இங்கிலாந்தில் வாழும் ஆர். பத்மநாப ஐயரின் ஊக்கத்தின் பேரில் அம்ஷன் குமார் உருவாக்கிய படைப்பே யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி எனும் ஆவணப்படம். தஞ்சாவூர்ப் பகுதியைப் பூர்விகமாகக் கொண்டாலும் இலங்கையில் இணுவில் என்னுமிடத்தில் பிறந்து, அளவெட்டியில் வாழ்ந்த தவில் இசைக் கலைஞர் யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி. பிரபல நடிகரோ அரசியல் தலைவரோ பெறுவதைப் போன்ற வெகு மக்கள் அபிமானத்தைப் பெற்ற கலைஞர் அவர். அப்படியான கலைஞர் பற்றிய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை விவரிக்கும் ஆவணங்கள் மிகவும் சொற்பமே.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா எனப் பல நாடுகளில் வாழும் இசைக் கலைஞர்கள், இசை ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், தெட்சிணாமூர்த்தியின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரிடம் தெட்சிணாமூர்த்தி பற்றிய தகவல்களைப் பெற்று, அதன் மூலம் அந்த இசைக் கலைஞர் பற்றிய முழுச் சித்திரத்தைத் தீட்டியிருக்கும் பாங்கு தனித்துவமிக்கதாக உள்ளது. தன்னிடம் கிடைத்த மிகச் சில ஆவணங்களின் வழிகாட்டுதலோடு மிகவும் கொண்டாடப்பட்ட இசைக் கலைஞரை உலகுக்குப் பிரபலப்படுத்தும் வகையிலான ஆவணப் படத்தைக் கர்ம சிரத்தையாக எடுத்து வெளியிட்டிருக்கும் அம்ஷனுக்கு அதற்கான தேசிய விருது கிடைத்திருப்பது சரியான சமயத்தில் கிடைத்திருக்கும் தகுந்த அங்கீகாரமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக