பெயரில் மட்டுமல்ல தம் புனைவுகளிலும் பெரும் புதுமைகளை மேற்கொண்டவர் எழுத்தாளர் புதுமைப்பித்தன். அவரைப் போல் தன் புனைபெயருக்கு நியாயம் சேர்ந்த பிறிதொரு எழுத்தாளரைக் கண்டுபிடிப்பது அரிது. நாற்பத்தியிரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த புதுமைப்பித்தனின் எழுத்துகள் அவருக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கௌரவமான இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. புதுமைப்பித்தனின் எழுத்துகளை யார் பிரசுரித்தாலும் அவற்றை வாங்கிக்கொள்ள ஒரு பெரும் வாசகர் கூட்டம் இருக்கிறது. இந்த அளவுக்குத் தமிழ் இலக்கிய உலகில் தனிக் கவனத்தைப் புதுமைப்பித்தனுக்குப் பெற்றுத்தந்ததில் புதுமைப்பித்தன் வரலாறு என்னும் இந்நூலுக்குக் கணிசமான பங்கிருக்கிறது.
இது புதுமைப்பித்தனது அனைத்து வாழ்க்கைச்
சம்பவங்களையும் நிகழ்வுகளையும் விரிவாக விளக்கும் வரலாறு அல்ல, ஆனால் இந்த நூலின்
வழியே புலப்படும் புதுமைப்பித்தனின் ஆளுமை வாசக மனத்தில் கல்வெட்டுப் போல
பதிந்துவிடுகிறது. அதன் முக்கியக் காரணம் தொ.மு.சி.ரகுநாதனின் பள்ளத்தில் பாயும்
தெள்ளிய நீரைப் போன்ற நடை. புதுமைப்பித்தனின் உருவம், பழக்க வழக்கம், பழகும் தன்மை
என அவரது ஆளுமையின் அத்தனை பரிமாணங்களையும் திரட்டித் தந்துவிடும் முயற்சியை
நூலில் உணர முடிகிறது.
1906 ஏப்ரல் 25 அன்று திருப்பாதிரிப்புலியூரில்
பிறந்த புதுமைப்பித்தன் 1948 ஜூன் 30 அன்று திருவனந்தபுரத்தில் காலமானார். இந்த
இடைப்பட்ட காலத்தில் பத்திரிகை, இலக்கியம், திரைப்படம் போன்ற காரணங்களுக்காகத் திருநெல்வேலி,
திருவனந்தபுரம். புனே எனப் பல்வேறு திசைகளில் வாழ்க்கை அவரை அலைக்கழித்திருக்கிறது.
அவருக்கு எட்டு வயதானபோது அவருடைய தாயார் வையத்திலிருந்து விடைபெற்றுவிட்டார்.
அன்னையின் பராமரிப்போ பாசமோ கிட்டாத நிலையில் பால்யத்தைக் கடந்த புதுமைப்பித்தனின்
நெஞ்சில் தாயன்பு குறித்த ஏக்கம் நிரந்தரமாகவே தங்கிவிட்டது. அந்த ஏக்கத்தின் வெளிப்பாடுதான்
தன் மகளுக்கு பர்வதகுமாரி எனத் தாயாரின் பெயரைச் சூட்டவைத்திருக்கிறது. தந்தையுடன்
சுமூக உறவு அற்ற அவரை மனைவியின் அன்புதான் மலரச் செய்திருக்கிறது. மனைவியை விட்டு
வெகுதூரத்தில் இருக்க நேர்ந்த நாட்களில்கூட அவரை ஆற்றுப்படுத்தி அமைதிப்படுத்தும்
ஆற்றல் கொண்டதாக இருந்திருக்கிறது அவருடைய அன்பு. கலைமகளின் கருணையால் எழுத்தாளராகப்
பெரும் புகழைப் பெற்ற நேரத்தில் திரைப்பட முயற்சியில் ஈடுபட்டுத் திருமகளின்
திருவுளத்தையும் சம்பாதிக்க முயன்ற புதுமைப்பித்தனை எமன் அழைத்துக்கொண்டான்.
புதுமைப்பித்தன் என்னும் பெயரைக் கேள்விப்பட்ட
மாத்திரத்தில் மகத்தான எழுத்தாளர் என்ற பெருமிதம் நெஞ்சில் எழுகிறது. ஆனால்
வாழ்ந்த காலத்தில் புதுமைப்பித்தன் வாழ்வில் எதிர்கொண்ட துயரங்களைப் பக்கம்தோறும்
பேசுகிறது இந்நூல். தினசரி வாழ்வை நடத்தவே திண்டாடிய அவருடைய எழுத்துகள் இப்போது
பலரை வாழவைத்துக்கொண்டிருக்கிறது என்பது நகைமுரணே. எழுத்தைத் தொழிலாகக் கொண்ட எழுத்தாளரின்
வாழ்வைக் காலமென்னும் கரையான் கொஞ்சம் கொஞ்சமாக அரிப்பதில்லை, சிறிதுகூட
விட்டுவைக்காமல் மொத்தமாக அரித்துவிடுகிறது என்பதற்குச் சான்றாக அமைந்திருக்கிறது
புதுமைப்பித்தனின் வாழ்க்கை.
புதுமைப்பித்தனின் எழுத்துகளை அறிந்தவர்களுக்கு
அவரை அறிமுகப்படுத்தும் இந்நூல் அவருடைய சிறுகதை ஒன்றைப் போல் விறுவிறுப்பாகச்
செல்கிறது. சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்புகள். கட்டுரைகள்,
விமர்சனங்கள் எனப் பெரிய ராஜாங்கத்தையே பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குள்
கட்டியெழுப்பியிருக்கிறார் புதுமைப்பித்தன். இப்படியொரு கலைமேதையின் வாழ்க்கை
வரலாற்றை வெறும் 28 வயதில் எழுதி முடித்திருக்கிறார் தொ.மு.சி.ரகுநாதன்.
புதுமைப்பித்தன் வரலாறு என்னும் இந்நூல் முதல் பதிப்பு கண்டது 1951-ல். முதலில்
தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்ட இந்நூலின் அடுத்தடுத்த பதிப்புகளை 1958-ல் ஸ்டார்
பிரசுரமும் 1980-ல் மீனாட்சி நிலையமும் பின்னர் என்.சி.பி.எச். 1991-லும்
வெளியிட்டிருக்கின்றன. கணக்குக்கு ஐந்தாவது படைப்பான இந்நூலை, புதுமைப்பித்தன்
படைப்புகளுக்குச் செம்பதிப்பை உருவாக்கியிருப்பவரும் தமிழின் குறிப்பிடத்தகுந்த வரலாற்றாய்வாளருமான
ஆ.இரா.வேங்கடாசலபதியின் விரிவான முன்னுரையுடன் காலச்சுவடு பதிப்பகம்
பதிப்பித்திருக்கிறது.
புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாற்றுக்கான நல்ல
பொருள் என முன்னுரையில், புதுமைப்பித்தனின் வார்த்தைகளில் பதிப்பாசிரியர் சலபதி
கூறியிருப்பது சத்தான வாசகம் மட்டுமல்ல சத்தியமான வாசகமும்கூட. அந்தப்
பொருளுக்குச் சுவையும் சுவாரசியமும் கூட்டுவதற்காகத் தன்னால் இயன்ற முயற்சிகள் அனைத்தையும்
மேற்கொண்டிருக்கிறார் அவர். 04.03.1978 அன்று திருச்சி வானொலி நிலையத்தில்
தொ.மு.சி.ரகுநாதனை சுந்தர ராமசாமி செய்த நேர்காணல் இந்நூலுக்கு முழுமையைக்
கூட்டும் முனைப்பின் விளைவே. புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றில் சில இடங்களில்
காணப்படும் வெற்றிடங்களை இந்த நேர்காணல் நிரப்புவதால் புதுமைப்பித்தன் குறித்த
முழுமையான சித்திரத்தைத் தீட்டுவதற்கு இது உதவுகிறது. இது தவிர, பின்னிணைப்பில்
இந்த நூலில் பெயர் குறிப்பிடாத ஆளுமைகள் யார் யாரென்ற தகவலைத் தந்திருக்கிறார் சலபதி.
இது இலக்கிய ஆர்வலருக்கும் ஆய்வாளருக்கும் பெருந்துணையாக அமையும். தமிழ்
எழுத்தாளர்களுக்கு முறையான வரலாறு எழுதப்படாத சூழலில் ரகுநாதன் மூலம் கிடைக்கப்பெற்ற
இந்த வரலாற்று நூல் சிறப்பான ஆக்கமாக இருப்பதால் இதை வறண்ட சூழலில் பூத்த அத்தி என
முன்னுரையில் சலபதி குறிப்பிடுவது மிகப் பொருத்தமே.
புதுமைப்பித்தன் வரலாறு
தொ.மு.சி.ரகுநாதன்
காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,
669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629001
தொலைபேசி: 04652278525
இதன் எடிட் செய்யப்பட்ட பிரதி 02.07.2016 அன்று தி இந்துவில் வெளியானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக