இந்த வலைப்பதிவில் தேடு

பிரதமர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரதமர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, நவம்பர் 27, 2016

சினிமாஸ்கோப் 23: மக்கள் என் பக்கம்


வரலாறு விநோதமான நாயகர்கள் பலரைச் சந்தித்திருக்கிறது. மன்னராட்சியிலிருந்து மக்களாட்சிவரை இப்படியான தலைவர்கள் சாபமாகவோ வரமாகவோ வந்து வாய்த்துவிடுகிறார்கள். அப்படியானவர்களுள் குறிப்பிடத்தகுந்த இருவர் முகம்மது பின் துக்ளக்கும், அடால்ஃப் ஹிட்லரும். இந்த இருவரின் பெயரைச் சொன்னதுமே சட்டென்று சமகால நிகழ்வுகள் நினைவில் வந்துவிடும். அறிவு நிறைந்தவராக அறியப்பட்டிருப்பினும் துக்ளக்கின் புகழுக்குக் காரணம் அவரது மூடத்தனங்களே. மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைத்தபோதும், ஹிட்லரின் பெயர் கொடுங்கோன்மையாலேயே நிலைபெற்றிருக்கிறது. மக்கள்மீது மிகுந்த அபிமானம் கொண்ட தலைவர்களுக்காக மக்கள் ஏங்கித் தவிக்கும் சமயத்தில் மக்களை வஞ்சிக்கும் இப்படியான தலைவர்கள் அந்த இடத்தை நிரப்பிவிடுகிறார்கள். இதெல்லாம் எப்படி நடக்கிறது என்று விளங்கிக்கொள்வதற்கு முன்னரே இந்த நிலை உருவாகிவிடுகிறது. இத்தகைய நிலை கண்டு கொந்தளிக்கும் கலைஞர்கள் அவற்றை, அந்த நிலையை மக்களுக்கு உணர்த்த அதைக் கலை வடிவில் தருகிறார்கள். அந்தக் கலையில் நேர்மையின் வீச்சு நிறைந்திருக்கும்போது, அது காலகாலத்துக்குமானதாகிவிடுகிறது.

அரசர்களோ அதிபர்களோ அவர்களின் முடிவுகளால் எப்போதும் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் அன்றாடங்காய்ச்சிகள் என்பதே உண்மை. இதை உலகுக்கு உணர்த்த முயல்பவர்களே மக்களுக்கான கலைஞர்கள். அதைவிடுத்து, அரசுக்கு ஆதரவாக முதுகுவருடிவிடுபவர்கள் சந்தர்ப்பவாதிகள். நிஜமான கலைஞனால் ஒருபோதும் அப்படி வாளாவிருக்க முடியாது. அதிகாரத்துக்கு எதிராக உண்மையைப் பேச அசாத்திய துணிச்சல் வேண்டும். அத்துடன் கலைத் திறமையும் வேண்டும். இவை இரண்டும் அமையப் பெற்ற திரைக் கலைஞர் சார்லி சாப்ளின். திரைப்படக் கலையின் அத்தனை சாத்தியங்களையும் தன் வசப்படுத்தியிருந்த சார்லி சாப்ளினின், மவுனப் படம் மெல்லப் பேசத் தொடங்கியபோது, வெளியானது தி கிரேட் டிக்டேட்டர் (1940). இது வெளியானபோது, இரண்டாம் உலகப் போரின் இழப்புகளை உலகம் எதிர்கொண்டிருந்தது.


ஹிட்லரின் தான் தோன்றிப் போக்கு காரணமாக மக்கள் படும் வேதனைகண்டு துடித்துப் போயிருக்க வேண்டும் சாப்ளின். இல்லாவிட்டால் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், உலகத்தின் மிகப் பெரிய சர்வாதிகாரியாகத் தன்னை ஹிட்லர் நம்பிய நேரத்தில் அந்தப் படத்தை உருவாக்கியிருக்க முடியாது. மிகவும் எளிமையான ஆள் மாறாட்டம்தான் தி கிரேட் டிக்டேட்டரின் கதை. கதை மாந்தர்கள் இருவரில் ஒருவர் யூத நாவிதர் மற்றொருவர் நாட்டின் சர்வாதிகாரி ஹிங்கெல். இவர் உலக உருண்டையை வைத்துக்கொண்டு விளையாடும் காட்சியில் வசனமே இல்லை; இறுதியில் வெற்றி மேடையில் ஆற்றும் உரை முழுவதும் வசனங்களாலானது. இரண்டிலும் திரைப்படக் கலை துலங்கும் வகையில் படம் பிடித்திருப்பதே சாப்ளினின் திறமைக்குச் சான்று. 

சர்வாதிகாரி ஹிங்கெலின் பிதற்றல்களுக்காகவே பொருளற்ற ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்து உரையாட விட்டிருப்பது கிண்டலின் உச்சம். அதே போல், உலக உருண்டைமீது மையல் கொண்டு போதை தலைக்கேறி, கால்களாலும் புட்டத்தாலும் அதைக் கையாண்டு புளகாங்கிதம் அடைவதில் தெறிக்கும் அதிகார வெறியை ஆயிரம் வசனங்களால்கூட உணர்த்திவிட முடியாது. இறுதிக் காட்சியில் யூத நாவிதர் ஹிங்கெல் என நம்பப்படும் சூழலில் உரை ஆற்ற வேண்டிய சூழல் திரைக்கதையில் சற்று நம்ப முடியாத தன்மை கொண்டிருக்கும். ஆனால், இந்த லாஜிக் மீறலை நாவிதரின் அன்பில் தோய்ந்த உரை மறக்கடித்துவிடும். அந்த உரையின் வீச்சில் அந்த லாஜிக் மீறல் வீழ்ந்துவிடும். 76 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியான இந்தப் படத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதநேயத்தை அழிக்கும் வகையில் அமைந்துவிடுகிறதே என்ற ஆதங்கம் வெளிப்படுகிறது.


சின்னச் சின்ன காட்சிகளின் வழியே தான் சொல்ல நினைக்கும் செய்தியைக் கடத்தும் நுட்பம் வியக்கவைக்கிறது. உதாரணமாகத் தனது உருவப் படத்துக்காகவும் சிலைக்காகவும் ஹிங்கெல் போஸ் கொடுக்கும் ஒரு காட்சியைச் சொல்லலாம். ஒரே நேரத்தில் இரண்டு கலைஞர்களை வைத்து வேலை வாங்கும் நிர்வாகத் திறமையையும் அதே நேரத்தில் கலைஞர்களை மதிக்காத தன்மையையும் மிகவும் அநாயாசமாக உணர்த்திவிடுகிறார். அந்த இரு கலைஞர்களும் எவ்வளவு புண்பட்டிருந்தால் தங்கள் கையிலிருக்கும் கலை உருவாக்கக் கருவிகளை அத்தனை ஆத்திரத்துடன் கீழே எறிவார்கள்? சற்று நேரம் கூட ஆசுவாசமாக ஓரிடத்தில் அமர முடியாத, ஒரு பேனைவை அதன் ஸ்டாண்டிலிருந்து எடுத்து எழுதக்கூட பொறுமையற்ற, சுயமோகியான ஹிங்கெல்லின் தான் தோன்றித்தனமான முடிவுகளால் மக்கள் அனுபவித்த வேதனைகளை இதைவிட எள்ளலாகச் சொல்ல முடியாது என்றே தோன்றுகிறது. இல்லாவிட்டால் தன் நாட்டில் இந்தப் படத்துக்குத் தடைவிதித்த ஹிட்லர் இதை இருமுறை பார்த்திருப்பாரா? ஆனாலும் இந்தப் படத்தைப் பற்றி ஹிட்லர் என்ன நினைத்தார் என்பது வரலாற்றின் பக்கங்களில் இல்லை.

தமிழில் இப்படியான அரசியல் பகடிப் படங்கள் அரிதிலும் அரிது. அந்த அரிதான படங்களில் ஒன்று முகம்மது பின் துக்ளக். மேடை நாடகமான இதைப் படமாக்கினார் சோ. ஆனால், திரைத் துறையில் தனக்கு என்ன இடம் என்பதை உணர்ந்ததாலேயே, டைரக்‌ஷன் என்பதற்கும் சோ என்பதற்கும் இடையிலே கற்றுக்கொள்ள முயற்சி என்னும் வரியை இணைத்திருப்பார். அது மிகச் சரி என்பதைப் படம் நிரூபிக்கும். நாடகத் தன்மையின் எல்லைக்குள்ளேயே அது முடங்கியிருக்கும்; திரைப்படமாக மாறியிருக்காது. முழுவதும் வசனங்கள். ஆனால், அவை இன்றைக்கும் பொருந்தக்கூடியவை. தலைநகரை மாற்றியது, நாணயச் சீர்திருத்தம் கொண்டுவந்தது, மக்கள் பஞ்சத்தால் வாடும்போது வரிவிதித்தது என பல முட்டாள்தனங்களை அடுக்கடுக்காக அரங்கேற்றிய முகம்மது பின் துக்ளக்கை முன்மாதிரியாக வைத்துக்கொண்டு ஒரு பிரதமர் நாட்டை ஆட்சி செய்தால் என்னவெல்லாம் அபத்தம் ஏற்படும் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருப்பார் சோ.



தேசத்தின் இழிநிலையை மக்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகக் காந்தியவாதி தணிகாசலம் மகாதேவன், ராகவன் என்னும் இரு இளைஞர்களுடன் இணைந்து திட்டம் ஒன்றைத் தீட்டுகிறார். ஆறு மாதம் கெடுவைத்துக்கொண்டு, அதற்குள் பிரதமராகி அத்தனையும் அபத்தங்களையும் செய்துவிட்டு, டிசம்பர் 31-ம் தேதி ஆம், டிசம்பர் 31-ம் தேதி மக்களிடம் உண்மையைக் கூறி, அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டுப் பதவியைத் துறந்துவிட வேண்டும் என்பது அவர்களின் திட்டம். திட்டப்படி, துக்ளக் வேடத்தில் மகாதேவன் ஆட்சியைப் பிடித்துவிடுகிறான்; அத்தனை அபத்தங்களையும் அரங்கேற்றுகிறார்கள். அதற்குள் டிசம்பர் 31 வந்துவிடுகிறது. பதவியைத் துறக்க ராகவன் கோருகிறான். ஆனால், பதவியாசையால் மகாதேவன் மறுக்கிறான். மக்கள் மன்றத்தில் உண்மையைச் சொல்லி துக்ளக்கின் முகமூடியைக் கிழிக்க ராகவன் முயல்கிறான். மகாதேவனோ தனது தந்திரமான பேச்சு சாமர்த்தியத்தால் மக்களைவைத்தே ராகவனைக் கொன்றுவிடுகிறான். தந்திரமான ஒரு பிரதமர் மக்களின் செல்வாக்கைப் பெற்றுவிட்டால் என்னவெல்லாம் விபரீதம் ஏற்படும் என்பதை விலாவாரியாக விவரித்திருப்பார் சோ. “நான் பிரதமரான உடனேயே ஒருவருக்கு மொட்டை போட்டுவிட்டேன், இது ஆரம்பம் தான்”, “மக்கள் முட்டாள்கள் இல்லையென்றால் என்னைத் தேர்ந்தெடுத்திருப்பார்களா” போன்ற வசனங்களை யாருக்காக சோ எழுதினாரோ தெரியவில்லை. ஆனால், இன்றைக்கும் அவை பொருந்திப்போகின்றன என்பதே இப்படத்தின் சிறப்பு. 

< சினிமா ஸ்கோப் 22 >                  < சினிமா ஸ்கோப் 24 >

புதன், ஜூன் 25, 2014

சமூக நீதி காத்த அரசியல் ஆளுமை

ஜூன் 25 - விஸ்வநாத் பிரதாப் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு தி இந்து வெற்றிக்கொடி பகுதியில் எழுதிய கட்டுரை. இது அரசியல் கட்டுரை அல்ல. மாணவர் பகுதிக்காக எழுதியது.

 
வி.பி. சிங் என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் விஸ்வநாத் பிரதாப் சிங் அலகாபாத் நகரில் 1931-ம் ஆண்டு ஜூன் 25-ல் அரச குடும்பத்தில் பிறந்தார். பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்த மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்தியதற்காக நன்றியுடன் நினைவுகூரப்படும் அரசியல் தலைவர் வி.பி.சிங். இவர் தனது பள்ளிப் படிப்பை அலகாபாத்தில் முடித்தார். பின்னர் பூனா பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்தார். 1969-ல் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் உத்தப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினரானார். 1971-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, வென்று நாடாளுமன்றத்திற்குச் சென்றார். 1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வி.பி.சிங்கை வர்த்தகத் துறை இணை அமைச்சராக்கினார். 

மத்தியில் 1975 ஜூன் 25-ல் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு இந்தியாவில் நெருக்கடி நிலைச் சட்டத்தை அமல்படுத்தியது. இதை அடுத்து 1977-ல் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுப்போனது. மீண்டும் காங்கிரஸ் கட்சி 1980-ல் ஆட்சிக்கு வந்தது. அப்போது உத்தப் பிரதேச மாநிலத்தை ஜனதாவிடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியது, வி.பி. சிங் அம்மாநிலத்தின் முதலமைச்சராக்கப்பட்டார். 1982-வரை இந்தப் பொறுப்பில் அவர் இருந்தார். பின்னர் 1983-ல் மீண்டும் வர்த்தகத் துறை அமைச்சரானார். 

1984-ல் இந்திரா காந்தி மறைவுக்குப் பின்னர் அவருடைய மகன் ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது வி.பி. சிங் நிதியமைச்சராக்கப்பட்டார். அப்பதவியில் இருந்தபோது வரி ஏய்ப்பைத் தடுக்கும் வகையில் வியாபாரக் கொள்கைகளை மாற்றியமைத்தார். இந்த நடவடிக்கையால் வி.பி. சிங் பாராட்டுப் பெற்றார். அதன் பின்னர் 1987 ஜனவரியில் சிங் பாதுகாப்புத் துறை அமைச்சரானார். அந்தத் துறையில் நடந்த ஆயுதக் கொள்முதல் தொடர்பாக அவர் ஆய்வுசெய்தார். இதைத் தொடர்ந்து போபர்ஸ் பீரங்கி பேர ஒப்பந்தம் காரணமான நெருக்கடியால் அமைச்சரவையில் இருந்தும் கட்சியிலிருந்தும் வெளியேறினார். 

1988-ல் ஜனதா தளம் என்னும் கட்சியைத் தொடங்கினார். ஜன்மோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து ஜனதா தள் கட்சியை ஜெய்பிரகாஷ் நாராயணின் பிறந்த தினமான அக்டோபர் 11 அன்று ஆரம்பித்தார். அதன் மூலம் தேசிய அளவில் எதிர்க் கட்சிகளை ஒன்று திரட்டி தேசிய முன்னணி என்னும் கூட்டணியை ஏற்படுத்தி 1989 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டார். அந்தத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிபெற்றதால் அதன் தலைவரான வி.பி. சிங் இந்தியாவின் எட்டாம் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் மத, சாதியவாதப் பிரச்சினைகளால் இவரது ஆட்சிமீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து 1990 நவம்பர் 7 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். 

1991 ம் ஆண்டுக்குப் பிறகு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த வி.பி.சிங்கை நீண்ட காலமாகப் புற்றுநோய் துன்புறுத்திவந்தது. புற்றுநோயுடன் சிறுநீரகப் பிரச்சினையும் சேர்ந்துகொண்டதால் டெல்லி அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வி.பி.சிங் சிகிச்சை பலனின்றி 2008 நவம்பர் 27 அன்று காலமானார்.

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்