இந்த வலைப்பதிவில் தேடு

புதன், ஜூலை 23, 2014

தேசிய விடுதலை இயக்கத்தின் பிதாமகர்

பால கங்காதர திலகர் பிறந்தநாள் ஜூலை 23


சுதந்திரம் எனது பிறப்புரிமை என முழங்கிய பால கங்காதர திலகர் 1856-ம் ஆண்டு ஜூலை 23 அன்று பிறந்தார். சிப்பாய்க் கலகம் ஏற்படுவதற்கு ஓர் ஆண்டு முன்னர் பிறந்த திலகர் ஓர் அறிஞர்; கணிதத்தில் புலமை மிக்கவர்; தத்துவவாதி; தேசிய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். மராட்டிய மாநிலம் ரத்தினபுரியில், நடுத்தர வர்க்கத்துப் பிராமணக் குடும்பத்தில் பிறந்த திலகர் சிறு பிராயத்திலிருந்தே அநீதிக்கு எதிராகப் பொங்கி எழுந்தார். நேர்மையும் உண்மையும் கடைப்பிடிக்கத் தகுந்தவை என எண்ணி இறுதிவரை செயல்பட்டார். பத்து வயதில் தாயை இழந்த திலகர் பதினாறு வயதில் தந்தையையும் இழந்தார்.

பள்ளிப் படிப்பு முடிந்த பின்னர் டெக்கான் கல்லூரியில் சேர்ந்து 1877-ல் பி.ஏ. கணிதம் பட்டம் பெற்றார். பின்னர் சட்டம் பயின்றார். ஆனால் திடீரென்று கணித ஆசிரியராக முடிவுசெய்தார். பூனாவில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்குக் கணிதத்தைக் கற்பித்தார். மேற்கத்திய கல்வி முறை இந்தியக் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பாழ்படுத்துவதாக எண்ணினார். இந்தப் பள்ளி வாழ்வே அவரது அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்டது. இந்தப் பள்ளியைத் திலகர் கல்லூரியாக உயர்த்தப் பாடுபட்ட திலகர் அதில் வெற்றியும் பெற்றார். நல்ல கல்வியே சிறந்த குடிமக்களை உருவாக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டார் திலகர். அதனால் தன் தோழர்களான அகர்கர், சமூக சீர்திருத்தவாதி விஷ்ணுசாஸ்திரி சிப்லங்கர் ஆகியோர் ஒத்துழைப்புடன் டெக்கான் எஜுகேஷன் சொஸைட்டி என்னும் அமைப்பை உருவாக்கி அநேகருக்கு ஆங்கில மொழியையும் முறையான கல்வியையும் கற்றுக்கொடுத்தார்.

ஆங்கிலேய ஆட்சியின் அலங்கோலங்களைக் கண்ட திலகர் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என விரும்பினார். இதனால் கேசரி, மராத்தா என்னும் இரண்டு வார இதழ்களை நடத்தினார். கேசரி மராட்டிய மொழியிலும் மராத்தா ஆங்கில மொழியிலும் வெளிவந்தது. இவற்றின் மூலம் திலகர் வெளிப்படுத்திய கருத்துகள் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வையும் விடுதலை வேட்கையையும் உருவாக்கின. உறங்கிக் கிடந்த தேசத்தின் ஆன்மைவைத் திலகரின் எழுத்துகள் உலுக்கின. 1890-ல் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.


தேசம் முழுவதும் ஆங்கிலேய ஆட்சிக்கெதிரான மனநிலையை உருவாக்கவும் தேசியவாத இயக்கம் பரவவும் மக்களை ஒன்று திரட்டவும் அவர் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டையும் வீர சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் பயன்படுத்திக்கொண்டார். இவரது முயற்சியால் தேச விடுதலைப் போராட்ட மனநிலை நாடு முழுவதும் உருவானது. இதனால் சினம் கொண்ட ஆங்கிலேய அரசு 1897-ல், சட்டம் ஒழுங்கைக் குலைப்பதாகவும் சமூக ஒழுங்குக்குப் பங்கம் விளைவிப்பதாகவும் அவர்மீது குற்றம் சுமத்தி அவரைச் சிறையிலடைத்தது. ஆனால் சிறை சென்ற அவருக்கு லோகமான்ய அதாவது மக்களால் விரும்பப்படும் தலைவர் என்னும் அடைமொழி கிடைத்தது. சிறையிலிருந்து வெளிவந்த சில ஆண்டுகளுக்குப் பின்னர் 1905-ல் கர்சன் பிரபு கொண்டுவந்த வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து சுதேசி இயக்கத்தைத் திலகர் தீவிரமாக முன்னெடுத்தார்.

1906-ல் தேசத் துரோகக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி மீண்டும் திலகரை பர்மாவில் உள்ள மண்டலே சிறையிலடைத்தது ஆங்கிலேய அரசு. அப்போது கீதாரகசியா என்னும் நூலை எழுதினார். சிறையிலிருந்து வெளிவந்த திலகர் தீவிரவாதிகளையும் மிதவாதிகளையும் ஒன்றிணைக்கப் போராடினார். ஆனால் அவரது எண்ணம் ஈடேறவில்லை. 1916-ல் ஹோல் ரூல் இயக்கத்தைத் தொடங்கி இந்தியா முழுவதும் கிராமம் கிராமமாகச் சென்றார். 1919-ல் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலை திலகரைக் கடுமையாகப் பாதித்தது. 1920-ம் ஆண்டு ஆகஸ்டு 1 அன்று திலகர் காலமானார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பம்பாயில் இருந்த அவரது இல்லத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

செவ்வாய், ஜூலை 15, 2014

எளியவர்களுக்கு ஏற்றம் தந்த காமராஜ்


கர்ம வீரர் எனப் பிரியத்துடன் அழைக்கப்பட்டவர் காமராஜர். 1903-ம் ஆண்டு ஜூலை 15 ல் விருதுநகரில் ஒரு தேங்காய் வியாபாரியின் மகனாகப் பிறந்தார். அவருடைய அப்பா குமாரசாமி. அம்மா சிவகாமி அம்மாள். காமராஜர் பள்ளி மாணவனாக இருக்கும்போதே அவரது அப்பா இறந்து விட்டார். குடும்பத்தை வறுமை சூழ்ந்தது. காமராஜருடைய அம்மா சிவகாமி அம்மாள் காதில் போட்டிருந்த நகையைத் தவிர குடும்பத்தில் இருந்த எல்லா நகைகளையும் விற்றார். அதை உள்ளூர் வியாபாரியிடம் கொடுத்தார். அதில் இருந்து கிடைத்த வட்டியைக் கொண்டு குடும்பத்தை நடத்தினார்.

பள்ளியில் காமராஜர் மிகவும் சாதாரணமான மாணவராகவே இருந்தார். ஆறாம் வகுப்பு வரைதான் படித்தார். பிறகு தாய்மாமா கருப்பையாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் கடையில் இருந்து திடீர் திடீரெனக் காணாமல் போய்விடுவார். வரதராஜுலு நாயுடு, ஜார்ஜ் ஜோஸப் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் நடத்தும் பேரணியில் கலந்துகொள்ளச் சென்றுவிடுவார். அந்தப் பருவத் திலேயே அவருக்குத் தீவிரமான அரசியல் ஈடுபாடு இருந்தது. குடும்பத்தைவிடச் சமூகமே அவருக்குப் பிரதானமாகப் பட்டது. உள்ளூரில் இருந்தால் அரசியல் கூட்டங்களுக்குப் போய்விடுகிறார் என்பதால் திருவனந்தபுரத்தில் உள்ள மற்றொரு உறவினரின் கடைக்குக் காமராஜரை அனுப்பி வைத்தனர்.


அங்கும் காமராஜரால் அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருக்க முடியவில்லை. அங்கே கோயில் இருந்த தெருக்களில் நடமாடக் கூடாது என இருந்த தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக வைக்கம் எனுமிடத்தில் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. அதில் காமராஜர் கலந்துகொண்டார். உறவினர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. திருமணம் செய்துவைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்தனர். ஆனால் காமராஜர் அதற்கும் வளைந்துகொடுக்கவில்லை. தனது 16-ம் வயதில் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகி முழு நேரமும் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். 1930-ல் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையிலான உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டார்.

விருதுநகர் அஞ்சலகத்தில் வெடிகுண்டு வீசிய வழக்கில் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என அவருக்காக வரதராஜுலு நாயுடுவும் ஜார்ஜ் ஜோஸபும் வாதாடி வெற்றிபெற்றனர். ஆனால் 1940-ல் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறையிலிருந்தபோது விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முழு நேர சமூகப் பணிக்குத் தன்னை ஒப்படைத்தபோது காமராஜருக்குக் கல்வியின் அவசியம் புரிந்தது. தேச விடுதலைக்காகப் போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறையில் இருந்த காலத்தில் கல்வியைத் தானாய்த் தேடிக் கற்றார்.

பின்னாளில் அவர் முதல்வரான பிறகு அனைவருக்கும் இலவசக் கல்வி என்னும் திட்டத்தைக் கொண்டு வந்தார். அரசியலில் காங்கிரஸ் தலைவர் சத்யமூர்த்தியைக் குருவாகக் கொண்டு செயல்பட்டார் காமராஜர். 1936-ல் சத்தியமூர்த்தி மாகாண காங்கிரஸ் தலைவராக ஆனபோது காமராஜரை மாகாண காங்கிரஸ் செயலாளர் ஆக்கினார். நாடு விடுதலை அடைந்த பின்னர் காமராஜர் 1954-ல் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிட்ட பக்தவத்சலத்தையும், சி. சுப்ரமணியத்தையும் தனது அமைச்சரவையில் அமைச்சராக்கிக்கொண்டார்.


அரசியலில் காங்கிரஸ் தலைவர் சத்யமூர்த்தியைக் குருவாகக் கொண்டு செயல்பட்டார் காமராஜர். 1936-ல் சத்தியமூர்த்தி மாகாண காங்கிரஸ் தலைவராக ஆனபோது காமராஜரை மாகாண காங்கிரஸ் செயலாளர் ஆக்கினார். நாடு விடுதலை அடைந்த பின்னர் காமராஜர் 1954-ல் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிட்ட பக்தவத்சலத்தையும், சி. சுப்ரமணியத்தையும் தனது அமைச்சரவையில் அமைச்சராக்கிக்கொண்டார். காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவந்த நீர்ப்பாசனத் திட்டங்களும், தொழிற்சாலைகளும் அவரது மதிநுட்பத்தை வெளிப்படுத்துபவை. எளிய குடும்பங்களின் வறுமை ஏழைக் குழந்தைகளின் கல்வியைத் தின்றுவிடக் கூடாது எனும் நோக்கத்தில் மதிய உணவுத் திட்டத்தை மாநில அளவில் கொண்டுவந்தார். ஒரே நபர் கட்சிப் பணியையும் அரசுப் பொறுப்பையும் வகிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி 1963-ல் காமராஜர் திட்டம் என்பதைக் கொண்டுவந்தார். இந்தத் திட்டத்தின்படி முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார். கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.

1965-ல் இந்தியப் பிரதமர் நேரு மறைந்த பின்னர் லால் பகதூர் சாஸ்திரியையும் பின்னர் இந்திரா காந்தியையும் பிரதமராக்கினார். பிரதமர் பதவி தன்னைத் தேடி வந்த போதும் பெருந்தன்மையுடன் அதை மறுத்த மகா மனிதர் காமராஜர் 1975-ம் ஆண்டு அக்டோபர் 2 அன்று காலமானார். காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த நீர்ப்பாசனத் திட்டங்களும், தொழிற்சாலைகளும் அவரது மதிநுட்பத்தை வெளிப்படுத்துபவை. எளிய குடும்பங்களின் வறுமை ஏழைக் குழந்தைகளின் கல்வியைத் தின்றுவிடக் கூடாது எனும் நோக்கத்தில் மதிய உணவுத் திட்டத்தை மாநில அளவில் கொண்டுவந்தார்.

ஞாயிறு, ஜூலை 13, 2014

மக்கள் தலைவர் ஜோதிபாசு



கல்கத்தா நகரில் மருத்துவராயிருந்த நிஷிகண்ட பாசு, ஹேமலதா பாசு தம்பதிக்கு 1914-ம் ஆண்டு ஜூலை 8 அன்று மூன்றாவதாக ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இந்தியாவில் அதிக ஆண்டுகள் சேவையாற்றிய முதலமைச்சராகப் பின்னாளில் அந்தக் குழந்தை மாறும் என்பது அப்போது யாருக்கும் தெரியாது. அந்தக் குழந்தைதான் மேற்கு வங்காளத்தில் 28 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்து சாதனை படைத்த ஜோதிபாசு. உயர் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஜோதிபாசு 1920ல் அங்கிருந்த லோரெடா பள்ளியிலும் பின்னர் புனித சவேரியார் பள்ளியிலும் பயின்றார்.

தற்போது பிரசிடென்ஸி கல்லூரி என அழைக்கப்படும் இந்து கல்லூரியில் தனது ஆங்கிலப் பட்டப் படிப்பைத் தொடர்ந்தார். 1935-ல் பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக இங்கிலாந்து நாட்டிற்குச் சென்றார். அங்கு படித்த காலத்தில் இந்திய மாணவர்களை ஒருங்கிணைக்கும் வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1937-ல் இங்கிலாந்தில் செயல்பட்ட இந்திய மாணவர்களுக்கான அமைப்பான இந்தியா லீக்கில் உறுப்பினரானார். லண்டன் மாஜிலிஸ் இயக்கத்திலும் சேர்ந்தார். இந்திய விடுதலைக்காக மாணவர்களை அணி திரட்டிப் போராடினார். 1938-ல் ஜவஹர்லால் நேரு லண்டன் சென்றபோது அவரைச் சந்தித்தார் ஜோதிபாசு. இந்திய மாணவ நண்பர்கள் உதவியுடன் இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஜோதிபாசுவுக்குத் தொடர்பு ஏற்பட்டது. ஒரு குழுவை ஏற்படுத்திக்கொண்டு கிழக்கு லண்டனிலிருந்த படிப்பறிவற்ற எளிய இந்தியர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்தார்.


1940-ல் கல்கத்தா திரும்பிய ஜோதிபாசு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தான் சேரப்போவதாகத் தெரிவித்தார். அவரது அறிவிப்பால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் பேச்சிழந்துபோனார்கள். ஆனால் அவரது விருப்பத்திற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாமல் போனது. 1940-ல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது. ஆனாலும் தலைவர்களுடன் தொடர்புகொண்டார் ஜோதிபாசு. கட்சியின் முழுநேர ஊழியர் ஆனார். இதை அடுத்து தலைமறைவாக இருந்த தலைவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் பணி ஜோதிபாசுவின் தோளுக்கு வந்தது. அதை நேர்த்தியாக செய்துமுடித்தார் அவர்.

1940-ல் பாஸாந்தி கோஷ் என்பவரைத் திருமணம் புரிந்துகொண்டார். ஆனால் திருமண வாழ்வில் ஜோதிபாசுவுக்குப் பலத்த அடியாக அவரது மனைவியின் மரணம் அமைந்தது. 1942-ம் ஆண்டு மே 11 அன்று அவரது மனைவி அகால மரணம் அடைந்தார். மகனின் திருமண வாழ்வில் ஏற்பட்ட சோகம் ஜோதிபாசுவின் தாயாரைக் கடுமையாகப் பாதித்தது. சில மாதங்களுக்குள் அவரும் காலமானார். 1944-ல் வங்காள அஸ்ஸாம் ரயில்வே தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் பணிக்குப் பொறுப்பேற்றுக்கொண்டார். 1946-ல் வங்காள சட்டசபைக்கு ரயில்வே தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படார்.


பின்னர் 1948-ல் கமல் பாசுவைத் திருமணம் செய்துகொண்டார். 1951-ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீக்கப்பட்டது. அதே வருடம் ஜோதிபாசுவுக்கு குழந்தை பிறந்து சில தினங்களில் நோயால் மரித்தும்போயிற்று. 1953-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிரிவு ஏற்பட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்பது பொலிட்பீரோ உறுப்பினர்களில் அவரும் ஒருவரானார்.

1967, 1969 ஆண்டுகளில் தேசிய முன்னணி ஆட்சியின்போது மேற்கு வங்காள மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருந்தார். 1977-ம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி அமைந்தபோது முதலமைச்சரான ஜோதிபாசு 2000 ஆண்டுவரை தொடர்ந்து பதவி வகித்தார். அந்த ஆண்டில் உடல்நிலை காரணமாகப் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். தொடர்ந்து கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஜோதிபாசு 2010-ம் ஆண்டு ஜனவரி 17 அன்று காலமானார்.

தி இந்து வெற்றிக்கொடி பகுதிக்காக எழுதியது. 2014 ஜூலை 7 இதழில் வெளியானது.

திங்கள், ஜூலை 07, 2014

இயல்பின் அழகு


அது ஓர் எளிய கிராமம். அங்கு இரண்டு புகழ்பெற்ற கோவில்கள் இருந்தன. ஒரு ஜென் கோவிலில் அழகான தோட்டம் ஒன்று இருந்தது. இந்தத் தோட்டத்தைக் குரு ஒருவர் பராமரித்துக்கொண்டிருந்தார். அவருக்கு செடி,கொடிகள் மீதும் பூக்கள் மீதும் அளவற்ற பிரியம் உண்டு. அதனால் தான் அந்தத் தோட்டத்தைப் பராமரிக்கும் பணியே அவருக்குக் கிடைத்தது. தோட்டத்தையும் அங்கிருந்த செடி கொடிகளையும் குழந்தைகளைப் பராமரிப்பது போல அன்புடன் அந்தக் குரு கவனித்துக்கொள்வார். 

அந்த ஜென் கோவிலுக்கு அருகிலேயே மற்றொரு சிறிய கோவிலும் இருந்தது. அங்கு வயதானதொரு ஜென் துறவி வசித்து வந்தார். இரண்டு கோவில்களையும் பெரிய சுவர் ஒன்று பிரித்துவைத்திருந்தது. ஆனால் பெரிய கோவிலில் குரு செய்யும் அனைத்து வேலைகளையும் ஜென் துறவியால் அவரது கோவிலிலிருந்தே பார்க்கக்கூடிய வகையிலேயே அந்தச் சுவர் அமைந்திருந்தது. 

ஒரு நாளின் அதிகாலையிலேயே கோயிலைப் பராமரித்து வந்த குரு பரபரப்பாகக் காணப்பட்டார். அன்று அந்தக் கோவிலுக்கு யாரோ முக்கியமான விருந்தினர் வருகையை எதிர்பார்த்துத் தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளை வெட்டி விட்டபடி அழகுபடுத்திக்கொண்டிருந்தார். ஒரு குழந்தையைப் போல் குரு அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தார். செடி கொடிகள் வாடியிருக்கின்றனவா என்று நிமிடத்திற்கு ஒரு தரம் பார்த்து தண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார்.இதைக் கண்ட ஜென் துறவிக்கு வியப்பாக இருந்தது. 

தனது வேலைகளை எல்லாம் திருப்தியாக முடித்த பின்னர் அவற்றை எல்லாம் பெருமையாகப் பார்வையிட்டார் குரு. அப்போது தான் அருகிலுள்ள கோவிலிருந்து ஜென் துறவி தன்னையே கவனித்துக்கொண்டிருப்பதைக் குரு பார்த்தார். உடனே ஜென் துறவியை நோக்கிக் குரு, “எனது தோட்டம் எப்படி இருக்கிறது, பார்க்க அழகாக இருக்கிறதா?” என்று கேட்டார். “ஆமாம்” என்று சொன்ன ஜென் துறவி, ”ஆனால் ஒரு சிறிய குறை இருக்கிறது என்னைத் தோட்டத்திற்குத் தூக்கி விடு அதை நான் சரிசெய்கிறேன்” என்று சொன்னார். 

எல்லாவற்றையும் திருப்தியாகச் செய்தும் என்ன குறை வந்துவிட்டது எனப் பதறிவிட்டார் குரு. ஆனாலும் துறவி வந்து சரிசெய்யப்படும் பார்த்துக்கொள்ளலாம் என்றெண்ணி அவரைத் தோட்டத்துக்குள் வருவதற்காகத் தூக்கிவிட்டார். தோட்டத்திற்குள் வந்த ஜென் துறவி தோட்டத்தின் நடுவே இருந்த மரம் ஒன்றை நோக்கி விரைந்தார். மரத்தின் அருகே சென்று அதன் அடி மரத்தைப் பிடித்துப் பலமாக உலுக்கினார். இதனால் மரத்திலிருந்து இலைகளுக்கும் பூக்களும் நிலத்தில் பொலபொலவென உதிர்ந்தன. குரு அதிர்ச்சியுடன் ஜென் துறவியைப் பார்த்தார். இப்போது இந்த இலைகளையும் பூக்களையும் மரத்தில் மறுபடியும் இணைத்துவிடு” என்று கூறி விட்டு ஜென் துறவி நடையைக் கட்டிவிட்டார்.  

ஞாயிறு, ஜூலை 06, 2014

வெள்ளை அடித்தால் குளுமையாகும் கட்டிடம்


கோடைகாலத்தில் மட்டும் வெயில் கொளுத்தும் என்பதெல்லாம் பழங்கதையாகிவிட்டது. பழங்காலத்தில் விதவிதமான கட்டுமான முறையைக் கையாண்டு கட்டிடத்திற்குள் வெம்மையான சூழலைக் குறைத்தார்கள். வீடுகளுக்கெல்லாம் வெள்ளை நிறச் சுண்ணாம்புதான் பூசுவார்கள். அப்போதெல்லாம் வெயில் நேரத்தில் சாதாரண மின்விசிறியைக் கொண்டே வெப்பத்தை விரட்டிவிட முடிந்தது. குளிர்சாதன வசதி என்பதெல்லாம் மிக மிக வசதி படைத்தவர்களால் மட்டுமே ஏற்படுத்திக்கொள்ள முடிந்த விஷயமாக இருந்தது. சாதாரண மனிதர்களின் வசிப்பிடங்களில் அதிக அளவில் குளிர்சாதன வசதி தேவைப்பட்டிருக்கவில்லை. ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல. அடிக்கும் வெயிலை விரட்ட குளிர்சாதன வசதி மிகவும் அவசியம் என்னும் நிலைமை உருவாகிவிட்டது. காரணம் இப்போது நமது கட்டுமான முறையும் மாறிவிட்டது. கான்கிரீட் தவிர்க்க முடியாத கட்டுமான பொருளாகிவிட்டது. கான்கிரீட் கட்டிடங்களில் பகல் முழுவதும் அடிக்கும் வெயில் காரணமான வெப்பம் உள்ளுக்குள்ளேயே தங்கி நள்ளிரவுக்குப் பின்னும் கட்டிடம் தகிக்கிறது. 

நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டேயிருக்கும் வெயிலின் தாக்கத்தைச் சாதாரண மின்விசிறி மூலம் துரத்த முடியவில்லை. மாலை வேளைகளில் கட்டிடங்கள் மீது குடம் குடமாய் நீரை ஊற்றினாலும் கட்டிடத்தின் உள்ளே ஊடுருவும் வெப்பத்தைத் தவிர்க்க முடியவில்லை. வளைகுடா நாடுகள் போல் நமது நகரங்களிலும் கிராமங்களிலும் கூட அனைத்து வசிப்பிடங்களிலும் அலுவலகங்களிலும் வெம்மையை விரட்ட குளிர்சாதன வசதி பொருத்தப்படுவது அவசியம் என்னும் நிலை உருவாகியுள்ளது. ஓஸோன் படலத்தில் விழுந்த ஓட்டை காரணமாக புவியின் வெப்பம் அதிகமாகிறது என்கிறார்கள் நிபுணர்கள். இயற்கையை நம்மால் எளிதில் கட்டுப்படுத்த இயலாது. அதை எதிர்த்து நிற்கும் வழியைக் கண்டுபிடிப்பது மட்டும் தான் நம்மால் முடிந்த செயல். அப்படியானால் வெப்பத்தை எதிர்க்க என்ன வழி? அனைத்துக் கட்டிடங்களிலும் குளிர்சாதன வசதியைப் பொருத்திவிடலாமா? அதுவும் சாத்தியாமானதில்லை. எல்லோருக்கும் அதற்கான பொருளாதார வசதி இடம் கொடுக்காது; மேலும் கிராமங்களில் மின்சாரமே பெரும் பிரச்சினை பிறகெப்படி குளிர்சாதன வசதி உதவும்? எல்லோரும் குளிர்சாதனவசதியைப் பொருத்தினாலும் அதனால் ஏற்படும் விளைவால் சுற்றுச்சூழலும் மாசுபடவே செய்யும். 

ஆக கட்டிடத்திற்குள் வெப்பம் பரவாமல் இருக்கும் மாற்றுவழியைத் தேடிக்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு தொழில்நுட்பம் ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளது. அது ஒன்றும் புதிய முறை அல்ல. பழங்காலத்தில் நமது முன்னோர்களிடம் வழக்கத்தில் இருந்த நடைமுறைதான். கட்டிடத்தின் மீது வெள்ளை நிற பெயிண்ட் அடிப்பதுதான் அது. கட்டிடத்தின் கூரைமீது வெள்ளை நிற வண்ணமடித்தால், கட்டிடத்தில் படரும் வெயிலால் உருவாகும் வெம்மையைக் குறைக்க முடியும் என்கிறார்கள் கட்டிட நிபுணர்கள். இதை ஆய்வு மூலம் நிரூபித்திருக்கவும் செய்கிறார்கள். நிபுணர்கள் நடத்திய ஓர் ஆய்வில் ஒரு கட்டிடத்தின் கூரைமீது வெள்ளை பெயிண்ட் அடித்திருக்கிறார்கள். மற்றொரு கட்டிடத்தில் வேறு வண்ணத்தைப் பூசியிருக்கிறார்கள். இரண்டு கட்டிடங்களின் உள்ளேயும் நிலவும் வெப்ப நிலையை இரண்டு மூன்று மாதங்களாகக் குறித்திருக்கிறார்கள். வெள்ளை பெயிண்ட் அடித்த கட்டிடத்தில் வெப்ப நிலை இரண்டிலிருந்து நான்கு டிகிரி செல்சியஸ் வரை குறைவாகவே இருந்திருக்கிறது. 

வெள்ளை நிறம் வெப்பத்தை எவ்வளவுக்கு எவ்வளவு உள்வாங்குகிறதோ அதே அளவு அப்படியே வெளியிட்டுவிடும். வெப்பத்தை அப்படியே உள்ளே வாங்கி வைத்துக்கொள்ளாது. கொளுத்தும் வெயிலில் விளையாடும் வீரர்களுக்கு வெள்ளை நிற உடை தருவது இந்தக் காரணத்தால்தான். ஆகவே கூரைமீது வெள்ளை அடித்தால் வெப்பத்தை தவிர்க்க முடியும் என்னும் தொழில்நுட்பத்தைப் பரவலாக எடுத்துச் சென்றால் கட்டிடத்தின் மீது கடும் வெப்பம் இறங்கும் சூழலை ஓரளவு சமாளிக்கலாம். மழை நீர் சேகரிப்பு போன்ற நடைமுறைகளைக் கட்டாயப்படுத்தியது போல் இந்த வெள்ளை பெயிண்ட் அடிப்பதையும் கட்டிட அனுமதி தரும்போதே வலியுறுத்தினால் அதன் மூலம் கட்டிடத்தின் வெம்மையைக் குறைத்து கட்டிடத்திற்கு குளுமையைக் கொண்டுவரலாம்.

லேட்டஸ்ட்

இலக்கற்ற வாசிப்பு சரியா, தவறா?

தொடர்பவர்

பார்வையாளர்