இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், ஜூன் 18, 2019

நட்சத்திர நிழல்கள் 10: பொய்யாகப் போகாத பொட்டுக்கன்னியின் காதல்

பாஞ்சாலங்குறிச்சி


இயேசு கிறிஸ்து தன் சீடர்களுடன் படகில் சென்றுகொண்டிருந்தார். கடலில் பெருங்காற்று வீசியது. அலையின் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. அலையின் கொந்தளிப்பு படகைத் தலைகுப்புறக் கவிழ்த்துவிடுமோ எனப் பயப்பட்டார்கள் சீடர்கள். இயேசுவோ நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தார். உயிருக்குப் பயந்த சீடர்கள் படபடப்புடன் இயேசுவை எழுப்பினார்கள். நிலைமையை அறிந்த இயேசு சீடர்களின் விசுவாசமற்ற தன்மையை உணர்ந்து வேதனை அடைந்தார். தான் உடனிருந்தும் சீடர்கள் பயப்படுகிறார்களே என்ற எண்ணம் அவருக்கு. அவர் சத்தம் போட்டுக் கடலை அடக்கினார். படகு சீராகச் சென்றது என்பதெல்லாம் இயேசு குறித்துச் சொல்லப்படும் கதை. 

கடவுள் தன்மை கொண்டவர் என்று அறியப்படுவர் மீதான நம்பிக்கையே சிலவேளைகளில் தகர்ந்துவிடும்போது, சாமான்ய மனிதர்கள்மீதான நம்பிக்கை எவ்வளவு தூரம் தாங்கும்? ஆனால், சிலருக்குச் சிலர்மீது அசாத்திய நம்பிக்கை இருக்கும். அந்த நம்பிக்கையைக் குலைக்கவோ சிதைக்கவோ முடியாது. அவராக மாற்றிக்கொள்ளாதவரை அந்த நம்பிக்கையை வெளியிலிருக்கும் ஒருவரால் மாற்ற முடியாது. ஏன் அப்படியொரு நம்பிக்கை என்பது நம்பிக்கை கொண்டவருக்கே வெளிச்சம். அப்படியான அசைக்க முடியாத நம்பிக்கையை கிட்டா(ன்) மீது பொட்டுக்கன்னி வைத்திருந்தார். காதலின் வேரைப் பற்றிப் பிணைத்திருந்தது அந்த நம்பிக்கை. 

சீமான் இயக்கிய ‘பாஞ்சாலங்குறிச்சி’ (1996) திரைப்படத்தில் பொட்டுக்கன்னியை மதுபாலாவின் உருவத்தில் பார்த்திருக்கிறோம், பொட்டுக்கன்னி கிட்டா மீது உயிரையே வைத்திருந்தாள். பொட்டுக்கன்னியுடைய தந்தை ஒரு கீதாரி. கிடைபோட்டுக் கிடைத்த  வருமானத்தில் அவரும் பொட்டுக்கன்னியும் பிழைத்துவந்தார்கள். தனக்கு ஆதரவாக இருந்த தந்தையின் மீது பொட்டுக்கன்னி எவ்வளவு பாசம் வைத்திருந்தாளோ அதற்கீடான பிரியத்தை கிட்டா மீது வைத்திருந்தாள் ஆனால், கிட்டாவுக்கோ அந்த ஊர் அவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே முதன்மையாகப் பட்டது. தன் தாயை இழந்துநின்ற நேரத்தில் ஆறுதலும் தேறுதலும் தந்த அய்யாவின் கௌவரத்தையும் அந்த ஊர்ப் பெண்களின் மானத்தையும் காப்பதே தனது தலையாய கடமை என்று எண்ணி வாழ்கிறான். அய்யாவின் மீது அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. இவ்வளவுக்கும் அவன் அய்யா வீட்டின் பண்ணையாள்தான். நிஜத்தில் பண்ணையாளை முதுகொடிய வேலை வாங்குவதுதான் பண்ணையார்களின் செயல். ஆனால், திரைப்படத்தில் அவர் சாந்தசொரூபியாக வாராதுவந்த மாமணியாகத் தோற்றம்கொள்கிறார். இப்படியான பண்ணையாரையும் பணியாளையும் திரையில் பார்த்து பார்வையாளர்கள் மகிழ்ச்சிகொள்கிறார்கள். 


அந்த ஊரின் எந்தப் பெண்ணையும் காதலியாகப் பார்ப்பதே தவறு என்று கிட்டா நினைக்கிறான். அவனை நம்பி பொண்ணுபுள்ளைகளை அனுப்பும் ஊருக்குச் செய்யும் துரோகம் அது என்று நம்புகிறான். அது ஒருவகையில் அறியாமைதான். ஆனால், அவனது நினைப்பை அவனால் மாற்றிக்கொள்ள இயலவில்லை. பெண்களின் மானத்தைக் காப்பாற்றுவதில் அக்கறை கொண்டவன் என்பதால்தான் பொட்டுக்கன்னியும் அவனை விரும்புகிறாள். தன் காதலை பொட்டுக்கன்னி சொன்னபோது, கிட்டா அதை மறுத்துவிட்டான். அதற்கு அவன் சொல்லும் காரணம் அறிவுக்குப் பொருந்துவதாக இல்லை; அது உணர்வுபூர்வமானது. அந்தக் காரணத்தைக் கேட்ட பிறகு, பொட்டுக்கன்னியாலும் அவனை வற்புறுத்த இயலவில்லை.

யதார்த்தத்தில் கிடைப்பதற்கரிய பொக்கிஷம் கிட்டா. அப்படியொருவர் இருக்கப்போவதுமில்லை. எனவே, அவனையே நினைத்து அவள் வாழ்கிறாள். அவன் குறித்தான கற்பனைகளிலும் ஆசைகளிலும் நாட்களை நகர்த்திவந்தாள். பொய்யாய்ப்போன காதலின் கதகதப்பில் காலங்கடத்துகிறாள். துணையாக இருந்த தகப்பனையும் அவன் ஆசையாக வளர்த்த கால்நடைகளையும் ஊரின் பகை தின்று செரித்துவிடுகிறது. ஒத்தையில் வாடும் ரோசாவாக பொட்டுக்கன்னி அந்த ஊரில் வளைய வருகிறாள். அவள் மனம் மயங்கும் பொழுதுகளில் கிட்டாவின் அரூபத் தோளில் சாய்ந்துகொண்டு ஆறுதலடைகிறாள். கிட்டாவைத் தவிர வேறு யாரையும் மணமுடிக்க அவளுக்கு மனமில்லை. ஆகவே, அய்யா அவளது திருமணம் தொடர்பாக எடுத்த முயற்சிகளும் அவளுக்குப் பெரிய அளவில் உவப்பளிக்கவில்லை. 

இதெல்லாம் திரைப்படங்களிலும் கதைகளிலுமே சாத்தியம். இப்படியான அபத்தமான விளையாட்டுகளில் நிஜ வாழ்வில் பெண்கள் ஈடுபடுவதில்லை. ஆனால், கதாபாத்திரங்களைப் புனிதமானவர்களாகக் கட்டமைக்கும்போது அதைப் பார்த்து ரசிப்பதில் பார்வையாளர்களுக்கு ஒரு பிரியம். ஏனெனில் உலகத்தில் நேரடியாக அப்படியொருவரை நம்மால் காண முடியாதே. காண முடியாதவற்றைக் காணவைக்கும் சினிமாவைத்தானே ரசிக்க முடியும். 

அய்யா என்னதான் நல்ல மனிதராக இருந்தாலும் அவருக்கும் பகை இருக்கும் தானே? அவருடைய உறவுக்கார காளிச்சாமிதான் அவருக்குப் பகை மனிதர். அவர் பிறவியெடுத்ததன் நோக்கமே அய்யாவை வெற்றிகொள்ளத்தான். அதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காதவன் அவன். அய்யாவின் செல்ல மகள் அலமேலு நாச்சியார். அவளுடைய காதலும் பொட்டுக்கன்னியின் காதலைப் போலவே நம்பிக்கையெனும் நரம்பில் கோக்கப்பட்டது. எல்லோருடைய நம்பிக்கைகளும் பலிப்பதில்லையே.

காளிச்சாமியின் தமையன் மலைச்சாமியைக் காதலிக்கிறாள் அலமேலு. பகைவர் மீது பருவப் பெண்கள் காதல் கொள்வது ஒன்றும் புதிதில்லையே. அலமேலுவின் நம்பிக்கையைக் கானல் நீராக்கிவிடுகிறான் அவன். காதலின் சுகம் விபரீத எல்லையைக் கடக்க தாய்மையின் நுழைவாயிலில் நிற்கிறாள் அலமேலு. மலைச்சாமியோ அவளைக் கரம்பற்றத் தயங்குகிறான். இது எதுவும் அறியாத குடும்பத்தினர் அலமேலுவுக்கு மற்றொருவருடன் மண ஏற்பாட்டை நடத்துகிறார்கள். விஷயம் வெளியில் தெரிந்தால் அவமானம் எனக் கருதி உயிரைப் போக்கிக்கொள்ள விழைகிறாள் அலமேலு. 


திருமணத்துக்கு முன்னர் ஒரு பெண் கருத்தரித்தால் ஊரார் வாய்க்கு வந்ததைப் பேசுவார்கள்; குடும்ப மானம் போய்விடுமென்று எந்த கோமகன் சொன்னாரோ தெரியவில்லை. திருமணத்துக்கு முன்னர் பெண் கருத்தரித்தாலும் ஊர்பேசும்; திருமணத்துக்குப் பின்னர் பெண் கருத்தரிக்காவிட்டாலும் ஊர்பேசும் என்றால் சிக்கல் ஊராரிடம் தானே?  கருத்தரித்தல் வெறும் அறிவியல்சார் உடலியல் நிகழ்வு  எனும்போது அதை ஏன் பண்பாட்டுடன் முடிச்சிட்டுவைத்திருக்கிறார்கள்? 

விஷயம் கிட்டாவுக்குத் தெரியவருகிறது. அய்யாவின் கௌரவம் சந்தி சிரித்துவிடுமே எனப் பயப்படுகிறான். சண்டைக்காரரின் காலில் சென்று விழுகிறான். அய்யாவுக்குத் தெரியாமலே அய்யாவின் பிரிய மகளின் சிக்கலைத் தீர்க்க முயல்கிறான். ஆனால், அதில் அவனே சிக்கிக்கொள்கிறான். அலமேலுவின் நிலைமைக்குக் கிட்டாதான் காரணமென அய்யா புரிந்துகொள்கிறார். அவனை எல்லோரும் சகட்டுமேனிக்கு அடித்து நொறுக்குகிறார்கள். அந்த ஊரில் அவனை நம்ப ஒருவருமே இல்லாத சூழலில் கிட்டான் இந்தத் தவற்றைச் செய்திருக்க மாட்டான் என பொட்டுக்கன்னி மட்டுமே நம்புகிறாள். அவனுக்குப் பக்கதுணையாக நிற்கிறாள். 

உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பதை ஊருக்குப் புரியவைத்துவிடுகிறான் கிட்டா. தன் தவற்றை நினைத்து வருந்துகிறார் அய்யா. ஆனால், தெய்வம் போல் நம்பிக்கை வைத்திருந்த அய்யா தன்னைச் சந்தேகப்பட்டதைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை கிட்டாவால். இனியும் அந்த ஊரில் இருக்க அவன் மனம் ஒப்பவில்லை. தன்னை வாழவைத்த அந்த ஊரைவிட்டுத் தன்னைக் காதலித்த பொட்டுக்கன்னியின் கரம்பற்றி வெளியேறுகிறான். அய்யா மீது கிட்டா கொண்டிருந்த நம்பிக்கை பொய்த்துப்போயிற்று; ஆனால் கிட்டாமீது பொட்டுக்கன்னி கொண்டிருந்த நம்பிக்கை அவளைக் காப்பாற்றியது.

திங்கள், ஜூன் 10, 2019

நட்சத்திர நிழல்கள் 9: தன்மானம் நிரம்பிய மாளிகை லதா

வசந்த மாளிகை


தமிழ்த் திரைப்பட ரசிகர்களால் மறக்கவியலாத படங்களில் ஒன்று சிவாஜி கணேசனின் ‘வசந்த மாளிகை’ (1972). வணிகரீதியில் மாபெரும் வெற்றிபெற்ற இத்திரைப்படத்தில் சிவாஜி கட்டிய வசந்த மாளிகையும் இதன் பாடல்களும் நாயகி வாணிஸ்ரீயின் கொண்டையும் ரசிகர்கள் நினைவில் என்றென்றும் நிலைத்து நிற்பவை. ஆனால், இவற்றையெல்லாம்விட முதன்மையான அம்சம் வாணிஸ்ரீ ஏற்று நடித்த நாயகி கதாபாத்திரமான லதாவின் தன்மானம். எந்தச் சூழலிலும் சுய கௌரவத்தை விட்டுக்கொடுக்காத லதாவின் பாத்திரச் சித்தரிப்பு சிறப்புக் கவனம் கொள்ளத்தக்கது. நமது ஆழ்ந்த மறதியின் அடியாழத்தில் மறைந்துகிடக்கும் அந்தச் சுயமரியாதைச் சுடரை இந்த வாரம் சந்திக்கலாம்.

‘வசந்த மாளிகை’ திரைப்படத்தின் கதை: அரெபாபூடி (கோடூரி) கௌசல்யா தேவி, வசனம்: பால முருகன். இயக்கம்: கே.எஸ்.பிரகாஷ் ராவ். லதா ஏழைக் குடும்பத்துப் பெண். ‘அவள் ஒரு தொடர்கதை’ கவிதாவுக்கு முன்னரே குடும்பத்தின் பாரத்தைச் சுமந்துகொண்டவர். ஊன்றுகோல் உதவியுடன் நடமாடும் தந்தை, தாய், கல்யாண வயதுத் தங்கை, படிக்கும் வயதில் தம்பி, தறுதலை அண்ணன், ஊதாரி அண்ணி ஆகியோரைக் கொண்ட அந்தக் குடும்பத்தைத் தனது வருமானத்தில் போஷித்துவருகிறார் லதா.

இயந்திரக் கோளாறு காரணமாக நடுவானில் நிலைதடுமாறும் விமானத்துக்குள் தள்ளாடியபடியே பாடியாடும் விஜய் ஆனந்தை விமானப் பணிப்பெண்ணான லதா சந்திக்கிறார். அழகாபுரி ஜமீன் குடும்பம் ஒன்றின் இளைய பிள்ளை விஜய் ஆனந்த். யாரையும் பார்த்தவுடன் நினைவில் கொள்ளும் வகையிலான மனிதரல்ல அவர். எப்போதும் தன்னை மதுவின் பிடியில் ஒப்படைத்துக்கொண்டு அதன் கதகதப்பிலேயே வாழ்க்கையை உல்லாசமாகக் கழிக்க முயலும் வாலிபர் அவர். குடும்பப் பொறுப்போ வாழ்க்கை லட்சியமோ இல்லாதவர். இதற்கு நேரெதிரான குணம் கொண்டவர் லதா. அவர் மிகவும் பொறுப்பானவர். இவர்களிடையே காதல் ஏற்பட ஒரு தமிழ்ப் படத்துக்கு இந்த முரண் போதாதா?


ஆகாயத்தில் பறக்கும் ஆபத்து நிறைந்த வேலையை விட்டுவிடும்படி குடும்பத்தினர் வற்புறுத்தவே வேறு வேலை தேடும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார் லதா. ஹோட்டல் ஒன்றில் வரவேற்பாளர் பணிக்கான நேர்காணலுக்கு வருகிறார் லதா. வந்த இடத்தில் மேலாளர் லதாவிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முனைகிறார். நாயகியால் எப்படித் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்? நாயகிக்கோர் ஆபத்து எனும்போது நாயகன் வந்து காப்பாற்ற வேண்டியது தமிழ்த் திரைப்படத்தின் எழுதப்படாத விதியாயிற்றே. நாயகியின் மானத்தை நாயகன் தனது வீரத்தால் காப்பாற்ற வேண்டுமே. நிற்கவே இயலாத அளவு மூக்குமுட்ட குடித்துவிட்டுத் தள்ளாடும் ஆனந்த் வருகிறார். மேலாளரைப் புரட்டி எடுத்து லதாவைக் காப்பாற்றுகிறார். தனது ஓவர் கோட்டையும் அதிலிருந்த பணக் கட்டையும் விட்டுவிட்டு அப்படியே சென்றுவிடுகிறார். அவற்றை ஒப்படைப்பதற்காக மீண்டும் ஆனந்தைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது லதாவுக்கு.

இப்போது தனது மனங்கவர்ந்த மங்கையருடன் நீச்சல்குளத்தில் தண்ணியில் மிதக்கிறார் ஆனந்த். அங்கே வரும் லதா ஹோட்டலில் நடந்தவற்றை விளக்குகிறார். லதாவின் நிலைமையை உணர்ந்த ஆனந்த் தனது தனிச் செயலராக லதாவைப் பணியாற்றக் கோருகிறார். ஆனந்தின் நடவடிக்கைகளைச் சில சம்பவங்களால் அறிந்துகொண்ட லதா, தனது சுய மரியாதைக்குப் பங்கம் வராதவரை தன்னால் பணியாற்ற முடியும் என்று நிபந்தனை விதிக்கிறார். அதற்கு ஒப்புக்கொண்டு லதாவைச் செயலராகப் பணியில் ஆனந்த் சேர்த்துக்கொள்கிறார். 

அழகாபுரி ஜமீனுக்கு வரும் லதா, மது, மாது என அங்கே நடக்கும் எல்லா விஷயங்களையும் கண்டு திடுக்கிடுகிறார், தன்னால் அங்கே தொடர்ந்து பணியாற்ற முடியுமா எனப் பயப்படுகிறார். ஆனால், ஆனந்தின் பிரியத்துக்குரிய பணியாள் பொன்னையா, லதாவிடம் ‘ஆனந்த் கெட்டுப்போயிட்டாரே தவிர கெட்டவரில்லை’ எனச் சொல்கிறார். அதை லதாவும் இயல்பாக எடுத்துக்கொள்கிறார். இதுவே லதா போன்ற ஒரு பெண்ணுக்கு ஆனந்திடம் இருப்பது போன்ற பழக்கவழங்கங்கள் இருந்தால், லதா கெட்டவரில்லை கெட்டுப்போயிட்டார் என்று சொல்லியிருப்பாரா? ‘கெட்டுப்போயிட்டார்’ என்ற சொல்லிலேயே சமூகம் எவ்வளவு அழுக்கை ஏற்றிவைத்திருக்கிறது?

ஆனந்துக்கும் அவருடைய அண்ணன் விஜய குமாருக்கும் பாகப்பிரிவினை செய்துவைக்க மகாராணி முடிவுசெய்யும்போது அதில் பாசம் என்னும் பெயரில் மோசம் இழைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்து அதைத் தடுக்க உதவுகிறார் லதா. தான் ஏழை என்பதற்காகவோ தனது வேலை போய்விடும் என்பதற்காகவோ  பயந்துகொண்டு அதிகாரத்துக்கு ஒத்தூதும் வேலையைச் செய்யவில்லை லதா. தனது பொறுப்பைத் துணிச்சலுடனும் நேர்மையுடனும் நிறைவேற்றிய லதாவை அரண்மனைவாசிகள் வெறுப்புடன் பார்க்கிறார்கள். அதிலும் பெரிய குடும்பத்துப் பெண்ணான ஆனந்தின் அண்ணி லதாவின் மீது வன்மம் கொள்கிறார். 

அரண்மனையில் லதாவுக்கான முதல் சிக்கல் ஜமீனின் பணியாள் வடிவில் வருகிறது. குடிப்பதற்குப் பணம் கேட்கும் அவனது நடவடிக்கை பிடிக்காமல் பணம் தர மறுக்கிறார் லதா. அந்தத் தருணத்தில் லதாவிடம் கடுமையாக நடந்துகொள்கிறார் ஆனந்த். அவள் வெறும் வேலைக்காரப் பெண் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். சுயமரியாதைக்கு இழுக்க ஏற்பட உடனடியாகத் தன் வேலையை ராஜினாமா செய்கிறாள் லதா. பணக்கட்டுகளுடனும் ராஜினாமா கடிதத்துடனும் வந்து நிற்கும் லதாவிடம் ஆனந்த், “ஒண்ணு என்னோட அதிகாரம் இன்னொண்ணு உன்னோட அகம்பாவம் அப்படித்தானே” என்கிறார். பெண்ணிடம் வெளிப்படும் தன்மானத்தை அகம்பாவமாகவும் ஆணவமாகவுமே இந்தச் சமூகம் புரிந்துவைத்திருக்கிறது என்பதன் வெளிப்பாடு இந்த வசனம். ஆணின் சுயமரியாதையை விதந்தோதும் சமூகம் பெண்ணின் சுயமரியாதையைக் கீழாகப் பார்க்கும் அவலம் இன்றுவரை தொடரத்தானே செய்கிறது?


ஆனந்தின் குடிப்பழக்கம் குடும்பத்தில் அவருக்குக் கெட்ட பெயரை வாங்கித் தருவதை உணர்ந்து, அதிலிருந்தும் அவரை விடுவிக்கிறார். குடியை நிறுத்தி, தங்கள் நிலத்தில் விவசாயம் பார்க்கும் மனிதர்களுக்கும் நல்லது செய்யும் நிலைமைக்கு வந்துவிடுகிறார் ஆனந்த். பொறுப்பானவராக ஆனந்த் மாறியவுடன் அவருக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என மகாராணி விரும்புகிறார். ஆனால், ஆனந்த் லதாவைக் காதலிக்கிறார். அவருக்காகவே ஒரு வசந்த மாளிகையைக் கட்டி அதிலுள்ள கண்ணாடி அறையில் வைத்துத் தனது காதலை லதாவிடம் வெளிப்படுத்துகிறார். லதாவால் எப்படி மறுக்க முடியும்? இருவரும் டூயட் பாடுகிறார்கள்.

என்னதான் குணக்குன்றாக இருந்தாலும் ஏழைப் பெண் ஒருத்தியை எப்படி அரண்மனை ஏற்றுக்கொள்ளும்? அதன் அந்தஸ்து என்னவாகும்? லதா மீது திருட்டுப் பழி சுமத்துகிறார்கள். அதை ஆனந்தும் நம்பும்படியாக அந்த நாடகத்தை நடத்துகிறார்கள். ஆனந்தே லதா ஏன் இப்படிச் செய்தாய் எனக் கேட்டுவிடுகிறார். தான் நிரபராதி என்பதில் தனக்கிருக்கும் நம்பிக்கை ஆனந்துக்கு இல்லாததைக் கண்டு துடித்துப்போகிறாள். தனக்காக வசந்த மாளிகை கட்டிய ஆனந்த் என்பதை எல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, அந்த அரண்மனையிலிருந்து வெளியேறித் தன்மானத்தைக் காப்பாற்றிக்கொள்கிறார்.

எந்தச் சூழலிலும் ஒரு பெண் தன்மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்  என்பதற்கு உதாரணம் லதா. வசந்த மாளிகை ஒரு கேளிக்கைப் படம்தான், என்றபோதும் லதாவை நம்மால் மறக்க இயலாது.

செவ்வாய், ஜூன் 04, 2019

தேசமணியின் தலையில் விழுந்த சுத்தி

ஓவியம்: வெங்கி

நடைபெற்று முடிந்த நகராட்சித் தேர்தலில் வீராப்பூரில் தாய்மண் கட்சி சார்பில் போட்டியிட்ட வெள்ளைச்சாமி மட்டுமே வென்றிருந்தான். மீதி எல்லா நகர்மன்ற உறுப்பினர்களையும் வென்றிருந்தது  சமோசா பார்ட்டி. அதன் தலைவர் பொறுப்பிலிருந்த இயந்திர பாடியார் பதவியேற்க நினைத்திருந்த அன்றுதான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. வீராப்பூரின் மண்ணின் மைந்தன் தேசமணியாரின் தலையில் சுத்தியல் விழுந்து அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதைக் கேள்விப்பட்ட வெள்ளைச்சாமி இயந்திர பாடியார் பதவியேற்பு நிகழ்ச்சியை ஒத்திவைத்துவிட்டு தேசமணியாரைப் பார்க்கக் கிளம்பினார்.

கேட்டைத் திறந்து வெளியே வரவும் செய்தியாளர்கள் அவர் வாயில் மைக்கை நுழைக்காத குறையாக தேசமணியின் வரலாற்றைக் கேட்க ஆரம்பித்துவிட்டனர். ஒரு நிமிஷம் வெள்ளைச்சாமிக்குத் தலையே சுத்திவிட்டது. வெள்ளைச்சாமியின் தலைக்கு உள்ளேயும் சுத்தம்;  வெளியேயும் சுத்தம். அதில் பளீரென்று  வெயில் தாக்கிய நேரத்தில் ஒருவழியாகச் செய்தியாளர்களைச் சமாளித்துவிட்டு வந்துவிட்டார். தேசமணி சேர்க்கப்பட்டிருந்த மருத்துவமனையின் பெயரை எழுதிவைத்திருந்த சீட்டை மட்டும் இந்தச் செய்தியாளர் களேபரத்தில் தொலைத்துவிட்டார்.

எப்படியோ மருத்துவமனையைக் கண்டுபிடித்து வந்தவர் தேசமணியாரின் படுக்கையருகே வந்தார். அப்போது தேசமணியார் ஒரு மாம்பழத்தை உறிஞ்சி சுவைத்துக்கொண்டிருந்தார். எப்படியிருக்கீங்க தேசமணி என்றார். அதற்கு தேசமணி, நீங்க யாரு? என்று கேட்கவும் பதறிவிட்டார் வெள்ளைச்சாமி. ஈரேழு பதினான்கு லோகத்துக்கும் தன்னை யாரெனத் தெரியும் என்று நினைத்திருந்த வெள்ளைக்குத் தேசமணியார் தன்னை இப்படிச் சேதப்படுத்துகிறாரே என்று எரிச்சலாக இருந்தது. ஆனால், சமாளித்துக்கொண்டார். அருகிலிருந்து டாக்டர் தெலுங்கிசையிடம் கேட்டபோதுதான் அவர் தேசமணி இல்லை என்பது தெரிந்தது. அவரது பெயர் குண்டுகனி என்றும் தேர்தலில் ஏற்பட்ட மோதலில் அவர் படுகாயமடைந்தவர் என்றும் தெரியவந்தது. தனது வழக்கமான அசமந்தத்தனத்தால் மருத்துவமனை மாறிவிட்டதை அறிந்து வெளியேறினார் வெள்ளை.

தேசமணியைப் பார்ப்பதற்குள் அவரது சரித்திரத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்பதால் அருகிலிருந்த புத்தகக் கடைக்குச் சென்றார். எழுத்தாளர் பயபோகன் எழுதிய ‘முன்விழும் தேசமணியாரின் நிழல்’ என்ற நூல் கண்ணில் பட்டது. உடனே வாங்கிப் படிக்க ஆரம்பித்தார். ஒரு கோடீஸ்வரத் தாய்க்கு மகனாகப் பிறந்த தேசமணியார். செல்வச் செழிப்பு மிக்க வாழ்க்கை பிடிக்காமல் ஓர் ஏழைத் தாயைத் தத்து எடுத்து அவருடனேயே வாழ்ந்துவந்திருக்கிறார். ஒரு ரயில் கூட வராத வீராப்பூர் ரயில் நிலையத்தில் சிறுவயதில் சுக்கு காபி விற்றிருக்கிறார். இப்போதுகூட தேசமணியாரின் கையில் சுக்கு காபி கேனைத் தூக்கித் திரிந்த அடையாளமாக ஒரு தழும்பு காணப்படும் என்பதை வாசித்தபோது வெள்ளையின் கண்களிலிருந்து நீர் வழிந்தது. அதைத் தடவிப் பார்த்தவர் கண்ணீர் ஏன் சிவப்பு நிறத்திலிருக்கிறது யோசித்தபோதுதான் அது ரத்தம் என்பது உறைத்தது. நூலை வாசித்து முடிக்கவும், சப்பலோ மருத்துவமனை வரவும் சரியாக இருந்தது.

உள்ளே சென்ற வெள்ளைச்சாமிக்குப் பலத்த அதிர்ச்சி. தேசமணியார் டிவியில் நண்பர்கள் படத்தின் வெடிவேலு காமெடிகளைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார். அவரிடம் பேச்சுக்கொடுத்தபோது, அவரது உடல்நிலை குறித்த செய்தி இயந்திர பாடியாரின் செட்டப் என்று தெரிந்தது. வாக்குப்பெட்டிகளில் அஜால் குஜால் வேலை செய்துதான் சமோசா பார்ட்டி வென்றிருக்கிறது. அது வெளியே தெரியாமல் மறைக்கவே தேசமணியாரின் உடல்நிலை பற்றிய செய்தியைப் பரப்பியிருக்கிறது என்பதை அரசல் புரசலாகப் புரிந்துகொண்ட வெள்ளைக்குத் தன் மடத்தனத்தை நினைத்துச் சிரிக்கவா அழவா என்றே தெரியவில்லை. 

இந்து தமிழ் திசை நாளிதழின் இளமை புதுமை இணைப்பிதழில் 04.06.2019 அன்று வெளியானது.

நட்சத்திர நிழல்கள் 8: அனுராதா பாடிய புதிய ராகம்



தமிழ்த் திரையுலகில் திரைப்படங்களை இயக்கிய பெண்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. ஆர்வத்திலும் ஆசையிலும் சிலர் ஓரிரு படங்களை இயக்கியுள்ளனர். அப்படியான ஆர்வத்துடன் படத்தை இயக்கியவர்களில் ஒருவர் ஜெயசித்ரா. துணிச்சலான நடிகை என அறியப்பட்ட ஜெயசித்ரா 1991-ல் வெளியான, தனது முதல் படமான ‘புதிய ராக’த்தில் அனுராதா என்னும் வேடத்தை ஏற்றிருந்தார். அதுவே பெரிய துணிச்சல்தான். இது போதாதென்று இந்தப் படத்தின் கதையை, திரைக்கதையை எழுதியதுடன் இயக்கித் தயாரித்துமிருந்தார்.

அனுராதா பேரும் புகழும் பெற்ற பெரிய பாடகி. சமூக சேவையிலும் ஆர்வம் கொண்டிருப்பார். அவருக்கு வாய்த்த துணைவன் அக்மார்க் கணவன். பெயர் ரகு ராமன். பெயர்தான் புராணக் கதாபாத்திரத்தின் பெயரே தவிர. அந்தக் கதாபாத்திரத்துக்கு நேர் எதிரான குணங்களைக் கொண்டவர் அவர். இருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை மனைவியைச் சந்தேகப்படுவது மட்டுமே.

படத்தின் மையம் குடும்ப வன்முறைதான். அதற்கேற்றபடி குடும்பத்தில் அனுராதா சம்பாதித்துக்கொண்டே இருப்பார். ரகுராமனோ அதை வியாபாரத்தில் இழந்துகொண்டே இருப்பார். வியாபாரம் வியாபாரம் என்று சொல்வாரே தவிர அவர் எந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை யாராலும் கண்டுகொள்ள முடியாது. ரகுராமனிடம் இல்லாத கெட்ட பழக்கங்களே இல்லை என்று சொல்லுமளவுக்குப் புகை, குடி, கள்ள நோட்டு, பெண்கள் என அவரது கைங்கர்யங்கள் மிகப் பரந்த தளத்திலானவை. பூமிமாதா போல் இவை எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்வார் அனுராதா. காரணம் அவருக்கென்று யாரும் கிடையாது. வந்து வாய்த்தவன் இந்தப் போக்கிரித்தனமான கணவன் மட்டுமே. அவள் சாய்ந்துகொள்ளவும் தோள்வேண்டுமே? கணவன் எந்தத் தவறு செய்தாலும் தனக்கு நல்ல கணவனாக, தன்னிடம் பிரியமானவனாக நடந்துகொண்டால் மட்டும் போதும் என நம்பும் எண்ணற்ற மனைவிகளின் பிரதிநிதிகளில் ஒருவர்தான் அனுராதா. ஆனால், அப்படி எந்தக் கணவரும் நல்லவிதமாக நடந்துகொள்ளாதது போலவே ரகு ராமனும் நடந்துகொள்கிறார்.  

ராஜா என்னும் பாடகனை அனுராதா காதலித்திருப்பார். அவரையும் தியாகம் செய்துவிட்டுத் தான் ரகு ராமனைக் கைப்பிடித்திருப்பார். ராஜாவுக்காக அவருடைய முறைப்பெண் ஷீலா இருப்பார். இவர்கள் இணைய வேண்டுமென்றால் ராஜா வாழ்விலிருந்து அனுராதா விலக வேண்டுமே. ராஜாவின் பாட்டி அனுராதாவிடம் அந்தக் கோரிக்கையை வைக்க தன் காதலனை விட்டுக்கொடுத்து விலகிடுவார் அனுராதா. ஆக, அனுராதா காதலித்தவனை மணந்துகொள்ள முடியவில்லை; மணந்துகொண்டவனைக் காதலிக்க முடியவில்லை. இது அனுராதாவுக்கு மட்டுமே நிகழ்ந்த விபத்தில்லை. நூற்றுக்குப் பத்துப் பெண்கள்தாம் இந்த விபத்திலிருந்து தப்பியிருக்கிறார்கள்; ஏனையோர் இதில் சிக்கியிருக்கிறார்கள்.

ரகுராமன் மட்டுமே அனுராதாவைச் சுரண்டவில்லை. அவனுடைய குடும்பமே ஒட்டுண்ணியாய் அனுராதாவை உறிஞ்சுகிறது. அதை முடிந்த அளவு அனுராதாவும் அனுமதித்துக்கொண்டே இருக்கிறார். வேறென்ன செய்ய முடியும்? அவர் பெண்ணாயிற்றே? அனுராதாவின் பணப்பைகளை களவாடிய அந்தக் குடும்பம் அவருடைய கருப்பையைக் கூட விட்டுவைக்காது. அப்போதுதான் விழித்துக்கொள்கிறார். அப்போதும் விழித்துக்கொள்ளாவிட்டால் வாழும் வாழ்க்கைக்குப் பொருளே இருக்காதே. அதுவரை அவர் பாட்டுக்கு இழந்துகொண்டே இருப்பார். பொதுச் சபையில் கணவனை விட்டுக்கொடுக்கவும் மாட்டார். மனைவிகளுக்கே உரிய ‘பிறர் ஏதாவது நினைத்துக்கொள்வார்கள்’ என்ற தன்மையில் மூழ்கிப்போனவர்தானே அனுராதா. தன் வீட்டு விஷயம் வெளியே தெரிந்தால் தனக்கு அசிங்கம் என்ற கொள்கையில் அனுராதா காட்டும் உறுதிப்பாடு வேறு. ஆகவே, அவர் பாடுவார்; சம்பாதிப்பார்; கோவிலுக்குப் போவார். கணவனின் கொடுமைகளை எல்லாம் சகித்துக்கொண்டிருப்பார். இந்த நாடகத்தை நடத்தும் கடவுள், கல்லாய் அமர்ந்து எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார். கிட்டத்தட்ட புராண காலத்தில் ஒரு பெண் அனுபவித்திருந்த கொடுமைகளை எல்லாம் அவர் தாராளமய காலத்தில் பொறுத்துக்கொண்டிருப்பார். கூடையில் வைத்து ரகுராமனைச் சுமந்துசெல்லவில்லை என்பது மட்டுமே குறை. அதற்குப் பதில் கார் இருந்தது. அது ராமனை எங்கெங்கும் சுமந்து சென்றது.  

கணவனின் கொடுமைகளால் வந்துசேர்ந்த துயரங்களால் சோர்ந்து போயிருந்த அனுராதா வாழ்வில் மீண்டும் ஒரு தென்றல் வீசத் தொடங்குகிறது. அவளது வாழ்வில் வாசம் சேர்க்க வந்துசேர்கிறான் ராஜா. அவளை அவளது துயரங்களிலிருந்து மீட்டெடுக்கக்கூடிய மன்னவன் அவனாகத்தானே இருக்க முடியும்? திருமண வாழ்க்கை அனுராதாவுக்கு அளிக்காத குழந்தை பாக்கியத்தை ராஜாவுக்குப் பெற்றுத் தந்த திருப்தியுடன் ஷீலா வானுலகம் சென்றுவிடுகிறாள். ஷீலா இருந்திருந்தால் அனுராதாவுக்கு அவன் எப்படிக் கைகொடுக்க முடியும்?  சமூகம் கேள்வி கேட்காதா? ராஜா மணமான பின்னர்கூட நல்ல குணங்களைக் கைவிடாதவன். காதலன் நேர்மையாளனாக, பிறர் துயரம் உணர்ந்தவனாக இருப்பதுதானே இயல்பு.

அனுராதாவின் வாழ்க்கைக்குள் ராஜா மீண்டும் வந்து சேர்ந்த பின்னர் ராமனுக்குச் சந்தேகம் வருகிறது. வராவிட்டால் அவன் எப்படி ராமன்? இல்லற வாழ்வின் கசப்பு தாங்க முடியாத முடை நாற்றத்துடன் வெளிப்படுகிறது. ஆனாலும், எதையும் ராஜாவிடம் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை அனுராதா. ஆனால், அனுராதாவின் இன்னல்களை அவனே அறிந்துகொள்ளும்படியான சூழல்கள் வாய்க்கின்றன. தன் செல்ல மகன் அனு மோகனை அனு என அழைக்கிறான் ராஜா. அவனை ஏன் மோகன் என அழைக்கக் கூடாது எனக் கேட்கிறான் ரகுராமன். அனுராதாவின் பிறந்தநாளன்று கூடக் கோவிலுக்கு அர்ச்சனைக்கு வஸ்திரம் வாங்கிவிட்டு வருவதாகச் சொன்ன ரகுராமன் வரவேயில்லை. எதேச்சையாக ராஜாதான் வஸ்திரம் வாங்கிவந்து ஆபத்பாந்தவனாக உதவுகிறான். அனுராதாவுக்குத் தன்னால் முடிந்த அளவு ஆறுதலாக இருக்கிறான் ராஜா. கணவனின் பொறுப்பற்ற தனத்தை முடிந்த அளவு சகித்துக்கொண்ட அனுராதாவால் அவன் சொத்துக்காகத் தனது கருப்பையையே அறுத்த களவாணித் தனத்தைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. ஆவேசத்துடன் அவனை நோக்கிக் கேள்வி கேட்கிறாள்.

ஆணை அதுவும் தொட்டுத் தாலி கட்டிய கணவனை எப்படிக் கேள்வி கேட்கலாம்? கொதித்துப்போன ரகுராமன் மங்கல வாத்தியம் முழங்க அவளது கழுத்தில் தான் கட்டிய தாலி இருக்கும் திமிரில் தானே இப்படிப் பேசுகிறாள் என்றெண்ணி மதிப்புமிக்க அந்தத் தங்கத் தாலியை அறுத்து எறிகிறான். அது நேராக அங்கிருந்த கழிப்பறையில் போய் விழுகிறது. அந்தக் கணத்தில் அனுராதாவின் தன்மானம் சட்டென்று விழித்துக்கொள்கிறது. இல்லையென்றால் பிழிந்து பிழிந்து அழுதுகொண்டிருந்திருப்பாள். சுயமரியாதை சுடர்விட்டதால் நீரைத் திறந்துவிட்டு மங்கலத் தாலியைக் கழிவுநீரில் மூழ்கடிக்கிறாள். அதுவரை வெறும் பதுமையாகத் திரிந்த அனுராதா புதுமைப் பெண்ணாகச் செய்த ஒரே உருப்படியான காரியம் இதுதான். தாலியே விலகிய பிறகு கணவனுக்கென்ன தனி மரியாதை. அவனைவிட்டு விலகி ராஜாவுடன் இணைகிறாள். வலைக்குத் தப்பி உலையில் வீழ்ந்ததுபோல் இந்தப் புதுவாழ்வும் அவருக்கு அமைந்திருந்திருக்கலாம். ஆனால், நலமாக அமையும் என்று நம்பியே இதைப் புதிய ராகம் என்கிறார் ஜெயசித்ரா. கணவன், காதலன், மகன் போன்ற ஆண் மக்கள் எல்லாம் ஒருநாளும் பெண்ணுக்கான வழித் துணையாக அமையப்போவதில்லை என்பதை அனுராதாக்கள் உணர்ந்துகொள்வதே அவர்களுக்கான விழிப்பாக இருக்கும்.

என். ஜி. கே. அமெச்சூர் அரசியல்


தொழில்நுட்பக் கல்வி முடித்துப் பெரிய கனவுடன் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் இளைஞனுக்கு அரசியல்வாதிகளால் ஏற்படும் தொல்லைகளும் அதனால் அவரது சொந்த வாழ்வில் ஏற்படும் மாற்றங்களுமான பயணமே என்.ஜி.கே.

நந்த கோபாலன் குமரன் சுருக்கமாக என்.ஜி.கே. ஸ்ரீவில்லிபுத்தூரில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுவருகிறார். கர்ப்பிணியை மருத்துவமனையில் சேர்க்கிறார்; இளம்பெண்ணுக்கு வேலை பெற்றுத்தர முயல்கிறார். இப்படி ஒரு கதாநாயகன் செய்ய வேண்டிய எல்லா சமூக நலப் பணிகளிலும் ஈடுபடுகிறார். இவரது நல்ல செயல்களால் தங்கள் பிழைப்பு பாதிக்கப்பட்டதாக நம்பும் உள்ளூர் வியாபாரிகள் அவரை எச்சரிக்கிறார்கள். ஆனால் அடிபணிய மறுக்கிறார் என்.ஜி.கே. ஆகவே, இவரது விவசாய நிலம் எரிக்கப்படுகிறது. உதவி கேட்டு உள்ளூர் எம் எல் ஏவிடம் (இளவரசு) செல்கிறார். என்.ஜி.கே. தேர்தல் நேரத்தில் பயன்படுவார். என்பதால் எம்.எல்.ஏ உதவுகிறார். உடனே வேலை முடிகிறது. இதைக் கண்ட என்.ஜி.கே. அரசியல்வாதிகளுக்கு இருக்கும் அதிகாரத்தை உணர்ந்து தானும் அரசியலுக்கு வர முற்படுகிறார். அதற்காக அவர் மேற்கொள்ளும் பகீரதப் பிரயத்தனங்களே என்.ஜி.கே.



முதன்மைக் கதாபாத்திரமான என்.ஜி.கே.வின் இலக்கு என்ன என்பது அவருக்குத் தெரியாமல் இருக்கலாம். இயக்குநருக்குத் தெரிந்திருக்க வேண்டாமா? அரசு, அரசாங்கம், அரசியல் போன்றவை குறித்து பாமரருக்கு என்ன புரிதல் இருக்குமோ அந்தப் புரிதல்கூட இல்லாமல் வெகுமக்கள் திரளுக்கான கருத்துகளை அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். என்.ஜி.கே, முதல்வராகவே ஆகிவிடுவதெல்லாம் டூ மச் செல்வராகவன். அதிலும் மேடையில் சூரியா பேசும் காட்சி அபத்தம். பெரிய பிரசங்கமே நிகழ்த்துகிறார். தெளிவில்லாத திரைக்கதை, நேர்த்தியற்ற கதாபாத்திரச் சித்தரிப்புகள் ஆகியவை காரணமாகப் படத்தின் காட்சிகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் அலுப்பைத் தருகின்றன.

அரசியல்வாதியிடம் அவமானப்படுவது, மனைவியின் சந்தேகப்பார்வையை எதிர்கொள்வது. குடும்பத்தினரிடம் தனது கனவுக்கான அங்கீகாரத்தைக் கோருவது என சூர்யா தனது நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்த முயல்கிறார். அவரது நடிப்புக்குத் தீனி போடும் காட்சிகள் உள்ளன. ஆனால், அவரது கதாபாத்திரச் சித்தரிப்பு பலவீனமாக உள்ளதால் அவரது நடிப்பு முழுக்க வீணாகப்போகிறது.



சாய்பல்லவி கணவனை உயிருக்குயிராக நேசிக்கும் மனைவியாக வந்துபோகிறார். என்.ஜி.கே வாழ்வில் வானதி (ரகுல் பிரீத் சிங்) வந்த பின்னர் அவர்களுக்கிடையேயான உறவை நினைத்துத் தன் வாழ்வில் நிம்மதியை இழக்கும் கதாபாத்திரம் அவருக்கு. சூர்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் அவர் புதுப்பேட்டை தனுஷை நினைவுபடுத்துகிறார்.

செல்வராகவன் திரைப்படங்களில் தலைகாட்டும் எக்ஸெண்ட்ரிக் தன்மை இதிலும் சாய் பல்லவியிடமும் சூர்யாவிடமும் அவ்வப்போது தலைகாட்டுகின்றன. ஆனால், அது படத்துக்கு வலுச்சேர்ப்பதற்குப் பதிலாகப் பலவீனமாக வெளிப்படுகின்றன. சாய் பல்லவி தனிப்பட்டவகையில் தன் நடிப்பு வாழ்க்கையில் என்.ஜி.கே. முக்கியமானது என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ரசிகர்களைப் பொறுத்தவரை இது பத்தோடு பதினொன்று.



படத்தின் பல காட்சிகள் மிகவும் செயற்கையாக உள்ளன. உதாரணம்: என்.ஜி.கே விவசாயம் குறித்து விதந்தோதி பேசும் காட்சி, வானதிக்கும் சூர்யாவுக்குமான டூயட் பாடல் காட்சி. வானதியின் கதாபாத்திரத்தை அவ்வளவு பயங்கரமாக அறிமுகப்படுத்திவிட்டு அவர் சூர்யாவைப் பார்த்த உடன் காதல் வயப்படுபவராகக் காட்சிப்படுத்தியிருப்பது உச்சபட்சக் கொடுமை.   

பொன்வண்ணன், வேல ராமமூர்த்தி, பாலாசிங், உமா பத்மநாபன், நிழல்கள் ரவி என அநேக நடிகர்கள் நடித்துள்ளனர். ஓரளவு நல்ல நடிகர்களை மோசமாக நடிக்கவைத்துள்ளதில் செல்வ ராகவன் பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளார். 

சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு படத்துக்குத் தேவையானதைத் தந்திருக்கிறது. இசை யுவன் சங்கர் ராஜா. பின்னணியிசையில் என்னென்னவோ செய்திருக்கிறார். புரட்சிகரமான வரிகளைக் கொண்ட பாடல்கள் திடீர் திடீரென்று வந்து பயமுறுத்துகின்றன. எதிலும் மனம் ஒட்டாதபடி காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.



அரசியல்வாதிகளை நாங்கள் சமாளித்துக்கொள்கிறோம் இத்தகைய அமெச்சூர் சினிமாக்காரர்களிடமிருந்து அரசியல் படங்களை யாராவது காப்பாற்ற வேண்டும் என நினைக்கவைத்து விடுகிறார் செல்வ ராகவன். ஒரு காட்சியில் ‘பாய் சைல்ட்’ என ஒரு வசனம் வருகிறது. மேல் சைல்ட் என்றால் ஓகே அதென்ன பாய் சைல்ட்? இப்படியான வசனத்தை எழுதிவிட்டு வெட்கமே இல்லாமல் அரசியல் குறித்து பிரசங்கம் செய்வதற்கெல்லாம் பெரிய துணிச்சல் வேண்டும் மிஸ்டர் செல்வராகவன்.

புதுப்பேட்டை அவலை நினைத்து என்.ஜி.கே. உரலை இடித்திருக்கிறார் செல்வராகவன். நசுங்கியதென்னவோ ரசிகர்களின் தலைகள்தாம்.

சனி, ஜூன் 01, 2019

யோமெடின்: அவரும் மனிதர் தானே?


எகிப்திய-ஆஸ்திரிய இயக்குநர் அபு பக்கர் ஷாகி எகிப்தின் தலைநகரான கெய்ரோவைச் சேர்ந்தவர். அடிப்படையில் ஆவணப்பட இயக்குநரான அவருடைய முதல் முழு நீளத் திரைப்படம் ‘யோமெடின்’. தீர்ப்பு நாள் என்று பொருள் படும் இந்தப் படம் 2018-ம் ஆண்டு கான் பட விழாவில் முதலில் திரையிடப்பட்டது. விமர்சகர்களின் பெருவாரியான வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் அந்த ஆண்டில் ஆஸ்கருக்கு அனுப்பப்படுவதற்கான எகிப்தியப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது; ஆனால், ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படவில்லை. 

இயக்குநர் ஷாகி 2008-ம் ஆண்டில் ‘த காலனி’ என்னுமோர் ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார். தொழுநோய் காலனி ஒன்றில் வாழும் தொழுநோயாளிகள் பற்றிய படமிது. அந்தத் தொழுநோயாளிகளை நேர்காணல்செய்து அதை ஆவணப்படுத்தியிருந்தார். இந்தப் பட உருவாக்கத்தின்போது, ஷாவ்கிக்குக் கிடைத்த அனுபவங்கள் காரணமாகத் தொழுநோயாளிகளின் வாழ்க்கைக் கதைகளை அடிப்படையாக வைத்து முழு நீளத் திரைப்படம் ஒன்றை உருவாக்கும் எண்ணம் வந்திருக்கிறது. ஆனால், அது படமாவதற்குப் பத்து ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. 


‘யோமெடின் திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் பெஷேய். எகிப்தின் தொழுநோய் காலனியில் சிறுவயதிலேயே தந்தையால் கொண்டுவந்து விடப்பட்டவர் அவர். நோய் குணமானதும் வந்து அழைத்துக் கொள்வதாகக் கூறிச் சென்ற தந்தை அதன் பின்னர் வரவேயில்லை. தொழுநோயிலிருந்து பெஷாய் விடுபட்டுவிட்ட போதும் அவருடைய முகத்தில் தொழுநோய் விட்டுப் போயிருந்த தழும்புகளும் கைகளின் விரல்கள் மடங்கிய தோற்றமும் அவரை பிறரிடமிருந்து விலக்கிவைக்கப் போதுமானவையாக இருந்தன. பொதுச் சமூகம் முகச்சுளிப்புடனேயே பெஷாயை எதிர்கொள்ளப் பழகியிருந்தது. எல்லோரையும்போல் அவரும் ஒரு மனிதர் தான் என்பது அவருக்கு எளிதாகப் புரிந்திருந்தது. ஆனால், தோற்றக் குறைபாடற்ற ஒருவருக்கும் அது ஒழுங்காகப் புரியவில்லை. அவர்கள் பெஷாயை விநோதமாகப் பார்த்தார்கள். அவரைப் போன்றே ஆதரவற்ற மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அவருடைய மனைவியாக இருந்தார். அவரும் உயிர்நீத்த பிறகு இந்தப் பரந்த உலகத்தில் தனித்துவிடப்பட்டவராகிறார் பெஷாய். சுமார் 40 வயதைத் தொட்ட நிலையில் மனம் தனிமையை ஆழமாகவும் அழுத்தமாகவும் உணர்கிறது. இந்தத் தனிமையைப் போக்கிக்கொள்ளத் தனது குடும்பத்தினரைச் சந்தித்தால் போதும் என்ற எண்ணம் பெஷாயிக்கு வருகிறது. அவர்கள் தன்னைத் தம்முடன் இணைத்துக்கொள்வார்கள் என்ற ஆசையுடன் அவர்களைத் தேடிச் செல்கிறார். 

எகிப்தின் வடக்கு மூலையிலிருந்து தெற்கு மூலைக்கு அவர் சென்றால்தான் குடும்பத்தினரைப் பார்க்க முடியும். அவரை யாரும் சக மனிதனாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதால் தன்னிடம் இருக்கும் ஒரு கழுதை பூட்டப்பட்ட பழைய வண்டியில் செல்ல முடிவெடுக்கிறார். அவ்வளவு நீண்ட தொலைவு பயணப்படுவதற்குத் தோதான வாகனமல்ல அது. அதன் தோற்றமே எப்போது காலைவாருமோ என்றிருக்கும். அவர் பழைய பொருட்களைச் சேகரித்து அதில் கிடைத்த வருமானத்தில்தான் தன் வயிற்றைக் கழுவிக்கொண்டிருந்தார். அதற்குப் பயன்படுத்திய வண்டி அது. குறைவான தொலைவுக்கே அது தாங்கும் என்றபோதும், துணிவுடன் அதில் புறப்படுகிறார் பெஷாய். அவருடனே வந்து ஒட்டிக்கொள்கிறான் ஒபாமா என்னும் ஆதரவற்ற சிறுவன். விரட்டிவிட்ட போதும் அவன் விலகாமல் அவருடன் வருவேன் என அடம்பிடித்து உடன் வருகிறான். இந்த இருவரும் இணைந்து செல்லும் பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் மனிதர்களும் சம்பவங்களுமாகவுமே அனுபவம் தருகிறது யோமெடின். 


படத்தின் தொடக்கத்தின் பெஷாயின் முகத்தை நம்மால் சட்டென்று இயல்பாகப் பார்க்க இயலவில்லை. எகிப்தின் குப்பைக் கூளம் நிறைந்த, காய்ந்துபோன அந்த வறண்ட பூமியை எப்படி வேண்டா வெறுப்பாகப் பார்க்கிறோமோ அப்படித்தான் பெஷாயையும் பார்க்க முடிகிறது. ஆனால், படம் நகர நகர பெஷாய் நம்முடன் ஒட்டிக்கொள்கிறார். தொழுநோய்த் தழும்புகள் நிறைந்த அந்த முகத்தை நம்மால் இயல்பாகப் பார்க்க முடிகிறது. அவருடைய முகம் குளோஸ் அப் காட்சியில் காட்டப்படும்போது நன்கறிந்த நண்பரைப் பார்ப்பதுபோல் நம்மால் அவரைப் பார்க்க முடிகிறது. படம் இதைத் தான் குறிப்புணர்த்த முற்படுகிறது. படத்தின் இசையும் ஒளிப்பதிவும் நம்மை பெஷாயுடனும் ஒபாமாவுடன் அழைத்துச் செல்கின்றன. 

பெஷாய் வேடமேற்றிருந்த ரேடி கமால் பிறவி நடிகரல்ல; அவர் தொழுநோய் காலனியில் இருந்தவர்தான். ஆனால், ஒரு நடிகரைவிட அழுத்தமாக அந்தக் கதாபாத்திரத்தின் உணர்வுகளைப் பார்வையாளர்களிடம் கொண்டுசேர்த்திருக்கிறார். சிறுவன் ஒபாமா, படத்தில் வரும் கால்களற்ற மனிதர் போன்ற பலர் திரைக்குப் புதிதானவர்கள். அதனாலேயே இது ஒரு திரைப்படம் என்பதைத் தாண்டி ஒரு அன்னியோன்யமான உணர்வைத் தருகிறது. 


மனிதர்கள் எல்லோருக்குமே சக மனிதர்களால் நேசிக்கப்பட வேண்டும் என்றும் தம்மைப் பற்றிய நினைவுகளைப் பிறர் கொண்டிருக்க வேண்டும் என்றும் தானே விரும்புவார்கள். பெஷாய்க்கும் அந்த ஆசைதான் இருந்தது; அந்த ஆசை மட்டுமே இருந்தது. அவர் செல்லும் வழியில் பல தடைகள் வந்தபோதும் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டார். அவருடைய குடும்பம் கூட அவரை ஏற்றுக்கொண்டது. ஆனாலும் அவர் அங்கிருக்கவில்லை. அவர்கள் ஏற்றுக்கொண்டதே அவருக்குப் பெரிய நிம்மதி. அதன் பின் எந்த வெட்கமுமற்று பொதுவெளியில் பிரவேசிக்கும் தைரியம் அவருக்கு வந்து விட்டது. பொதுவெளியில் பிற மனிதருடன் இயல்பாகக் கலந்துகொள்வதைவிட வேறு என்ன தேவைப்படப் போகிறது ஒரு மனிதருக்கு?  

லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்