இந்த வலைப்பதிவில் தேடு

சனி, டிசம்பர் 14, 2013

மேகத்தை எப்படி விவரிக்க

சென்னை சர்வதேச திரைப்பட விழா



இன்று சென்னை திரைப்பட விழாவில் காலையில் ராணி சீதை அரங்கில் எல்லீஸ் ஆர் டங்கன் குறித்த An American in Madras என்னும் ஆவணப்படத்தை பார்த்தேன். எல்லீஸ் பற்றிய நல்ல காட்சிபூர்வ ஆவணம். இயக்குநர் பற்றிய படமென்றாலும் தமிழ்த் திரைப்படம் அரசியல் எனப் பல விஷயங்களைத் தொட்டுச் சென்றது படம். எல்லீஸ் ஆர் டங்கன் ரெட்டை நாடி என்பதால் எம்ஜிஆரை கதாநாயக வேடத்திற்கு ஒப்பந்தம் செய்ய மறுத்துள்ளார் கருணாநிதி தான் வற்புறுத்தி எம்ஜிஆரை நடிக்க வைத்துள்ளார். நல்ல சூரியனை படமாக்கி அதை நிலவாக காட்டிய செய்தி டங்கனின் படைப்புத்திறனை வெளிப்படுத்தியது. திரையிடல் முடிந்த பின்னர் அரங்கில் பேசிய முக்தா வி சீனிவாசன் தான் எல்லீஸ் ஆர் டங்கனுடன் சென்று மந்திரி குமாரி நாடகத்தைப் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். பத்திரிகையாளர் ஞாநி ஆவணப்பட இயக்குநரிடம் ஏன் கருணாநிதியை நேர்காணல் செய்யவில்லை எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த இயக்குநர் கருணாநிதியைப் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் நேர்காணல் அளிக்கவில்லை எனக் குறிப்பிட்டார். முக்கியமான ஆவணப்படம். 


அடுத்ததாக கேசினோ திரையரங்கில் Like father, Like son என்னும் ஜப்பானியப் படம் பார்த்தேன். தங்கள் குழந்தை தங்களுடைய குழந்தை இல்லை என்பதை அக்குழந்தையின் ஆறு வயதில் பெற்றோர் அறிகின்றனர். மருத்துவமனையில் குழந்தை மாறிவிட்டது. தாங்கள் வளர்த்த குழந்தைக்கும் தங்கள் சொந்தக் குழந்தைக்கும் இடையில் மாட்டிக் கொண்டு பெற்றோர் படும் அவதியே படம். பல இடங்களில் தொய்வு. சொந்த ரத்தம் என்பதைவிட வளர்த்த பாசம் தான் அதிகம் என்னும் வகையில் படம் அமைந்திருந்தது. கை கொடுத்த தெய்வம், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற தமிழ்ப்படங்களில் இம்மாதிரியான விஷயம் கையாளப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது.


அடுத்ததாக உட்லண்ட்ஸில் How to Describe a Cloud என்னும் படம் பார்த்தேன். மாயத்தன்மை கொண்ட படம். பார்வை பறிபோன தாய்க்கும் மகளுக்கும் இடையிலான பாசத்தையும் அம்மகளது காதலையும் சுற்றி படத்தின் சித்திரிப்பு அமைந்திருந்தது. காட்சிகள் மெதுவாக நகர்ந்தன ஆனால் தீவிரமாக இருந்தன. ஒளிப்பதிவு இசை ஆகியவை படத்தை வழக்கமான படத்திலிருந்து மாறுபட்டதாக காட்டியது. மர்மம், புதிர் நிறைந்த மனித வாழ்வை உணர்த்தும்விதத்தில் படம் அமைந்திருந்தது.


இறுதியாக உட்லண்ட்ஸில் Waiting for the Sea என்னும் ரஷ்யப் படத்தைப் பார்த்தேன். நம்பிக்கையை வலியுறுத்திய படம். தட்பவெப்பம் சரியில்லை என்பதால் கடலுக்கு செல்ல வேண்டாம் என வற்புறுத்தியும் கடலுக்கு செல்கிறான் கடலோடி ஒருவன். அவனுடன் அவனது மனைவியும் செல்கிறாள். புயல் வந்து அனைவரையும் மூழ்கடித்துவிடுகிறது. கடலோடி மட்டும் தப்பித்துவிடுகிறான். பத்துப்பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் தனது கடற்கரை ஊருக்கு வருகிறான். கடல் என்பதே அங்கு இல்லை. எல்லாம் பழங்கதை. இயற்கை மாற்றத்தால் கடல் சுத்தமாக வற்றிவிட்டது. அவன் மீண்டும் கரையில் ஒதுங்கி துருப்பிடித்துப் போன கப்பலைச் சரிசெய்து கடலில் தொலைந்த மனைவியைக் கண்டுபிடித்துவிட முடிவுசெய்து போராடுகிறான். ஊரே அவனைப் பைத்தியக்காரன் என்று முடிவுசெய்துவிடுகிறது. அவன் தனது நம்பிக்கையில் வென்றானா என்பதே படம். 


 (படங்களைப் பற்றிய சிறு குறிப்புகளே இவை.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்