(தி இந்துவில் 2016 ஏப்ரல் 8 அன்று வெளியானது)
ஹாலிவுட் பட ரசிகர்களின் விருப்பத்துக்குரிய படங்களில் ஒன்று பென்-ஹர். 1959-ம் ஆண்டில் வெளியாகி உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற படம் இது. ஒரு காவியமாகப் போற்றப்படும் இந்தப் படம், அந்த ஆண்டில் 11 ஆஸ்கர் விருதுகளை அள்ளிச் சென்றது. வசூலிலும் பெரும் சாதனை படைத்தது. இந்தப் படத்துக்கு அடிப்படையான வரலாற்று நாவல் பென்-ஹர்: எ டேல் ஆஃப் த கிறைஸ்ட் (1880). இதை எழுதியவர் லெவ் வாலஸ் என்னும் அமெரிக்க எழுத்தாளர். 19-ம் நூற்றாண்டில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திய கிறிஸ்தவ நூல் இது என்று சொல்லப்படுகிறது. இந்த நாவல் இதுவரை நான்கு முறை படமாக்கப்பட்டிருக்கிறது. ஐந்தாவது முறையாகவும் இதே நாவல் இப்போது ஹாலிவுட்டில் படமாக உருவாகியிருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் படம் வெளியாக உள்ளது.
ரோமைச் சேர்ந்த பால்ய நண்பனால் தவறாகக் கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டு அடிமையாகக் காலங்கழிக்கும் யூத பிரபுவின் கதை இது. அத்தனை துயரங்களையும் பொறுமையுடன் எதிர்கொண்டு தனக்குத் துரோகமிழைத்த நண்பனைப் பழிவாங்க சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறான் ஜூடா பென்ஹர். இந்நிலையில் இவன் நாசரேத்தின் இயேசுவை அடிக்கடி சந்திக்க சந்தர்ப்பம் அமைகிறது. அவருடனான சந்திப்பு ஜூடா பென் ஹர் வாழ்வில் மாற்றத்தை உருவாக்குகிறது. இப்படியாகப் போகும் இந்தப் படத்தின் திரைக்கதையை கெயித் ஆர் க்ளார்க்கும் ஜான் ரிட்லியும் எழுதியிருக்கிறார்கள்.
ஜூடா பென்ஹர் வேடமேற்றிருக்கிறார் ஜேக் ஹஸ்டன் என்னும் ஆங்கில நடிகர். மார்கன் ஃப்ரீமேன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். திமுர் பிக்மாம்பிதவ் என்னும் ரஷ்ய இயக்குநர் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஆலிவர் உட். 3 டியில் தயாராகியிருக்கும் இந்தப் படம் ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் ட்ரீட் என்றும் சொல்லும்படியாக அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்கிறது இதன் டிரெயிலர். பாராமவுண்ட் பிக்சர்ஸ், எம்.ஜி.எம். பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை விநியோகிக்கின்றன. ரசிகர்கள் மனதில் காவியமாக நிலைத்துவிட்ட பென்ஹர் (1959) படத்தை மிஞ்சும் வகையில் இப்படம் இருக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக