இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, ஜூலை 06, 2014

வெள்ளை அடித்தால் குளுமையாகும் கட்டிடம்


கோடைகாலத்தில் மட்டும் வெயில் கொளுத்தும் என்பதெல்லாம் பழங்கதையாகிவிட்டது. பழங்காலத்தில் விதவிதமான கட்டுமான முறையைக் கையாண்டு கட்டிடத்திற்குள் வெம்மையான சூழலைக் குறைத்தார்கள். வீடுகளுக்கெல்லாம் வெள்ளை நிறச் சுண்ணாம்புதான் பூசுவார்கள். அப்போதெல்லாம் வெயில் நேரத்தில் சாதாரண மின்விசிறியைக் கொண்டே வெப்பத்தை விரட்டிவிட முடிந்தது. குளிர்சாதன வசதி என்பதெல்லாம் மிக மிக வசதி படைத்தவர்களால் மட்டுமே ஏற்படுத்திக்கொள்ள முடிந்த விஷயமாக இருந்தது. சாதாரண மனிதர்களின் வசிப்பிடங்களில் அதிக அளவில் குளிர்சாதன வசதி தேவைப்பட்டிருக்கவில்லை. ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல. அடிக்கும் வெயிலை விரட்ட குளிர்சாதன வசதி மிகவும் அவசியம் என்னும் நிலைமை உருவாகிவிட்டது. காரணம் இப்போது நமது கட்டுமான முறையும் மாறிவிட்டது. கான்கிரீட் தவிர்க்க முடியாத கட்டுமான பொருளாகிவிட்டது. கான்கிரீட் கட்டிடங்களில் பகல் முழுவதும் அடிக்கும் வெயில் காரணமான வெப்பம் உள்ளுக்குள்ளேயே தங்கி நள்ளிரவுக்குப் பின்னும் கட்டிடம் தகிக்கிறது. 

நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டேயிருக்கும் வெயிலின் தாக்கத்தைச் சாதாரண மின்விசிறி மூலம் துரத்த முடியவில்லை. மாலை வேளைகளில் கட்டிடங்கள் மீது குடம் குடமாய் நீரை ஊற்றினாலும் கட்டிடத்தின் உள்ளே ஊடுருவும் வெப்பத்தைத் தவிர்க்க முடியவில்லை. வளைகுடா நாடுகள் போல் நமது நகரங்களிலும் கிராமங்களிலும் கூட அனைத்து வசிப்பிடங்களிலும் அலுவலகங்களிலும் வெம்மையை விரட்ட குளிர்சாதன வசதி பொருத்தப்படுவது அவசியம் என்னும் நிலை உருவாகியுள்ளது. ஓஸோன் படலத்தில் விழுந்த ஓட்டை காரணமாக புவியின் வெப்பம் அதிகமாகிறது என்கிறார்கள் நிபுணர்கள். இயற்கையை நம்மால் எளிதில் கட்டுப்படுத்த இயலாது. அதை எதிர்த்து நிற்கும் வழியைக் கண்டுபிடிப்பது மட்டும் தான் நம்மால் முடிந்த செயல். அப்படியானால் வெப்பத்தை எதிர்க்க என்ன வழி? அனைத்துக் கட்டிடங்களிலும் குளிர்சாதன வசதியைப் பொருத்திவிடலாமா? அதுவும் சாத்தியாமானதில்லை. எல்லோருக்கும் அதற்கான பொருளாதார வசதி இடம் கொடுக்காது; மேலும் கிராமங்களில் மின்சாரமே பெரும் பிரச்சினை பிறகெப்படி குளிர்சாதன வசதி உதவும்? எல்லோரும் குளிர்சாதனவசதியைப் பொருத்தினாலும் அதனால் ஏற்படும் விளைவால் சுற்றுச்சூழலும் மாசுபடவே செய்யும். 

ஆக கட்டிடத்திற்குள் வெப்பம் பரவாமல் இருக்கும் மாற்றுவழியைத் தேடிக்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு தொழில்நுட்பம் ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளது. அது ஒன்றும் புதிய முறை அல்ல. பழங்காலத்தில் நமது முன்னோர்களிடம் வழக்கத்தில் இருந்த நடைமுறைதான். கட்டிடத்தின் மீது வெள்ளை நிற பெயிண்ட் அடிப்பதுதான் அது. கட்டிடத்தின் கூரைமீது வெள்ளை நிற வண்ணமடித்தால், கட்டிடத்தில் படரும் வெயிலால் உருவாகும் வெம்மையைக் குறைக்க முடியும் என்கிறார்கள் கட்டிட நிபுணர்கள். இதை ஆய்வு மூலம் நிரூபித்திருக்கவும் செய்கிறார்கள். நிபுணர்கள் நடத்திய ஓர் ஆய்வில் ஒரு கட்டிடத்தின் கூரைமீது வெள்ளை பெயிண்ட் அடித்திருக்கிறார்கள். மற்றொரு கட்டிடத்தில் வேறு வண்ணத்தைப் பூசியிருக்கிறார்கள். இரண்டு கட்டிடங்களின் உள்ளேயும் நிலவும் வெப்ப நிலையை இரண்டு மூன்று மாதங்களாகக் குறித்திருக்கிறார்கள். வெள்ளை பெயிண்ட் அடித்த கட்டிடத்தில் வெப்ப நிலை இரண்டிலிருந்து நான்கு டிகிரி செல்சியஸ் வரை குறைவாகவே இருந்திருக்கிறது. 

வெள்ளை நிறம் வெப்பத்தை எவ்வளவுக்கு எவ்வளவு உள்வாங்குகிறதோ அதே அளவு அப்படியே வெளியிட்டுவிடும். வெப்பத்தை அப்படியே உள்ளே வாங்கி வைத்துக்கொள்ளாது. கொளுத்தும் வெயிலில் விளையாடும் வீரர்களுக்கு வெள்ளை நிற உடை தருவது இந்தக் காரணத்தால்தான். ஆகவே கூரைமீது வெள்ளை அடித்தால் வெப்பத்தை தவிர்க்க முடியும் என்னும் தொழில்நுட்பத்தைப் பரவலாக எடுத்துச் சென்றால் கட்டிடத்தின் மீது கடும் வெப்பம் இறங்கும் சூழலை ஓரளவு சமாளிக்கலாம். மழை நீர் சேகரிப்பு போன்ற நடைமுறைகளைக் கட்டாயப்படுத்தியது போல் இந்த வெள்ளை பெயிண்ட் அடிப்பதையும் கட்டிட அனுமதி தரும்போதே வலியுறுத்தினால் அதன் மூலம் கட்டிடத்தின் வெம்மையைக் குறைத்து கட்டிடத்திற்கு குளுமையைக் கொண்டுவரலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்