இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், மார்ச் 31, 2025

வாதை எல்லாம் வாஞ்சையின் பொருட்டே…


சில திரைப்படங்கள் நம்மைச் சிந்திக்கவிடாமல் செய்யும்; சில திரைப்படங்கள் தூங்கவிடாமல் செய்யும். சிந்திக்கவிடாமல் செய்யும் திரைப்படங்களை விட்டு விலகித் தூங்கவிடாமல் செய்யும் திரைப்படங்களை நோக்கிச் செல்லும்போது, திரைப்பட அனுபவம் நமது வாழ்வுக்கும் உதவக்கூடும். அப்படியான படங்களைப் பார்ப்பது நமது நேரத்தையும் பயனுள்ளதாக்கும். அப்படி நமது நேரத்தைப் பயனுள்ளதாக்கும் ஒரு திரைப்படமே பிரெஞ்சு இயக்குநர் ராபர்ட் ப்ரஸ்ஸான் இயக்கிய Diary of a Country Priest.
 
படத்தின் கதை மிகவும் எளிமையானது. ஒரு சிற்றூரின் சிறிய சபை, அதன் போதகர், அந்தச் சபையின் அங்கத்தினர்கள், அவர்களது மனோபாவங்கள் ஆகியவற்றைச் சுற்றிய சம்பவங்களே படமாக்கப்பட்டுள்ளன. இதை வைத்துக்கொண்டு, நம்பிக்கை, விசுவாசம், அன்பு, கருணை, போன்ற நற்குணங்களையும், வஞ்சம், விரோதம், வெறுப்பு போன்ற தீக்குணங்களையும் ஆராய்கிறது திரைப்படம்.

அம்பரி கோர்ட் என்னும் அந்தச் சிற்றூரின் சபைக்குப் பாதிரியாக வருகிறார் அந்த இளைஞர். பூஞ்சையான உடல் வாகு. எப்போதும் துயரத்தில் தோய்ந்தெழுந்தது போன்ற மூஞ்சி. பாதிரியாருக்குரிய அங்கியின்றி அவரைப் பார்த்தல் அரிது. இறை நம்பிக்கையை இதயம் முழுவதும் பரவவிட்ட மனிதர் அவர். தனது நாள்களின் ஒவ்வொரு நிகழ்வையும் அவர் தனது டைரியில் குறித்துவைக்கிறார். அந்த நிகழ்வுகளே காட்சிகளாக விரிகின்றன.

1951இல் வெளிவந்துள்ள திரைப்படம் இது. இதில் நடித்துள்ள பாதிரி கிறிஸ்துவை நினைவூட்டுகிறார். படம் பெரிய ஆன்மிக அனுபவத்தைத் தரக்கூடியதாக அமைந்துள்ளது. மிகத் தீவிரமான படம்தான். பார்வையாளரைச் சுவாரசியப்படுத்தும் எந்த அம்சமும் இல்லாத படம். எந்தக் காட்சியில் வேண்டுமானாலும் விருப்பமில்லாத பார்வையாளர் வெளியேறிக்கொள்ளலாம் என்ற முடிவெடுத்த பின்னர் படத்தை ப்ரஸ்ஸான் இயக்கியிருப்பார் என்றே தோன்றுகிறது.

இளம் பாதிரியுடன் யாருமே இல்லை. அவர் தனித்திருக்கிறார். அவரது உடல்நலமும் உவப்புக்குரியதாக இல்லை. ரொட்டியும் ஒயினும் மட்டுமே அவரது உணவு. அவற்றைத் தவிர வேறு எதுவும் அவருக்கு ஒத்துக்கொள்வதில்லை. ஒரு நாளில் அவருக்குப் பரிசாகக் கிடைக்கிறது முயல் கறி. அதைக் கூட அவரால் சமைத்துச் சுவைக்க இயலாது என்பதுதான் அவரது நிலைமை. வயிற்று உபாதை அவரை அடிக்கடி வாட்டி எடுக்கிறது. சபையிலோ அங்கத்தினர்களது நடவடிக்கை அவரை வேதனைப்படுத்துகிறது. முதியவர் ஒருவர் அவருடைய மனைவியின் இறுதிக் காரியத்துக்குச் சல்லிக்காசுகூடத் தர முடியாது எனச் சாதிக்கிறார். ஏழைகளை வதைக்காதீர்கள் என வாதிடுகிறார். எல்லோருக்குமான கட்டணம் எதுவோ அதுதான் அவருக்கும் விதிக்கப்பட்டிருக்கிறது. சபையின் கடமைகளை நிறைவேற்றுவதில் பாதிரிக்குச் சமூகத் திறமைகள் போதுமான அளவு இல்லை என அவரது மூத்த பாதிரிகளும் சபையோரும் கூறுகிறார்கள். ஆனால், பாதிரியோ இறை நம்பிக்கையில் ஊறித் ததும்புபவர். ஆனாலும், இரவுகளில் துயரம் கவியும் தருணங்களே அவரது துணையாய் உள்ளன.



புனித சமயச் சடங்கான திடப்படுத்துதல் தொடர்பான வகுப்புகளில் கலந்துகொள்ளும் சிறுமிகளில் செராஃபிதா என்னும் சிறுமி ஒருத்தி மட்டும் துடிப்பாக இருக்கிறாள். பாதிரியின் கேள்விக்குச் சமயம் சார்ந்த சரியான பதிலைக் கூறுகிறாள். தம் சீடர்களிடம் ரொட்டியைப் பிய்த்து உண்ணத் தந்தபோது, நீங்கள் உண்ணும் இந்த ரொட்டியானது எனது உடம்பு என்றும் ஒயினை அருந்தத் தந்தபோது, நீங்கள் அருந்தும் இந்த ஒயின் எனது ரத்தம் என்றும் கூறியதை நினைவுபடுத்தும் வகையில் அனுசரிக்கப்படும் சடங்குதான் திடப்படுத்துதல் என்கிறாள். பாதிரியின் உள்ளம் நிறைகிறது. ”எப்படி உன்னால் மட்டும் இப்படிச் சரியான பதிலைக் கூற முடிகிறது” எனப் பாதிரி கேட்கிறார். ”உங்களது அழகான கண்கள் தாம் காரணம்” என்கிறாள் செராஃபிதா. கதவுக்கு வெளியே பிற சிறுமிகள் சிரிக்கிறார்கள். பாதிரிக்கு என்னவோ போல் ஆகிவிடுகிறது. பாதிரி மௌனமாகக் கடக்கிறார் அந்தத் தருணத்தை. ஆனால், அவரது மனபாரம் அதிகரிக்கிறது. அவர்கள் ஏன் இவ்வளவு விரோத பாவம் காட்டுகிறார்கள் என டயரி எழுதுகையில் கேள்வி எழுப்புகிறார்.

செரஃபிதாவின் நடவடிக்கைகள் பாதிரிக்குக் கவலையை உண்டாக்குகின்றன. ஒரு நாள் பாதையோரத்தில் தோழிகளுடன் நிற்கும் அவளை சைக்கிளில் சென்ற பாதிரி பார்க்கிறார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் துள்ளிக் குதித்து ஓடும் செரஃபிதா தனது பள்ளிப் பையைத் தூக்கி சேறும் சகதியுமான நிலத்தில் எறிந்துவிட்டுப் போகிறாள். அதை எடுத்து அவளிடம் கொடுப்பதற்காக அவளுடைய வீட்டுக்குப் போகும் இளம் பாதிரிக்கு அங்கே எந்த மரியாதையும் கிடைக்கவில்லை; அவரது உதவி மதிக்கப்படவில்லை. மிகவும் பாராமுகத்துடன் அவர் நடத்தப்படுகிறார். செரஃபிதாவால் பாதிரி மிகுந்த வாதைக்கு ஆளாகிறார். தனது ஜெபம் குறைந்துவிட்டதோ என்னும் ஐயம் பாதிரிக்கு ஏற்படுகிறது. அதே செரஃபிதா பின்னொரு நாளில் மயங்கி சேற்றில் வீழ்ந்து கிடக்கும் பாதிரியைத் தொட்டுத் தூக்கித் துடைத்துப் பணிவிடை செய்து அனுப்புகிறாள். அப்போது அந்தச் சபையின் அங்கத்தினர்கள் எல்லோரும் பாதிரியைக் குடிகாரர் என்றே நினைக்கிறார்கள். அந்தச் சூழலில் செரஃபிதா அவரை அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறார்.

அந்த சபைக்குட்பட்ட மாளிகையில் ஃபெரெண்ட் சீமான் ஒருவர் வசிக்கிறார். மாளிகையின் சீமாட்டி சிறுவயதில் இறந்துவிட்ட தன் மகனை எண்ணியே துக்கத்துடன் நாள்களைக் கழிக்கிறார். சீமானுக்கும் வீட்டின் பணிப்பெண்ணான லூயிஸுக்கும் ரகசிய உறவு இருக்கிறது. இந்த உறவு காரணமாக சீமானின் பெண்ணான சந்தால் லூயிஸை இழிவுபடுத்துகிறாள். வீட்டில் நடைபெறும் நிகழ்வுகள் பருவப் பெண்ணான சந்தாலைக் கலக்கப்படுத்துகின்றன; அவளது நடத்தையில் கடினத்தன்மை கூடுகிறது. இது தொடர்பான தீர்வுக்கு முயல்வதாக சந்தாலிடம் கூறுகிறார் இளம் பாதிரி. அதற்காக, சந்தாலின் தாயிடம் பேசப்போன அன்று அந்த உரையாடலை நிகழ்த்த முடியாத அளவுக்குப் பாதிரியின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது- இவ்வளவுக்கும் நல்ல உடல்நிலையுடன் தான் அந்த மாளிகைக்குள் நுழைந்தார், என்னவோ திடீரென உடல்நிலை மோசமானது. மிகத் தீவிரமான உடல்நிலைக் கோளாறு என்பதை பாதிரி உணர்கிறார். ஏற்கெனவே இதைப்போல் ஆறு மாதங்களுக்கு முன்னரும் உடல் நலம் கெட்டிருந்தது அவரது நினைவுக்கு வருகிறது.

டார்ஸி என்ற இடத்தின் பாதிரியார் தந்த அறிவுரையின்படி டாக்டர் தெல்பெந்தெவைப் பார்க்கப் போகிறார் இளம் பாதிரி. அவரது உடலநலனைப் பரிசோதித்த டாக்டர் மிகவும் பலவீனமாக உள்ளதாகக் கூறுகிறார். மிகக் குறைவாக உணவு உண்ணும் காரணத்தாலேயே இப்படியான பாதிப்பு ஏற்பட்டதாகவும் நிலைமை மோசமாக உள்ளதாகவும் அவர் பாதிரியிடம் தெரிவிக்கிறார். ”ஆல்கஹால் என்ன ஆனது” என வினவுகிறார். ”ஆல்கஹாலா” என பாதிரி அதிர்ச்சியாகிறார். ”நீ குடித்ததைக் கேட்கவில்லை நீ பிறப்பதற்கு வெகு காலத்துக்கு முன்னர் உனக்காகச் செலவிடப்பட்ட ஆல்கஹால்” என்கிறார் டாக்டர். அவர் இயேசுவின் ரத்தம் குறித்துக் கேள்வி எழுப்புவதாக உணர்ந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. ”உனது கண்கள் நம்பிக்கைமிக்கவை, விசுவாசத்தை வெளிப்படுத்துபவை” என்று கூறும் டாக்டர், ”நீ, டார்ஸியின் பாதிரியார், நான் மூவரும் ஒரே இனம்” என்கிறார். அநீதியை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்கள் என்னும் பொருளில் அப்படிக் கூறுகிறார். டாக்டர் தனக்கு இறை நம்பிக்கை இல்லை என்கிறார். ஆழ்ந்த வருத்தத்தால் காயம்பட்டிருக்கும் மனத்தால் டாக்டர் அப்படிப் பேசுவதாக இளம் பாதிரி உணர்கிறார்.



ஒரு நாள் வழியில் டார்ஸியின் பாதிரியாரைச் சந்திக்கிறார் இளம் பாதிரி. அவர் ஆயர்களுக்குப் பாதிரியின் மீது நம்பிக்கை இல்லை என்கிறார்; பாதிரிக்கு விவேகம் இல்லை என்றும் கூறுகிறார். அவரது மிகப் பெரிய திட்டங்கள் சூழலுக்கு ஒத்துவராதவை அவற்றில் நம்பகத்தன்மை இல்லை என்பதைப் போன்ற கருத்தைத் தெரிவிக்கிறார். இவையெல்லாம் இயேசு கிறிஸ்துவை விமர்சிப்பதுபோலத்தான் உள்ளன. அவரது அன்பு என்பது நமது சமூகச் சூழலுக்கு ஒத்துவருமா எனக் கேள்வி கேட்பதுபோல் தான் இருக்கிறது. உலகம் புரியாத பிள்ளை என்பதைப் போல் இளம் பாதிரியைக் குறிப்பிடுகிறார் டார்ஸியின் பாதிரியார். இந்தக் காட்சியைக் காணும்போது, பகைவரை நேசிக்கச் சொன்ன இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை மானசீகமாக நம்மால் தரிசிக்க முடிகிறது, அதே நேரத்தில் அதை ப்ரஸ்ஸான் எள்ளிநகையாடுவதாகவும் தோன்றுகிறது.

ஒருநாள் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து தேவாலயம் சென்று ஜெபிக்கிறார். இதயத்தை நொறுக்கும்படியான உருக்கமான ஜெபத்தில் ஈடுபடுகிறார். அன்று காலையில் அவருக்கு மோசமான தாளில் பெயர் குறிப்பிடப்படாமல் எழுதப்பட்ட ஒரு கடிதம் வருகிறது. அவருக்கு வருத்தப்படுவதாகத் தெரிவித்த அந்த மொட்டைக் கடிதம் அவரை அந்தச் சபையை விட்டு வெளியேறும்படி எச்சரிக்கிறது. அவரது நலத்தை முன்னிட்டே அவரை வெளியேறச் சொல்வதாகவும் எவ்வளவு விரைவில் வெளியேற முடிகிறதோ அவ்வளவு விரைவில் வெளியேறுவது நல்லது என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதத்தில் இருந்த கையெழுத்தும், ஃபெரண்ட் வீட்டுப் பணிப்பெண் லூயிஸ் கையில் உள்ள பைபிளிலிலிருந்த கையெழுத்தும் ஒரே போல் உள்ளன. அதன் பின்னர் அவரால் முழு மனத்துடன் ஜெபிக்க இயலவில்லை. ஆனால், நுரையீரலுக்குக் காற்றுப் போல, குருதிக்கு பிராண வாயு போல அவருக்கு ஜெபம் தேவையாயிருக்கிறது. தான் தனித்துவிடப்பட்டதாக பாதிரி உணர்கிறார். எப்போதும் போன்ற அதே தனிமை, அதே ஆழ்ந்த, படுதீவிர, கலக்கம் தரும் வகையிலான அமைதி. தடைகளை உடைக்கும் நம்பிக்கை காலாவதியாகிவிட்டதோ என்ற உணர்வு அவருக்கு எழுகிறது. கையில் இருக்கும் லாந்தர் விளக்கை ஊதி அணைக்கிறார். கடவுள் தன்னைவிட்டு விலகிவிட்டாரோ என அவருக்குத் தோன்றுகிறது.

தனது கடமைகளிலிருந்து தான் வழுவிவிடவில்லை என்று நினைக்கிறார். தனது உடல் நலம் மேம்பட்டால் தனது பணிகளை இன்னும் எளிதாக நிறைவேற்ற முடியும் என நம்புகிறார். இந்த நிலையில் டாக்டர் தெல்பெந்தே மர்மமான முறையில் இறந்துபோகிறார். அது தற்கொலை எனும் பேச்சும் ஊருக்குள் உலவுகிறது. அவரது மரணம் டார்ஸியின் பாதிரிக்குத் தாங்கவொண்ணாத வேதனையைத் தருகிறது. அவர் தற்கொலை செய்துகொண்டாரா என இளம் பாதிரி டார்ஸியின் பாதிரியாரிடம் கேட்கிறார். ”டாக்டர் ஏமாற்றமடைந்திருந்தார், அவரது நோயாளிகள் அவரை விட்டுவிட்டுச் சென்றனர் மொத்தத்தில் தனது தொழிலில் மீண்டும் ஜொலிக்க முடியும் என்னும் நம்பிக்கையை இழந்துவிட்டார்” என்கிறார் பாதிரியார். அதை அப்படியே கேட்கும் நிலையில் இளம் பாதிரி இல்லை. டார்ஸியின் பாதிரியார் கூறிய சொற்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதைப் போல் இருக்கிறது இளம் பாதிரிக்கு. அவர் இதுவரை அனுபவித்தறியாத மிகுந்த மன வேதனைக்கு ஆளாகிறார். ”உண்மையிலேயே டாக்டர் தற்கொலை செய்துகொண்டாரா?” என மீண்டும் கேட்கிறார். ”என்னிடம் கேட்காதே கடவுள்தான் நீதிபதி அவருக்குத்தான் தெரியும்” என்கிறார் டார்ஸியின் பாதிரியார். ”நாம் போரில் ஈடுபடுகிறோம்; எதிரியை எதிர்கொள்ள வேண்டியதுதான். ’எதிர்கொள்ள வேண்டியதுதான்…’ என்பது அவரது கொள்கை அதை அடிக்கடி டாக்டர் சொல்வார் நினைவிருக்கிறதல்லவா” என்று சொல்லிவிட்டுப் பாதிரியார் செல்கிறார். இந்தக் காட்சியின்போது, ஒலிக்கும் தேவாலய மணி பெருஞ்சோகத்தை, வேதனையை வெளித்தள்ளுகிறது. இளம் பாதிரி சற்று நேரம் அங்கேயே நின்றுவிட்டு மெதுவாக அங்கிருந்து நகர்கிறார். மழையின் நீர் நிலத்தடிக்குப் போவதைபோல் பாதிரியாரது சொற்கள் இளம் பாதிரியின் உள்ளத்தின் ஆழத்தில் சென்று புதைகின்றன.

எனது நம்பிக்கையை நான் இழந்துவிடவில்லை. இந்தத் திடீரான, குரூரமான மனக் கசப்பு மிகுந்த அனுபவம் எனது நரம்புகளைப் பாதித்துள்ளது; என்னைச் சஞ்சலப்படுத்தியுள்ளது ஆனால் எனது நம்பிக்கை மாறாமல் அப்படியேதான் இருக்கிறது என்று நினைக்கிறார் இளம் பாதிரி. இவ்வாறு நினைத்தபோதே தன்னை யாரோ அழைத்தது போல் இருக்கிறது என அவருக்குத் தோன்றுகிறது. மெதுவாக எழுந்துசென்று ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்க்கிறார். அங்கே யாரும் இருக்க மாட்டார்கள் என்று உணர்ந்தும் அப்படிப் பார்க்கிறார்.

பாதிரியைச் சந்திக்க வருகிறாள் சந்தால். அவளது உரையாடலில் அவளுக்கு அவளுடைய தந்தை மீதும் தாய் மீதும் அவள் கொண்ட வெறுப்பு வெளிப்படுகிறது. பணிப்பெண் மீதான கோபத்தை வெளிப்படுத்துகிறாள். அவளைக் கொன்றுவிடுவேன் அல்லது என்னை மாய்த்துக்கொள்வேன் எனக் கடுங்கோபம் வெளிப்பட மொழிகிறாள். வெறுப்பைக் கைவிடச் சொல்கிறார் பாதிரி. அவளைப் பாவமன்னிப்பு கூண்டுக்கு நகர்த்திச் செல்கிறார். ஆனால், அவளோ பாவமன்னிப்பு பெறத் தான் விரும்பவில்லை என்கிறாள். எனக்கு வேண்டியது நீதி என்பது உங்களுக்கு நன்கு தெரியும் என்கிறாள். தன் தாய் ஒரு கோழை என்கிறாள். தனக்கு மகிழ்ச்சியானவற்றைக்கூடச் செய்துகொள்ள முடியாதவள் என்கிறாள். பணிப்பெண்ணும் தந்தையும் என்ன சொன்னாலும் நம்புபவள் என்கிறாள். தந்தைமீதும் மரியாதை இல்லை என்கிறாள். அவர்கள் எல்லோரையும் வெறுக்கிறேன் என்கிறாள். அவள் உதடுகள் வெளிப்படுத்தாத வார்த்தைகளையும் அவரால் உணர முடிகிறது.

அவள் பையில் மறைத்துவைத்திருக்கும் கடிதத்தைக் கொடு எனக் கேட்கிறார் பாதிரி. அவள் மறுக்காமல் கடிதத்தைக் கொடுத்துவிட்டு, கண்டிப்பாக நீங்கள் ஒரு பிசாசாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டுச் செல்கிறாள். அவள் சென்ற பின்னர், அந்தக் கடிதத்தை பாதிரி வாசிக்காமல் நெருப்பிலிட்டு எரிக்கிறார். அது அவள் தன் தந்தைக்கு எழுதிய தற்கொலைக் குறிப்பு என்பதாகக் காட்சியில் உணர்த்தப்படுகிறது. அவளது உக்கிரமான கண்களில் தற்கொலைத் தடயத்தைப் பாதிரி உணர்கிறார். தான் ஒன்றுக்கும் பயனற்ற துக்ககரமான பெரிய மதிப்பில்லாத பாதிரி என அவருக்குத் தன்னைப் பற்றிய ஓர் எண்ணம் ஏற்படுகிறது. அவள் கூறியவற்றைக் காது கொடுத்துக் கேட்டிருக்கக் கூடாது என்றும் அவருக்குத் தோன்றுகிறது. கடவுள் அவளைத் தண்டிப்பதாக அவர் நினைக்கிறார். மனிதர்கள் குறித்த எதுவும் தனக்குத் தெரியாது; தெரிந்துகொள்ளவும் இயலாது என்று அவருக்குத் தோன்றுகிறது.

சந்தாலிடம் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் பொருட்டு சீமாட்டியை வீட்டில் சென்று சந்திக்கிறார் பாதிரி. சந்தால் எதுவும் விபரீதமாகச் செய்துகொள்வாளோ எனப் பயப்படுவதாகச் சொல்கிறார். அவளுக்கு மரண பயம் அதிகம் என்கிறாள் சீமாட்டி. அப்படிப்பட்டவர்கள் தங்களை மாய்த்துக்கொள்வார்கள் என்கிறார் பாதிரி. அப்படிப் பிறர் உங்களிடம் சொல்லியிருக்கக் கூடும் எனச் சொல்லும் சீமாட்டி நீங்கள் மரணத்துக்குப் பயப்படுகிறீர்களா என வினவுகிறாள். கணவனின் துரோகம், மகளின் வெறுப்பு போன்றவற்றுக்குத் தானா பொறுப்பு என்பதைப் போன்ற கேள்விகளை எழுப்புகிறாள் சீமாட்டி. நல்லது கெட்டதுகளில் நாம் ஒருவரில் ஒருவர் பிணைக்கப்பட்ட விதத்தை முழுமையாகப் புரிந்துகொண்டால் நம்மால் வாழவே முடியாது என நான் நம்புகிறேன் என்கிறார் பாதிரி. மரணம், அன்பு, கடவுள் நம்பிக்கை போன்ற விஷயங்கள் குறித்து இருவரும் உரையாடுகிறார்கள். அதன் வழியே ஆன்மிக உலகின் பல சாளரங்கள் திறந்துகொள்கின்றன.

பாதிரி கடவுளின் மேன்மையை எடுத்துச் சொல்கிறார். கடவுளிடமிருந்து வெகுதூரம் விலகியிருந்த சீமாட்டி கடவுள்தன்மையைப் புரிந்துகொள்கிறார். தனது மகனின் மரணம் காரணமாகக் கடவுளிடமிருந்து விலகியிருந்த அவர் வேறு திசைக்குத் திரும்புகிறார். தனது கழுத்தில் அணிந்திருந்த மகனின் படம் கொண்ட டாலர் கோக்கப்பட்டிருந்த சங்கிலியை அறுத்து நெருப்பில் எரிகிறார். என்ன பைத்தியக்காரத்தனம் என்கிறார் பாதிரி. என்னை மன்னியுங்கள் என்கிறார் சீமாட்டி. கடவுள் யாரையும் துன்புறுத்துவதில்லை என்கிறார் பாதிரி. நாம் ஒருவரோடொருவர் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறார் என்கிறார். கடவுள் அன்பின் எஜமானன் அல்ல அன்பே அவர்தான் என்றும் கூறுகிறார் பாதிரி. சீமாட்டி வேதனையுடன் முழங்கால் படியிட்டுத் தலையைக் கவிழ்கிறார். அமைதி ஆட்கொள்ளட்டும் எனப் பாதிரி ஜெபித்து அவர் சிரசின் மேல் சிலுவைக்குறியிடுகிறார்.

பாதிரி வீட்டுக்கு வரும்போது, தோட்டக்காரர் ஒரு சிறிய பொதியை அவரிடம் கொடுக்கிறார். அதில் சீமாட்டி நெருப்பில் எரிந்த சங்கிலியிலிருந்த வெற்று டாலரும் அவரது கடிதமும் இருக்கின்றன. இறந்துபோன மகனின் பயனற்ற நினைவு எல்லாவற்றிலிருந்தும் விலக்கித் தன்னைத் தனிமைக்குள் தள்ளிவிட்டது என்றும் அதிலிருந்து அடுத்த குழந்தை தன்னை வெளியே இழுத்துவிட்டிருக்கிறது போல் தெரிகிறது என்றும் எழுதிய கடிதத்தைப் பாதிரி வாசிக்கிறார். ஒரு பொறுப்பிலிருந்து தான் வழுவவில்லை என்ற நிம்மதி சீமாட்டிக்குக் கிடைத்ததைக் கடிதம் தெரிவிக்கிறது. பாதிரி தன்னை அமைதியடையச் செய்ததை நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார் சீமாட்டி. நாம் இனி சந்தித்துக்கொள்வோமா என்று தெரியவில்லை எனக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த சீமாட்டி அன்றிரவு இறந்துவிடுகிறார்.

துயரமிகு பின்னணியிசை ஒலிக்க பாதிரி சீமாட்டியின் மாளிகையை நோக்கி வியர்க்க விறுவிறுக்க ஓடுகிறார். சீமாட்டியின் முகத்தில் புன்னகை உறைந்திருக்கலாம் என நம்பிய பாதிரி புன்னகை அரும்பியிராத முகத்தையே பார்க்கிறார். கைகளை உயர்த்தி அவள் அமைதிகொள்ள ஜெபித்து, அப்படியே முழங்கால் படியிடுகிறார். தன் வேலையை முடித்துவிட்டு மீண்டும் மாளிகைக்குச் செல்கிறார். சீமாட்டியின் சடலத்தின் நெற்றியில் கைவைத்து அவள் அமைதிகொள்ள வேண்டுகிறார்.

மறுநாள் மாளிகைக்குச் செல்கிறார். அங்கே சந்தால் அவரை அழைத்துச் செல்கிறாள். பணிப்பெண் வீட்டை விட்டுப் புறப்பட்ட செய்தியைச் சொல்கிறார். சீமாட்டியின் இருக்கையில் சந்தால் அமர்கிறார். தான் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவிக்கிறாள். தான் விரும்பியது தனக்குக் கிடைத்துவிட்டதாகக் கூறுகிறாள். நீ இப்போது இருப்பது போலவே தொடர்ந்து இருந்தால், நீ யாரையாவது ஒருவரை வெறுத்துக்கொண்டே இருப்பாய்… உண்மையில் நீ வெறுப்பது பிறரையல்ல உன்னையே என்கிறார் பாதிரியார். நான் விரும்பியது நடக்கவில்லை எனில் நானே என்னை வெறுக்கத்தான் செய்வேன் என்கிறாள் அவள் ஆங்காரத்துடன்.

சீமாட்டியின் மரணத்துக்குப் பாதிரி காரணம் என்று அந்தச் சிற்றூர் நம்புகிறது. ஆனால், சீமாட்டி மன அமைதியுடன்தான் மரணமடைந்துள்ளார் என்பது, சீமாட்டியை அவளது மன இறுக்கத்திலிருந்து விடுவிடுத்து இறைவனுக்கு அருகில் கூட்டிவந்துள்ள பணியைச் செய்துமுடித்த பாதிரிக்கு மட்டுமே தெரியும். அதற்குச் சான்றாக, பாதிரிக்குச் சீமாட்டி எழுதிய கடிதம் உள்ளது. பாதிரியோ அந்தக் கடிதத்தைக் காட்டி தனது தரப்பை நிரூபிக்க விரும்பவில்லை. அப்படியே இருந்துவிடுகிறார்.

பாதிரியின் உடல்நிலை மிகவும் மோசமாகிறது. அருகிலுள்ள நகரத்துக்கு சிகிச்சைக்காகச் செல்கிறார். நகரத்துக்குச் செல்வதற்காக ரயில் நிலையத்துக்கு பாதிரியை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்கிறான் சந்தாலின் உறவுக்கார இளைஞன். அந்த இரு சக்கர வாகனப் பயணம் பாதிரிக்கு ஒரு சாகசம் போல் தோன்றுகிறது. மிகச் சன்னமான நேரமே நிகழ்ந்தாலும் பாதிரியின் வாழ்வில் அந்தப் பயணம் பொருள்மிக்கதாகிறது. அதன் பின்னர் அவர் மருத்துவரைப் பார்க்கிறார். பாதிரிக்குப் புற்றுநோய் இருப்பது உறுதியாகிறது. பழைய நண்பர் ஒருவரைப் பார்க்கச் செல்லும் பாதிரி அங்கேயே உயிரை விட்டுவிடுகிறார்.

மொத்தத்தில், பாதிரியின் வாழ்க்கை பல கேள்விகளை எழுப்பிவிடுகிறது. எல்லோருக்கும் நல்லவராக நடக்க முயன்ற பாதிரியை ஏன் ஒருவரும் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை. பாதிரியைப் போன்றவர்கள் கதி இதுதானா? உலகம் சிறக்க அன்பொன்றே வழி என்று சொன்ன கிறிஸ்துவின் எண்ணம் தவறா? இந்த உலகம் நல்லவர்களுக்கானதில்லையா? மிகச் சரியான மனிதரான அந்தப் பாதிரி ஏன் மிகத் தவறான மனிதராகப் புரிந்துகொள்ளப்பட்டார்?

அந்தச் சிறிய ஊர் என்பதை முழு உலகமாகவும் அதன் அங்கத்தினர்களை உலக மக்களாகவும் பாதிரியை கிறிஸ்துவாகவும் கொள்ளும்போது, படம் விரிந்த தளத்தில் பொருள்தருகிறது.

படத்தில் இரண்டு மரணங்கள் இடம்பெறுகின்றன. ஒன்று, டாக்டர் தெல்பந்தேவின் மரணம், அது தற்கொலை எனச் சொல்லப்படுகிறது. அவர் கடவுள் நம்பிக்கையற்ற மனிதராகவே காட்டப்படுகிறார். அடுத்தது சீமாட்டியின் மரணம். அவர் கடவுளை உணர்ந்து அவர் அருகில் சென்ற வேளையில் மரணமடைகிறார். ஆனால், அவரது முகத்தில் இறப்புக்குப் பின்னர் ஒரு சிறிய புன்னகைகூட இல்லை. இவை எல்லாம் சேர்ந்து ப்ரஸ்ஸான் கடவுள் தொடர்பாக என்ன சொல்ல வருகிறார் என்பதைப் பற்றிக் கோடிட்டுக் காட்டுகின்றன. அதைச் சிந்திக்கும் வேளையில் நமக்குப் படம் வெவ்வேறு போதனைகளைத் தருகிறது. அவற்றுக்காகத் தான் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டியதிருக்கிறது.
*

வெள்ளி, மார்ச் 07, 2025

காதல் எனும் மயில் துத்தம்

சம காலத்தில் எழுதுபவர்களின் எழுத்துகளை அதிகமாக வாசித்திருக்காத நிலையில் கவிப்பித்தன் என்பவர் எழுதிய ஈமம் என்றொரு நாவலை வாசித்து முடித்தேன். அவர் ஏற்கெனவே நீவாநதி, மடவளி என இரு நாவல்களை எழுதியுள்ளார் என்கிறது நாவலின் முன்னுரை. ஒரு வித்தியாசமான களமாக, ஒரு பிணவறையில் தொடங்கிய கதை பின்னர் உயிர்த்தெழுதல், காதல், கைவிடுதல், உறவுச் சிக்கல், வாழ்வதற்கான போராட்டம் என்னும் பாதையில் சென்று மற்றொரு காதலின் தொடக்கத்தில் முடிந்தது.

நாவலாசிரியர் வருவாய்த் துறையில் பணியில் இருக்கிறார் என நண்பர் கூறினார். நாவலும் ’சக வருவாய்த் துறை அலுவலர்களுக்கு’ சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்தத் துறையில் இருந்துகொண்டு எழுதுவது என்பது பெரிய சவால் என்பதை மறுப்பதற்கில்லை. கடும்பணிச் சுமை, உளவியல்ரீதியான நெருக்கடி என அனைத்துச் சிக்கல்களையும் தாண்டி அங்கிருந்து ஒருவர் எழுதுகிறார் என்பது ஆசுவாசம் அளிக்கவே செய்கிறது.
நாவல் போகிறபோக்கில், குடியின் தீங்கையும் சொல்லாமல் சொல்கிறது. கைக்குழந்தையை வைத்துக்கொண்டு கிடைக்கும் சொற்பப் பணத்தையும் குடித்துத் தீர்க்கும் தகப்பனை நாவல் நம் முன் நிறுத்தும்போது, அப்படி என்ன தான் இருக்கிறது இந்தப் பாழாய்ப்போன குடியில் என்று தான் தோன்றுகிறது. ஓரிடத்தில், அந்தத் தகப்பன் இரவில் குடித்துவிட்டு உறங்கிவிடுகிறான். காலையில் விழிப்பு தட்டியபோது, அந்தச் சின்னஞ்சிறிய குழந்தை அவனது கால் கட்டை விரலைச் சூப்பிக்கொண்டிருக்கிறது. பிறந்து சில மாதங்களில் தாயை இழந்த குழந்தை, தந்தையைத் தவிர ஆதரவென யாருமற்ற அந்தக் குழந்தை அப்படி நிற்கும் காட்சி சட்டெனப் பதைபதைக்க வைக்கிறது. ஆனால், நாவலாசிரியர் எந்த இடத்திலும் உணர்வைச் சுரண்டும் தன்மையில் வளவளவெனச் சம்பவங்களை நீட்டிச் செல்லவில்லை. அதே வேளையில் தவிர்த்திருக்கப்பட வேண்டிய சில சம்பவங்களை விரிவாக விளக்கவும் செய்கிறார்.
ஒண்ட ஓரிடமும் கிடைக்காத, தோள்சாய ஒருவரும் இல்லாத மகேந்திரனுக்கு ஆதரவு அளிக்கும் பெரியவர் மாசானம் அவனைப் போன்ற துயரத்தை எதிர்கொண்டவர் என்பதால் அவனுக்கு ஆதரவளிக்கிறார். அவரது கதையைச் சொல்லாமலே புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், நாவலாசிரியர் அதையும் விரிவாகச் சொல்கிறார். மகேந்திரனின் தந்தை ஆனந்த மூர்த்திக்கும் சுசீலாவின் தந்தை கதிரவனுக்குமான சண்டையின் காரணமாகவே மகேந்திரன் சுசீலா திருமணத்தை நடத்தவியலாத நிலை ஏற்படுகிறது. ஆனால், ஆனந்த மூர்த்திக்கும் கதிரவனுக்குமிடையே என்ன சண்டை என்பது இறுதிவரை தெரியவில்லை.
உண்மையிலேயே மனிதர்கள் இவ்வளவு சுயநலத்துடன் தான் நடந்துகொள்கிறார்களா, சொந்தக் குடும்பமே இவ்வளவு விரோத பாவம் கொண்டுவிடுமா? இப்படியான கேள்விகளை நாவல் எழுப்புகிறது. ஒரு செய்தித்தாளில் நாம் வாசிக்கும் விநோதமான சம்பவமோ ஒரு வருவாய்த்துறை அலுவலகத்துக்கு வரும் ஒருவர் தன் வாழ்வு குறித்துச் சொன்ன கதையோ இந்த நாவலுக்கு ஊற்றுக் கண்ணாயிருக்கக் கூடும் என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது. அப்படி ஒரு சம்பவத்தை எடுத்துக்கொண்டு சம்பவங்களை முன் பின்னாகக் கோத்து சுவாரசியமான கதையாக்கியிருக்கிறார்.
நாவல் நடைபெறும் இடம் குறிப்பாகச் சுட்டப்படுகிறது. ஆரணி, குடியாத்தம், வேலூர், பெங்களூர், பம்பாய் எனப் பல இடங்கள் நாவலில் இடம்பெற்றுள்ளன. அந்த மனிதர்தம் வாழ்க்கை நாவலில் காட்டப்படுகிறது. ஆனால், நாவல் நடைபெறும் காலம் குறிப்பாகச் சுட்டப்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக நாவல் சம்பவங்களில் கிடைக்கும் தரவுகளிலிருந்து வாசகரே ஊகித்து அறிந்துகொள்ளத்தான் முடிகிறது. நாவலில் தகவல்களைப் பரிமாறத் தொலைபேசி இல்லை. கடிதப் போக்குவரத்தே உள்ளது. ஒரு கல்லறைக் குறிப்பில் மறைவு 1988 என்று வருகிறது. இவற்றை வைத்தே நாவல் இந்தக் காலகட்டத்தில் நடந்திருக்கிறது என்னும் முடிவுக்கு வாசகர் வர வேண்டியுள்ளது. காலம் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருக்கிறது என்னும் முடிவுக்கு வர எந்தத் தடயமும் தென்படவில்லை.
வாழ்வதற்கான ஆசை மனிதரை எந்தச் சூழலையும் எதிர்கொள்ளவைத்துவிடுகிறது என்னும் வகையில் நாவல் நம்பிக்கையை அளிக்கிறது. சொந்தத்துக்குள் நடந்த காதலால் பல பிரச்சினைகளை எதிர்கொண்ட மகேந்திரன் மகள் சங்கீதாவின் பார்வை வெளியில் ஒரு வாலிபன் மீது அழுத்தமாக விழும்போது, நாவல் நம்மிடமிருந்து விடைபெற்றுச் செல்கிறது. அந்தச் சங்கீதாவின் வாழ்வில் என்னவெல்லாம் துயரம் வரப்போகிறதோ என்று ஏற்படும் எண்ணத்தைத் தவிர்க்கவியவில்லை.
காதல் சிக்கலைத் தாங்கிக்கொள்ளவியலாத ஒருவன் மயில் துத்தம் குடித்துச் சாக முயல்கிறான்; காதலுடன் மணந்துகொண்ட ஒருவன் மீது கொண்ட பிணக்கு காரணமாக ஒருத்தி மரத்தில் தொங்குகிறாள். இவர்களுக்குப் பிறந்த பெண்ணும் காதலில் விழத்தான் செய்கிறாள். எவ்வளவு போராட்டம் இருப்பினும், எவ்வளவு பிரச்சினைகள் இருப்பினும் மலர்கள் மலர்வது போல் காதலும் மலர்ந்துகொண்டே இருக்கிறது. அதனால் ஏற்படும் துயரங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. வாழ்க்கை ஒரு தொடர் பயணம். அந்தத் தொடர்பயணத்தில் அருகருகே அமர்ந்த கதாபாத்திரங்கள் தொலைவுக்குச் சென்றுவிடுவதும், தொலைவில் இருந்த கதாபாத்திரங்கள் அருகருகே வந்துவிடுவதும் வாழ்க்கை நடத்திக் காட்டும் மாயமன்றி வேறென்ன?
நாவலில் பல இடங்களில் எழுத்துப் பிழைகள் காணப்படுகின்றன; ஓரிடத்தில் நாவலின் பிரதான கதாபாத்திரமான மகேந்திரனே மனோகரனாகியிருக்கிறான். என்னடா திடீரென மகேந்திரன் எப்படி மனோகரன் ஆனான் எனப் பார்த்தால் அது பிழை என்பது தெரிகிறது. ஆனால், பிழைகளைக் கடந்து நாவல் அதன் பின்னே வாசகரை அழைத்துச் சென்றுவிடுகிறது.
இந்த நாவலை வாசித்து முடித்த பின்னர் தமிழில் copy editing எவ்வளவு அவசியம் என்பதை உணர முடிந்தது. மிகவும் செறிவாகவும் கன கச்சிதமாகவும் அமைந்திருக்க வேண்டிய நாவல் நாவலாசிரியர் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிய திருப்தியில் வாசகருக்கு அளித்திருக்க வேண்டிய பரம திருப்தியில் பாதியை அள்ளிச் சென்றுவிட்டது.
ஈமம்
கவிப்பித்தன்
வெளியீடு:
நூல்வனம்
முதல் பதிப்பு: பிப்ரவரி 2021
பக்கங்கள்: 384
விலை: ரூ. 440

(2024 மே 1 அன்று ஃபேஸ்புக்கில் எழுதிய குறிப்பு)

வியாழன், மார்ச் 06, 2025

வாழத்தகுதியில்லாத மனுஷன்

இயக்குநர் மகேந்திரனின் ‘உதிரிப் பூக்கள்’ படம் வெளியாகி 45 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தமிழ்த் திரைப்படங்களைச் சிலாகித்துப் பேசும் பெரும்பாலானோர் மறக்காமல் குறிப்பிடும் படம் ‘உதிரிப்பூக்கள்’. இது மகேந்திரனின் முதல் படமன்று. ஆனால், முதல் படமோ எனும் மயக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு உரையாடல்களில் புழங்கும் படம். படத்தின் உச்சகட்ட காட்சி உங்களுக்கு நினைவிருக்கிறதா? 

நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க... ஆனா இன்னக்கி ஒங்க எல்லாரையும் நான் என்னப்போல மாத்திட்டேன்... நான் செஞ்ச தவறுகள்லயே பெரிய தவறு அதுதான்... 

என்று கூறிய பின்னர் சுந்தரவடிவேலு (நடிகர் விஜயன்) தன் ஆசைக் குழந்தைகளை அழைத்து அவர்களிடம் பேசுவான். அப்போது, தன் மகனிடம் நல்லா படிக்கணும், நல்ல  பேர வாங்கணும் என்று கூறும் அவன் மகளிடம் முத்தம் மட்டும் கேட்டுப் பெறுவான். 

இந்தப் படத்தைப் பல முறை பார்த்திருக்கிறேன். அன்று இரவு திடீரென ஏதோ ஒரு காரணத்தால் இந்த உச்சகட்ட காட்சியைப் பார்க்க நேர்ந்தது. சாகும்தருவாயில்கூட சுந்தரவடிவேலு மாறவில்லையோ என்ற சந்தேகத்தை இந்தக் காட்சி அளித்தது. இறுதியாக அவன் ஊர்க்காரர்கள் மனத்தில் குற்றவுணர்வை விதைத்துவிடுகிறான். நான் இறந்துவிட்டாலும், உங்கள் அனைவரையும் என்னைப் போல் மாற்றிவிட்டேன் என்ற குரூர எண்ணம் அவன் மனத்தில் குடிகொண்டிருக்குமோ எனும் சந்தேகம் தோன்றிவிட்டது. அதைப் போல் ஆணாதிக்க எண்ணம் கொண்ட அவன் ஆண்பிள்ளையைத் தான் படிக்க வேண்டும் என்று கூறுகிறான், பெண் பிள்ளையிடம் அன்பின் அடையாளமான முத்தத்தை மட்டுமே கேட்டுப் பெறுகிறான்.  

ஊரையே வறுத்தெடுத்த ஒரு கொடியவனை ஊர் முழுக்க ஒன்று திரண்டு தற்கொலைக்குத் தூண்டிவிடுகிறது. எல்லோருடைய உணர்வுகளையும் கொன்ற அவனை ஊர் ஒன்று திரண்டு கொன்றுவிடுகிறது. அவன் தற்கொலை செய்துகொள்ளவில்லை; ஊரால் கொலைசெய்யப்பட்டுவிடுகிறான். அந்தக் கொலை குறித்த குற்றவுணர்வை அவன் மிகவும் நைச்சியமாகத் தூவியும் விடுகிறான். பிறரது துன்பத்தில் இன்பம் காணும் சுந்தரவடிவேலுகள் ஒருபோதும் திருந்துவதில்லை என்பதாகத் தான் படத்தை அந்த இரவில் பார்த்தேன். 

இயக்குநர் என்ன நினைத்து இந்தக் காட்சியை அமைத்தாரோ தெரியவில்லை. இறுதிக் காட்சி எனக்கு ஏனோ மேற்கண்ட வகையான ஓர் எண்ணத்தை அளிக்கத்தான் செய்தது. நீங்கள் படம் பார்த்தால், உங்களுக்கும் அந்த எண்ணம் வருகிறதா எனப் பாருங்கள். படம் யூடியூபிலேயே கிடைக்கிறது. 

ஞாயிறு, மார்ச் 02, 2025

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்


எதேச்சையாக இன்றுதான் ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலை வாசித்து முடித்தான். இன்று அவருடைய பிறந்தநாளாம். பள்ளிப் பருவத்தில் வாசித்த ஒரு நாவலை சுமார் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் வாசித்தால் அது எப்படியிருக்கும் என்ற ஆர்வத்தாலேயே ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலை வாசிக்கத் தொடங்கினான். அவன் பிறந்த ஆண்டு, பிறந்த மாதம் இந்த நாவலின் முதல் பதிப்பு வெளியாகியுள்ளது. சிறு வயதில் வாசித்தபோது இந்நாவலின் சில சம்பவங்கள் நினைவில் பதிந்திருந்தன. இப்போது வாசித்தால் அவை என்னவிதமான உணர்வைக் கொடுக்கும் என்பதை அனுபவம் கொள்வதற்காகவே நாவலை வாசித்தான்.

பள்ளி, கல்லூரிப் பருவங்களில் வாசித்த பல நூல்களை இப்போது வாசிக்க முயன்றபோதும், அவற்றை முடிக்க முடியவில்லை. ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கிய நாவல்களைக்கூட சுவாரசியக் குறைவு காரணமாக முழுமையாக வாசிக்காமல் அப்படியே வைத்துவிடுவதே அவனது வாடிக்கை. ஏன் அப்போது வாசித்தோம் என்பது விளங்காமலே நாவலை மூடிவைத்துவிடுகிறான். அப்படியான மனநிலையில் தான் இந்த நாவலையும் திறந்தான். ஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த நாவல் அவனை வாஞ்சையோடு தழுவிக்கொண்டது. அவனது இதயத்தைச் சுகமான உணர்வுத் தந்தியாக மீட்டியது.
நாவலில் இடம்பெற்ற பெண்களில் இருவருக்கு மட்டும் ஜெயகாந்தன் பெயரிடவில்லை. ஒருவர் சபாபதிப் பிள்ளையின் மனைவி. மற்றொருவர் புத்திபேதலித்துத் திரியும் அந்த இளம்பெண். உண்மையில் இந்த நாவல் சபாபதிப் பிள்ளையின் மனைவியால் தான் தொடங்குகிறது. அந்தப் பெண்மணி அந்த ஊரின் பரியாறி பழனியுடன் ஓர் அதிகாலையில் செல்வதுதான் நாவலின் தொடக்கப்புள்ளி. அந்த அதிகாலைச் சம்பவத்துக்குப் பிறகு சபாபதியின் வாழ்வு விடியவே இல்லை.
சபாபதிப் பிள்ளையால் அதைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அன்னியோன்யமாகத்தான் இருவரும் வாழ்ந்தனர். பத்தாண்டு தாம்பத்யத்தில் குழந்தை பாக்யம் இல்லை என்பதைத் தவிர ஒரு குறையும் இல்லை. ஆனாலும் அவரிடமில்லாத ஏதோ ஒன்று பழனியிடம் இருந்திருக்க வேண்டும்தானே? இல்லாவிடின் அந்தப் பெண்மணி ஏன் சபாபதிப் பிள்ளையை விட்டுவிட்டு பழனியுடன் செல்ல வேண்டும்? ஏன் சென்றார் சபாபதியின் மனைவி என்பதற்கு நாவலாசிரியர் எந்தக் காரணத்தையும் சொல்லவில்லை. ஆனால், நாவலின் இறுதியில் புத்திபேதலித்த அந்த இளம்பெண் - அவளை ஹென்றி முதலானோர் பேபி என்கிறார்கள், ஆனால் நாவலாசிரியர் அவளுக்குப் பெயர் எதுவும் தரவில்லை. ஹென்றியே நாவலாசிரியர் உருவாக்கிய பாத்திரம் எனும்போது, பேபி நாவலாசிரியர் தந்த பெயர்தானே என நீங்கள் தருக்கம் பேசலாம், அப்படி நீங்கள் பேசினால் மறுக்க இயலாது. – ஹென்றியின் வீட்டுக்கு ஏன் வருகிறாள், வீட்டைப் பழுதுபார்த்து முடிந்த பின்னர் அவள் வந்தபடியே சென்றும்விடுகிறாளே அது ஏன்? இதற்கு ஏதாவது பொருள் புரிந்தால் தான் சபாபதிப் பிள்ளையின் மனைவி பழனியுடன் சென்றதற்கான பொருளை உணர முடியும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
மிகக் குறுகிய காலத்தில் நாவல் நடந்து முடிந்துவிடுகிறது. கிருஷ்ணராஜ புரத்துக்கு ஹென்றி வரும்போது, தொடங்கும் நாவல் தன் பப்பாவின் பூர்வீக வீட்டை அவன் பழுதுபார்த்து புதுமனைபுகுவிழா நடத்தும் நாளில் முடிந்துவிடுகிறது. ஹென்றியும் அவனுடைய பப்பாவும் வாசகர்களை ஈர்ப்பதைப் போலவே நாவலின் பெண்களான அபிராமி, கனகவல்லி, கிளியாம்பாள், நவநீதம், பஞ்சவர்ணத்தம்மாள், நாகம்மா ஆகியோரும் ஈர்த்துவிடுகிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு வகையாக இருக்கிறார்கள்.
தேவராஜனின் அக்கா அபிராமி – அவள் அக்கம்மா என்றே அழைக்கப்படுகிறாள்- சிறுவயதிலேயே கணவனை இழந்துவிட்டவள். அவளோடு தேவராஜனின் மனைவி கனகவல்லியால் ஒத்துப்போக முடியவில்லை. ஆகவே, கணவனைப் பிரிந்து வாழ்கிறாள். மணியக்காரரின் மனைவி நாகம்மா – மணியக்காரர் பெயர் ராமசாமி – கணவர் குடித்துவிட்டு வந்த அன்று பெரிய சண்டையிடுகிறாள். அன்றே தன்னை மாய்த்துக்கொள்கிறார் மணியக்காரர். அதன் பிறகு அதை எண்ணி துக்கத்தில் மூழ்குகிறாள். அவளுடைய மகள் கிளியாம்பாள், குழந்தை பெற்ற அவளை அவளுடைய கணவன் பார்க்க வரவில்லை. ஆனால், அவளுக்குக் கணவன் மீது பெரிய வருத்தமில்லை. அவளுக்கும் அவளுடைய அம்மா நாகம்மாவுக்கும் நடக்கும் சண்டையின் போது, அம்மாவும் மகளும் என்றபோதும், இருவருமே ஒருவர்மீது ஒருவர் விஷம் உமிழ்கிறார்கள்.
ஹென்றி ஒரு லட்சிய மனிதன். அப்படியொருவனை யதார்த்தத்தில் பார்க்கவியலாது. கிருஷ்ணராஜ புரமே ஒரு கற்பனையூராகத்தான் தெரிகிறது. தேவராஜன் ஒரு அசட்டு அறிவுஜீவி. அறிவுள்ளதாக நம்பும் ஆண்கள் எல்லோருமே அசடர்களாகத் தான் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையிலேயே தேவராஜன் நடந்துகொள்கிறார். அவர் ஒரு பள்ளி ஆசிரியர்.
இந்த நாவலில் கல்யாண வாழ்க்கை இருக்கிறது. ஆனால், காதலோ காமமோ இல்லவே இல்லை. புத்திபேதலித்த இளம்பெண்ணான பேபி நிர்வாணமாக உலாத்தும்போதுகூட அந்த இடத்தில் துளியும் காமம் தலைதூக்க வில்லை. ஒரு பெண்ணின் நிர்வாணம், நிர்வாணம் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதைப் போல் அந்தச் சம்பவம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
சபாபதிப் பிள்ளை ஊரைவிட்டுப் போக முடிவெடுத்த தருணம் மிகவும் துயரகரமானது. அன்புக்குரிய மனைவி மற்றொரு மனிதருடன் செல்கிறாள் என்பதை நேரடியாகப் பார்க்கிறார். இப்போது, அவரால் என்ன செய்ய முடியும்? புலவரான அவர் அருந்ததி முதலான பதிவிரதைகளின் கதையைச் சொல்லியிருக்கிறார். அப்போதெல்லாம் அதைகூட இருந்து கேட்ட மனைவி இப்போது அவரை விட்டுச் செல்கிறார். ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்த இருவருக்கு இடையே பகிர்ந்துகொள்ள முடியாத எண்ணம் இருந்திருக்கிறது எனும்போது, மனிதர் வாழ்வுக்கு என்னதான் பொருள் இருக்கிறது?
ஊருக்குப் பயந்துதான் சபாபதிப் பிள்ளை ஊரைவிட்டுச் செல்ல முடிவெடுக்கிறார். அந்த ஊருக்கு அவர் மனைவி பழனியுடன் சென்றது கடைசி வரை தெரியவே தெரியாது. அவரும் அந்த ஊருக்கு, கிருஷ்ணராஜ புரத்துக்குக் கடைசி வரை வரவே இல்லை. அவர் இறந்து மூன்று நாள்களுக்குப் பிறகுதான் ஹென்றி அங்கே வருகிறான். ஹென்றி பள்ளிக்குச் சென்றிருக்கவில்லை, ஆனால் அவ்வளவு பண்பானவனாக இருக்கிறான். ஹென்றியைப் பெற்றெடுத்த அம்மாவும் அப்பாவும் நாவலில் வருவதில்லை. அவனைத் தத்தெடுக்கிறார் சபாபதிப் பிள்ளை. போரில் இறந்த நண்பன் மைக்கேலின் மனைவியைத் தன் வாழ்வுடன் இணைத்துக்கொள்கிறார் சபாபதிப் பிள்ளை. அவர்களுடைய வாழ்வுக்குப் பொருள் சேர்க்க வருகிறான் ஹென்றி.
பப்பா தன் கதையை ஹென்றிக்குச் சொல்கிறார். தன் மனைவி ஓடிப்போன கதையைத் துயரத்துடன் சொல்கிறார். அவரால் அந்தத் துயரத்திலிருந்து மீளவே இயலவில்லை. ஆனால் அவர் முழுமையாக ஒரு வாழ்வு வாழ்ந்து முடித்தும்விடுகிறார். பழனி தற்கொலைசெய்துகொள்கிறான். ஆனால், சபாபதியின் மனைவியும் பழனியும் என்ன வாழ்வு வாழ்ந்தார்கள் என்பது தெரியவில்லை.
பெற்ற அம்மா அப்பாவை இழந்து, வளர்த்த பெற்றோரையும் பறிகொடுத்துவிட்டு, ஆதரவற்ற மனிதனாக கிருஷ்ணராஜ புரத்துக்கு வரும் ஹென்றிக்கு ஊரும் உறவும் சொந்தமும் பந்தமும் நட்பும் கிடைக்கின்றன. மனிதரிடையே வெறுப்பும், விரோதமும், குரோதமும் மண்டிக்கிடக்கும்போது, மனிதநேயத்தை வலியுறுத்துவதாக இந்த நாவல் தோற்றம்கொள்கிறது.
மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? ஒருவருக்கொருவர் ஏன் பிரிந்துகிடக்கிறார்கள்? வெட்கம், அவமானம் என்பதற்கெல்லாம் என்ன பொருள் இருக்கிறது? மனிதர்கள் அனைவரும் எப்போதும் ஏன் அன்புடனேயே நடந்துகொள்ளக் கூடாது என்ற ஏக்கத்தை எல்லாம் நாவல் ஏற்படுத்தத்தான் செய்கிறது. ஆனால், மனிதர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்… கோபமும் வன்மமும் வெறுப்பும் புரையோடிப்போன வாழ்க்கையைத் தானே வாழ்ந்து தீர்க்கிறார்கள்… இந்த வாழ்க்கையை என்ன செய்துவிட முடிகிறது என்ற நினைப்பு ஒரு கசந்த குறுஞ்சிரிப்பாக முகத்தில் தவழ்ந்தது… நாவலை மூடிவைத்துவிட்டு சன்னலுக்கு வெளியே தென்படும் உலகத்தை வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிட்டான் அவன்.

(2024 பிப்ரவரி 24 அன்று ஃபேஸ்புக்கில் எழுதிய குறிப்பு)

லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்