இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, ஜனவரி 16, 2011

கனவுக்கும் வெற்றிக்குமான இடைவெளி

எப்போதோ எழுதிய பதிவு. இப்போது வலையேற்றம் செய்துள்ளேன். ஏன் இதை இப்போது வலையேற்றம் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு இப்போது தான் அது தோன்றியது என்பதே பதில். காலச்சுவடுக்காக எழுதப்பட்டது இது. ஆனால் அப்போது இதழில் இடம்பெறவில்லை, அதற்கான தகுதி ஏதேதோ காரணங்களால் இல்லாததாகக் கருதப்பட்ட பதிவு இது. இந்நிகழ்வு தொடர்பான பதிவை பொறுப்பாசிரியர் தேவிபாரதி எழுத அது காலச்சுவடு ஜூன் 2008 இதழில் பிரசுரமானது. அதைப் படிக்க விரும்புபவர்களுக்கென அதன் இணைப்பை கீழே தந்திருக்கிறேன்.

http://www.kalachuvadu.com/issue-102/page58.asp

கனவுகளோடு தொடங்கி எட்டு இதழ்கள் நடத்திய சுந்தர ராமசாமியின் காலச்சுவடைத் தொடர்ந்து நடத்தி நூறு இதழ்கள்வரை கொண்டுவந்திருக்கும் தருணத்தை நினைவுகூரும்விதமாக எட்டு நூல்களைப் பதிப்பித்து அவற்றை வெளியிடும் நிகழ்ச்சியாக ஒரு நாள் பண்பாட்டு நிகழ்வைக் காலச்சுவடு 19.04.2008 அன்று சென்னை தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபைத் திரையரங்கில் நடத்தியது. நிகழ்ச்சிக்கு இளம் வாசகர்கள் முதல் மூத்த எழுத்தாளர்கள்வரை, பலர் வந்திருந்தனர். பத்துப் பதினைந்து பேர்களுக்கே திணறும் தற்போதைய இலக்கியச் சூழலில் ஒருநாள் நிகழ்வுக்குத் தேவையான அளவு ஆள்கள் வந்திருந்ததே ஆறுதலான விஷயமாகப்பட்டது.

எல்லா விழாக்களும் ஏதோ ஒன்றைக் குறித்தோ குறிவைத்தோ நிகழ்த்தப்படுகின்றன. இடைவிடாத எதிர்ப்புகளைத் தாங்கிக்கொண்டு தனது பயணத்தில் இவ்வளவு தூரத்தைத் தீவிர இதழ் ஒன்று கடந்து வந்திருப்பதைக் கொண்டாடும் விதத்தில் பதிப்புச் செய்திருப்பதும் அவசியமான ஒன்றென்றேபடுகிறது. வலியது வாழும் வர்த்தக உலகத்தில் வாய் பேசா மௌனிகளால் வாழ இயலாச் சூழல் நிலவுகிறபோது வெற்றிகளை உரத்துக்கொண்டாடுவதில் பிழை இல்லை. ஆனாலும், வெற்றி குறித்த ஆனந்தத்தோடு நின்றுவிடாமல் சுராவின் கனவிற்கும் இப்போது அடைந்துள்ள வெற்றிக்கும் உள்ள உறவைப் பரிசீலிப்பது மாற்றுக்கருத்துக்கு மதிப்பளிக்கும் இதழுக்கு அத்தியாவசியமான தேவை. விமர்சனத் தராசுகள் தாறுமாறாய்த் தடம்புரண்டு தவிக்கும் இலக்கியச் சூழலில் ஏதோ ஒரு வகையிலான விமர்சனங்களை உருவாக்குவதே ஆரோக்கியமான விஷயம். நிகழ்வில் மணா, கடற்கரய் ஆகியோருக்கு இதழ் பற்றிய விமர்சனத்தை எடுத்துவைக்க வாய்ப்பளிக்கப்பட்டது.

முதல் அமர்வின் தொடக்க நிகழ்ச்சியாகக் காலச்சுவடு முதல் இதழ்த் தலையங்கம் நாடக ஆளுமை சண்முகராஜாவால் வாசிக்கப்பட்டது. சு.ராவின் தலையங்கம் சிந்தனையைத் தூண்டியது. இப்போது காலச்சுவடு அடைந்திருக்கும் வெற்றியைத்தான் சு.ரா கனவு கண்டாரா? காலச்சுவடின் தனிக்குணங்களாக முதல் தலையங்கத்தில் அவர் குறிப்பிட்ட விஷயங்கள் இப்போது நடைமுறையில் உள்ளதா? இவை குறித்துச் சிந்திப்பது இந்தக் கணத்தில் மிக முக்கியமானது. எல்லாவற்றிலும் தென்படும் சடங்குகளைத் தீவிர குணத்துடன் எதிர்த்த சு.ராவின் பெயரைச் சொல்லிக்கொண்டு வெறும் சடங்குகளாக எவற்றையும் நடத்திவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவதே அவருக்குச் செலுத்தும் மரியாதையாக இருக்கும் என்ற சிந்தனையே ஏற்பட்டது. சரியோ தவறோ மனத்தில் பட்ட உண்மையை யாருக்காகவும் பாரபட்சம் காட்டாமல் எழுதத் தூண்டிய சு.ரா மீது ஏற்படும் மரியாதை அசலானதாகவே உள்ளது. பின்னர், காலச்சுவடின் பயணம் குறித்து அரவிந்தன் கட்டுரை வாசித்தார்.

காலச்சுவடு நடத்திய சுந்தர ராமசாமி 75 பரிசுப் போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசு தர அழைக்கப்பட்டிருந்தார் அசோகமித்திரன். வென்றவர்களும் காலச்சுவடில் நீண்ட காலம் சிறப்பாகப் பணியாற்றி வரும் பி. சிவக்குமார், நாகம், லோகநாதன் ஆகியோரும் பரிசளித்துக் கௌரவிக்கப்பட்டனர். அசோகமித்திரன் பரிசுகளைப் பக்குவமாகக் கொடுத்தார். உண்மைகளைத்தான் போட்டு உடைத்துவிடுகிறார். ஆனால், அதை அவர் உடைக்கும் விதம் தனி அழகு. இந்த மேடையில் அந்த வாய்ப்பில்லை.

ஆ. இரா. வேங்கடாசலபதி பாரதி கருவூலம் என்னும் பெயரில் 1904 முதல் 1916வரை ஹிந்துவில் வெளியான பாரதி கடிதங்களைத் தொகுத்துள்ளார். இந்நூலை ஹிந்து ராம் வெளியிட பா. மதிவாணன் பெற்றுக்கொண்டார். சதானந்த் மேனன், ஊர்வசி புட்டாலியா போன்ற பத்திரிகையாளர்கள் உரையாற்றினர். மாற்றிதழ் குறித்த பல்விதமான கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். நிகழ்ச்சிமுடியும் வரையிலும் பாரதி கருவூலம் புத்தகத்தைப் பக்கம்பக்கமாகப் புரட்டியபடியே மேடையில் மௌனமாக, பொறுமையாக அமர்ந்திருந்தார் அசோகமித்திரன். ஹிந்து ராம் பேசும்போது தேச விடுதலை, பெண்கள் விடுதலை குறித்த பாரதியின் வீரியமிகு எழுத்துக்களைப் பற்றிக் குறிப்பிட்டார். நூல்களைப் பதிப்பிப்பது குறித்துக் காற்றில் கணக்குப் போட்டே காற்றோடு காற்றாய்க் கரைந்துவிட்ட பாரதியின் எழுத்துக்கள் இன்னும் பலருக்குச் சுவாசம் அளிப்பதே அதன் சிறப்பு. அச்சில் பார்க்கும் ஆசையில் பிறந்த எழுத்தல்ல அவரது எழுத்து, அகத்தில் கனன்ற நெருப்பு உமிழ்ந்த எழுத்தென்பதால்தான் இது சாத்தியப்படுகிறது.

கிடைத்த வாய்ப்பைப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொண்டார் மணா. துதிபாடலுக்கோ தூற்றுதலுக்கோ போகாமல் விமர்சனத்தை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தினார். காலச்சுவடு பற்றிய விமர்சனத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் தற்போதைய இலக்கிய உலகின் போலித்தனத்தைச் சொல்லிச் சென்றார். அரசியல்ரீதியாக ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும் பத்திரிகைச் சுதந்திரத்தை மதிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் அரசியல்வாதிகள் அரசியல்ரீதியான விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளாமல் பத்திரிகைகள்மீது காட்டும் காழ்ப்புணர்ச்சியை ஒன்றிணைந்து தட்டிக்கேட்க வேண்டும் என்ற உணர்வு தொனிக்கப் பேசினார்.

1981இல் நடத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாட்டில், சூழ்ந்திருந்த ஆபத்துகளை மீறித் துண்டறிக்கை மூலம் கண்டனத்தைப் பதிவுசெய்திருந்த துணிச்சல், தஞ்சையில் ஜெயலல¤தா ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த இலங்கையைச் சார்ந்த பத்திரிகையாளர்கள் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட அது குறித்த கண்டனத்தைப் பதிவுசெய்யும் விஷயத்தில் காணாமல் போயிருந்தது குறித்த அதிருப்தியைத் தெரிவித்தார் மணா. ஆளும்வர்க்கத்திற்கெதிரான தீவிரப் பத்திரிகைகளின் குரல் வலுவிழந்து பலவீனமாக உள்ளதோ என்ற சந்தேகத்தை எழுப்பினார். மாற்றுக் கருத்துகளை ஏதாவது ஒருவகையில் முடக்கத் துடிக்கும் அரசியல்வாதிகள், வாரித்தூற்றும் இலக்கியத் தோழர்கள் இதற்கிடையில் இலக்கை நோக்கி முன்னேறும் இதழ்மீது அவரது விமர்சனக் கருத்தையும் வைக்கத் தவறவில்லை. விவாதத்தை விவாதமாகப் புரிந்துகொள்ளாமல் தனிப்பட்ட விரோதமாக உள்வாங்கிக்கொள்ளும் இலக்கியப் போக்கு உயிர்க்கொல்லி.

வாசகர்கள் மத்தியில் போதுமான வரவேற்பைப் பெற்றிருந்தபோதிலும் காலச்சுவடு சம்பாதித்திருக்கும் கெட்ட பெயருக்குக் காரணமென்ன என்ற கேள்வியை எழுப்பி, அதற்கான விடையெனத் தான் கண்டறிந்ததையும் பகிர்ந்துகொண்டார். சு.ராவின் காலச்சுவடில் ராமஜென்ம பூமி விஷயமாக ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன் எழுதிய கட்டுரையும் கண்ணன் நடத்தும் இப்போதைய இதழில் பெரியார் குறித்து ரவிக்குமார் செப்டம்பர் 2004இல் எழுதிய கட்டுரையும் அதற்கான காரணங்களாக இருக்கலாமோ எனச் சந்தேகப்படுவதாகச் சொன்னார் மணா. ஜி. எஸ். ஆர். கட்டுரையில் தனக்கு உடன்பாடு இல்லை என்ற செய்தியை அதே இதழில் பதிவுசெய்திருந்தார் சு.ரா. ஆனால், ரவிக்குமார் கட்டுரை குறித்த எந்த மறுப்பையும் கண்ணன் வெளியிடாத சூழலில் அது காலச்சுவடின் கருத்தாக இருக்கக்கூடுமோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துவதாகக் கூறினார். சிறுபத்திரிகைகள் சமூக அரசியல் நெருக்கடிகளைச் சரிவரப் பதிவுசெய்யாத சூழலே நிலவுவதாகக் குறிப்பிட்டார். மணா பேசிச் சென்றவுடன் கண்ணன் மேடைக்கு வந்து மணா உரையில் தகவல் பிழை இருந்ததாகவும் தான் ரவிக்குமார் கட்டுரை அவரது சொந்த கருத்தே என்பதை இதழில் தான் பதிவுசெய்திருப்பதாகவும் தனது வெந்து தணியும் அவதூறுகள் கட்டுரை அதைக் குறித்து விரிவாகப் பேசியிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், அது நேரிடையான பதிலாகத் தென்படவில்லை. ஏனெனில் சு.ரா அதே இதழில் தெரிவித்திருந்த மறுப்பைக் கண்ணன் செய்தாரா என்பதே மணாவின் கேள்வி. நுண்ணுணர்வு கொண்ட எழுத்தாளன் ஒருபோதும் பத்திரிகை நடத்தக் கூடாது என சு.ரா நெருங்கிய நண்பர்களிடம் தெரிவித்ததாக மணா கூறினார். உலக விஷயங்களையெல்லாம் அலசித்தள்ளும் எழுத்தாளர்கள் பெயர்களுக்கும் பிரசுரத்திற்கும் காட்டும் முனைப்பு குறித்த அதிருப்தியால் இத்தகு எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கக் கூடும். காலச்சுவடு இதழை நடத்தியதில் மிகப்பெரிய பெருமிதம் அவருக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதாகவும் அவர் தெரிவித்தார். நுண்ணுணர்வு கொண்ட எழுத்தாளருக்குப் படைப்பாளிகள் தரும் பரிசு இதுதான். காலச்சுவடு வெளியிட்ட சிறப்புப் பகுதிகள் மற்றும் நேர்காணல்கள் போதுமான பங்களிப்பை இலக்கிய உலகிற்குச் செய்திருப்பதாகவும் கூறினார். ஆனாலும், அவற்றின் காரணமாகக் காலச்சுவடுமீது வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்களையும் நினைவுகூர்ந்தார். இதழ் குறித்த ஆக்கபூர்வமான விமர்சனங்களை அவர் தெரிவித்திருப்பதாகத் தோன்றியது.

அடுத்து, காலச்சுவடில் வெளியான நேர்காணல்கள் தொகுக்கப்பட்ட காலச்சுவடு நேர்முகம் (2000-2003) என்னும் நூலை மணா வெளியிட இமையம் பெற்றுக்கொண்டார். காலச்சுவடு பெண் படைப்புகள்(1994-2004) என்னும் நூலை மாலதி மைத்ரி வெளியிட சுகிர்தராணி பெற்றுக்கொண்டார். லதா எழுதிய சிறுகதைகளான நான் கொலை செய்யும் பெண்கள் என்னும் நூலை சுகுமாரன் வெளியிட கவிதா பெற்றுக்கொண்டார். சந்தியாவின் முத்தம் என்னும் நூலை ஞானக்கூத்தன் வெளியிட ப்ரேமா ரேவதி பெற்றுக்கொண்டார். கவிதாவின் முதல் கவிதை நூல் இது. காலை அமர்வின் இறுதியில் பெண் எழுத்து குறித்த கலந்துரையாடலில் சுகுமாரன், ஞானக்கூத்தன், சுகிர்தராணி, மாலதி மைத்ரி ஆகியோர் கலந்துரையாடினர்.

மதிய அமர்வின் தொடக்கமாகச் சன்னல் என்ற சுந்தர ராமசாமியின் சிறுகதை நாடகமாக நிகழ்த்தப்பட்டது. முக்காலி என வசனம் வருகிறது மேடையில் வைக்கப்பட்டிருந்த ஸ்டூலுக்கு நான்கு கால்கள் இருந்தன. சிறுகதை வாசிக்கும்போது இப்படிப்பட்ட தவறுகள் நிகழ வாய்ப்பில்லை. அடுத்து, காலச்சுவடு பற்றிய விமர்சனத்தை கடற்கரய் வைத்தார். அதில் நட்பு நிழலாடியதே ஒழிய விமர்சன முகம் வெளித் தெரியவில்லை.

பின்னர், சு.ரா நடத்திய காலச்சுவடின் முழுத்தொகுப்பை ஆர். வி. ரமணி வெளியிட சிபிச்செல்வன் பெற்றுக்கொண்டார். சொல்லில் அடங்கா வாழ்க்கை காலச்சுவடு சிறுகதைகள் (2000-2003) என்னும் நூலை சல்மா வெளியிட சின்னசாமி பெற்றுக்கொண்டார். காலச்சுவடு பதிவுகளில் இஸ்லாம் (1994-2007) என்னும் நூலை கிருஷ்ணனாந்த் வெளியிட, குளச்சல் மு. யூசுப் பெற்றுக்கொண்டார். மதிய அமர்வில் தமிழ் ஊடகங்களில் இஸ்லாம் என்னும் கலந்துரையாடல் நிகழ்ந்தது. இதில் கிருஷ்ணனாந்த், சல்மா, ஆ . இரா. வேங்கடாசலபதி, களந்தை பீர்முகம்மது ஆகியோர் கலந்துகொண்டனர்.

காலச்சுவடு அறிவித்திருந்த விவரணப்போட்டியின் முடிவு வாசகர்கள் வேண்டுகோளுக்கிணங்க தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் கலந்துகொண்ட படங்களுள் அயோத்திதாசப் பண்டிதர் குறித்துப் பாரி. செழியன் எடுத்திருந்த ஆவணப்படத்தின் சில பகுதிகள் திரையிடப்பட்டன.

நிகழ்வின் இறுதியில் திரையிடப்பட்ட, நீ யார்? சு.ராவுடன் பயணித்தது போன்ற உணர்வைத் தந்தது. சக மனிதன் மீது காட்டும் வாஞ்சையும் படைப்பில் காட்டும் கறார்தன்மையும் அவருக்கான குணச்சித்திரத்தை இயல்பாக எடுத்துக்காட்டுகின்றன. சு.ராவின் கவிதையைக் காட்சிப்படுத்திய நவீன நாடகம் அந்த ஆவணப் படத்தின் பலமற்ற கண்ணி. நவீன நாடகமா எல்லா வார்த்தையையும் இருமுறை சொல்லியிருப்பார்களே என நண்பர் ஒருவர் சொன்னார். மொழி குறித்து சு. ராவிடம் தென்படும் புரிதல் இந்தத் தலைமுறைக்கான மிகப் பெரிய பாடம். இளவேனிலுடன் சு.ரா இடம்பெறும் காட்சிகள் இயல்பாகவும் அழகாகவும் பதிவாகியுள்ளன. நேர்காணப்படும் ஆளுமைகளின் பெயர் போட்டிருந்தால் உதவியாக இருந்திருக்கும். ஏதோ வீட்டிற்கு வரும் விருந்தாளிக்குக் காத்திருந்ததைப் போல அவர் மரணத்திற்குக் காத்திருப்பதை சர்வ சாதாரணமாகப் பகிர்ந்துகொள்கிறார். மரணம் குறித்த புரிதல்தான் மற்ற எழுத்தாளர்களைப் போல வானத்தில் இருந்து குதித்தவர்கள் என்ற பிரம்மையில் மிதக்காமல் வயது வித்தியாசமின்றி உயர்வு தாழ்வின்றி அன்பைப் பொழிய வைத்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பிறப்பின் காரணமாக ஏற்பட்ட இலக்கியத் தாக்குதல்கள் கொள்கைகளின் காரணமாக உறவுகளின் விரோதம் இவை எல்லாவற்றையும் மீறி மனிதர்கள் மீது பிரியம் காட்டியிருக்கிறார் என்பதே அவர்மீது பிரியத்தைக் கூட்டுகிறது. சடங்குகளை மறுதலித்த அவரது வைராக்யம் குறிப்பிடத்தக்கது. அது குறித்த நேர்காணலில் ந. முத்துசாமியின் கூற்றிலும் உண்மையுள்ளது. மதம் என்ற சடங்குகள் இல்லையென்றாலும் ஏதோ ஒருவிதச் சடங்கு மனப்பான்மைக்குள் மனிதர்கள் சிக்கித் தவிப்பதை அவர் குறிப்பிடுகிறார். தனக்கே உரிய அங்கதம் தொனிக்க அசோகமித்திரன் மரணத்தின் பெயரில் நடத்தப்படும் சடங்குகள் மீது தனக்கும் நம்பிக்கையில்லை, அவை அர்த்தமற்றவை என்றார்.

அர்ப்பணிப்பு உணர்வும் செய்நேர்த்தியும் மூத்த எழுத்தாளர்களோடு மங்கிப்போய்விடக் கூடாது எனப் பயமாக உள்ளது. தனது படைப்பைத் தன்னால் தொடங்கப்பட்ட பத்திரிகைக்கு அனுப்பும்போதுகூடப் பிரசுரிக்கத் தகுதியுடையதாக இருப்பின் மட்டுமே பிரசுரிக்கவும் எனக் குறிப்பு எழுதிய சு.ரா போன்றவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையை வாசகன் அளித்துவிடுகிறான். அதைப் போன்ற மரியாதையை அர்ப்பணிப்பு உணர்வற்ற, சமூக அக்கறையில்லாமல், தான் எழுத்தாளன் என்பதால் கவனிக்கப்படுகிறோம் என்ற பிரக்ஞையின்றி, சுய விருப்பு வெறுப்புகளின் வெளிப்பாடாக எழுதித் தீர்க்கும் எழுத்தாளர்களும் எதிர்பார்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. இப்படிப்பட்ட எழுத்தாளர்களின் புத்தகங்களை இன்னும் காசு கொடுத்து வாங்குவதே அவர்களுக்கான மரியாதைதான்.

திரையிடல்களோடு நிகழ்வு முற்றுப்பெற்றது. நிகழ்வைப் பழ. அதியமானும் ஆ . இரா. வேங்கடாசலபதியும் ஒருங்கிணைத்தனர். புகழுரைகளுக்கும் மாற்றுக்கருத்துகளுக்கும் மத்தியில் தனது இடையறாத பயணத்தைத் தொடர்கிறது காலச்சுவடு.

3 கருத்துகள்:

  1. தலைப்பே வித்தியாசத்தைச் சொல்கிறதே.படித்ததிலிருந்து பேச வேண்டுமென்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. நேரான பார்வையில் எழுதப்பட்ட நல்ல பதிவு செல்லப்பா! தயவு செய்து கறுப்புப்பின்னணியில் வெள்ளை எழுத்து என்கிற டெம்ப்லேட்டை மாற்றவும் தொடர்ந்து படித்து விட்டு பக்கதிலிருக்கும் ஷர்மியை பார்த்தால் போட்டோ நெகடிவ் மாதிரி தெரிகிற‌து. ஆவன செய்வீர்களா?

    பதிலளிநீக்கு
  3. கருத்துக்கு நன்றி சந்தோஷ். மாற்றிவிட்டேன்.

    பதிலளிநீக்கு

லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்