கரைகளை இணைத்து நிற்கும்பாலம்
திடுமென அறுந்துவிடுகிறது
மிகச் சரியாகப் பாலத்தின் ஆணிவேரை
ஒற்றைச் சொல் பலமாகத் தாக்கிவிடுகிறது
சொல்லின் நோக்கம் பாலத்தின் வீழ்ச்சியல்ல என்பதை
அது உணர்த்தும் முன்னமே தவிடுபொடியாகிவிடுகிறது பாலம்.
மீண்டும் மெல்ல மெல்லப்
பல தருணங்களில் பதமான சொல்லெடுத்து
இதங்களில் தோய்த்து தோய்த்து
பாலத்தை உருவாக்குவதற்குள்
அடுத்த சொல்லைப் பிரசவிக்க ஆயத்தமாகிவிடுகிறான் பிரிவிளவரசன்.
கண்ணிமைக்கும் நேரத்தில் கைதவற விடும் பொருளெனச்
சொல் விழுகிறது
வெடிமருந்துக் குவியலில் வீழும் நெருப்புப் பொறியாய்
வெடித்த சத்தமில்லை
புகையும் நெருப்பும் இல்லை
பொசுங்கிய பறவை நாசியில் மட்டும் நெடிக்குப் பஞ்சமில்லை
கவனமாகக் கையிலெடுத்துப் பூங்கொத்தாய்
முன்னரொரு நாள் நீட்டிய சொல்லொன்று
இன்றேன் சாட்டையாய் மாறி தானாய்ச் சுழலத் தொடங்கிவிட்டது.
கைக்குள் சிக்கவில்லை
வலைக்கும் வாகில்லை
கரைக்கு மீளவில்லை
கடலில் பிணத்தை மிதக்கவிட்டு
மீனாய் மாறி
நீலக் கடலுக்குள் பயணப்படுகிறது
அந்த விபரீதச் சொல்
"கண்ணிமைக்கும் நேரத்தில் கைதவற விடும் பொருளெனச் சொல் விழுகிறது"...வார்த்தைகள் தடித்து குரலுயர்ந்த எல்லாக் கணங்களின் அடுத்த கணங்கள் இன்னும் வருந்தும் கணங்கள்தான். எந்த இடத்தில் எப்படி விழுந்ததோ இங்கே உங்கள் வார்த்தைகள் மிகச் சரியாக விழுந்திருக்கின்றன.
பதிலளிநீக்குஇடும்பைக்கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது என்பது போல் வார்த்தைகளோடும் வாழ்தல் அரிதுதான். மனிதனால் இன்னும் சொற்களைச் சரிவரப் புரிந்துகொள்ள இயலவில்லை அல்லது தவறாகப் புரிந்துகொள்கிறான்.
பதிலளிநீக்குநண்பருக்கு நன்றி. தொடர்ந்து வலைப்பதிவை வட்டமிடுவதற்கு.