரசியல் கட்சிகளோ தனிமனிதர்களோ ல்லை. அறிஞர் அண்ணா தம்மை நீதிக்கட்சிக்காரர் ஆகவும் சுயமரியாதை இயக்கத்தினராகவுமே காட்டிக்கொண்டார். நீதிக்கட்சி பார்ப்பனர் அல்லாதாரின் அரசியல் உரிமையை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்டது. தமிழ்ச் சமுதாயத்தில் பார்ப்பனர்களுடைய ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகப் பெரியார் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கினார்.

அண்ணாசாலை அண்ணாசிலை

அறிஞர் அண்ணா கல்லூரி நாள்களிலேயே எழுதத் தொடங்கினார். என்றாலும் விடுதலை பத்திரிகையில் அவர் எழுதத் தொடங்கியதற்குப் பிறகு தான் அவரது கருத்தின் வெளிச்சம் தமிழகத்தில் சுடர்விட்டது. 'விடுதலை'யில் எழுதுவதற்கு முன்பாக அவர் மேயர் பாசுதேவ் நடத்திய 'பாலபாரதி'யிலும், காஞ்சி மணி மொழியார் நடத்திய 'நவயுக'த்திலும் எழுதியிருந்தார். 'ஆனந்தவிகட'னில் அவரது ஒரு சிறுகதையும் வெளியாகி இருந்தது. இவையெல்லாம் அவர் எழுத்தின் முழுப் பரிமாணத்தை வெளியில் கொண்டுவர அடிப்படையாய் அமைந்தன.

எழுதுவது போலவே அவர் மேடையில் பேசினார். பேச்சில் ஒரு 'சங்கீத லயம்' இருந்தது. அவர் படித்ததையெல்லாம் பேசுவதில்லை. தேவையானதை மட்டுமே பேசுவார். இன்னும் பேசமாட்டாரா என்று எண்ணும்போது அவர் பேச்சை முடித்து விடுவார். அதுதான் அண்ணா. அதுதான் அவரது சிறப்பும். காரம் மிக்க பேச்சும் சாரம் மிக்க எழுத்தும் அண்ணாவின் தனிப்பெருமைகள். 

அவர் தொடங்கி நடத்திய வார ஏடுகளான 'திராவிடநாடு' இதழிலும், 'காஞ்சி' இதழிலும் கட்சியினரோடு தொடர்புகொள்ள 'தம்பிக்குக் கடிதம்' எழுதினார். இப்படி எழுதப்பட்ட மொத்த கடிதங்களின் எண்ணிக்கை மட்டும் 290.

அண்ணாவும் கலைஞரும்

ண்ணா பொதுவாழ்க்கைக்கு, திருப்பூரில் 1934இல் நடைபெற்ற செங்குந்தர் 2 ஆவது வாலிபர் மாநாட்டில்தான் அறிமுகமானார். அங்கேதான் அவர் பெரியாரை முதன்முதலில் சந்தித்தார். சுமார் 35 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கையில் அறிஞர் அண்ணா தமிழகத்து அரசியலை அடியோடு மாற்றிக்காட்டினார். எதிர்க்க ஆளே இல்லை என்ற நிலையில் இருந்த காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் அடையாளம் தெரியாத ஒன்றாக மாற்றியதில் அண்ணாவின் பங்கு முக்கியமானது.

1937ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சித் தோற்று காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. இராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமர் ஆனார். அவர் இந்தியை விருப்பப் பாடமாகப் பள்ளிகளில் கொண்டுவந்தார். இதனால் முதல் இந்தி எதிர்ப்புப் போர் 1937 மற்றும் 1938 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டது. தேர்தலில் தோற்றிருந்த நீதிக்கட்சிக்கு இப்போராட்டம் புத்துணர்ச்சி அளித்தது. இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அறிஞர் அண்ணாவுக்கு நான்கு மாதங்கள் சிறை தண்டனை கிடைத்தது. போராட்டத்திலோ மறியலிலோ கலந்துகொள்ளாத அண்ணா கைதுசெய்யப்பட்டார். ஏன்? சென்னை கதீட்ரல் சாலையில் இந்தி திணிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் அவர் நிகழ்த்திய  அனல் தெறித்த பேச்சுக்காக.

மேடையில் அண்ணா

நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைக்கப்பட்டுத் திராவிடர் கழகமாக 1944இல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அண்ணா திராவிடர் கழகத்தை அரசியல் கட்சியாக மாற்ற நினைத்தார்; பெரியார்க்கு அதில் விருப்பம் இல்லை. இதன் விளைவால்தான் தி.மு.. உதயமாகியது. 1949இல் அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தார். உடனடியாகத் தேர்தலில் அவர் போட்டியிட விரும்பவில்லை. அறிஞர் அண்ணா அவசரப்படவில்லை. தனிநாடு கோரிக்கையை முன்வைத்து 1957 தேர்தலில் திமுக போட்டியிட்டு 15 இடங்களை வென்றது. 1962 தேர்தலில் திமுக சார்பாக 50 பேர் வெற்றி பெற்றனர்.

அண்ணாவின் திமுகவுக்குப் பலம் பெருகியது; மக்கள் செல்வாக்கு கூடியது. 1966இல் இல்லஸ்டிரேடட் வீக்லியில் அண்ணாவின் பேட்டி வெளியானது.தன் முன்னுரையில், உலகப் பந்தில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழர்களின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பார்" என்று குறிப்பிட்டது இல்லஸ்டிரேட்ட் வீக்லி. அண்ணாவின் பெருமைக்கு பெருமை சேர்த்தது அந்தப் பத்திரிகை.

அறிஞர் அண்ணா புத்தகங்ளை மிக வேகமாகப் படிக்கக் கூடியவர். அவரது மரண படுக்கையில்கூட 'மாஸ்டர் கிரிஸ்டியன்' எனும் ஆங்கில நாவலைப் படித்துக்கொண்டிருந்தவர். இதன் தமிழ் மொழி பெயர்ப்பை, 'புரட்சித்துறவி' எனும் தலைப்பில் குமுதம் பத்திரிகை, அண்ணா மரணமடைந்த சில நாள்களுக்குப் பிறகு வெளியிட்டது.

அண்ணா முதல்வராக

ஏழை எளியவர்களை முன்னேற்றுவதும் தமது மொழி, இனத்திற்கு தனி அடையாளம் காண்பதுவுமே அவரது அரசியல் குறிக்கோளாக இருந்தது. இதனால்தான் தமிழக ஆட்சியை மக்கள் மனமுவந்து அண்ணாவிடம் தந்தனர். 9 பேர் கொண்ட கச்சிதமான அமைச்சரவை 1967 மார்ச் 6ஆம் தேதி அண்ணாவின் தலைமையில் பொறுப்பேற்றுக்கொண்டது. அறிஞர் அண்ணா தமது ஆட்சிக் காலத்தில் மூன்று சாதனைகளைச் செய்தார். தமிழ்நாடு எனப் பெயர் மாற்றினார்; இரு மொழிக் கொள்கையைச் சட்டமாக்கினார்; சுயமரியாதைத் திருமணம் செல்லுபடி ஆகும் விதத்தில் சட்டத் திருத்தம் மேற்கொண்டார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சென்னை அடையாறு மருத்துவமனையில். 3-02-1969ஆம் தேதி இரவு 12:22 மணிக்கு மரணமடைந்தார். அவரின் இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜிடிவியில் பணியாற்றியபோது, 2012ஆம் ஆண்டில் அண்ணா பிறந்தநாளுக்காக எழுதியது. 

திங்கள், நவம்பர் 23, 2015

பொன்விழா கொண்டாடும் சுரங்கப் பாதை

சுரங்கப் பாதைகள் மட்டும் இல்லாவிட்டால் பரபரப்பான சென்னையில் சாலைகளைப் பாதசாரிகள் கடப்பதைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாது. அதுவும் அண்ணாசாலை போன்ற, வாகனங்கள் எப்போதும் சீறிப் பாய்ந்துகொண்டிருக்கும் ஒரு சாலையின் நிலையை நினைத்தாலே கதி கலங்குகிறது. அப்படியொரு இடத்தில் சுமார் ஐம்பது ஆண்டுகளாக சேவையாற்றிவருகிறது சுரங்கப்பாதை ஒன்று.

அது, எல்லிஸ் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை ஆகிய மூன்றும் சந்திக்கும் இடத்தில் உள்ள ரவுண்டானா சுரங்கப் பாதை. நெடுஞ்சாலைத் துறையினரின் பதிவேடுகளில் ‘ரவுண்டானா சுரங்கப் பாதை’ என்னும் இந்தப் பெயரால்தான் இந்தச் சுரங்கப் பாதை குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏனெனில் இந்தச் சுரங்கப் பாதை இருக்கும் இடத்தில் இதற்கு முன்பு ரவுண்டானா இருந்தது. மேலும் இதன் அருகில் ரவுண்டானா ஐலண்ட் என்னும் கட்டிடமும் இருந்திருக்கிறது.

சுமார் 25 கார்களை ஒரே நேரத்தில் நிறுத்தும் அளவுக்கு இடம் கொண்டிருந்திருக்கிறது இந்தக் கட்டிடம். இது இருந்த இடத்தில்தான் இப்போது இந்தச் சுரங்கப் பாதை இயங்கிவருகிறது எனச் சொல்லப்படுகிறது.

அப்போது அண்ணாசாலையில் இருந்த எல்ஃபின்ஸ்டோன் தியேட்டருக்கு வருபவர்கள் படம் பார்த்துவிட்டு ரவுண்டானா ஐலண்டில் அமைந்திருந்த ஜாஃபர்ஸ் ஐஸ்கிரீம் சென்டருக்கு வந்து செல்வார்களாம். இந்த தியேட்டர் 1970-கள் வரை செயல்பட்டிருக்கிறது. பின்னர் 1979-ல் இது ரகேஜா வணிக வளாகமாக மாறிவிட்டது. இது ரிச்சி தெருவின் ஒரு பகுதியாக மாறியிருக்கிறது. இந்த தியேட்டரில் பிரபல மலையாளப் படம் செம்மீன் ஓராண்டு காலம் வரை ஓடியிருக்கிறது.

இவ்வளவு பெருமைமிக்க இந்த ரவுண்டானாவில் பல திரைப்படக் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. எண்பதுகளில் வெளியான படம் முதல் இன்று வெளியாகும் படம் வரை அநேகப் படங்களில் இடம்பெற்றிருக்கிறது இந்த ரவுண்டானா சுரங்கப் பாதை. சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘பிசாசு’ படத்தின் பாடல் காட்சி இந்த சுரங்கப்பாதையில்தான் படமாக்கப்பட்டது. ஜெய் நடிப்பில் வெளியான ‘வலியவன்’ படத்திலும் இந்தச் சுரங்கப்பாதை இடம்பெற்றிருக்கும்.

இந்தச் சுரங்கப் பாதையை உருவாக்கும் பணி 1965-ம் ஆண்டில் தொடங்கப்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகள் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடந்திருக்கின்றன. அதன் பிறகு பணிகள் 1967-ம் நிறைவுபெற்றிருக்கிறது. அந்த ஆண்டிலேயே மக்களின் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. இது இந்தச் சுரங்கப்பாதைக்குப் பொன்விழா ஆண்டு. இந்தச் சுரங்கப் பாதையை அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் திறந்துவைத்திருக்கிறார். இப்போது எல்லீஸ் சாலையிலிருந்து வருபவர்கள் வாலாஜா சாலையைக் கடக்க வேண்டும் என்றாலும், அண்ணா சாலைக்குச் செல்ல வேண்டும் என்றாலும் இந்தப் பாதையைத்தான் பயன்படுத்த வேண்டும். மிகவும் பெரிய சுரங்கப் பாதையான இதில் தினமும் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சென்றுவருகிறார்கள்.

நவம்பர் 21 தி இந்து நாளிதழில் வெளியானது

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்