இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், செப்டம்பர் 30, 2021

கதாநாயகர் பிடியிலிருந்து விலகிடுமா தலித் சினிமா?

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23 அன்று அவர் தான் நடிக்கும் ஜெய் பீம் என்னும் படத்தின் போஸ்டரைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதுவரை சூர்யா 39 எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருந்த படத்தின் பெயரையும் போஸ்டரையும் ரசிகர்களுக்காகப் பரவசத்துடன் பகிர்வதாகவும் தெரிவித்திருந்தார். அந்த டிவிட்டர் பதிவைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களது ஒட்டுமொத்தக் கவனமும் ஜெய் பீம் மீது திரும்பியது. ஏற்கெனவே சூர்யா நடித்து அமேசான் பிரைமில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அது திராவிட அரசியல் பேசியதாகச் சொல்லப்பட்டது. கடந்த முறை சூர்யாவின் திரைப்படம் திராவிட அரசியல் பேசி வெற்றிபெற்றதாகச் சொல்லப்பட்ட நிலையில் இம்முறை தலித் அரசியலைப் பயன்படுத்தி வெற்றிபெற முயல்கிறதோ என்னும் எண்ணத்தை அந்த போஸ்டர் ஏற்படுத்தியது. சூரரைப் போற்று திரைப்படம் போலவே ஜெய் பீம் திரைப்படமும் அமேசான் பிரைமில் அதுவும் தீபாவளி நாளன்று வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வைத்து அந்தப் படத்தின் கதையையோ அந்தப் படம் விவாதிக்கும் விஷயத்தையோ முடிவுசெய்திட முடியாது. ஜெய் பீம் பட போஸ்டரில் வெளிப்பட்டிருக்கும் சூர்யாவின் தோற்றத்தை வைத்து அவர் ஒரு வழக்கறிஞராக நடித்திருக்கலாம் என ஊகிக்க வாய்ப்புள்ளது. ஏழை எளியவர்களுக்காக வாதாடும் வழக்கறிஞராக அவர் இருக்கலாம். நீதியரசர் சந்த்ரு வழக்கறிஞராக இருந்தபோது, இருளர் பெண் ஒருவருக்காக 1990களில் நடத்திய சட்டப் போராட்டத்தின் அடிப்படையிலான படம் எனவும் தகவல்கள் கூறுகின்றன. அவற்றை எல்லாம் நாம் படம் பார்த்துதான் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், படம் எப்படியிருக்கும் என்பது தொடர்பான ஓர் எதிர்பார்ப்பை அந்த போஸ்டர் உருவாக்கியது. ஒருவேளை அது தலித் அரசியலைப் பேசலாம் என ஊகிக்க அந்த போஸ்டர் இடம்கொடுத்தது. இது திட்டமிட்ட ஏற்பாடாக இருக்கலாம்.  

தொடர்ந்து எந்த வகைப் படங்கள் வெற்றிபெறுகின்றன என்பதைக் கவனித்து அப்படியான படங்களை சினிமாக்காரர்கள் உருவாக்குகிறார்கள். காதல் படங்கள் வெற்றிபெற்றால் காதல் படங்களாக வரும். இப்போது தலித் படங்களுக்கான காலம்.  பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்துக்குப் பின்னர் தலித் படங்கள் பற்றிய பேச்சு தமிழ்த் திரையுலகில் பரவலானது எனலாம். மெட்ராஸ் படத்தின் வெற்றியை அடுத்து இரஞ்சித் ரஜினியை இயக்க ஒப்பந்தமானார். கபாலி ரஜினி படமாக இருந்தபோதும், இதுவரை ரஜினி படம் எந்த அடையாளத்துக்குள்ளும் சிக்காமல் இருந்த நிலை மாறியது. ஏழை எளியவரின் நாயகனாக இருந்த ரஜினி தலித்துகளின் நாயகனாகப் பரிணமித்திருந்தார். கோட் சூட் அணிந்து, சோபாவில் அமர்ந்து ரஜினி சீன வில்லனுக்கு எதிராக, ”நான் முன்னுக்கு வருவதுதான் ஒனக்கு பிரச்சினைன்னா நான் முன்னுக்கு வருவேன்டா கோட் சூட் போடுவேன்டா” என்று பேசும் வசனமும் ரஜினி தலித் அரசியல் பேசுவதான தோற்றத்தைத் தந்தது. இந்த பாணி ரஜினிக்கும் பிடித்துப்போயிருக்கலாம் உடனே அடுத்த படத்தின் இயக்குநராகவும் இரஞ்சித்தை அமர்த்திக்கொண்டார். காலா படமாக்கப்பட்டது. இதிலும் தலித் அரசியலை நினைவுபடுத்தும் வசங்களும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. ரஜினியே தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்துவிட்டதால் தலித் படங்களுக்கான சந்தை இருப்பது உறுதிப்பட்டிருக்கலாம். அதைத் தொடர்ந்து பரியேறும் பெருமாள், அசுரன், கர்ணன் என வெளியான படங்களின் வெற்றி தலித் அரசியலுக்குப் பெரிய சந்தை இருக்கிறதோ என்ற எண்ணத்தைப் பரவலாக்கியிருக்கலாம்.

தமிழ்த் திரைப்படங்களில் தலித்துகள் பற்றிய சித்தரிப்பு இரஞ்சித் படங்களுக்கு முன்னர் இடம்பெற்றதே இல்லையா என்றால் இடம்பெற்றிருக்கிறது. இயக்குநர் கே.சுப்ரமணியம் இயக்கி, 1936இல் வெளியான பாலயோகினி திரைப்படத்திலேயே சாதி வேற்றுமைகளைச் சாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தில் பட்டியலின வேலைக்காரர் வீட்டில் பார்ப்பனக் கைம்பெண் ஒருவர் அடைக்கலமாவார். இதனால் ஆத்திரம் அடைந்த வைதீகர்கள் பட்டியலின வேலைக்காரர் வீட்டைத் தீயிட்டுக் கொளுத்திவிடுவார்கள். இவரது இயக்கத்தில் 1939இல் வெளியான தியாகபூமி படத்தில் ஒடுக்கப்பட்டோருக்குக் கோயிலில் இடம்கொடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. 1987இல் மு.கருணாநிதி கதை வசனத்தில், சொர்ணம் இயக்கத்தில் ஒரே ரத்தம் என்றொரு படம் வெளியானது. இதிலும் ஒடுக்கப்பட்டோருக்கு இழைக்கப்படும் தீங்குகள், தீண்டாமை குறித்த காட்சிகள் உண்டு. இந்தப் படத்தில் இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நந்தகுமார் என்னும் தலித் இளைஞனாக வேடமேற்றிருப்பார். இரட்டைக் குவளை தொடர்பான காட்சிகூட இடம்பெற்றிருக்கும்.

1985ஆம் ஆண்டில் சிறுமுகை ரவியின் இயக்கத்தில் விஜய்காந்த் நடிப்பில் வெளியான அலை ஓசை படத்தில் இளையபாரதி எழுதி இளையராஜா இசை அமைத்த ‘போரடடா ஒரு வாளேந்தடா’ என்னும் பாடல் அது வெளியான காலத்தைவிட அண்மைக் காலத்தில்தான் அதிகம் ஒலித்திருக்கிறது. எண்பதுகளில் இந்தப் படம் சராசரியான பொழுதுபோக்குப் படம் என்ற முத்திரையை மட்டுமே பெற முடிந்தது. இப்போது அந்தப் பாடலுக்குக் கிடைத்த கவனம் அப்போது கிடைத்ததா என்பது சந்தேகம்தான்.

இப்படி ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் துயரங்கள் தமிழ்த் திரைப்படங்களில் தொடர்ந்து பேசப்பட்டிருந்தாலும் தமிழில் தலித் சினிமா என்னும் பேச்சு இப்போதுதான் காதுகளில் ஒலிக்கிறது. இதுவரை பார்ப்பனரும் ஆதிக்கசாதியினருமான ஒடுக்கியவரே ஒடுக்கப்பட்டவருக்கான நியாயத்தைப் பேசிவந்தார். அந்த நிலைமை இப்போது மாறியிருக்கிறது. உள்ளேயிருந்த வரும் குரலாக இப்போது தலித்துகளின் குரல் வெளிப்படுகிறது. குனிந்து குனிந்து கிடந்தவர்கள் குமுறி எழுந்து கேள்வி கேட்கிறார்கள் என்பதுதான் மிகப் பெரிய வேறுபாடு. உதாரணமாக, காலா திரைப்படத்தில் ஹரிதாதா காலா வீட்டில் தண்ணீர் குடிக்காத காட்சிக்குப் புதியதொரு அர்த்தம் கிடைத்தது அதனால்தான்.    

அதே நேரத்தில் தலித் படங்கள் எனப் பெரிய அளவில் விதந்தோதப்பட்ட மெட்ராஸ், பரியேறும் பெருமாள், அசுரன், கர்ணன் ஆகிய படங்கள் கவனிக்கப்பட்ட அளவுக்கு தலித்துகளின் பிரச்சினைகளைப் பேசிய அம்ஷன்குமார் இயக்கிய மனுஷங்கடா, லீனா மணிமேகலை இயக்கிய மாடத்தி ஆகிய படங்கள் பெரிதாகக் கவனிக்கப்படவில்லையே?  அதில் சொல்லிக்கொள்ளும்படியான நாயகர்கள் இல்லாததாலா?

பா.இரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில், “இங்க வாய்ப்புன்றது நமக்குல்லாம் அவ்வளவு சீக்கிரம் கெடச்சிட்றது கெடயாது இது நம்ம ஆட்டம் எதுக்க நிக்கிறவன் கலகலத்துப்போகணும்… நீ ஏறி ஆடுடா கபிலா இது நம்ம காலம் பாத்துக்கலாம்” எனும் வசனம் ஒலிக்கும்போது, பின்னணியில் சுவரில் அம்பேத்கர் படம் போட்ட சுவரொட்டி தென்படும். இந்தப் பின்னணியுடன் பார்க்கும்போது, இந்தப் படத்துக்கு வேறொரு புரிதல் கிடைத்துவிடுகிறது. அதனடிப்படையில் இதை தலித் படம் எனச் சொல்லிவிட முடியுமா? இது குத்துச் சண்டை தொடர்பான சுவாரசியமான பொழுதுபோக்குப் படம்தானே?

இந்தப் பின்னணியில், சூர்யாவின் ஜெய் பீம் படத்தைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். இருளர் பின்னணியில் உள்ளதால் அது தலித்துகளின் வாழ்வியல் சிக்கல்களைப் பேசும் படமாக இருக்குமா? அப்படியிருப்பின் நல்லது. ஒருவேளை அம்பேத்கரின் சாயலைக் கொண்டு வணிக வெற்றியடைய முயலும் தந்திரமாக இருந்தால்? ஏனென்றால், அம்பேத்காரின் கொள்கைகளை விவாதிப்பதைவிட அவரது படம், புத்தர் சிலை, நீல நிற கோட் போன்ற அடையாளங்களை வைத்துக்கொண்டு பிரபல நடிகர்களைத் தீப்பொறி பறக்கும் வசனம் பேசவைத்தால் போதும் அது தலித் சினிமாகிவிடும், ரசிகர்களுக்கும் கிளர்ச்சி கிடைத்துவிடும் என்று சினிமாக்காரர்கள் நினைக்கிறார்களோ என்ற சந்தேகத்தைத் தவிர்க்க முடியவில்லை.  

கதாநாயகர்கள் எந்தச் சட்டையையும் அணிந்துகொள்வார்கள். அது நீல நிறமோ சிவப்பு நிறமோ கறுப்பு நிறமோ அது பற்றி அவர்கள் அக்கறை கொள்வதில்லை. அவர்களுக்குத் தேவை வெற்றி, அவ்வளவுதான். ஆனால், இரஞ்சித் போன்ற இயக்குநர்களின் விழைவு வெறும் வணிக வெற்றி மட்டும் இல்லையே, ஒடுக்கப்பட்டோரின் விடுதலையில்லையா? அப்படியான நோக்கத்தை நிறைவேற்றக்கூடிய படங்கள் உச்ச நட்சத்திரங்களின் நிழலில் ஒருபோதும் உருவாக மாட்டா. தலித்துகளின் வாழ்வியல் சிக்கல்களை, சமுதாயம் அவர்களை நடத்தும் விதத்தை விமர்சிக்கும் படங்களில் ரஜினிகாந்த், தனுஷ், சூர்யா போன்ற நடிகர்கள் நடிப்பது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால், அந்த மட்டோடு நகர்ந்துவிட வேண்டும் அதை ஆராதனைக்குரிய விஷயமாகக் கருதி பெருமிதச் சுழலில் சிக்கிடுதல் நல்லதன்று. அப்படிச் சிக்கினால், மீண்டும் மீண்டும் ஹீரோயிஸப் படங்கள் உருவாகிவிடலாம். நாயக அம்சங்களில் மூழ்கித் தோய்ந்த படங்களை ஒடுக்குபவர் உருவாக்குவதைப் போல் ஒடுக்கப்பட்டவர் உருவாக்குவதும் ஆபத்தே. திரைப்படச் சக்கரம் அப்படியொரு சகதிக்குள் சிக்காமல் நகர்ந்துவிடுவதே நல்லது.

இன்மதி இணையதளத்தில் வெளியானது. 

ஞாயிறு, செப்டம்பர் 26, 2021

‘அண்ணாத்த’ அரசியல் எடுபடுமா?


தமிழ்த் திரையுலகில் மின்னிய நட்சத்திரங்களின் வரிசையில் முதன்மையான இடம் ரஜினி காந்துக்கு உண்டு. சற்றேறக்குறைய நாற்பது ஆண்டுகளாகத் திரைப்படங்களில் நாயகனாகவே நடித்தும், நடிகைகளுடன் டூயட் பாடியும் முத்திரை வசனங்களை முழங்கியும் வரும் ரஜினி காந்தின் படங்கள் இன்றுவரை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைச் சம்பாதித்துக்கொடுத்துள்ளன என்றே சொல்லப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் அவரது படங்கள் படுமோசமான தோல்வியைச் சந்தித்துள்ளன என்பதும் மறுக்கவியலா உண்மை. உதாரணங்களாக மாவீரன், ஸ்ரீராகவேந்திரர், பாண்டியன், உழைப்பாளி, அருணாசலம், பாபா, லிங்கா போன்ற படங்களைக் குறிப்பிட முடியும்.

ரஜினி காந்த் தனது படங்களை வெற்றிபெற வைக்கக் கையாண்ட உத்திகளில் ஒன்று அரசியல். ரஜினியின் நிஜ அரசியல் அவரது காலைவாரிவிட்டுவிட்டபோதும், அவரது சினிமா அரசியல் அவருக்குப் பெரிய அளவில் கைகொடுத்துள்ளது. அது இந்தத் தீபாவளி நாளில் வெளியாகவுள்ள அண்ணாத்த படத்தைக் கரைசேர்க்குமா? ஏன் இப்படி ஒரு கேள்வி என்றால், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது, 1996இல் வெளியான முத்து திரைப்படம் தொடங்கி இதுவரை ரஜினி காந்த் தான் அரசியலில் ஈடுபடப்போவதாக இலைமறைகாயாகப் படங்களில் உணர்த்தியோ திரைப்படங்கள் வெளியாகும் சமயத்தில் மேடைகளில் பேசியோ அவற்றை வெற்றிக்கோட்டை நோக்கி நகர்த்திவந்தார். முதன்முறையாக இப்போது அவர் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று உறுதியாக அறிவித்த நிலையில் அவரது படம் ஒன்று வெளியாகப் போகிறது. இந்தச் சூழலில் அரசியலுக்கும் அவருக்கும் முகிழ்த்த உறவிழை குறித்த நினைவை ஓட விடுவோம்.    

கே. பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் (1975) திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த் இரண்டு மூன்று ஆண்டுகளில் தமிழகத்தின் முன்னணி நடிகர் என்னும் இடத்தைக் கடந்து தமிழ்நாட்டின் முதன்மை நட்சத்திரமானார். திரைப்படங்களில் கிடைத்த தொடர் வெற்றி காரணமாகத் தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் அறியப்பட்ட பெயரானது ரஜினி காந்த். எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்த காலத்தில் திரைத்துறையில் புகழ்க் கொடியைப் பறக்கவிட்ட ரஜினி காந்த் மீது அரசியல் காற்றுவீசத் தொடங்கியது எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர்தான்.

1987இல் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ஊர்க்காவலன்  திரைப்பட வெற்றிவிழாவின் போது, ‘வரவிருக்கும் தேர்தலில் ஜானகி எம்.ஜி.ஆர். அவர்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’ என்னும் பொருள் தொனிக்கும் வகையில் அவர் பேசியது நாளேடுகளில் செய்தியானது. இப்படி மேடையில் அரசியல் பேசினாலும், அதற்கு அடுத்த ஆண்டில் 1988இல் வெளியான ராஜாதி ராஜா திரைப்படத்தில், “எனக்குக் கட்சியும் வேணாம் ஒரு கொடியும் வேணாம்” எனப் பாடி நடித்திருந்தார் அவர். ஜானகி எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்த ரஜினியின் பேச்சு அரசியல்ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் ஜானகி எம்.ஜி.ஆருக்கு எதிர்நிலையிலிருந்த ஜெயலலிதாவுக்கு உவப்பாக இருந்திருக்கவில்லை. மேலும், 1989 சட்டமன்றத் தேர்தலில் ஜானகி எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. இதனால் ரஜினியின் வாழ்த்து ஜெயலலிதாவின் பார்வையில் கேலிக்கு ஆளானது. இதுதான் ஜெயலலிதா, ரஜினி இருவருக்குமிடையேயான மோதலுக்குத் தொடக்கப்புள்ளியாக இருக்கக்கூடும். 

அதைத் தொடர்ந்து 1989 தீபாவளி நாளில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தில் ரஜினிகாந்த் பணத் திமிர் படைத்த மாமியாரின் கொட்டத்தை அடக்கும் மாப்பிள்ளையாக நடித்திருந்தார் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். இந்தப் படத்தின் பெரிய அளவிலான வெற்றியே ரஜினியின் ‘சினிமா வெற்றிக்கு அரசியல் முலாம்’ என்னும் உத்திக்கு உந்து சக்தியைக் கொடுத்திருக்க வேண்டும். திரைக்கு வந்து சுமார் பதினைந்து ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் அவர் வேறொரு திசைக்கு நகர வேண்டிய தேவையும் எழுந்தது. அதற்கு உதவியது அரசியல்.   

1990இல் வெளியான அதிசயப் பிறவி என்னும் திரைப்படத்தில் ரஜினியைக் காட்டி, நடிகர் சோ, “பூவுலகில் இந்த முகத்துக்கு ஏகப்பட்ட மதிப்பு இவரைப் போன்றவர்கள் போட்டிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்று அரசியல்வாதிகளே அஞ்சி நடுங்குகிறார்கள்” என வசனம் பேசுவார். அரசியலில் ஈடுபடுவதில் ஆர்வமே இல்லாத ரஜினி காந்த் இப்படியான வசனங்களை ஏன் அனுமதித்தார்? ரசிகர்களை உசுப்பேற்றி அவர்களைத் தன் பிடியிலேயே வைத்திருக்க இத்தகைய வசனங்களும் காட்சிகளும் அவருக்கு உதவின. எதையும் வெளிப்படையாகச் சொல்லாமல் எல்லாம் ஆண்டவன் செயல் எனப் பூடகமாகச் சொல்வதன் மூலம் அவரால் தன் ரசிகர்களை எப்போதும் பரவச நிலையிலேயே வைத்திருக்க முடிந்தது.

1991 ஆம் ஆண்டில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் பகுதியிலேயே ரஜினிகாந்தும் குடியிருந்துவந்தது இந்த அரசியல் விளையாட்டுக்கு மிகத் தோதாகிப்போனது. முதலமைச்சர் வீட்டுக்கு வரும்போதும் போகும்போதும், போக்குவரத்து நிறுத்திவைக்கப்படுவது வாடிக்கையாக இருந்தது. ரஜினி என்னும் திரை நட்சத்திரம் இந்த விவகாரத்தை வெறுமனே கடக்க இயலாமல் தடுமாறினார். ஒருமுறை அவர் காரிலிருந்து இறங்கிச் செல்ல ஊடக வெளிச்சத்தில் அது சட்டென்று தமிழ்நாட்டுக்கான செய்தியானது. இது முதலமைச்சர் ஜெயலலிதாவின் பார்வைக்கும் சென்றிருக்கும். இப்படியான சம்பவங்களால் ரஜினி அரசியல் துறையில் குறுக்கீடு நிகழ்த்தியது காலத்தின் கட்டாயமானது. அந்தக் காலத்தில் வெளியான மன்னன், பாண்டியன், அண்ணாமலை போன்ற படங்களில் ரஜினிகாந்த் பேசிய முத்திரை வசனங்களுக்கு அரசியல் சாயம் பூசி மகிழ்ந்தனர் ரஜினி ரசிகர்கள். முத்தாய்ப்பாக 1993 இல் வெளியான உழைப்பாளி படத்தில், “நேத்து என்னைக் கூலியா வச்சிருந்தான்; இன்னக்கி நடிகனாக்கியிருக்கான்; நாளக்கி…” என்று வசனம் பேசிச் சிரிப்பார் ரஜினி. ரசிகர்கள், தலைவா நாளக்கி நீ முதல்வர் என்று சொல்லி பூரிப்படைந்தார்கள். இவையெல்லாம் ரஜினிகாந்த் செவிகளையும் சென்றடைந்திருக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில் அரசியல் தனது சுபாவத்துக்கு ஒத்துவராதது என்பதை ரஜினி அறிந்திருந்தபோதும், அரசியல் முலாம் பூசிய வசனங்கள் படங்களை வெற்றிபெற வைக்க உதவும் என்னும் நம்பிக்கையில், அவற்றை ஓர் உத்தியாகத் தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்கினார் அவர். 1995ஆம் ஆண்டு ஜூலை 14 அன்று நடைபெற்ற பாட்ஷா பட விழாவில் வெடி குண்டு கலாச்சாரம் குறித்துப் பேசியபோது, சட்டென்று அனைவரது பார்வையும் அவர்மீது விழுந்தது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கும் அவருக்குமான உரசல் அதிகரித்தது.  அதன் பின்னர் 1996ஆம் ஆண்டுக்கான தேர்தலின்போது, ரஜினிக்கான அரசியல் பிரவேச வாய்ப்புகள் பிரகாசமாக இருந்ததாக ரஜினி அரசியல் ஆலோசகர் என்ற நிலையிலிருந்த சோ ராமசாமி முதலான அரசியல் பார்வையாளர்கள் கருதினர். ஆனால், ரஜினியோ அந்த வாய்ப்பில் பிரமாதமாகச் சொதப்பினார். அரசியலில் இறங்காமல், குரல் கொடுத்ததுடன் ஒதுங்கி நின்றுவிட்டார். அதன் பின்னர் ரஜினி காந்த் நடித்த படங்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்துவிட்டது. ஆண்டுக்கு இரண்டு மூன்று படங்கள் வெளிவந்த காலம் போய் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம் வெளியாகத் தொடங்கியது.

ஐம்பது வயதைத் தொட்ட நிலையில், அதுவரை திரைப்படங்களில் வசனம் பேசிய ரஜினி காந்த் மேடைகளில் வசனம் பேசத் தொடங்கினார். பாமக எதிர்ப்பு, காவிரி நீர் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை, தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் வரை அரசியல் நிகழ்வுகள் பற்றிக் கருத்துகள் தெரிவிப்பார். அதைத் தொடர்ந்து அவரது படங்களும் வெளியாகும். ஆகவே, ஊடகங்கள் ரஜினி காந்தின் அரசியல் பிரவேசம் குறித்த ஊகங்களைக் கட்டுரைகளாக எழுதித் தள்ளின. எப்படியும் ரஜினி காந்த் அரசியலுக்கு வந்துவிடுவார் என நம்பிய அவரது ரசிகர்கள் அவரது படத்தைத் தொடர்ந்து பார்த்துவந்தனர்.

ரஜினியின் இந்த உத்தி எல்லா நேரத்திலும் அவரைக் காப்பாற்றியது என்று சொல்ல முடியாது. ஆனாலும், எல்லா நேரத்திலும் ரஜினி இந்த உத்தியை பயன்படுத்துவதை வாடிக்கையாக்கினார். ஏனெனில், தான் நேரடி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்பதை அறிவிக்காமல், உள்ளங்கையைப் பொத்தியபடியே பூடகமாக வைத்திருந்தார் ரஜினிகாந்த். இப்போது முதன் முறையாக அரசியல் தொடர்பாகக் கையைவிரித்துள்ள நிலையில் அவரது படமான அண்ணாத்த திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்னரான ஒரு சூழல் இது. அரசியல் என்னும் சுழலில் மாட்டிக்கொள்ளும் முன்னர் ரஜினி என்ற நடிகருக்கு இருந்த அதே வரவேற்பு இப்போதும் உள்ளதா என்பதை அண்ணாத்த வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. இப்போதுகூட முற்றுப்புள்ளி வைத்த அரசியல் அரசியல் நாடகத்துக்கு ஒரு காற்புள்ளிவைத்து, சிறு கல்லெறிந்து பார்க்கிறார். வழக்கம்போல் ரஜினியிடம் ரசிகர்கள் ஏமாறுவார்களா, ரஜினி ரசிகர்களிடம் ஏமாறுவாரா? அண்ணாத்த ஒரு பாட்ஷாவாகுமா பாபாவாகுமா என்பதைப் பொறுத்தது அது.

இன்மதி இணையதளத்துக்காக எழுதி அதில் வெளியான கட்டுரை. 

செவ்வாய், செப்டம்பர் 14, 2021

அரசியல் சதுரங்கம் ஆட வருகிறாரா ஆளுநர்?

தென்னாட்டுக் காந்தி என அழைக்கப்படும் பேரறிஞர் அண்ணாவின் ஆட்டுக்குத் தாடி எதற்கு, நாட்டுக்கு ஆளுநர் எதற்கு என்னும் சொற்றொடர் தமிழ்நாட்டில் மிகப் பிரபலமானது. அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் குடியரசுத் தலைவரால் ஆளுநர் நியமிக்கப்படுகிறார் என்றபோதும், ஆளுநர் பதவி ஒரு மாநிலத்தின் செயல்பாட்டை ஒன்றிய அரசு கண்காணிக்கச் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடு என்பதான எண்ணம் சுயமரியாதையைப் போற்றும் எந்த மாநில அரசுக்கும் இருக்கவே செய்கிறது. ஏனெனில், எந்தக் கட்சி  மத்தியில் ஆள்கிறதோ அந்தக் கட்சிக்குச் சார்பான ஒருவரே ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது நடைமுறை உண்மை. ஆகவே, ஒன்றிய அரசுடன் இணங்கிப் போகும் மாநில அரசுகளுக்கும் அந்தந்த மாநிலங்களின் ஆளுநர்களுக்கும் பெரிதாகக் கருத்து வேற்றுமைகளோ மோதல்களோ ஏற்படுவதில்லை. அதே நேரத்தில் ஒன்றிய அரசுடன் அரசியல்ரீதியாக முரண்படும் மாநில அரசுகள் ஆளும் மாநிலங்களில் நியமிக்கப்படும் ஆளுநர்கள் எப்போதும் மாநில அரசுகளுக்கு நெருக்கடி தருபவர்களாகவே நியமிக்கப்படுகிறார்கள் என்பது இந்திய அரசியலை அறிந்த எவருக்கும் தெரிந்த செய்தியே. 

மாநில சுயாட்சியை வலியுறுத்தும் திமுக எப்போதுமே ஆளுநரை ஆறாம் விரலாகத்தான் பார்க்கிறது. அரசியல் சாசனம் அனுமதித்தபோதும் அந்தப் பதவி அநாவசியம் என்றே அது நினைக்கிறது. அதனால் தான் கடந்த முறை அதிமுக ஆட்சியின்போது, தமிழ்நாட்டுக்கு முழு நேர ஆளுநர் இல்லாத சமயத்தில் அப்படியோர் ஆளுநர் தேவை என்று திமுக கோரிக்கை வைத்தபோது தமிழிசை சௌந்தர்ராஜன் திமுகவைக் கிண்டல் செய்தார். திமுகவைப் பொறுத்தவரை தமிழகத்தின் ஆளுநரான சுர்ஜித் சிங் பர்னாலா மட்டும் விதிவிலக்கு. அதேபோல் 1991இல் அதிமுக ஆட்சி நடைபெற்றபோது, தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்த சென்னாரெட்டிக்கும் அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்குமான மோதல் போக்கு அரசியல் களத்தில் மிகவும் பரபரப்பான பேசுபொருளாக இருந்தது. ஆளுநர் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் பேசும் அளவுக்கு அந்த மோதல் தரந்தாழ்ந்தவகையில் வெளிப்பட்டது. அதன் பின்னர் தமிழ்நாட்டு ஆளுநர் முதலமைச்சர் உறவு பெரிதாக மோதலோ சர்ச்சையோவின்றி மிகவும் அமைதியான முறையிலேயே இருந்தது.

இப்போது மாறுதலாகிச் செல்லும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு என்னும் பெயரில் நடத்திய நிகழ்வுகள் தமிழக அரசியல் நோக்கர்களைக் கொந்தளிக்கவைத்தன என்றபோதும், ஆளும் தரப்பு எல்லாவற்றையும் அமைதியாகவே பார்த்துக்கொண்டிருந்தது. எந்த முணுமுணுப்பையும் வெளிப்படுத்தாமல் எல்லாம் அவன் செயல் என்று காலம் கடத்தியது. இப்படியான சூழலைக் கடந்து வந்துள்ள தமிழ்நாட்டுக்கு இப்போது புதிதாக ஓர் ஆளுநர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர்தான் ரவீந்திர நாராயண ரவி. 1976இல் ஐபிஎஸ் அதிகாரியாக கேரளத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட பிஹாரைச் சேர்ந்த அவர் ஆளுநராக அறிவிக்கப்பட்டதிலிருந்தே தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பரவலான முணுமுணுப்பு எழுந்தது. ஏனெனில், அவர் ஆளுநராக இருந்த நாகாலந்து மாநிலம் அந்த ஆளுநர் மாறிப்போவதைக் கொண்டாடுகிறது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் உளவுத் துறையின் அதிகாரியுமான ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு அரசியலில் சிக்கலை உருவாக்குவதற்காகவே நியமிக்கப்படுகிறாரோ என்னும் அய்யத்தை காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எழுப்புகின்றன. 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இது தொடர்பாக ட்வீட் செய்திருந்தார். அதில், முழுக்க, முழுக்கக் காவல் துறை பின்புலம் கொண்ட ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாகச் சந்தேகம் எழுப்பினார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்வதற்காகவே இது போன்ற நியமனங்களை மத்திய அரசு கடந்த காலங்களில் செய்திருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையிலேயே ஆர்.என்.ரவியை மோடி அரசு ஆளுநராக நியமித்திருக்கிறதோ என்று சந்தேகப்படுகிறேன் என்றும் கூறியிருந்தார். இவை மட்டுமல்ல;  புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழகத்தில் ஜனநாயகப் படுகொலை நடத்துவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்த மோடி அரசு முயன்றால், மக்களைத் திரட்டி ஜனநாயக சக்திகள் போராட வேண்டிய சூழல் உருவாகும் என்றும் எச்சரித்திருந்தார்.

அதே நேரத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சரான மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என்.ரவியை வாழ்த்தி வரவேற்று ட்வீட் செய்திருந்தார். அதில், தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆளுநர்களை எப்படிப் பயன்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியான அரசியல் பின்னணி கொண்ட காங்கிரஸ் தலைவர் ஒருவர் எச்சரிக்கை விடுப்பதை அப்படியே விட்டுவிட முடியாது. அதே நேரத்தில் ஸ்டாலின் வரவேற்றிருப்பதையும் சாதாரணமானது என்று கடந்துவிட முடியாது. ஏனெனில், ஆளுநர் சர்ச்சைக்குரியவராக இருந்தாலும், அவர் தமிழ்நாட்டில் பெரிய அளவில் சர்ச்சைகளை உருவாக்கிவிட முடியாது என்பது வெளிப்படையான விஷயம். பதவியேற்ற நாள்முதலாக ஆளும் பாஜகவைச் சித்தாந்தரீதியில் எதிர்கொள்ளும் முதலமைச்சருக்கு ஒன்றிய அரசின் உண்மையான முகம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. எனில், அவர் ஏன் வாழ்த்தி வரவேற்கிறார்? அதன் மூலம் ஒன்றிய அரசுக்கு என்ன உணர்த்துகிறார்? நீங்கள் என்னதான் முயன்றாலும் தமிழ்நாட்டை அசைத்துவிட முடியாது என்று சொல்ல நினைக்கலாம். சர்ச்சைக்குரிய மனிதரை ஆளுநராக நியமிப்பதன் மூலம் எங்களுக்கு ஒருவிதப் பதற்றத்தை  நீங்கள் உருவாக்க முயன்றால் நாங்கள் பதற்றமடையமாட்டோம் எனக் காட்டிக்கொள்கிறார் எனப் புரிந்துகொள்ளலாம்.

அதே வேளையில் ஒன்றிய அரசின் வஞ்சக எண்ணத்தைக் கூட்டணிக் கட்சிகளைக் கொண்டு அம்பலப்படுத்தவும் முயலலாம். அரசியல் சதுரங்கத்தில் காய்கள் எப்படி வேண்டுமானாலும் நகர்த்தப்படலாம். ராஜாவைப் பாதுகாப்பது மட்டுமே சதுரங்கப் பலகையின் எதிரெதிரே அமர்ந்திருக்கும் இரு தரப்பினருக்கும் நோக்கம். அறுதிப் பெரும்பான்மை பெற்ற மக்கள் பிரதிநிதி என்ற முறையில் முதலமைச்சர் ஒரு புறம் இருக்கிறார் என்றால் ஒன்றிய அரசின் பக்கபலத்துடன் ஆளுநர் மறுபுறம் இருக்கிறார். எந்த வேளையில் இந்த ஆளுநர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது உற்றுநோக்கத்தக்கது. ஒன்றிய அரசு கொண்டுவந்த வேளாண்மைச்  சட்டங்கள், குடியுரிமைச் சட்டம் போன்றவற்றுக்கு எதிராகத் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறுகிறது. அனைவரையும் அர்ச்சகராக்கும் செயல் வெற்றிகரமாக நடந்தேறுகிறது. இந்திய நாகரிகத்தைவிடத் தொன்மையானது தமிழ்நாட்டின் நாகரிகம் என்ற கருதுகோள் அழுத்தமாகத் தமிழ்நாட்டு முதலமைச்சரால் முன்வைக்கப்படுகிறது. இந்திய வரலாறு தமிழ்நாட்டிலிருந்து தொடங்குகிறது என்ற முழக்கம் சென்னையில் ஒலித்தாலும் அது தில்லியை அதிரவைக்கிறது. அரசியல்ரீதியான எதிர்ப்புகளைவிடச் சிந்தாந்தரீதியான பண்பாட்டுரீதியான எதிர்ப்பை மிகவும் வலுவாகவும் தெளிவாகவும் துணிச்சலாகவும் முதலமைச்சர் வெளிப்படுத்தும் வேளையில் இப்படியோர் ஆளுநர் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படுகிறார் என்றால் அதை அப்படியே எளிதாக எடுத்துக்கொண்டுவிட முடியுமா என்ன? அதனால்தான் உடனடியாக எதிர்வினை ஆற்றுகிறார்கள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல் திருமாவளவன் போன்றோர். ஒருபுறம் கூட்டணிக் கட்சிகளைக் கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது தமிழ்நாடு. அதே நேரம் முதலமைச்சரோ வரவேற்புத் தெரிவிக்கிறார். ஆகவே, இந்த அரசியல் சதுரங்கத்தில் ஆளுநர் என்னும் பெயரில் நகர்த்தப்படும் ஒவ்வொரு காய் நகர்த்தலையும் மிகவும் உன்னிப்பாகவும் அதே நேரத்தில் அநாயாசமாகவும் எதிர்கொள்ளத் தயாராகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றே புரிந்துகொள்ள முடிகிறது.

தமிழ்நாடு போன்ற பண்பாட்டு பிடிப்பு கொண்ட மாநிலத்தில், மக்களின் பேராதரவைப் பெற்ற ஓர் ஆட்சியை, அதன் முதலமைச்சரை அவ்வளவு எளிதில் அசைத்துவிட முடியாது என்பதை உணராமல் இருக்காது ஒன்றிய அரசு. இது எதிரும் புதிருமான இரண்டு பலம் வாய்ந்தவர்களின் விளையாட்டு. இந்த விளையாட்டுத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்கும்போது, இன்னும் பல சுவாரசியமான காட்சிகள் அரசியல் சதுரங்கத்தில் அரங்கேறும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு. ஆட்டத்தில் யார் வெல்கிறார் யார் தோற்கிறார் என்பதைவிட சுவாரசியமான ஆட்டம் ஒன்று அரங்கேறப்போகிறது என்பதே ஊடகங்களுக்கான செய்தி.   

டைம்ஸ் சமயம் இணையதளத்துக்காக எழுதி அதில் வெளியான கட்டுரை.   

வியாழன், செப்டம்பர் 09, 2021

அரசியல் களத்து ஆயுதமா திராவிட அடையாளம்?


அண்மை நாள்களாக அரசியல் களத்தில் திராவிடக் களஞ்சியம் தொடர்பான விவாதம் பரபரப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. திமுக அரசு தமிழர் அடையாளங்களை அழித்தொழிக்க முயல்கிறது என தமிழ்த் தேசியவாதிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இப்போது இந்த விவகாரம் மிகச் சூடு பிடித்ததற்கு 2021 ஆகஸ்ட் 31 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறைக்கான மானியக் கோரிக்கைகள் பற்றிய விவாதமே காரணம். ஏனெனில் அந்த விவாதத்தின்போது, ஒரு கொள்கை விளக்கக் குறிப்பு அறிவிக்கப்பட்டது. அதன் பத்தாம் அறிவிப்பு, சங்க இலக்கியங்களைச் சந்தி பிரித்து எளிமைப் பதிப்புகளாக வெளியிடும் திட்டம், திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூல் வெளியிடும் திட்டம் ஆகியற்றைக் கொண்டிருந்தது.  இது போதாதா? கொதித்தெழுந்துவிட்டன தமிழ்த் தேசிய அமைப்புகள்.  தேசிய அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டின.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவரான பெ.மணியரசன், சங்கத் தமிழ் நூல்களுக்குத் `திராவிடக் களஞ்சியம்என்ற பெயர் சூட்டுவது, தமிழ்மொழி, தமிழினம் இரண்டையும் மறைக்கும் செயல் என்றதுடன் இவ்வாறு பெயர் சூட்டுவதைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இந்த அறிவிப்பைக் கண்டித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில் தமிழ் நூல்களைத் தொகுத்து, அவற்றை 'திராவிடக்களஞ்சியம்' என அடையாளப்படுத்தப்போவதாக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்றும் பெருமைமிக்கத் தொல்தமிழர் வரலாற்று அடையாளங்கள் யாவற்றையும் தன்வயப்படுத்தும் திராவிடத் திரிபுவாதிகள் தற்போது தமிழ் நூல்களின் மீதும் கைவைக்க முனைந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் பொதுத் தளங்களில் கடுமையாக விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இது தொடர்பாக விளக்கமளித்தார்.  எல்லோரும் சங்க இலக்கியத் தொகுப்பையும் திராவிடக் களஞ்சியத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக்கொள்கிறார்கள்  என்று அவர் கூறியுள்ளார். சங்க இலக்கியங்களை இந்தக் காலத் தலைமுறையினரும் புரிந்துகொள்ளும் வகையில் எளியதாகச் சந்தி பிரித்துச் செம்பதிப்புகளாக வெளியிடுவது ஒர் அறிவிப்பு. திராவிடக் களஞ்சியம் என்பது மற்றோர் அறிவிப்பு. அதில் திராவிடம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறும் என்றும் தெரிவித்தார். கால்டுவெல், அஸ்கோ பர்ப்போலா, ஆர். பாலகிருஷ்ணன் போன்ற ஆய்வறிஞர்களின் கட்டுரைகள், கருதுகோள்கள், இட ஒதுக்கீடு, இந்தி எதிர்ப்பு, சமூக நீதி போன்றவை குறித்த விஷயங்களை உள்ளடக்கிய கட்டுரைகள் அதில் இடம்பெறும் என்பதைக் குறிப்பிட்டிருந்தார். 

மேலும், தொல்காப்பியம் தொடங்கி முத்தொள்ளாயிரம் வரையிலான தமிழ்ச் செவ்வியல் இலக்கிய நூல்கள் அனைத்தும் ஒரே தொகுப்பாக, ஒரே இடத்தில் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் இதற்காக வருடந்தோறும் 10 லட்சம் ரூபாய் செலவிடப்படும் என்றும் கூறியுள்ளார். ஆனால், அதற்குப் பின்னரும் தமிழ்த் தேசியவாதிகள் விட்டபாடில்லை. இந்த விவாதத்தைத் தொடர்ந்துகொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் திமுக தலைவரை தமிழ்த் தேசியத்தை அழித்தொழிக்கும் ஒருவராக அடையாளப்படுத்த விரும்புகிறார்கள் என்பதுபோல் நடந்துகொள்கிறார்கள்.  

தமிழ்நாட்டில் இந்துத்துவ அரசியல் பேசும் பாஜக, தமிழ்த் தேசிய அரசியல் பேசும் நாம் தமிழர் உள்ளிட்ட தமிழ்த் தேசியவாதிகள் இருவருமே தங்களது எதிராக திமுகவையே முன்னிருத்துகின்றன. தமிழ்நாட்டில் மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்றபோது அவர் இந்த அளவு எதிர்ப்புகளைச் சந்தித்ததில்லையோ என்று சந்தேகப்படும் அளவுக்கு இப்போது திமுகவுக்கு எதிர்ப்பு உருவாகியிருக்கிறது.  திராவிட சிந்தாந்தத்தைப் பேசும் கட்சியாகத் திமுக இருந்தபோதும், கருணாநிதி தலைமையில் கட்சி நடத்தப்பட்டபோது, அதன் சித்தாந்தத்துக்கு இந்த அளவு நெருக்கடி ஏற்பட்டதில்லை. இப்போது திமுகவை மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தப்படும்போது சிந்தாந்தரீதியிலான நெருக்கடி முற்றிப்போயுள்ளது. மு.கருணாநிதியால் பாஜகவுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்க முடிந்தது. ஆனால், இப்போது திமுக 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றிபெற அது மிகத் தீவிரமான இந்துத்துவ எதிர்ப்பைக் கையிலெடுக்க வேண்டியதிருந்தது.

தமிழ்நாட்டில் திராவிடச் சிந்தாந்தத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இந்து என்னும் ஒரு குடையின் கீழ் தமிழ் மக்களைத் திரட்டும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. அரசியல்ரீதியாக பாஜகவை எதிர்த்து நிற்கும் திமுக இட ஒதுக்கீடு, அனைவரும் அர்ச்சகர் முதலான அம்சங்களின் மூலம் தாங்கள் இந்துக்களுக்கு எதிரியல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பாஜக என்ற நேரடி எதிரியை அரசியல் களத்தில் எதிர்கொள்ளும் திராவிடக் கட்சியான திமுகவுக்கு தமிழ்த் தேசியம் என்னும் உடன்பிறந்த சகோதரத் தொல்லைகளும் உள்ளன. தமிழர் என்றும், திராவிடர் என்றும் தமிழ்நாட்டில் நடைபெறும் விவாதங்கள் இன்று நேற்று தொடங்கியவையல்ல. பெரியார், மறைமலையடிகள் காலம் தொட்டே இருந்துவருபவை.

ஆகவே, பாஜகவின் இந்துத்துவத்தையும் நாம் தமிழரின் தமிழ்த் தேசியத்தையும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக எதிர்கொள்ள வேண்டுமென்றால் அது திராவிட சித்தாந்தத்தை வலுவுடன் கைப்பற்றிக்கொள்ள வேண்டியது தவிர்க்க இயலாதது. இப்போதைய திமுக அரசின் நிலைப்பாடுகள் திராவிடச் சிந்தாந்தத்தில் ஊறிப்போனவை என்பதான எண்ணைத்தையே தருகின்றன. அதன் அண்மைக்காலச் சான்றென திராவிடக் களஞ்சிய அறிவிப்பைச் சொல்லலாம். கட்சியில் இளைஞர்களைக் கொண்டுவந்து சேர்க்கும் பெரிய பொறுப்பை இப்போது திமுக நிறைவேற்ற வேண்டியதிருக்கிறது. அதற்காகவே இந்தத் திராவிட களஞ்சியம் அறிவிப்பை அது வெளியிட்டிருக்கிறது. திராவிட என்ற சொல் இந்துத்துவவாதிகளையும் தமிழ்த் தேசியவாதிகளையும் ஒரே நேரத்தில் அச்சுறுத்துகிறது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற நாள் முதலே அது திராவிட அடையாள அரசியலைத் தனது ஆயுதமாக ஏந்திக்கொண்டது கண்கூடு. திராவிட சிந்தாந்த அரசியல் பேசுவதும் அதை ஆயுதமாக ஏந்திக்கொள்வதும் தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு நலனுக்கும் உகந்தது என்பதே திராவிடச் சித்தாந்தத்தை ஆதரிப்பவர்களது கருத்து. திராவிடக் கொள்கைகளை இன்றைய இளந்தலைமுறையினரிடம் கொண்டுசென்றால் மட்டுமே தமிழ்நாட்டைச் சூழ்ந்து நிற்கும் சிந்தாந்தப் போரில் வெற்றியைப்பெற முடியும் என்று திமுகவும் ஸ்டாலினும் உணர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடாகவே இத்தகைய நடவடிக்கைகளைப் பார்க்க முடிகிறது.

தங்களது இனம் திராவிடம் என்றும் தாங்கள் பேசும் மொழி தமிழ் என்றும் தொடர்ந்து திராவிட ஆதரவாளர்கள் கூறிவருகிறார்கள். திராவிடமும் ஆரியமும் ஒன்றுக்கொண்டு எதிரான அரசியல் நிலைகளில் உள்ளன. எப்போதுமே திராவிடத்தை அழிக்கவும் ஒழிக்கவும் இங்கிருந்தே எதிர்களை உருவாக்குவது ஆரியத்தின் சூழ்ச்சி. எப்போதுமே திராவிடர்களது ஒன்றுதிரளலைத் தடுக்க முயலும் ஆரியம் திராவிடத்துக்கான பகையை இங்கே திராவிட நிலத்திலேயே உருவாக்கும். இதற்குத்  தமிழ்த் தேசியம் பயன்படுகிறது என்னும் குற்றச்சாட்டு திராவிடர்கள் எப்போதும் முன்வைக்கிறார்கள். ஆதிக்க எதிர்ப்பு, மாநில சுயாட்சிக்கான உரிமைக் குரல், சாதி,மதரீதியான சமத்துவம் போன்றவை  திராவிடச் சிந்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகள்.

அதனால்தான் திமுக அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதை நடைமுறைப்படுத்தியுள்ளது; கீழடி போன்ற தமிழர் பண்பாட்டு ஆய்வுகளை முன்னெடுக்கிறது; வ.உ.சிதம்பரானார் போன்ற தலைவர்களைக் கொண்டாடுகிறது;  தமிழ்ப் பெருமிதமான ராஜராஜ சோழன் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களை இக்காலத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்த விழைகிறது திராவிடர் குறித்த களஞ்சியங்களை உருவாக்குவது போன்ற பண்பாட்டுப் பணிகளில் தன்னை முழுமையாக திமுக ஈடுபடுகிறது. சிந்தாந்த அடிப்படையிலான கொள்கைப் பிடிப்பும் அது தொடர்பான அடையாளங்களைப் பாதுகாப்பதுமே திமுகவுக்கு அரசியல்ரீதியான பலன் தரும் என்பதை ஸ்டாலினும் சரி திமுகவினரும் சரி உணர்ந்திருக்கிறார்கள். மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திராவிட சிந்தாந்த விஷயத்தில், திமுகவின் முன்னாள் தலைவரான மு.கருணாநிதியைவிட மிகத் தீவிரம் காட்டுகிறார்கள் என்றே அரசியல் களத்தினர் பேசிக்கொள்கிறார்கள். அது உண்மைதான்.

அதே நேரத்தில் இந்துத்துவவாதிகளைப்போல் பிற மதத்தினரைத் தேடித் தேடித் துன்புறுத்தும் வேலை போன்ற அடாவடித்தனங்களில் திமுக ஈடுபடவில்லை. திராவிடத்தின் ஒரு கொள்கையாக கடவுள் மறுப்பு உள்ளது என்றபோதும், கடவுள் நம்பிக்கையாளர்களையும் அரவணைத்துச் செல்லும் போக்கையே திமுக அரசு கைக்கொள்கிறது. இறுக்கமான ராணுவக் கெடுபிடி என்னும் ரீதியில் கொள்கைகளைப் பின்பற்றாமல் தேவைப்படும் வேளையில் நெகிழ்ந்துகொடுக்கிறது திமுக.  இதை மெய்ப்பிக்கும் வகையில்தான் தமிழ்நாட்டு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. திராவிடப் பெருமிதங்கள் ஒரு புறம் இருந்தாலும் அனைவரையும் அரவணைக்கும் பண்பையும் தொடர்ந்து திமுக கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அதன் நலனை விரும்புபவர்களின் எண்ணம். இந்துத்துவ அரசியலைப் போன்று எதிர்தரப்பினரை எதிரிகளாகவே கருதி அவர்களை ஒழிக்க முயலாதவரை திராவிட அடையாளங்களைக் கையிலெடுக்கும் திமுகவின் நடவடிக்கை அதற்கு அனுகூலத்தையே தரும் என்பதே உண்மை. 

டைம்ஸ் சமயம் இணையதளத்துக்காக ரோஹின் என்னும் பெயரில் எழுதி வெளியானது.

ஞாயிறு, செப்டம்பர் 05, 2021

பாலியல் குற்றங்களின் அரசியல்


ஆண் பெண் உறவு குறித்த பக்குவத்தை நம் சமூகம் இன்னும் கற்றுக்கொள்ளவில்லையோ அந்த உறவு தொடர்பான புரிதலை வளர்த்துக்கொள்ளவில்லையோ என்னும் எண்ணத்தை வலுப்படுத்தும்படியான பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறியவண்ணமே உள்ளன. அண்மைச் சம்பவமாக சமூக வலைத்தளங்களில் பரவலாகச் சுற்றுக்குவிடப்பட்ட கே.டி.ராகவன் வீடியோவைச் சொல்லலாம். பருவம் வந்த ஆணுக்கும் பெண்ணுக்குமான தனிப்பட்ட, அந்தரங்க உறவைப் பொதுவெளியில் பகிரும் நாகரிகமற்ற நடவடிக்கை இன்னும் தொடர்ந்தபடியே உள்ளது. சர்ச்சை சாமியார் நித்யானந்தாவுக்கும் நடிகைக்குமான ரகசிய உறவைத் தமிழ்நாட்டின் முக்கிய செய்தி அலைவரிசை சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டது. முக்கியக் கட்சியின் வேட்பாளர் ஒருவரது பாலியல் வீடியோ ஒன்று இதைப் போல் பொதுவெளியில் கசியவிடப்பட்டது. அந்த வேட்பாளர் அந்தத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றார் என்பதையும் மறந்துவிட முடியாது. கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த ஒருவரது பாலியல் வீடியோவையும் தமிழ்ச் சமூகம் பார்த்தது. இப்படியான விஷயங்கள் தொடர்பாக அநேக மீம்களும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

தமிழர், பண்பாடு, பாரம்பரியம், பெருமை பேசும் தமிழ்நாட்டில் இன்னும் இத்தகைய வீடியோக்கள் வெகுமக்கள் பரப்பைச் சுவாரசியப்படுத்தும் போக்கு கண்டு நாம் உண்மையிலேயே வெட்கப்பட வேண்டும். ஆனாலும், எவரும் அப்படியொரு வெட்கம் கொள்ளாமல் தங்களது பாலியல் அரிப்பைத் தீர்க்கும் பேசுபொருளாக இப்படியான விஷயங்களைக் கருதுகிறார்களோ என்றே நினைக்கத் தோன்றுகிறது. இந்த நினைப்பு அச்சம் தரத்தான் செய்கிறது ஆனாலும், நடைமுறையில் நமது நிலைமை இப்படித்தான் இருக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியுமா?  

ஆணும் பெண்ணும் இணங்கிக் கொள்ளும் உறவை வரம்பற்ற நட்பை மூன்றாம் மனிதர் கேள்விகேட்பதோ அப்படியான உறவில் தலையிடுவதோ நாகரிக சமுதாயத்தில் அநாகரிகமாகவே பார்க்கப்படும். திருமணம் தாண்டிய உறவுகளில் ஏதேனும் சட்டப்பிரச்சினை இருந்தால் அது தொடர்பான மனிதர்கள் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம். அதே வேளையில் அதிகாரம் காரணமாகவோ ஆதிக்கம் காரணமாகவோ பெண் ஒருவர் பாலியல்ரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளானால் அதிலுள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு பொதுச் சமூகம் அவர் பக்கம் நிற்க வேண்டும். இந்த இரண்டு வகைகளிலுமே முக்கிய ஆதாரமான வீடியோ, ஆடியோ போன்றவற்றைப் பொதுவெளியில் வெளியிட எந்த அவசியமும் இல்லை. நடைபெற்ற குற்றத்தைக் காட்சிப்படுத்தும் ஆவணங்களாகவே அவை கருதப்பட வேண்டும். ஆனால், நமது நாட்டில், மாநிலத்தில் இத்தகைய காட்சிகள் பொதுவெளியில் கேளிக்கைக்கான விஷயமாகச் சந்தி சிரிப்பது உள்ளபடியே அவமானமானகரமானதே.

தமிழகத் தலைவர்களில் ஒருவரான கே.டி.ராகவன் தொடர்பான வீடியோவைப் பகிர்ந்திருந்தவர் ஊடகத் துறையில் செயல்படுபவர். இந்த விஷயத்தை முன்னிட்டுத் தமிழ்ச் சமூகம் பெரிய விவாதங்களில் ஈடுபடுகிறது. பெண் ஒருவரிடம் பாலியல்ரீதியாக முகம் சுளிக்கச் செய்யும் வகையிலான தொடர்பை ராகவன் பேணிவந்தது அந்த வீடியோவில் அம்பலமானது. அந்தப் பெண்ணுக்கும் ராகவனுக்கும் கட்சிரீதியான தொடர்பு இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டது. கட்சிப் பெண்களிடம் அவர் தகாத செயலில் ஈடுபடுவதை அம்பலமாக்கும் வகையில் அந்த வீடியோ வெளியானதாகச் சொல்லப்பட்டது. உண்மை என்ன என்பது தெரியவில்லை. அது திட்டமிட்ட சதிச் செயல் என்பது போல் பார்க்கப்பட்டது. ஆனால், அது பரவிய வேகம் கே.டி.ராகவனை மாநிலத்தின் கடைசி மனிதர்வரை கொண்டுசேர்க்கச் செய்த ரகசியச் செயலோ என்ற ஐயத்தை ஏற்படுத்தும் அளவுக்குப் போனது. அந்த அளவுக்கு இந்த வீடியோ ராகவனைப் பற்றிய அறியாத பலரிடமும் அவரைக் கொண்டுபோய்ச் சேர்த்தது. ஒரு நல்ல விஷயம் பரவும் வேகத்தைவிட ஒரு கெட்ட விஷயம் மிகவும் வேகமாகவும் வீரியமாகவும் பரவிவிடுவது வருத்தம் தரக்கூடிய உண்மை. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் யாரும் செய்யாததையா ராகவன் செய்துவிட்டார் என்பது போல் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். மேம்போக்கான அந்தக் கருத்தும் பலத்த விமர்சனங்களைச் சந்தித்தது. அப்படியானால் இப்படித்தான் ஆண்கள் அனைவரும் நடந்துகொள்கிறார்களா, ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொள்வதைவிட அதை நியாயப்படுத்துவது எவ்வளவு ஆபத்தான போக்கு என்பதான விமர்சனங்கள் எழுந்தன.

கே.டி.ராகவனோ தன்னையும் தன் கட்சியையும் களங்கப்படுத்தவே இந்த வீடியோ வெளியிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். ஆனாலும், அவர் கட்சிப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். எந்தத் தவறும் செய்யாதபோது கட்சிப் பொறுப்பிலிருந்து ஏன் அவர் விலக வேண்டும் என்ற கேள்விகள் எழுந்தன. பழி விழுந்தபின்னர் பதவியில் எப்படி ஒட்டிக்கொண்டிருக்க முடியும் என அவர் தரப்பினர் கருத்துத் தெரிவித்தனர். தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலுடன் தான் வீடியோ வெளியிடப்பட்டதாகக் கூறிய மதன் அது தொடர்பான ஆடியோ பதிவுகளையும் வெளியிட்டிருந்தார்.  வீடியோ, ஆடியோ ஆகியவற்றை வெளியிட்ட மதன், வெண்பா ஆகிய இருவரும் பாஜக கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். ஆனால், இப்படியொரு வீடியோ தன்னிடம் உள்ளது என்பது தெரிந்த பின்னரும் அது பொதுவெளியில் பரவிடும் ஆபத்து உள்ளது என்பதை அறிந்த பின்னரும் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை எப்படி இவ்வளவு மெத்தனமாக இருந்தார் என்ற கேள்வி எழாமல் இல்லை. இவ்வளவுக்கும் அவர் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி.

அதே நேரத்தில் பாஜக போன்ற பலமானதொரு கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ள மனிதர் ஒருவரைப் பற்றி இப்படி ஒரு வீடியோவை சாதாரண ஊடகவியலாளர் ஒருவர் எளிதில் வெளியிட்டுவிட முடியுமா? அதையெல்லாம் கடந்து அந்த வீடியோவைத் துணிச்சலாக வெளியிட்டிருப்பதன் பின்னணியில் உள்ள விவகாரம் சாதாரணமாக இருக்குமா என்னும் ரீதியில் அரசியல் விமர்சகர்கள் இந்த விஷயத்தை விவாதத்துக்கு உட்படுத்திவருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அண்ணாமலையும் அரசியல்ரீதியாகத் தன்னை வந்து சந்திக்கும் கட்சியின் பெண் நிர்வாகிகளிடம் தான் எவ்வளவு கண்ணியமாக நடந்துகொள்கிறேன் என்பதைப் பற்றிக் கூறிய கருத்துகளும் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. இப்படியான விஷயங்களை மொத்தமாகப் பார்க்கும்போது, பெண்கள் பற்றிஆண்கள் கொண்டிருக்கும் பழமைவாத எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகவே அவை உள்ளன.

யாராவது ஒரு ஆணை அவமானப்படுத்த வேண்டும் என்றால் உடனே அவரது பாலியல் தொடர்பான விஷயங்களை அம்பலப்படுத்துவது, பெண் ஒருவரை அவமானப்படுத்த வேண்டும் என்றால் அவரது பாலியல்நடத்தையைக் கேள்விக்குட்படுத்துவது போன்றவை மிகவும் அநாகரிகமான செயல்கள். இதை அனைவரும் ஒத்துக்கொள்கிறார்கள். ஆனாலும், இப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றே வருகின்றன. சூழலின் ஆரோக்கியமற்ற தன்மைக்கு என்ன காரணம்? இங்கே நாகரிமற்ற நடவடிக்கை என இத்தகைய வீடியோக்களைக் குறிப்பிடுவது, அது இருவர் ஒப்புதலுடன் நடைபெற்ற அந்தரங்கச் செயல் என்னும் நம்பிக்கையில்தான். அதேவேளையில் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாலியல்ரீதியாகப் பெண்கள் சுரண்டப்படுவதும் தொடர்ந்து வருகிறது. பொள்ளாச்சி விவகாரத்தின் ரணம் இன்னும் நம் மனத்தில் ஆறாமல் அப்படியேதான் உள்ளது. இப்படியான சம்பவங்கள் ஆணாதிக்கச் சூழல் இன்னும் அகலவில்லை என்பதையே காட்டுகிறது. ராகவன் தொடர்பிலான வீடியோ எத்தகைய தன்மையைக் கொண்டிருக்கிறது என்பது முறையான விசாரணை வழியாகவே தெரியவரும்.

அரசியலில், திரைப்படத் துறையில், அரசு, தனியார் நிறுவனங்களில், பள்ளி கல்லூரிகளில் என எங்கெங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆண்கள் பெண்களைத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவரப் பார்க்கிறார்கள். துணிச்சல் கொண்ட பெண்கள் இதை எதிர்த்துப் போர்க்கொடி தூக்குகிறார்கள். அதேவேளையில் பெண்களில் பலர் இத்தகைய சம்பவங்களை சிவ பெருமான் தொண்டையில் சிக்கிய ஆலகால விஷம் போல் விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அவதிப்படுகின்றனர். படிநிலையில் தங்களைவிட மேலே இருக்கும் ஆண்கள் தங்களைப் பாலியல்ரீதியாகத் தொந்தரவுக்குட்படுத்தும்வேளையில், துணிச்சலான பெண்கள் பொதுவெளியில் குற்றம்சாட்டுகிறார்கள். அப்படிக் குற்றம்சாட்டும் பெண்ணின் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கும் பிற்போக்குத் தனம் இங்கு நிலவுகிறது என்பதை நாம் மறந்துவிட முடியாது. இந்தப் பிற்போக்குத்தனத்திலிருந்து ஒட்டுமொத்த சமூகமும் வெளியேற வேண்டாமா?

பெண்களின் பாலியல்ரீதியான பாதுகாப்புக்கு வழிகோலும் விசாகா கமிட்டி போன்ற அம்சங்களால்கூட இன்னும் ஆக்கபூர்வமான பலன்கள் கிட்டிவிடவில்லை. விசாகா கமிட்டி அமைக்கப்பட்ட நிறுவங்களிலேயே கூட பெண்ணுக்கு எதிரான இப்படியான பாலியல்ரீதியான துன்புறுத்தல்களும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன என்பதும் நாம் அறியாத உண்மை அல்ல. ஒப்புக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிகாரமிகு பதவியில் ஆண் இருப்பின் பெண்கள் ஒடுக்கப்படுவதும் ஊமையாக்கப்படுவதும் வெகு சாதாரணமாக நிகழ்ந்துவருகின்றன. ஆனாலும், இவற்றைக் கண்டும் காணாமலும் நாம் போகிறோம். சிவபெருமான் தன் உடம்பின் பாதியை உமையவளுக்குக் கொடுத்தார் என்று சொல்கிற நாம்தான் அதே உமையவளைப் போன்ற பெண் ஒருவரைத் தகாத வகையில் நடத்தத் துடிக்கிறோம். பாலியல் என்னும் மிருக உணர்ச்சிக்கு இன்னும் இப்படியான அத்துமீறல்கள் வழியே தீனி போட முயல்வது குறித்து வெட்கப்பட வேண்டாமா? பதவியும் அதிகாரமும் பணமும் தரும் போதையில் நெறிதவறும் பெரும்பாலானோரின் இலக்கு பெண்களாகவே இருப்பது பற்றி பண்பாடு மிக்க ஒரு சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டாமா? என்று தணியும் இந்த பாலியல் மோகம்? சட்டப்படியான தண்டனைகள் பெற்றுத்தர வாய்ப்பு இருந்தபோதும், பெண்ணை சக உயிர் என்று உணராதவரையிலும், தனிமனிதர் திருந்தாதவரையிலும் இப்படியான சம்பவங்கள் தொடரவே செய்யும் என்பது கசப்பான உண்மை.  

நியூஸ் ஸ்ட்ரோக் இதழுக்காக எழுதியது. 

புதன், செப்டம்பர் 01, 2021

கேள்விக்குள்ளாக்கும் மக்களாட்சியின் மாண்பு


தமிழ்நாட்டு அரசியல் களத்தில் கொடநாடு எஸ்டேட் விவகாரம் பயங்கரமான அனலைக் கிளப்பியிருக்கிறது. அங்கே 2017 ஏப்ரல் மாதம் 23 ஆம் நாளன்று அதன் காவலாளிகளில் ஒருவரான ஓம்பகதூர் என்பவர் கொல்லப்பட்டார். அந்தக் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து கொடநாடு எஸ்டேட்டுக்குள் புகுந்த கொள்ளையர் விலை மதிப்பற்ற பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றதாகத் தகவல்கள் வெளியாயின. இதையடுத்து, ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜ் என்பவர் சாலை விபத்தில் பலியானார். கொடநாடு கொலை காரணமாகத் தேடப்பட்ட சயான் தன்னுடைய மனைவியையும் மகளையும் விபத்தில் இழந்தார். கொடநாட்டுக் கொள்ளைச் சம்பவம் சிசிடிவி காட்சிகளாகப் பதிவாகவே இல்லை என்பது ஆச்சரியத்தைத் தந்தது. இதைத் தொடர்ந்து கொடநாட்டில் கணினிப் பிரிவில் பணியாற்றிய தினேஷ் என்பவர் தற்கொலைசெய்துகொண்டார்.

இப்படி அடுக்கடுக்காகக் கொலை, கொள்ளை, விபத்து, தற்கொலை போன்ற சம்பவங்களால் பெரும்புனைவுபோல் உருண்டு திரண்டது கொடநாட்டு மர்மம். ஒரு சுவாரசியமான திரில்லர் நாவலை ஒத்திருந்தது இந்த விவகாரம். இதன் பின்னணியில் இருப்பவர் யார் என்னும் கேள்வி தமிழ்நாட்டு அரசியல் ஆர்வலர்கள், வெகுமக்கள் மனத்தைக் குடைந்தது. அது தொடர்பான முறையான விசாரணை மட்டுமே இந்த விவகாரத்தின் மர்மங்களை விலக்கி உண்மையைத் தெளிவாக்கும் என்பது பொதுத்தளத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரம் மீண்டும் தோண்டப்படுவதையோ மறுவிசாரணை நடத்தப்படுவதையோ  தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுக விரும்பவில்லை. மறுவிசாரணை என்னும் நடவடிக்கை அதிமுகவைப் பெரும் பதற்றத்தின் பிடிக்குள் தள்ளியிருக்கிறது. ஆட்சியில் இருந்த காலத்தில் ஒன்றிய அரசுடன் முரண்படாமல் தன் மீது எந்தப் பழியும் விழாமல் பார்த்துக்கொண்ட அதிமுகவால் இப்போது அப்படி நடந்துகொள்ள இயலவில்லை. மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை இழந்து நிற்கும் அந்தக் கட்சி இந்த விவகாரம் தொடர்பாகச் சட்டமன்றத்தில் விவாதிக்கப்படுவதையே விரும்பவில்லை. ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தது அந்தக் கட்சி. இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் கரம் கோத்து செயல்படுகிறார்கள். தங்கள் கட்சியை அரசியல்ரீதியாகப் பழிவாங்கும் பொருட்டு இந்தக் கொடநாடு விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறது ஆளும் திமுக தரப்பு என்பது அவர்களது வாதம். கொடநாடு விவகாரத்தைச் சுற்றிப் படர்ந்துள்ள மர்மங்களை விலக்கி அங்கே என்ன நடந்தது என்பதை முறையாக விசாரித்து மக்களுக்குச் சொல்ல வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாக ஆளும் திமுக தரப்பு சொல்கிறது. 

ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இந்த விவகாரத்தை முன்னிட்டு அதனதன் தரப்பை நியாயப்படுத்தும் காட்சிகளை அரங்கேற்றுகின்றன. இந்தக் கொடநாடு எஸ்டேட் அதன் உரிமையாளர்களான ஜோன்ஸ் குடும்பத்தினரிடமிருந்து கட்டாயப்படுத்தி 1994இல் வாங்கப்பட்டதிலிருந்தே அதைச் சுற்றி அநேகக் கதைகள் புனையப்பட்டுப் பொதுவெளியில் புழக்கத்துக்கு வந்தன. அவற்றில் உண்மையும் பொய்யும் புரட்டும் கலந்தே காணப்படுகின்றன. எது உண்மை எது பொய் என அறிந்துகொள்வது சாமானியமான செயலன்று.

முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இரண்டாம் தலைமைச் செயலகத்தையே கொடநாட்டில் அமைத்துவிட்டாரோ என்று தோன்றும்படியாகவே தமிழ்நாட்டை ஆண்டார். அதிகாரமிகு மன்னராட்சிக் காலத்தைப் போல் மக்களாட்சியை மாற்றியமைத்தார். கேள்வி கேட்க இயலாதவராகவும் மக்களிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்ட ஒருவராகவும் அவர் நடந்துகொண்டார். அதிகார துஷ்பிரயோகம் என்பதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல அதிகாரங்களைத் தனக்குத் தோதாக ஆட்டம்போடவைத்தார். அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்துகளை வாரிக்குவித்தார். சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக முதலமைச்சர் பதவியிலிருந்தே இறங்க நேரிட்டது. ஆனாலும் துளியும் ஜெயலலிதா தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.

போயஸ்கார்டன், சிறுதாவூர், கொடநாடு என ஜெயலலிதா எங்கெங்கு சென்றாலும் அங்கெல்லாம் சாமானியர்கள் தங்கள் வாழ்வில் பல துயரங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவானது. அவருக்காகப் போக்குவரத்து மணிக்கணக்காக நிறுத்தப்பட்டது. தான் மக்கள் சேவகர் தன்பொருட்டு மக்கள் துன்பப்படுவதா என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டதா என்றே தெரியவில்லை. அவர் வணங்கும் கடவுள் அவருக்கு ஆளும் வாய்ப்பையும் அதிகாரத்தின் பயனையும் தந்திருக்கிறார் என்றே நம்பியிருப்பாரோ என்னவோ? வழிபாடுகளில் ஜெயலலிதாவுக்கு இருந்த நம்பிக்கை சகலரும் அறிந்த ஒன்றுதான். ஆகவே, அவருக்கு இப்படியான எண்ணம் உருவாகியிருக்க வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டைச் சார்ந்த எந்த முதலமைச்சரும் இப்படியான நடவடிக்கையில் இறங்கியதில்லை. அரசாங்க கோப்புகள் முதலமைச்சரின் கையெழுத்துக்காக விமானத்தில் பறந்த வரலாற்றை ஜெயலலிதா படைத்தார். முதலமைச்சர் உள்ளிட்ட அரசாங்கப் பணிகள் அனைத்தும் மக்களுக்கான வேலைகளைப் புரிய மக்கள் அளித்த ஒரு வாய்ப்பு என்பதை மறந்து அதன் அதிகாரங்களில் திளைப்பவர்கள் அரசியலில் பெருகிய பிறகு மக்களாட்சியின் மாண்பு பெரிதும் கேள்விக்குள்ளானது. தலைமைப் பதவிகளில் தகுதியற்றோர் அமரும்போது, பதவிக்கான மாண்புகள் காற்றில் பறந்துவிடும் என்பதற்கு எடுத்துக்காட்டானார் ஜெயலலிதா.

மக்களாட்சி என்னும் பெரும் தத்துவத்தையே கேலிக்குரியதாக மாற்றிவிடுகிறார்கள் இப்படியான அரசியல்வாதிகளும் தலைமைப் பொறுப்பாளர்களும். மன்னராட்சிக் காலத்தில் மன்னர் வைத்ததுதான் சட்டம். மக்களெல்லாம் அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்பட்டார்கள். பல மன்னர்கள் கொடுங்கோலாட்சி நடத்தி மக்களை வதைத்தார்கள். இப்படியான கொடுங்கோன்மையிலிருந்து தங்களை விடுவிக்கக்கூடிய ஒன்றாக மக்களாட்சி பார்க்கப்பட்டதென்னவோ உண்மை. ஆனால், நடைமுறை யதார்த்தத்தில் மக்களாட்சி என்பது மக்களுக்காக இருக்கிறதா என்று சீர்தூக்கிப் பார்க்கும்போது தலையைக் குனியத்தான் வேண்டியதிருக்கிறது. மக்கள் பணிக்காக நம்மை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்னும் புரிதல் இருந்தால் ஒரு முதலமைச்சர் தனக்கென எந்தத் தனிப்பட்ட உரிமையையும் கோர மாட்டார். மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காக மட்டுமே தனக்கான அதிகாரத்தைப் பயன்படுத்துவார்.

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் 1967 ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க ஒன்றாகிறது. அந்த ஆண்டில் நடைபெற்ற தேர்தலில்தான் சாமானியர்கள் கையில் அதிகாரம் அளிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் 174 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 137 இடங்களைக் கைப்பற்றியது. அந்தக் கட்சி பெற்ற வாக்குகள் 62,30,552. வெறும் 62 லட்சம் சொச்சம் பேர் தான் அந்த ஆட்சியைத் தேர்ந்தெடுத்தனர். அந்தத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர். இதேபோல் திமுகவிடமிருந்து ஆட்சியை அதிமுக கைப்பற்றிய 1977 தேர்தலில் 200 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 130 இடங்களைக் கைப்பற்றியது. அந்தக் கட்சிக்குக் கிடைத்த மொத்த வாக்குகள் 51,94,876தான். இந்தத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 2.81 கோடிப் பேர். இன்றுவரை இப்படியான நடைமுறைதான் தொடர்கிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக பெற்ற மொத்த வாக்குகள் 1.74 கோடிதான்.

பெரும்பான்மை மக்களை ஆள்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு கட்சியைப் பெரும்பான்மையோர் தேர்ந்தெடுப்பதில்லை. சிறுபான்மையோர் தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது ஒரு நகைமுரண்தான். மக்களாட்சியின் குறைபாடுகளில் இதுவும் ஒன்று. மக்களாட்சி தந்த வாய்ப்பால் முதலமைச்சரான அறிஞர் சி.என்.அண்ணாதுரை இரண்டு ஆண்டுக்குள் மறைந்துவிட்டார். அவரையடுத்து முதலமைச்சரான மு.கருணாநிதி தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் தரமிறங்கியதற்கான மூல விதை விதைத்தவராகக் கருதப்படுகிறார். அவரைத் தொடர்ந்து முதலமைச்சராக ஆன எம்.ஜி.ஆர். தன்னை வழிபடுகிறவர்களுக்கு வள்ளலாகத் தோற்றமளித்தபோதும் தன்னைப் பகைத்துக்கொண்டவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்தார். அவரது ராமாவரம் தோட்டம் பற்றிய கதைகள் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்தவை. எம்.ஜி.ஆர். அங்கே அளித்த விருந்துகள் போல அங்கே அரங்கேறிய கொடுஞ்சம்பவங்களும் அதிகப்படியானவை. இருந்தபோதும், எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டு மக்களால் கடவுள்போல் வழிபடப்பட்டார். மக்களின் இந்த அறியாமைதான் அரசியல்வாதிகளுக்குத் தாங்கள் சாதாரண மக்களைவிட உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் என்ற மமதையை அளித்துவிடுகிறது.

எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு அவரது இடத்தை ஆக்கிரமித்துக்கொண்ட முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா. மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களை எல்லாம் அசுர வேகத்தில் கடந்துவிட்டார். 1991 ஆம் ஆண்டில் அமைந்த அவரது ஆட்சியில் பட்டம் பெற்றவர்கள் அநேகர் இருந்தனர். கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரி போல் செயல்படும் வாய்ப்பை ஜெயலலிதா பெற்றிருந்தார். ஜெயலலிதா மட்டும் மக்கள் சேவைக்காகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து நடந்துகொண்டிருந்தால் தமிழ்நாட்டு மக்கள் எத்தனையோ நன்மைகளைப் பெற்றிருக்க முடியும். ஆனால், தமிழ்நாட்டு மக்களின் துரதிர்ஷ்டம் மக்களுக்கான தலைவராக இல்லாமல் மக்கள் தலைவராகவே அவர் நின்றுவிட்டார். மக்களால் நான் மக்களுக்காக நான் என்பதை வெறும் முழக்கத்துடன் மூலைக்கு அனுப்பிவிட்டார். அதிகாரம் தரும் அத்தனை வசதி வாய்ப்புகளையும் ஒரு முதலமைச்சராகத் தான் அனுபவித்ததுடன் தன் தோழிக்கும் அதை மடைமாற்றிவிட்டார். கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கைங்கர்யம் குறிப்பிடத்தக்கது.

மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, அதிகாரத்தைப் பயன்படுத்தித் தனது குடும்பத்தினரின் வளர்ச்சிக்கு வித்திட்டார் என்ற குற்றச்சாட்டு இன்றுவரை அவரது சமூகநீதிப் பங்களிப்பையும் மீறிய கறையாக நிலைத்திருக்கிறது. தினகரன் ஊழியர் எரிப்பு விவகாரத்தில் திமுகவின் பெயர் எந்த அளவுக்கு அடிபட்டது என்பதைத் தமிழ்நாட்டு அரசியலை அறிந்தோர் மறந்துவிட முடியாது. அதே போல் இப்போது இந்த கொடநாடு விவகாரத்தில் அதிமுகவின் தொடர்பு என்பது பல விபரீத எல்லைக்குச் சென்றுள்ளது என்றுதான் தோன்றுகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி பெருகிய இந்தக் காலத்திலும், ஒவ்வொருவர் கையில் கைபேசி என்னும் நவீன சாதனம் எல்லா மர்மங்களையும் வெளிப்படுத்திவிடக் கூடிய வீரியத்துடன் செயல்படும்போதும், கொடநாடு எஸ்டேட் போன்ற விவகாரங்களின் மர்மம் ஒரு புகை மூட்டம் போல தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் படர்வது மக்களாட்சி என்பதையே கேலிக்குரியதாக்குகிறது. இதை எப்படிச் சாமானியர்களால்  பொறுத்துக்கொள்ள முடியும்? அதே நேரத்தில் அவர்களால் இதை எதிர்த்து என்ன செய்துவிட முடியும்? ஆட்சியிலிருக்கும் திமுககூட இதை அரசியல்ரீதியான காய்நகர்த்துதலுக்குத்தான் பயன்படுத்துகிறதோ என்று கருதவும் இடமிருக்கிறது. ஏனெனில், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற முனைப்பு காட்டும் திமுக அரசு கருணாநிதி நினைவிடம் போன்ற வெகுமக்களுக்குப் பயன் தராத விஷயங்களிலும் வீரியத்துடன் செயல்படுவது கண்கூடு. பாஜக ஆட்சியில் 3,000 கோடி சர்தார் பட்டேல் சிலை விவகாரம் எப்படி விமர்சிக்கப்பட்டது? முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்படும் என்று கடந்த ஆட்சியில் சொல்லப்பட்டபோது திமுக அதை எப்படி எதிர்கொண்டது? இவை எல்லாம் வெகு மக்கள் மூளையில் பதிவாகியிருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது.

ஜனநாயக நாட்டில் வாக்களிப்பதுடன் மக்களின் கடமை முடிந்துவிடுகிறது. அவர்களால் ஆட்சியை மாற்றியமைக்க முடியும். ஆனால், தாங்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி தங்கள் விருப்பத்துக்கு மாறாக நடந்துகொள்ளும்போது அதைக் கேள்வி கேட்க இயலாது. மக்களுக்கான ஆட்சியை மக்களுக்காக அமைத்திருக்கிறோம் என்னும் புரிதலற்ற ஆளுமைகளிடம் அதிகாரம் சிக்கும்போது, அதனால் மக்கள்தாம் பாதிக்கப்படுகிறார்கள். சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் அந்தச் சட்டத்துக்குத் தாங்களும் கட்டுப்பட்டவர்கள் என்பதை மறந்துவிடுதல் கூடாது. அப்படி மறந்துசெயல்படும்போது, மக்கள்தாம் அவர்களுக்கு அதை நினைவூட்ட வேண்டும். மக்கள் சார்பாக நின்று ஊடகங்கள் அந்த வேலையைச் செய்ய வேண்டும். இப்படியெல்லாம் நடந்தால்தான் மக்களாட்சி என்பது உரிய மகத்துவம் பெறும். இல்லாவிட்டால் ஜனநாயகம் சிதைந்துவிடும். ஜனநாயகம் சிதைவது ஜனங்களுக்கு நல்லதன்று.  

டைம்ஸ் சமயம் இணையதளத்துக்காக எழுதிய கட்டுரையின் மூல வடிவம். 

லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்