மழை பெய்வதற்கு வாய்ப்பற்ற நிலத்தில்
வசிப்பிடம்
அமையப்பெற்றவன்
தாவரங்களில் மிதந்தலையும் ஈரத்தின் வாசனை
நாசியைத் துளைக்கும் கனவுகளில்
வெம்மையைக் கரைத்திட முயல்வான்
சாளரத்தின் வழியே
வானத்தில் கருமேகங்கள் திரளாதா
என
அவதானிப்பதைப் போன்ற கண்கள் அவனுக்கு
மழைத்துளியின் ஈரம் நிலத்திலிருந்து அகலவே அகலாத
தொலைதூர நகரமொன்றிற்குப் புறப்படும்
அவனது எத்தனிப்புகள்
முறியடிக்கப்பட்டுவிடுகின்றன
அவனது வறண்ட நிலத்தை நோக்கி
வந்த மழைத்துளிகளில் நனையத் தலைப்பட்டவன்
கரத்தினில் திணிக்கப்பட்ட கருங்குடை
அன்பால் நெய்யப்பட்டு
அக்கறையால் பிணைக்கப்பட்டிருந்தது
அதன் வளைந்த கைப்பிடிக்குள் அகப்பட்டுக்கொண்ட
நனைதலின் வேட்கை
உப்பாய்க் கரைந்தது
அந்தச் சிறு பறவை
ஈர இறகுகளோடு பறந்தது
எல்லோரையும் நனைக்கும் பொருட்டு மழை தொடர்ந்து பெய்கிறது
மிகச் சிறப்பாக, மிக அழகாக சொல்லிவிட்டீர்கள். நொய்மை தீர திருமண ஏற்பாட்டிற்குள் செல்வதுபற்றி சிந்தியுங்கள். "கருமேகங்கள் திரளாதா" என்ற வரிகள் அதையும்தான் குறிக்கிறதோ?
பதிலளிநீக்கு