சமீப காலங்களில் வரும் மலையாளத் திரைப்படங்களில் தென்படும் வாழ்க்கை நவீனத்தால் மலையாளிகள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது. அந்த வகையில் மாறுபட்டு மரபைத் தூக்கிநிறுத்தும் படம் எந்நு நிண்டெ மொய்தீன். அரதப்பழசான முக்கோணக் காதல் கதைதான் இதன் அடிப்படை. இந்து முஸ்லிம் காதல். பிரியப்பட்ட மொய்தீனுக்காக காஞ்சனமாலா காத்திருக்கிறாள். அவள் காத்துக்கொண்டேதான் இருக்கிறாள். மொய்தீனை அவளிடமிருந்து முதலில் மதம் பிரித்தது. பின்னர் விதி பிரித்தது. கடைசிவரை மொய்தீனுடன் அவள் சேரவேயில்லை.
அழகான விஷயங்களை அழகாகக் காட்டுவது ரசனைக்குரியது. ஆனால் எல்லாக் காட்சிகளையும் வரவேற்பறையின் ஓவியம் போல அழகுபடுத்துவது கலைக்கு அழகு சேர்ப்பதாக அமையாது என்றே தோன்றுகிறது. இந்தப் படத்தில் அந்தத் தவறு நிகழ்ந்திருக்கிறது. ரசமான அழகியல் சொட்டச் சொட்டக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் உத்தி திகட்டவைக்கிறது. படத்தின் நீளமோ அதிகத்திலும் அதிகம். இடையில் கம்யூனிஸ சித்தாந்தம் வேறு தலைகாட்டிச் செல்கிறது. வெறும் காதல் படமாகவே மாறிவிடக் கூடாது என்பதற்கான எத்தனிப்பாகவே இது பயன்பட்டுள்ளது.
பெண்ணின் பெருமையைச் சொல்லும் படம் இது என மேம்போக்காகச் சொல்லிவிடலாம். ஆனால் இந்தப் படத்தின் மையக் கருத்து பிற்போக்குத்தனமானது. தான் விரும்பிய நாயகனுக்காக ஒரு பெண் காத்திருந்தாள் என்பது ஆண்களைக் கிறங்கடிக்கும் போதை. சமகால வாழ்வின் சிக்கல்களை அந்தக் கால மலையாளப் படங்களே வீரியத்துடன் பேசிய நிலையில் பழைய காலப் பெருமையை நவீன காலத்தில் பேசியுள்ள செல்லுலாய்ட் சித்திரமாக பல்லிளிக்கிறது எந்நு நிண்டெ மொய்தீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக