எதேச்சையாக இன்றுதான் ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலை வாசித்து முடித்தான். இன்று அவருடைய பிறந்தநாளாம். பள்ளிப் பருவத்தில் வாசித்த ஒரு நாவலை சுமார் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் வாசித்தால் அது எப்படியிருக்கும் என்ற ஆர்வத்தாலேயே ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலை வாசிக்கத் தொடங்கினான். அவன் பிறந்த ஆண்டு, பிறந்த மாதம் இந்த நாவலின் முதல் பதிப்பு வெளியாகியுள்ளது. சிறு வயதில் வாசித்தபோது இந்நாவலின் சில சம்பவங்கள் நினைவில் பதிந்திருந்தன. இப்போது வாசித்தால் அவை என்னவிதமான உணர்வைக் கொடுக்கும் என்பதை அனுபவம் கொள்வதற்காகவே நாவலை வாசித்தான்.
பள்ளி, கல்லூரிப் பருவங்களில் வாசித்த பல நூல்களை இப்போது வாசிக்க முயன்றபோதும், அவற்றை முடிக்க முடியவில்லை. ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கிய நாவல்களைக்கூட சுவாரசியக் குறைவு காரணமாக முழுமையாக வாசிக்காமல் அப்படியே வைத்துவிடுவதே அவனது வாடிக்கை. ஏன் அப்போது வாசித்தோம் என்பது விளங்காமலே நாவலை மூடிவைத்துவிடுகிறான். அப்படியான மனநிலையில் தான் இந்த நாவலையும் திறந்தான். ஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த நாவல் அவனை வாஞ்சையோடு தழுவிக்கொண்டது. அவனது இதயத்தைச் சுகமான உணர்வுத் தந்தியாக மீட்டியது.
நாவலில் இடம்பெற்ற பெண்களில் இருவருக்கு மட்டும் ஜெயகாந்தன் பெயரிடவில்லை. ஒருவர் சபாபதிப் பிள்ளையின் மனைவி. மற்றொருவர் புத்திபேதலித்துத் திரியும் அந்த இளம்பெண். உண்மையில் இந்த நாவல் சபாபதிப் பிள்ளையின் மனைவியால் தான் தொடங்குகிறது. அந்தப் பெண்மணி அந்த ஊரின் பரியாறி பழனியுடன் ஓர் அதிகாலையில் செல்வதுதான் நாவலின் தொடக்கப்புள்ளி. அந்த அதிகாலைச் சம்பவத்துக்குப் பிறகு சபாபதியின் வாழ்வு விடியவே இல்லை.
சபாபதிப் பிள்ளையால் அதைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அன்னியோன்யமாகத்தான் இருவரும் வாழ்ந்தனர். பத்தாண்டு தாம்பத்யத்தில் குழந்தை பாக்யம் இல்லை என்பதைத் தவிர ஒரு குறையும் இல்லை. ஆனாலும் அவரிடமில்லாத ஏதோ ஒன்று பழனியிடம் இருந்திருக்க வேண்டும்தானே? இல்லாவிடின் அந்தப் பெண்மணி ஏன் சபாபதிப் பிள்ளையை விட்டுவிட்டு பழனியுடன் செல்ல வேண்டும்? ஏன் சென்றார் சபாபதியின் மனைவி என்பதற்கு நாவலாசிரியர் எந்தக் காரணத்தையும் சொல்லவில்லை. ஆனால், நாவலின் இறுதியில் புத்திபேதலித்த அந்த இளம்பெண் - அவளை ஹென்றி முதலானோர் பேபி என்கிறார்கள், ஆனால் நாவலாசிரியர் அவளுக்குப் பெயர் எதுவும் தரவில்லை. ஹென்றியே நாவலாசிரியர் உருவாக்கிய பாத்திரம் எனும்போது, பேபி நாவலாசிரியர் தந்த பெயர்தானே என நீங்கள் தருக்கம் பேசலாம், அப்படி நீங்கள் பேசினால் மறுக்க இயலாது. – ஹென்றியின் வீட்டுக்கு ஏன் வருகிறாள், வீட்டைப் பழுதுபார்த்து முடிந்த பின்னர் அவள் வந்தபடியே சென்றும்விடுகிறாளே அது ஏன்? இதற்கு ஏதாவது பொருள் புரிந்தால் தான் சபாபதிப் பிள்ளையின் மனைவி பழனியுடன் சென்றதற்கான பொருளை உணர முடியும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
மிகக் குறுகிய காலத்தில் நாவல் நடந்து முடிந்துவிடுகிறது. கிருஷ்ணராஜ புரத்துக்கு ஹென்றி வரும்போது, தொடங்கும் நாவல் தன் பப்பாவின் பூர்வீக வீட்டை அவன் பழுதுபார்த்து புதுமனைபுகுவிழா நடத்தும் நாளில் முடிந்துவிடுகிறது. ஹென்றியும் அவனுடைய பப்பாவும் வாசகர்களை ஈர்ப்பதைப் போலவே நாவலின் பெண்களான அபிராமி, கனகவல்லி, கிளியாம்பாள், நவநீதம், பஞ்சவர்ணத்தம்மாள், நாகம்மா ஆகியோரும் ஈர்த்துவிடுகிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு வகையாக இருக்கிறார்கள்.
தேவராஜனின் அக்கா அபிராமி – அவள் அக்கம்மா என்றே அழைக்கப்படுகிறாள்- சிறுவயதிலேயே கணவனை இழந்துவிட்டவள். அவளோடு தேவராஜனின் மனைவி கனகவல்லியால் ஒத்துப்போக முடியவில்லை. ஆகவே, கணவனைப் பிரிந்து வாழ்கிறாள். மணியக்காரரின் மனைவி நாகம்மா – மணியக்காரர் பெயர் ராமசாமி – கணவர் குடித்துவிட்டு வந்த அன்று பெரிய சண்டையிடுகிறாள். அன்றே தன்னை மாய்த்துக்கொள்கிறார் மணியக்காரர். அதன் பிறகு அதை எண்ணி துக்கத்தில் மூழ்குகிறாள். அவளுடைய மகள் கிளியாம்பாள், குழந்தை பெற்ற அவளை அவளுடைய கணவன் பார்க்க வரவில்லை. ஆனால், அவளுக்குக் கணவன் மீது பெரிய வருத்தமில்லை. அவளுக்கும் அவளுடைய அம்மா நாகம்மாவுக்கும் நடக்கும் சண்டையின் போது, அம்மாவும் மகளும் என்றபோதும், இருவருமே ஒருவர்மீது ஒருவர் விஷம் உமிழ்கிறார்கள்.
ஹென்றி ஒரு லட்சிய மனிதன். அப்படியொருவனை யதார்த்தத்தில் பார்க்கவியலாது. கிருஷ்ணராஜ புரமே ஒரு கற்பனையூராகத்தான் தெரிகிறது. தேவராஜன் ஒரு அசட்டு அறிவுஜீவி. அறிவுள்ளதாக நம்பும் ஆண்கள் எல்லோருமே அசடர்களாகத் தான் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையிலேயே தேவராஜன் நடந்துகொள்கிறார். அவர் ஒரு பள்ளி ஆசிரியர்.
இந்த நாவலில் கல்யாண வாழ்க்கை இருக்கிறது. ஆனால், காதலோ காமமோ இல்லவே இல்லை. புத்திபேதலித்த இளம்பெண்ணான பேபி நிர்வாணமாக உலாத்தும்போதுகூட அந்த இடத்தில் துளியும் காமம் தலைதூக்க வில்லை. ஒரு பெண்ணின் நிர்வாணம், நிர்வாணம் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதைப் போல் அந்தச் சம்பவம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
சபாபதிப் பிள்ளை ஊரைவிட்டுப் போக முடிவெடுத்த தருணம் மிகவும் துயரகரமானது. அன்புக்குரிய மனைவி மற்றொரு மனிதருடன் செல்கிறாள் என்பதை நேரடியாகப் பார்க்கிறார். இப்போது, அவரால் என்ன செய்ய முடியும்? புலவரான அவர் அருந்ததி முதலான பதிவிரதைகளின் கதையைச் சொல்லியிருக்கிறார். அப்போதெல்லாம் அதைகூட இருந்து கேட்ட மனைவி இப்போது அவரை விட்டுச் செல்கிறார். ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்த இருவருக்கு இடையே பகிர்ந்துகொள்ள முடியாத எண்ணம் இருந்திருக்கிறது எனும்போது, மனிதர் வாழ்வுக்கு என்னதான் பொருள் இருக்கிறது?
ஊருக்குப் பயந்துதான் சபாபதிப் பிள்ளை ஊரைவிட்டுச் செல்ல முடிவெடுக்கிறார். அந்த ஊருக்கு அவர் மனைவி பழனியுடன் சென்றது கடைசி வரை தெரியவே தெரியாது. அவரும் அந்த ஊருக்கு, கிருஷ்ணராஜ புரத்துக்குக் கடைசி வரை வரவே இல்லை. அவர் இறந்து மூன்று நாள்களுக்குப் பிறகுதான் ஹென்றி அங்கே வருகிறான். ஹென்றி பள்ளிக்குச் சென்றிருக்கவில்லை, ஆனால் அவ்வளவு பண்பானவனாக இருக்கிறான். ஹென்றியைப் பெற்றெடுத்த அம்மாவும் அப்பாவும் நாவலில் வருவதில்லை. அவனைத் தத்தெடுக்கிறார் சபாபதிப் பிள்ளை. போரில் இறந்த நண்பன் மைக்கேலின் மனைவியைத் தன் வாழ்வுடன் இணைத்துக்கொள்கிறார் சபாபதிப் பிள்ளை. அவர்களுடைய வாழ்வுக்குப் பொருள் சேர்க்க வருகிறான் ஹென்றி.
பப்பா தன் கதையை ஹென்றிக்குச் சொல்கிறார். தன் மனைவி ஓடிப்போன கதையைத் துயரத்துடன் சொல்கிறார். அவரால் அந்தத் துயரத்திலிருந்து மீளவே இயலவில்லை. ஆனால் அவர் முழுமையாக ஒரு வாழ்வு வாழ்ந்து முடித்தும்விடுகிறார். பழனி தற்கொலைசெய்துகொள்கிறான். ஆனால், சபாபதியின் மனைவியும் பழனியும் என்ன வாழ்வு வாழ்ந்தார்கள் என்பது தெரியவில்லை.
பெற்ற அம்மா அப்பாவை இழந்து, வளர்த்த பெற்றோரையும் பறிகொடுத்துவிட்டு, ஆதரவற்ற மனிதனாக கிருஷ்ணராஜ புரத்துக்கு வரும் ஹென்றிக்கு ஊரும் உறவும் சொந்தமும் பந்தமும் நட்பும் கிடைக்கின்றன. மனிதரிடையே வெறுப்பும், விரோதமும், குரோதமும் மண்டிக்கிடக்கும்போது, மனிதநேயத்தை வலியுறுத்துவதாக இந்த நாவல் தோற்றம்கொள்கிறது.
மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? ஒருவருக்கொருவர் ஏன் பிரிந்துகிடக்கிறார்கள்? வெட்கம், அவமானம் என்பதற்கெல்லாம் என்ன பொருள் இருக்கிறது? மனிதர்கள் அனைவரும் எப்போதும் ஏன் அன்புடனேயே நடந்துகொள்ளக் கூடாது என்ற ஏக்கத்தை எல்லாம் நாவல் ஏற்படுத்தத்தான் செய்கிறது. ஆனால், மனிதர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்… கோபமும் வன்மமும் வெறுப்பும் புரையோடிப்போன வாழ்க்கையைத் தானே வாழ்ந்து தீர்க்கிறார்கள்… இந்த வாழ்க்கையை என்ன செய்துவிட முடிகிறது என்ற நினைப்பு ஒரு கசந்த குறுஞ்சிரிப்பாக முகத்தில் தவழ்ந்தது… நாவலை மூடிவைத்துவிட்டு சன்னலுக்கு வெளியே தென்படும் உலகத்தை வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிட்டான் அவன்.
(2024 பிப்ரவரி 24 அன்று ஃபேஸ்புக்கில் எழுதிய குறிப்பு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக