இந்த வலைப்பதிவில் தேடு

விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூன் 09, 2021

வெள்ளச்சி காவியத்துக்கு நோபெல் விருது

ஓவியம்: வெங்கி

‘அய்யோ போச்சே போச்சே இந்த வருஷமும் போச்சே… கொற்றவையே என்னைப் பெற்றவளே கண் திறந்து பாராயோ கைகொடுக்க மாட்டாயோ’ என்று வாய் வழியே சாதாரணத் தமிழில் புலம்பினான் வெள்ளைச்சாமி. யாரோ வெளிநாட்டில் பாட்டெழுதும் ஒருத்தருக்கு நோபெல் பரிசு கொடுத்திருக்காங்கன்னு கேட்டதும் நம்ம வெள்ளச்சாமிக்குப் பயங்கர கஷ்டமாயிருச்சு. சினிமாப் பாட்டு எழுதும் தனக்கு நோபெல் கிடைக்கும் என்ற நம்பிக்கை இந்த ஆண்டும் பொய்த்துவிட்டதே என்று ஆதங்கப்பட்டான்.

சமீபத்தில் அவன் எழுதிய, ‘ஆளைப் பார்த்தா ஆப்பிரிக்கா வாயைத் தொறந்தா அமெரிக்கா…’ பட்டிதொட்டியெங்கும் சக்கைப்போடு போடுகிறது. சாகித்ய அகாடெமி விருது வாங்குவதற்காக எவ்வளவோ முயன்றும் வெள்ளச்சாமிக்கு அது கிடைக்கவே இல்லை. அதன் பரிந்துரைக் குழுவினரின் கால்களை எல்லாம் தமிழ்க் கவிதையால் அர்ச்சித்துப் பார்த்தான் வெள்ளச்சாமி ஆனாலும் அகாடெமியின் கதவுகள் அக்கடா என்று இருந்ததே ஒழிய இவனுக்காகத் திறக்கவே இல்லை.

வெள்ளயின் திரைப்பாடல்கள் திரும்பிய பக்கமெல்லாம் ஒலித்தன. ஆனாலும் என்ன பண்ண தன்னை விருதுக் குழுக்கள் புறக்கணிக்கின்றனவே என அழுது புலம்பினான். அவனுடைய முதல் பாடல்:

மண் வாசம் வருதே…

மழை பொழியும் போதில்

மண் வாசம் வருதே…

வானம் அது தூற்றுகிறது

பூமியதைக் குளிப்பாட்டுகிறது…

அவன் மனைவியைப் பிரசவ மருத்துவமனையில் சேர்த்துவிட்டுப் பாட்டெழுதச் சென்றான் வெள்ளை. அவன் மனமெல்லாம் மனைவியின் கண்ணீர் நிரம்பி வழிகிறது. பாட்டோ மழை பொழியும் சூழலை வருணிக்க வேண்டியதிருக்கிறது. இவன் கண்களில் கண்ணீர்… வானத்தில் வழியுது மழை நீர். இசையமைப்பாளர் மெட்டை அமைத்துவிட்டு வெள்ளையை இறுமாப்புடன் பார்க்கிறார். வெள்ளை மவுனமாகத் தன் கிராப்புத் தலையைத் தடவிவிட்டுக்கொள்கிறான். சட்டென இரும்புக் காட்டுக்குள் கரும்புப் பூ ஒன்று பூத்ததைப் போல், மண் வாசம் வருதே… என்ற பல்லவியைப் பாட்டாகவே பாடிவிட்டான். இதென்ன நயாகராவில் சர்க்கரைப் பாகு வடிகிறது! நாளந்தாவில் பூக்களைத் தேன் வந்து தொடுகிறது என்று தோன்றியது இசையமைப்பாளருக்கு.

அதுவரை அமர்ந்திருந்த இசையமைப்பாளர் மிகச் சரியாக ஏழு அடிக்குத் துள்ளிக் குதித்து அவனைப் பாராட்டிவிட்டார். தன் மனைவி மீது கொண்ட பாசம் காரணமாக அவன், அவளுடைய பெயரான மண் கனியின் முதல் சொல்லையே தன் முதல் பாட்டின் முதல் சீராக்கினான். சீர் கொண்டு வந்த மனையாளுக்கு இப்படித்தான் அவன் சீர் செய்தான். தான் ஒரு ஏழைப் புலவன் என்பதில் வெள்ளைக்கு எப்போதும் தனிப் பெருமை. யாருக்கும் கொடுக்க என்னிடம் என்ன இருக்கிறது என் தமிழைத் தவிர என்று யார் வந்து என்ன தந்தாலும் பதிலுக்குக் கவிதை பாடி அனுப்பிவிடுவான்.

கள்ளிக் காட்டில் சுள்ளி பொறுக்கிய காலத்திலேயே வெள்ளைக்குத் தமிழ் மீது தீராக் காதல். காடுகரையெல்லாம் தமிழால் அழகு செய்து பார்ப்பான். மண் வாசம் வீசும் சொற்களைத் தந்துவிட வேண்டும் என்பதற்காகவே அவன் களிமண்ணைக் கரைத்தே எழுதிவருகிறான். வெறும் களிமண் கம்பீரக் கவிஞன் வெள்ளைச்சாமியின் கை பட்டதும் கற்பூர மணத்தைக் காகிதத்தில் கொட்டும். 12 ஆண்டுகளாக ஒரு பாட்டைப் பையில் மடித்துவைத்திருந்தான் வெள்ளை. புதிதாக வந்த இசையமைப்பாளர் ஒருவர் அதற்குப் பத்தே நிமிடத்தில் மெட்டுப் போட்டார். கொத்துப் பரோட்டாவுக்குக்கூட இதைவிட அதிக நேரமாகுமே என் இளவலே என்னே உன் மகிமை எனக் கண்ணீர் உகுத்து நின்றான் வெள்ளை. அந்தப் பாடல்: பெண்ணுக்குப் பொய் அழகு என்று தொடங்கி சாவுக்கு ஏதழகு என்று முடியும்.

பாட்டுக்கு மெட்டா, மெட்டுக்குப் பாட்டா என்று ஒருமுறை வெள்ளச்சாமியிடம் ஒரு படித்த பத்திரிகையாளர் பதமாகக் கேட்டார். கருங்காட்டில் வெள்ளை முயல் துள்ளியது போல் சிரித்தான் வெள்ளை. இரண்டும் இல்லை தோழா, செக்குக்குப் பாட்டு என்று ஒய்யாராமாய்ச் சொன்னான் அவன்.

தன் கவிதை நூல்களையும், சினிமாப் பாட்டுப் புத்தகங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வெள்ளைச்சாமி எப்படியும் அடுத்த வருடம் நோபெல் வாங்கிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறான். நோபெல் உரையைத் தயாரிக்கும் வேலையைத் தொடங்கிவிட்டான். அத்துடன் ஆஸ்கர் நாயகனிடம் ஒரு பரிந்துரைக் கடிதத்தையும் பெற்றுவிட்டான்.

விருதே விருதே வந்து என் வாசலில் விழாத விருதே

ஏழைப் புலவனின் புலம்பல்

உன் காதில் விழுவில்லையா?

உயிரைக் கரைத்துப் பாடல் புனையும் என்

திறமையை நீ காணவில்லையா?

உண்டென்று சொல்

இல்லை வந்தென்னைக் கொல்

விருதே விருதே வந்து என் வாசலில் விழாத விருதே…

என்பது போன்று ஆயிரம் பாடல்களை ஓரிரவில் எழுதி முடித்து, அதை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நோபெலுக்கு அனுப்பிவிட வேண்டும் என்பதே வெள்ளையின் ஆசை. இல்லையென்றால் வெள்ளச்சி காவியம் படைத்துவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்துவிட்டான். அந்த நாவலை எழுத அமெரிக்காவில் ஓர் ஆண்டு தங்கியிருக்க முடிவுசெய்துவிட்டான் வெள்ளைச்சாமி. அநேகமாக வெள்ளைக்குத்தான் அடுத்த நோபெல் என்பது உறுதி. அதற்குப் பின் ஹாலிவுட்டுக்கும் பாட்டெழுதுவான் வெள்ளை. நினைத்தாலே உடம்பெல்லாம் பூரித்துப்போகிறது!

இந்து தமிழ் திசை நாளிதழின் இளமை புதுமை இணைப்பிதழில் வெளியானது. 

புதன், ஏப்ரல் 13, 2016

திசை மாறும் தேசிய விருதுகள்?

(தி இந்துவில் 2016 ஏப்ரல் 1 அன்று வெளியானது) 

விருதும் சர்ச்சையையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இந்தியத் திரைப்படங்களுக்கான 63-வது தேசிய விருதுகளும் அப்படித்தான். 2015-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் பற்றிய அறிவிப்பு கடந்த 28-ம் தேதியன்று பிற்பகலில் வெளியானது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாகப் பல சர்ச்சையான கருத்துகள் சமூக வலைதளங்களில் உலவ ஆரம்பித்தன. சர்ச்சைக்கு முதலடி எடுத்துக் கொடுத்தது ‘பாகுபலி’. இந்திய அளவில் சிறந்த படத்துக்கான விருது தெலுங்குப் படமான ‘பாகுபலி’க்கு என்ற அறிவிப்பு பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது. சினிமாவைத் தொடர்ந்து கவனிக்கும் பலருக்கும், திரைக்கதையில் பல குறைகளைக் கொண்ட அம்புலிமாமா கதைப் படமான ‘பாகுபலி’க்குச் சிறந்த படத்துக்கான விருதா என்ற வியப்பு மேலிட்டது.

பாகுபலி
இந்த தேசிய விருதுகளில் எந்த சர்ச்சையும் இல்லை என்று பாலிவுட் இயக்குநர் சேகர் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். ஆனால், எப்போதும் போலவே இந்த ஆண்டும் சர்ச்சைகள் தாரளமாகப் புழங்கின. ‘பாகுபலி’யில் வலியுறுத்தப்பட்டிருந்த ராஜ விசுவாசம், பண்டைய சமூக அமைப்பைத் தூக்கிப் பிடித்தல் ஆகியவை காரணமாக மத்திய அரசு விருது அளித்திருக்கிறதா என்னும் சந்தேகத்தைப் பல தரப்பினரும் எழுப்பினர். இதை உறுதிப்படுத்தும் வகையில், எந்த மாநில மொழியுமல்லாத சம்ஸ்கிருத மொழியில் உருவான ‘பிரியமானஸம்’ படத்துக்கும் விருது அளிக்கப்பட்டிருக்கிறது. திரைப்படம் எடுக்கச் சிறந்த மாநிலமென குஜராத்துக்குக் கிடைத்திருக்கும் விருதும் எல்லோரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.

இப்படியான காரணங்களால் காட்டமான கேள்விக் கணைகளும் விமர்சனக் கருத்துகளும் தேர்வுக் குழுவைப் பதம்பார்க்கின்றன. பஞ்சாபைச் சேர்ந்த இயக்குநர் குர்விந்தர் சிங், நல்லறிவு படைத்த தேர்வுக் குழு ‘பாகுபலி’யைச் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்குமா என்ற கடுமையான கேள்வியை எழுப்பியிருக்கிறார். அத்துடன் நிறுத்தவில்லை அவர். இந்த ஆண்டு வழங்கப்பட்ட தேசிய விருதுகள் கேலிக்கூத்து எனவும், மாநில மொழிப் படங்களுக்கு உரிய அங்கீகாரம் மறுக்கப்பட்டிருக்கிறது, பொழுதுபோக்குப் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டுக் கொந்தளித்திருக்கிறார்.

கான் பட விழா உள்ளிட்ட உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட அவர் இயக்கிய ‘சௌதி கூட்’ திரைப்படம் தேசிய அளவில் சிறந்த படம் என்ற விருதுக்கான தகுதியைக் கொண்டிருந்தபோதும் சிறந்த மாநில மொழித் திரைப்படப் பிரிவிலேயே அதற்கு விருது கிடைத்ததைப் பெரும் ஏமாற்றமாகக் கருதுகிறார் அவர். சிறந்த ஜனரஞ்சக படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர் ஆகிய பிரதான விருதுகள் அனைத்தையும் இந்தித் திரையுலகம் தட்டிக்கொண்டு போனதால் மாநில மொழிப் படங்களை உருவாக்குவோர் பலத்த ஏமாற்றமடைந்துள்ளனர் என்பதாகச் செய்திகள் வெளியாகின்றன.

பாஜிராவ் மஸ்தானி
முதன்முறையாகச் சிறந்த இயக்குநர் விருது பெற்றதில் மகிழ்ந்திருக்கும் சஞ்சய் லீலா பன்சாலி, ‘பாஜிராவ் மஸ்தானி’யில் சிறப்பாகப் பங்களித்த தீபிகா படுகோன் அல்லது பிரியங்கா சோப்ராவுக்கு விருது கிடைத்திருக்கலாம் என்பதாகக் கருத்து தெரிவித்திருக்கிறார். அதேபோல் இயக்குநர் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் கடுமையான உழைப்பைத் தந்திருக்கும் விக்ரமுக்கு விருது கிடைக்காதது ஏமாற்றமளிப்பதாக உள்ளது எனத் தமிழ்த் திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், ஒப்பனையால் மட்டுமே தனித்துத் தெரிந்த அந்தக் கதாபாத்திரத்துக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்த்ததே வியப்பானது என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. சர்வதேசக் கவனம் பெற்ற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘மஸான்’ படத்துக்கு இந்திரா காந்தி பெயரிலான சிறந்த புதுமுக இயக்குநர் விருதே கிடைத்திருக்கிறது. விருதுக்குரிய படங்களைத் தேர்வு செய்யும் குழுவினரின் ரசனையைப் பொறுத்தே தேர்வுகள் அமைகின்றன. கடந்த வருடம் நீதியமைப்பைக் கேள்வி கேட்ட துணிச்சல் மிக்க படமான ‘கோர்ட்’டுக்குச் சிறந்த படத்துக்கான விருது கிடைத்தது. இந்த வருடம் பொழுதுபோக்குப் படங்கள் அதிகமான விருதுகளை அள்ளிக் குவித்துள்ளன. விருதுப் படங்களில் கலைத் தன்மை சிறிதேனும் தூக்கலாக இருக்கும் என்பது பொதுவான புரிதல். அப்படியான படங்களை மட்டுமே விருதுக்காக விண்ணப்பிக்கவும் செய்கிறார்கள். ஆனால் அப்படியில்லாமல் ரசிகர்களைக் கற்பனை உலகின் மயக்கத்தில் ஆழ்த்தும் படங்களுக்கு விருதுகளை வழங்கிக் கவுரவிக்கும்போது, கலை தாகத்துடன் படமெடுத்த கலைஞர்கள் மனம் வருந்துவது இயற்கை. ஆனால், கலைப் படங்களுக்கு மட்டுமே விருது வழங்க வேண்டுமா பொழுதுபோக்குப் படங்களுக்கு வழங்கக் கூடாதா என்று மறு தரப்பினர் வாதிட்டால் அதையும் பரிசீலிக்கத்தான் வேண்டும்.

விசாரணை
அறுபதுக்கும் மேற்பட்ட இந்திப் படங்கள், தூங்கா வனம், உத்தம வில்லன், தனி ஒருவன், கிருமி, தாரை தப்பட்டை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்கள், தெலுங்கு மொழிப் படங்கள் பதினொன்று, சம்ஸ்கிருத மொழிப் படங்கள் இரண்டு உள்ளிட்ட 308 படங்கள் விருதுகளுக்காக விண்ணப்பித்திருந்தன. இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குநருமான ரமேஷ் சிப்பி தலைமையிலான பதினோரு பேர் குழுதான் இந்த ஆண்டுக்கான விருதுக்குரிய படங்களைப் பரிந்துரைத்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகச் சிறந்த படத் தொகுப்புக்கான விருதைத் தமிழகம் தட்டிச் சென்றிருக்கிறது. படத் தொகுப்பு உள்ளிட்ட மூன்று விருதுகள் ‘விசாரணை’ படத்துக்குக் கிடைத்திருக்கின்றன. இப்படம் அதற்கான தகுதி கொண்டது என்பதில் சந்தேகமில்லை. ‘ஆடுகளம்’ படத்துக்கு அதிக எண்ணிக்கையிலான விருதுகள் கிடைத்தபோது சில மாற்றுக் கருத்துகள் எழுந்தன. ‘ஆடுகள’த்தின் இயக்குநர் வெற்றி மாறனின் குரு பாலு மகேந்திரா அப்போதைய விருதுக் குழுவில் இருந்தார். இப்போதும் அதேபோல் ஒரு சிக்கல் எழுந்திருக்கிறது. விருதுக் குழுவில் கங்கை அமரன் இடம்பெற்றிருந்த நிலையில், ‘தாரை தப்பட்டை’யில் சிறந்த பின்னணியிசை அமைத்ததற்காக இளையராஜாவுக்கு ஐந்தாம் முறையாகத் தேசிய விருது கிடைத்திருக்கிறது.

சசிகுமார், பாலா, இளையராஜா, வரலட்சுமி
இளையராஜா இசை தொடர்பான எல்லா வித விருதுக்கும் தகுதியானவர், அவரால் விருதுகளுக்குத்தான் பெருமை என அவருடைய ரசிகர்கள் புளகாங்கிதத்துடன் சொல்கிறார்கள். ஆனால், ‘தாரை தப்பட்டை’யில் விருதுபெறும் அளவுக்குச் சிறப்பான பின்னணியிசை அமைக்கப்பட்டிருந்ததா எனக் கேள்வி எழுப்புகிறார்கள் விமர்சகர்கள். ‘தாரை தப்பட்டை’போன்ற மிகச் சாதாரணப் படத்துக்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டிருப்பதால், அவரது ஆயிரமாவது படம் என்ற விளம்பரத்தின் பங்கு விருது வழங்கலில் ஆதிக்கம் செலுத்தியிருக்குமோ என்றும் விமர்சகர்கள் சந்தேகம் கொள்கிறார்கள். இயக்குநர் பாலா படங்கள் தொடர்ந்து ஏதாவது ஒரு விருதைப் பெற்றுவருவதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

சிறந்த கலை மற்றும் பண்பாட்டுப் படம் என்ற பிரிவில் இயக்குநர் அம்ஷன் குமார் இயக்கிய ‘யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி’ என்னும் ஆவணப் படம் தேசிய விருதைப் பெற்றிருக்கிறது. சமூக வலைத் தளங்களில் இந்தச் செய்தி பகிரப்பட்ட அளவுக்கு ஊடகங்களில் பரவலான கவனத்தைப் பெறவில்லை. ஆவணப் படம் தொடர்பான நமது கவனமின்மையையே இது காட்டுகிறது. மேலும், திரைப்படம் குறித்து எழுதித் தள்ளும் தமிழ் மொழியிலிருந்து ஒரு நூல்கூட விருதுக்காக விண்ணப்பிக்கப்படவே இல்லை என்பதுவும் வருத்தமான செய்தி.

ஞாயிறு, ஏப்ரல் 03, 2016

அம்ஷன் குமாருக்கு தேசிய விருது


இங்கிலாந்தில் வாழும் ஆர். பத்மநாப ஐயரின் ஊக்கத்தின் பேரில் அம்ஷன் குமார் உருவாக்கிய படைப்பே யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி எனும் ஆவணப்படம். தஞ்சாவூர்ப் பகுதியைப் பூர்விகமாகக் கொண்டாலும் இலங்கையில் இணுவில் என்னுமிடத்தில் பிறந்து, அளவெட்டியில் வாழ்ந்த தவில் இசைக் கலைஞர் யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி. பிரபல நடிகரோ அரசியல் தலைவரோ பெறுவதைப் போன்ற வெகு மக்கள் அபிமானத்தைப் பெற்ற கலைஞர் அவர். அப்படியான கலைஞர் பற்றிய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை விவரிக்கும் ஆவணங்கள் மிகவும் சொற்பமே.


அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா எனப் பல நாடுகளில் வாழும் இசைக் கலைஞர்கள், இசை ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், தெட்சிணாமூர்த்தியின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரிடம் தெட்சிணாமூர்த்தி பற்றிய தகவல்களைப் பெற்று, அதன் மூலம் அந்த இசைக் கலைஞர் பற்றிய முழுச் சித்திரத்தைத் தீட்டியிருக்கும் பாங்கு தனித்துவமிக்கதாக உள்ளது. தன்னிடம் கிடைத்த மிகச் சில ஆவணங்களின் வழிகாட்டுதலோடு மிகவும் கொண்டாடப்பட்ட இசைக் கலைஞரை உலகுக்குப் பிரபலப்படுத்தும் வகையிலான ஆவணப் படத்தைக் கர்ம சிரத்தையாக எடுத்து வெளியிட்டிருக்கும் அம்ஷனுக்கு அதற்கான தேசிய விருது கிடைத்திருப்பது சரியான சமயத்தில் கிடைத்திருக்கும் தகுந்த அங்கீகாரமே.

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்