ஜனவரி 1
டிசம்பர் 31ஆம் நாளுக்கு மறுநாள் பிறந்த காரணத்தாலேயே இந்த நாளுக்குச் சிறப்பளித்துவிடுவது ஒருவகையில். இந்த நாளின் ஆதிக்கத்தை ஆமோதிக்கும் ஆபத்துக் கொண்டது என்பதுடன் பிறப்பு காரணமான உயர்வுக்கும் வழிவகுத்துவிடும் என்பதால் அதை ஒத்துக்கொள்ளும் விருப்பமின்றி இந்த நாளை இதற்கு அடுத்த ஒரு நாள்போல் இயல்பான ஒன்றாகக் கருதவே எத்தனிக்கும் மனத்தை ஆற்றுப்படுத்தி, இல்லையில்லை இந்த நாள் பிறநாள்களைவிடச் சற்றுக் கூடுதலான முக்கியத்துவம் கொண்டதுதான் என்பதற்குத் தகுந்த சான்றளித்து, இப்படியொரு செய்தியைக் கவனிக்காமல் இருந்துவிட்டோமே என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதில் யாராவது ஒருவர் வெற்றிபெற்றுவிட்டால் மாத்திரமே அவனைப் பொறுத்தவரை இந்த நாள் சிறப்புக்குரியதாகுமே ஒழிய, மற்றபடி இந்த நாளும் நேற்றைப் போன்றதன்றிச் சிறப்புக்குரியதன்று என்பதே அவன் அனுமானம் என்று நீட்டி முழக்காமல் எல்லோரையும் போல் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் என்றே சொல்லியிருந்தால் மக்கள் நீதி மய்யத்தில் அவன் சேர்ந்ததற்கும் கமலைத் தலைவனாக ஏற்றுக்கொண்டதற்கும் என்னதான் பொருளிருக்கும்?
🙏
புத்தாண்டு பலன் கூறும் சோதிடர்கள் முகத்தில் உற்சாகத்தை மீறிய கலக்கம் தென்படுகிறது. ஷெல்வீ எஃபெக்டோ!
🙏
ஜனவரி 7
நண்பர் ஒருவர் பேசினார். நெல்லிக்கனி எப்படியிருந்தது என்றார்?
என்ன தெரியாததுபோல் கேட்கிறாய் உனக்கு அனுப்பிவைத்தேனே?
நீண்ட நேரம் வண்டிக்காரன் உன் வீட்டு வாசலிலே நின்றான். நீயும் வந்து சென்றாய். எனவே, அவனது வண்டியில் அனுப்பிய நெல்லிக்கனியை எடுத்திருப்பாய் என்றுதான் நினைத்தேன். நீ சொல்வதைப் பார்த்தால் அதை நீ கவனிக்கவேயில்லைபோல.
சரி விடு அடுத்த முறை நானே உன்னிடம் வந்து வாங்கிக்கொள்கிறேன்.
இல்லையப்பா அந்த நெல்லிக்கனி மிக அரிதானது. அப்படியொரு நெல்லிக்கனி அபூர்வமாகத்தான் கிடைக்கும். அதனால்தான் அதிகப் பிரியத்துடன் உனக்குத் தந்தேன் இப்படி அசட்டையாக இருந்துவிட்டாயே என்று கடிந்துகொண்டார்.
சட்டென்று அவனுக்குள் ஒரு மின்னல் வெட்டியது.
அந்த சிவப்பு கலர் பார்சலிலா, அதில்கூட என் பெயர் முகவரி எல்லாவற்றையும் மிகத் தெளிவாக எழுதியிருந்தாயே அதில்தான் நெல்லிக்கனியைப் பொதிந்திருந்தாயா?
ஆமாம். அதே பார்சல்தான். இவ்வளவு தெளிவாகச் சொல்கிறாய். அதை ஏன் எடுக்காமல் விட்டுவிட்டாய்?
நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால், ஒரு குப்பை வண்டியில் அப்படியொரு பார்சலைப் பார்த்ததும் எனக்கு எடுக்கவா வேண்டாமா என்று தோன்றியது.
நான் வெளியில் வரவும் அந்த வண்டிதான் வந்தது. உன் வீட்டுக்கு வருவதாகச் சொன்னான். எந்த வண்டி என்றால் என்ன நல்ல பார்சலில்தானே அனுப்புகிறோம் என்று அப்படியே அதில் போட்டனுப்பினேன். இப்படிக் கோட்டைவிட்டுவிட்டாயே?
நண்பர் வருத்தத்துடன் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
அவன் இப்போது அமர்ந்து அந்த நிகழ்வு குறித்து யோசித்துப் பார்த்தான். அவ்வளவு அழகாகப் பொதியப்பட்ட பார்சலில் தன் பெயர் இருந்தும் அதை ஏன் தன்னால் எடுக்க முடியாமல் போனது என்று யோசித்தான். குப்பை வண்டி என்பது மட்டுமே அவன் கண்ணை மறைத்திருக்கிறது. ஏனெனில், அவன் இதுவரை குப்பை வண்டியில் பயன்படாத பொருளை எறிந்திருக்கிறானே தவிர ஒருபோதும் அதில் பயன்படும் பொருளைப் போட்டதில்லை. குப்பை வண்டியில் இப்படி ஒருவருக்கொருவர் பயன்படும் பொருளைப் பரிமாறிக்கொள்ளக் கூடாது என்று சட்டம் ஒன்றுமில்லையே என்று நண்பன் கேட்டானே அது சரிதானே. அப்படியிருந்தும் அந்த பார்சலை எடுத்துக்கொள்ள முடியாமல் போனால், பிழை தனதல்லவா என்று அவன் நினைத்துக்கொண்டான்.
குப்பை வண்டி என்றால் குப்பை வண்டி மட்டும்தானே என்றால் இல்லை. அதே போல் தான் நெல்லிக்கனி என்றாலும் நெல்லிக்கனி மாத்திரமில்லை. கணிதத்தில் கண்டுபிடிக்க வேண்டிய இலக்கத்துக்குப் பதில் எக்ஸ் என்க என்று படித்திருப்போம். சரி, இப்போது குப்பை வண்டி என்றால் என்ன, நெல்லிக்கனி என்றால் என்ன என்பதற்கு விடை காண வேண்டும் என்று தோன்றுகிறதா? விடை காணுங்கள் அது உங்கள் பாதை. அதில் பதிவெழுதியவன் குறுக்கிட இயலாது. உங்கள் பாதையில் பயணம் தொடரட்டும். பதிவெழுதிய அவன் அதிலிருந்து விலகிக்கொள்கிறான்.
🙏
ஜனவரி 8
வாழ்க்கையைப் பராக்குப் பார்த்துக்கொண்டே இருக்கிறான். என்னதான் கிடைக்கிறதோ?
🙏
சில பதிவுகளுக்கு விருப்பக் குறியிட்டு நகர்கிறான் படிக்க மறந்துவிடுகிறான்
சில பதிவுகளைப் படிக்கிறான் விருப்பக் குறியிட மறக்கிறான்
பதிவிட்டவன் எதைக் கணக்கிலெடுப்பான் விருப்பக் குறியையா படித்ததையா
படிக்கப்படுவதை விரும்புபவன் விருப்பக் குறியை விட்டுவிட வேண்டும்
விருப்பக் குறியை விரும்புவன் படிக்கப்படுவது பற்றிய கவலையைத் துறக்க வேண்டும் எனச் சொல்லிவிடலாம் எளிதாக
ஆனால், படிக்கப்படுவதை விரும்புவதைப் போல் விருப்பக்குறியையும் விரும்பத்தானே செய்வான் பதிவிட்டவன்?
விருப்பக் குறிகளை எண்ணிப் படித்தவர்களைக் கணக்கிடுதல் எப்படிச் சரியாக இருக்காதோ அப்படியே விருப்பக் குறியில்லை என்றாலும் ஒருவரும் படிக்கவில்லை என்றும் சொல்ல முடியாதுதானே?
சரி,
படித்தவர்களை எப்படித்தான் அடையாளம் காண்பது?
படித்தவன் படிக்கவில்லை என்று சொன்னாலோ
படிக்காதவன் படித்துவிட்டேன் என்று சொன்னாலோ
நீ என்ன செய்ய முடியும்?
அதுவும் சரிதான்.
எனில், என்னதான் செய்வது,
விருப்பக் குறியிடுவதா, படிப்பதா?
படித்துவிட்டு விருப்பக் குறியிடுவதா
விருப்பக் குறியிட்டுவிட்டுப் படிப்பதா?
எப்போதுமே அவனுக்குக் குழப்பம்தான்.
இந்தக் குழப்பம் மிகவே
சில பதிவுகளுக்கு விருப்பக் குறியிட்டு நகர்கிறான் படிக்க மறந்துவிடுகிறான்
சில பதிவுகளைப் படிக்கிறான் விருப்பக் குறியிட மறக்கிறான்
🙏
நடந்தபோது நரகம்
கடந்தபின்னே சொர்க்கம்
இதென்ன மாயம்?
🙏
ஜனவரி 10
நண்பர் ஒருவர் பேசினார்.
எப்படியும் தோல்விதான் எனத் தெரிந்தும் ஏன் போராடுகிறார்கள், என்று கேட்டார்.
எப்படியும் சாகத்தான் போகிறோம் என்று தெரிந்தும் வாழத்தானே செய்கிறோம் என்றான் அவன்.
நண்பர் முகம் சுருங்கிவிட்டார்.
அவனால் என்ன செய்ய முடியும்?
🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக