இந்த வலைப்பதிவில் தேடு

சனி, ஜனவரி 01, 2011

விரையும் நகரத்தில் வீற்றிருக்கும் சிலைகள்




சென்னை வானொலி நிலையத்தில் ஒரு நிகழ்ச்சிக்கென நண்பர் பழ.அதியமான் சென்னையில் உள்ள சிலைகள் குறித்து ஒரு கட்டுரை கேட்டிருந்தார். அதற்கென எழுதப்பட்ட கட்டுரை இது.
பரபரப்பான நகரத்தினிடையே அமைதியாக இருந்தபடி நகரத்தின் நடவடிக்கைகளுக்கு மௌன சாட்சியாக இருக்கும் சென்னை நகர சிலைகள் பற்றிய தகவல்கள் சார்ந்த குறிப்புகள் இவை. மக்கள் வெகு ஜோராகப் புழங்கும் இடங்களில் கம்பீரமாய் வீற்றிருந்த போதும் எத்தனையோ ஜோடிக் கண்களில் காட்சியாகத் தெறித்து விழுந்த போதும் ஒவ்வொரு சிலைகளுக்குமான பின்னணியை அறிவதற்கு அடுத்து அடுத்து என அலைய வைக்கும் நகர வாழ்க்கை நமக்கு இடம் தருவதில்லை. தினந்தோறும் நாம் கடந்து செல்லும் இடத்தில் கொலு வீற்றிருக்கும் சிலைகள்மீது நமது கவனம் குவிக்கப்படாமல் இருப்பதற்கு அவை குறித்த தகவல்கள் நமக்குத் தெரியாதது ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு சிலை எதனால் நிறுவப்படுகிறது, சிலையாக வெயிலிலும் மழையிலும் காயும் ஆளுமையின் அருமை பெருமைகள் என்னென்ன என்பன குறித்து நாம் ஏதாவது அறிந்திருந்தால் அந்தச் சிலை மீது நம் கவனம் குவியலாம். நாடு சுதந்திரம் அடைந்து அறுபதாண்டுகள் கடந்த பின்னரும் விடுதலைக்கு முந்தைய பிரிட்டிஷார் சிலருக்கு வைக்கப்பட்ட சிலைகள் ஒன்றிரண்டு இன்னும் நகரை அலங்கரித்துக்கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட சிலைகள் சிலவற்றைப் பார்க்கலாம்.
மேஜர் ஜெனரல் சர் தாமஸ் மன்றோ
முதலில் சென்னையின் மவுண்ட் ரோட்டில் தீவுத்திடலுக்கு முன்னர் கம்பீரமாக வீற்றிருக்கும் மேஜர் ஜெனரல் சர் தாமஸ் மன்றோவின் சிலை பற்றி பார்க்கலாம். பெரும்பாலான அரசியல் பேரணிகள் இந்த இடத்திலிருந்து தான் தொடங்குகிறது என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும் தகவலே. சிலையாக குதிரைமீது கம்பீரமாக அமர்ந்தபடியிருக்கும் தாமஸ் மன்றோ 1820 முதல் 1827வரை சென்னை மாகாண கவர்னராக இருந்துள்ளார். பொதுவாக குதிரை மீது அமர்ந்துள்ள நிலையில் போர்வீரர்களுக்குத் தான் சிலை வைக்கப்படும். ஆனால் போர்வீரனாக இல்லாவிடினும் சான்றோனாக உயர்ந்த குணமுடையவனாக இருப்பவனைத் தங்களுக்குச் சமமாகக் குதிரைமீது அமரவைத்து அழைத்துச் செல்வது ரோமாபுரி அரசர்களின் பழக்கம். இத்தகு சான்றோர்களின் சிலைகளுக்கு ஈக்வெஸ்ட்ரியன் சிலைகள் என்பது பெயர். இத்தகையதொரு சிலை தான் தாமஸ் மன்றோவினுடையது. புராதன கால ரோமர்களின் சிற்ப சாத்திரத்தையொட்டி உருவான சிலை இது. இத்தகு சிலைகள் உலகில் நான்கு ஐந்து இடங்களில் மட்டுமே உள்ளதாகத் தெரிகிறது. இச்சிலையை லண்டனின் எஃப் சான்ட்ரீ என்பவர் 1838இல் உருவாக்கியுள்ளார். இச்சிலையின் பெரிய குறையென குதிரையில் ஏற அவசியமான சேணம் வடிவமைக்கப்படாதது சொல்லப்படுகிறது. இக்குறை காரணமாக மன அவஸ்தைக்குள்ளாகி இச்சிற்பி இறந்ததாகவும் கூறப்படுகிறது.
மே 25, 1761இல் பிறந்த மன்றோ ஒரு சிப்பாயாக 1780இல் சென்னை வந்தார். தனது அயராத உழைப்பால் படைத்தலைவன் ஆனார். கம்பெனி நிர்வாகத்தில் இழைக்கப்படும் அநீதிகளை இவர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறினார். சென்னை மாகாணத்திற்கு முதன்முதலில் ஓர் எல்லையை நிர்ணயித்து அதற்கு உருவம் கொடுத்தவர் மன்றோதான். விவசாயத் துறையில் ரயத்வாரி திட்டம் என்ற முக்கியமான சீர்திருத்தத்தை இவர் கொண்டுவந்தார். விவசாயிகளுக்குத் தங்கள் நிலத்தில் சகல உரிமைகளையும் வழங்குவது இத்திட்டத்தின் நோக்கம். கிராமப் பஞ்சாயத்து முறைக்கும் உயிரூட்டியவர் இவரே. 1827ஆம் ஆண்டு ஜூலையில் பெல்லாரிக்கு அருகிலுள்ள பெட்டிகொண்டா என்னும் கிராமத்தில் இவர் காலமானார்.
மன்னர் ஐந்தாம் ஜார்ஜ்
அடுத்ததாக ஐந்தாம் ஜார்ஜ் மன்னரது சிலை. பூக்கடை காவல் நிலையத்திற்கருகே ஆஜானுபாகுவான இவரது முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஜார்ஜ் டவுன் என அழைக்கப்படும் இந்த இடத்திற்கு வெள்ளைக்காரர்கள் வைத்த பெயர் பிளாக் டவுன். இந்தக் கறுப்பர் நகரம் என்ற பெயரை எப்படியாவது மாற்ற வேண்டும் எனப் பாடுபட்டவர் விவேக சிந்தாமணி என்னும் தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியரான சி.வி.சுவாமிநாதய்யர். 1906இல் ஜார்ஜ் இளவரசராக இருந்தபோது சென்னைக்கு வருகை புரிந்தார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தற்போது சிலை இருக்கும் இடத்தில் நடைபெற்ற விழாவில் பிளாக் டவுன் என்னும் பெயர் ஜார்ஜ் டவுன் என மாற்றப்பட்டது. 1910இல் ஜார்ஜ் மன்னரானார். இவருக்கு 1911இல் சிலை வைக்கப்பட்டபோது சிலையை தற்போதைய இடத்தில் வைக்கும்படி யோசனை கூறியதும் சுவாமி நாத அய்யர்தான். இந்தச் சிலை கோவிந்தாஸ் சத்தூர்பூஜாதாஸ் என்பவரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
ஐந்தாம் ஜார்ஜ் மன்னரது ஆட்சியின் வெள்ளி விழாவையொட்டி யுத்த வெற்றி நினைவுச் சின்னத்திற்கு அருகே மற்றொரு சிலை வைக்கப்பட்டிருந்தது. அந்தச் சிலை தற்போது சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நன்கொடையில் உருவாக்கப்பட்டது இச்சிலை. இதே போன்று சென்னை ராஜாஜி ஹால் இருக்கும் எஸ்டேட்டில் ஏழாவது எட்வர்டு மன்னருக்குச் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்தச் சிலையும் தற்போது சென்னை அருங்காட்சியகத்தில்தான் வைக்கப்பட்டுள்ளது.
லார்டு ரிப்பன்
சென்னை கார்ப்பரேஷன் கட்டடத்தில் நுழைந்தவுடன் இடப் பக்கத்தில் கிழக்கே பார்த்து பிரம்மாண்டமாக நிற்கும் சிலை லார்டு ரிப்பனுடையது. ரிப்பன் எங்கள் அப்பன் என இந்தியர்களால் பிரியத்தோடு அழைக்கப்பட்ட இவரது சிலை முதலில் மவுண்ட் ரோட்டில் இருந்ததாம். அப்போது ரவுண்டானா என அழைக்கப்பட்ட இடத்தில் பதினாறு கால் மண்டபத்தின் முகப்பில் இருந்திருக்கிறது இச்சிலை. அம்மண்டபம் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததால் 1928இல் அது இடித்துத்தள்ளப்பட்டது. அப்போது சிலை அருகே நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கேயும் அது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததால் சிலையை கார்ப்பரேஷன் கட்டடத்திற்கு மாற்றியுள்ளனர். 1827, அக்டோபர் 24 அன்று பிறந்த லார்டு ரிப்பன் ஜூலை 9, 1909வரை உயிர் வாழ்ந்தார். 1880இலிருந்து 1884வரை இந்திய வைஸ்ராயாக இருந்துள்ளார். இங்கிலாந்து அனுப்பிவைத்த வைஸ்ராய்களில் மிகவும் புகழ்பெற்றவர் இவர். நீதித்துறையில் நிலவிய இனப்பாகுபாட்டை ஒழிக்க முயற்சியெடுத்தது, நாட்டுமொழி செய்தித்தாள் சட்டத்தை திரும்பப்பெற்றது, தல சுய ஆட்சியை அறிமுகப்படுத்தியது, மைசூரைத் திரும்ப வழங்கியது போன்ற நடவடிக்கைகள் இந்தியர்களிடையே அவரது புகழை மேலும் உயர்த்தியது.
விக்டோரியா மகாராணி
சென்னை பல்கலைக்கழக வளாக செனட் மண்டபத்தின் தெற்குப் புறத்தில் விக்டோரியா மகாராணியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இது இங்கிலாந்தில் வடிக்கப்பட்டு இங்கே கொண்டுவரப்பட்டது. சலவைக்கல்லால் ஆன சிலை இது. விக்டோரியா மகாராணி சக்ரவர்த்தினியாக பதவி ஏற்றபோது இந்தியர்களுக்கு மத சுதந்திரம் அளித்துப் பிரகடனம் செய்தார். இதற்கான நன்றிக்கடனுக்காகவே இச்சிலை வைக்கப்பட்டுள்ளது.
டாக்டர் அன்னிபெஸண்ட்
அடுத்து, டாக்டர் அன்னிபெஸண்ட் சிலை. இவரது திரு உருவச் சிலை சென்னை விவேகாநந்தர் இல்லத்தின் அருகே கடற்கரைக்கு எதிரில் அமைந்துள்ளது. இந்திய விடுதலைக்காகப் போராடிய ஐரிஷ் மாதரசியின் சிலை இது. அன்னிபெசண்ட் 1847 அக்டோபர் 1 அன்று லண்டனின் க்ளாஃபார்மில் பிறந்தவர். 1916இல் ஹோம் ரூல் இயக்கத்தை தொடங்கியவர். த சீக்ரெட் டாக்ட்ரின் என்ற நூலை எழுதிய பிளேவட்ஸ்கி அம்மையாரை பாரிசில் 1889 ஆம் ஆண்டில் சந்தித்தார் அன்னிபெசண்ட். இது இவரது வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. தன்னுடைய நாத்திக வாதத்தைக் கைவிட்டு ஆத்திகரானார். பிளேவட்ஸ்கியின் பிரும்மஞான சபையில் உறுப்பினரானார். இதனை அடுத்து மார்க்சியவாதிகளுடன் தனக்கிருந்த உறவுகளைத் துண்டித்துக்கொண்டார். 1891 இல் பிளேவட்ஸ்கி இறந்ததை அடுத்து பிரும்மஞானத்தில் ஒரு முக்கிய புள்ளியானார் அன்னி பெசண்ட். அச்சபையின் சார்பில் 1893 ஆம் ஆண்டில் சிகாகோவில் இடம்பெற்ற உலக கொலம்பிய கண்காட்சியில் கலந்து கொண்டார். 1893 ஆம் ஆண்டில் பிரும்மஞான சபையின் உறுப்பினராக முதற் தடவையாக இந்தியா வந்தார் அன்னிபெசண்ட் அம்மையார். சென்னை அடையாரில் பிரும்மஞான சபையின் தலைமை நிலையத்தை நிறுவினார். சென்னையில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து இந்தியாவின் சுதந்திர இலட்சியத்துக்காக, ஆன்மிக மறுமலர்ச்சிக்காக பாடுபட்டவர் அன்னிபெஸண்ட் அம்மையார். காசியில் இவர் தோற்றுவித்த ஹிந்து கல்லூரிதான் பிற்காலத்தில் காசி ஹிந்து பல்கலைக்கழகமாக பிரசித்தி பெற்றது. செப்டம்பர் 20, 1937 அன்று அடையாரில் காலமானார் அன்னிபெசண்ட் அம்மையார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்