இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், மே 20, 2010

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்

ஆழத்தில் சொரணையான கர்ஜனை




கடந்த ஏழாம் தேதி தென்காசி தாய்பாலாவில் மாலைக்காட்சியில் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படம் பார்த்தேன். இருபது ரூபாய் டிக்கெட்டுக்கு நாற்பது ரூபாய் கவுண்டரிலேயே வாங்கினார்கள். தியேட்டரில் பெரிய கூட்டமில்லை. இடைவேளை வரை படம் சாதாரணமான படமாக தோன்றியது. படம் முழுவதும் பார்த்து முடிந்த பின்பு இது சாதாரண படமாக தோன்றவில்லை. ஓரளவு சென்ஸிபிளான படமெனத் தோன்றியது. ஆனால் அதன் காரணமாகவே படம் ஓடாதோ எனவும் தோன்றியது. படத்தை நண்பர்கள் யாரும் பெரிதாக சிலாகிக்கவில்லை. எனக்கென்னவோ படம் சரியாக கவனிக்கப்படவில்லையோ என்ற எண்ணம் எழுந்தது. எனவே குறைந்தபட்சம் படம் குறித்து வலைப்பதிவிலாவது எழுதிவிட வேண்டுமென நினைத்தேன். எனவே பின்வரும் விமர்சனம்.

துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தலைவனின் மர்மமான மரணம். தலைவனில்லாத நேரத்தில் அம்மக்களைக் கொடுமைப்படுத்தும் கொடுங்கோலன். யாராவது இந்த மக்களைக் காப்பாற்ற மாட்டார்களா என்றிருக்கும்போது தலைவனைப்போல தோற்றம் கொண்ட ஒருவரை தலைவனாக முன்னிறுத்துதல். அவர்கள் கூட்டத்திலேயே துரோகி ஒருவன் முளைப்பது. நேர்மையான தலைவனுக்காக காத்திருக்கும் மக்கள் கூட்டத்தின் கதை அடி நீரோட்டமாக இருக்க அதன்மேல் எழுப்பப்பட்டிருப்பதோ கௌபாய் உலகம்.

நிறைய விஷயங்களைச் சொரணையோடு சொல்லிச் செல்கிறார் இயக்குநர். புரட்சி, சுய உரிமை எனத் தமிழன் குழி தோண்டிப்புதைத்துவிட்ட விஷயங்கள் எல்லாம் படத்தில் பேசப்படுகின்றன. சுயமாய் யோசிக்கும் எல்லோருக்கும் எழும் இயல்பான ஆதங்கங்கள் எந்தவிதமான ஆரவாரமுமின்றி போகிறபோக்கில் சொல்லப்பட்டிருக்கின்றன.


இப்படத்தை வெறும் நகைச்சுவைப் படமாக சுருக்கிவிட மனமில்லை. படத்தின் திரைக்கதையில் சின்னச்சின்ன விஷயங்களும்கூட மிக நுண்ணிப்பாக கவனமாக கையாளப்பட்டுள்ளன. அணு ஒப்பந்தத்தை நக்கல் செய்வது அதுவும் வீரராகவனின் அந்தக் கேள்வி சுய மரியாதையிலிருந்து முளைப்பது. மொழிபெயர்ப்பின் அபத்தம் அழகான நகைச்சுவையாக்கப்பட்டிருக்கிறது. அப்படியே டிட்டோவாக ஆத்ரிகேசாவின் ஒவ்வொரு சொல்லையும் அசைவையும் ட்ரான்ஸ்லேட்டர் லீ மொழிபெயர்ப்பது. இறுதியில் பள்ளத்தில் தவறி விழுந்து தொங்கும்போது ஆத்ரி கேசா வெளிப்படுத்தும் அலறலைக்கூட மொழிபெயர்க்கிறார் லீ.

சோப்பு டப்பா விக்க வந்த நம்ம ராபர்ட் கிளைவுக்கே நூத்தம்பது வருஷமாக கழுவி விட்டவனுக தான இவனுக என்னும் வசனத்தைப் பேசும் போது வெளிப்படும் நாசரின் சைகை சுரீரெனப் பாய்கிறது நமது அசட்டுத்தனத்தின் மேல்.

புதையலைத் தேடி புறப்படும் பயணமும் முடிந்த அளவு கிரியேட்டிவிட்டியோடு நிகழ்த்தப்பட்டுள்ளது. தனது இனமே அழிக்கப்பட்ட நேரத்திலும் எந்த வித எதிர்ப்பையும் காட்டாமல் துரோகிகளுக்கு துணைபோன கூட்டத்தின் சொரணையற்ற தன்மை கண்ட வேதனையில் உருவாகியுள்ளதோ இத்திரைக்கதை என்ற நினைப்பே படத்தைப் பார்க்கையில் மேலெழுகிறது. அதன்காரணமாகவே - இலங்கைப் பிரச்சினையை இவ்வளவு நுண்ணுணர்வோடு சொல்லியதாலேயே - படத்தின் குறைகளைப் பட்டியலிடவும் மனம் கூசுகிறது. மொத்தத்தில் கவனிக்கப்பட வேண்டிய படம் இது. ஆனால் கவனிக்கப்படுமா?

சனி, மே 15, 2010

நான் அவனல்ல...

எங்களுக்கிடையே இருப்பதெல்லாம் ரசம்பூசிய கண்ணாடி. சாம்பார் பூசிய கண்ணாடி கிடைக்கலையாடா. அவன் தான். அவனது அட்டகாசம்தான் இது. அதற்குமுன் ஒரு சிறு எச்சரிக்கை.

என் சோகக் கதையைக் கேளு என்று எல்லோரையும் இறுத்திவைத்து கூர் தீட்டிய செவன் ஓ க்ளாக்கை முகத்துக்கு நேரே நீட்ட நான் விரும்பவில்லை. ஆனால் இந்தப் பதிவு அப்படியான நீட்டல்தான். புத்தியுள்ள பிள்ளைகள் பிழைத்துக்கொள்ளட்டும். இது முழுக்க முழுக்க சுயம் சார்ந்த புலம்பல். பாரில் அமர்ந்து காதலின் துயரத்தை அறிமுகமற்ற மனிதர்களிடம் கொட்டித் தீர்ப்பது போன்ற அர்த்தமற்ற உளறல். ஒரு சிறு எச்சரிக்கை செய்தாகிவிட்டது. இனி பயணிக்கலாம். திரும்பிப் பார்க்கிறேன் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் வரவில்லை. ஒருவர்கூட வரமாட்டார்களோ என மனம் ஏங்குகிறது. வெட்கம்கெட்ட மனம். இவ்வளவு எச்சரிக்கையையும் கொடுத்துவிட்டு இன்னும் யாரையாவது எதிர்பார்க்கிறதே!

ஒண்ணுமே புரியல. அதுதான் என்னோட பிரச்சினை.எல்லாரையும் வருத்தப்படுத்தி விட்டு நான் மட்டும் சந்தோஷமாக இருக்கிறேன். எனது சந்தோஷம் மற்றவர்களுக்கு எரிச்சலாக இருக்கிறது. கொஞ்சம்கூட ஈரமற்றவனாக இருக்கிறானே என நினைக்கின்றனர். எனக்குப் பிடித்த விஷயத்தை மட்டும் நான் செய்ய நினைக்கிறேன் செய்கிறேன் ஆனால் அது மட்டும் போதாது என அடம் பிடிக்கின்றனர். நான் செய்வது சரியோ தவறோ எனக்கு அது குறித்த நிச்சமில்லை. ஆனால் உள் மன உந்துதலின்றி எதையும் செய்ய முடியாது என்னால். டேய் தம்பி தமாஷ் பண்ண ஆரம்பிச்சிட்டயா?

எதையோ எழுத நினைத்தேன் எதையோ எழுதுகிறேன். அது தானே விதி. அது என்ன விதி? இது அந்த விதியா அல்லது இலக்கண விதியா? எல்லாம் விதிய்யா விதி. சரி சைத்தான் வந்துருச்சு. இப்படித்தான் எதைஎதையோ யோசித்து என்னவென்னவோ செய்கிறேன். இதுக்கெல்லாம் பைசா பிரயோஜனம் உண்டா? விஷயம் இங்கே தான். பிரயோஜனமான விஷயங்களச் செய்யனுமாம். எது பிரயோஜனமான விஷயம்? அப்படிக்கேளுடா தம்பி. அடுத்த பாராவைப் பார். நான் எழுத ஆரம்பித்த தவறு யோசிக்க ஆரம்பித்த உடனே ஒரு வாசகன் உருவாகிவிடுவான் எனக்குள் இருக்கும் அவனை என்னால் விரட்டவே முடியாது. அவனுக்கும் எனக்குமான உரையாடல் இடைவிடாது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அவன் வாயை அடைக்கும் வழி எனக்குத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் நான் இப்படி உளறிக்கொண்டிருந்திருக்க மாட்டேன். இந்த நேரத்தில் எதையாவது உருப்படியாக செய்திருப்பேன். எனது மிகப் பெரிய எதிரி அவன். நீ கெட்ட கேட்டுக்கு உனக்கெல்லாம் எதிரியா, தமாஷ்தாண்டா! அவன் தான்.

எனது ஒவ்வொரு சொல்லையும் நான் எழுத எழுத அவற்றைக் காலி செய்வதுதான் அவன் வேலை. அவனை ஒழிப்பதுதான் எனது ஒரே நோக்கம். ஆனால் என்னால் அவனை எதுவுமே செய்ய இயலவில்லை. இயலாமையின் காரணமாக எனது கோபம் அதிகரித்துக் கொண்டேபோகிறது. கோபக்காரனுக்கு புத்திமட்டுதானே. நான் ஒரு மந்தபுத்திக்காரனாகிறேன். ஒரு புத்திசாலியை மந்த புத்திக் காரனாக்கிவிட்ட கோபம் அவன் மேல் மீண்டும் வருகிறது. விளைவு முந்தைய வரிக்கு முந்தைய வரியின் இரண்டாவது வார்த்தையிலிருந்து மீண்டும் படியுங்கள். இது ஒரு சுழல் எனக்குப் புரிகிறது வெளியேறிவிட்டேன். ஆனால் சுழல் எனத் தெரியாத பல சூழல்களில் நான் என்ன செய்ய முடியும்? என்ன சொல்ல வருகிறேன் எனப் புரிகிறதா உங்களுக்கு? யாருமே இல்லையே யாரிடம் கூறுகிறான் எனத் திகைக்காதீர்கள். ஒருமைக்கே ஆள்கள் இல்லை இதில் பன்மைவேறா. எல்லாமே கற்பனைதானே நீ நடத்துடா.

நான் உங்களிடம் பேச வந்தேன் ஆனால் பாருங்கள் அவன் அதைச் செய்யவிடாமல் இந்த உரையாடலை அவனுடனானதாக மாற்றிக்கொள்கிறான். டேய் இந்த நடிப்புதான வேண்டாங்கிறது. முதல் பாரா எழுதிட்டே திரும்பிப்பாத்தியே ஒரு ஈ காக்கா கூட வரலைங்குறது உனக்கும் தெரியும்லாடா. பெறகு ஏண்டா இப்படி வாழையிலையில் நெய் தடவி வெளியில் போடுற. இந்த நடிப்புதாண்டா உன்னோட பெரிய வியாதி. அதைத் தான் நான் சொல்லிட்டே இருக்கிறேன். ஆனால் உனக்குப் புரியல. உன்னப் பாத்தாலும் பாவமா இருக்குடா நானும் போயிட்டா நீ யாருட்டடா பேசுவ. கிட்டத்தட்ட எல்லாரையும் பகைச்சுட்ட. மீதி இருக்குறவங்களையும் சீக்கிரம் பகைச்சுக்கிடுவே. அதுக்கப்புறம் உன்னோட கதி. யோசிச்சுப்பாரு நான் மட்டும் தான். இது தாங்க இவனிடம் எனக்குப் பிடிக்காத விஷயம். எனது அடிமன ஓட்டங்களை அட்சரம்பிசகாமல் அப்படியே படித்துவிட்டு அதை என்னிடம் விமர்சிப்பான். இப்படிப்பட்ட ஒரு உறவு இவனோடு எனக்குத் தேவையா? ஆனால் உறவு தொடர்கிறது. இவனை மீறி ஒன்றையும் என்னால் பகிர்ந்துகொள்ள முடியாது. இவனை எப்படியாவது எங்கேயாவது விட்டுவிட்டு நாம் பேசுவோம். இப்போது அது முடியாது. நான் விடைபெறுகிறேன். நீ அடங்க மாட்டியாடா?

லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்