இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, மே 30, 2021

த ஸ்ட்ரேஞ்சர் (1946): அவன் ஓர் அந்நியன்


இரண்டாம் உலகப் போரைப் பின்னணியாகக் கொண்ட பல படங்களைப் பார்த்திருக்கிறோம். ஆர்சன் வெல்ஸின் த ஸ்ட்ரேஞ்சர் அமெரிக்கப் படம் இதே பின்னணியைக் கொண்டிருந்தபோதும், இந்தப் படம் பிறவற்றிலிருந்து வித்தியாசப்படுகிறது. ஒரு வெகுசனப் படத்தில் நாஜி வதை முகாம்களின் காட்சி இடம்பெறுவது இந்தப் படத்தில் முதன் முறையாக நிகழ்ந்திருக்கிறது. படம் போர்க்குற்றவாளி ஒருவரை மையமாகக் கொண்டுள்ளது. ஆனால், இது ஒரு த்ரில்லர் வகைப் படமே. தூண்டிலில் புழுவை மாட்டி மீனைப் பிடிப்பது போன்ற ஒரு வேலையே முழுப் படமும். படத்தை இப்போது பார்த்தாலும் சுவாரசியம் குன்றாமல் பார்க்க முடிகிறது என்பதே படத்தின் சிறப்பாகப் படுகிறது. 

பொதுவாகவே, வண்ணப்படங்களைவிடக் கறுப்பு வெள்ளைப் படங்களே மனத்தைக் கவர்கின்றன. இந்தப் படம் 1946ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. படம் ஒன்றரை மணி நேரம்தான். ஒரு சினிமா தரக் கூடிய அத்தனை திருப்தியையும் தருகிறது படம். மிகச் சில கதாபாத்திரங்கள். இரண்டாம் உலகப் போரின்போது இன அழிப்பில் ஈடுபட்ட போர்க் குற்றவாளியான ஃப்ரான்ஸ் கிண்ட்லர் என்பவரைக் கண்டுபிடிக்க வேண்டிய பெரிய பொறுப்பு போர்க் குற்றங்களுக்கான ஆணையத்தின் துப்பறிவாளர் வில்ஸனிடம் (எட்வர்ட் ஜி ராபின்சன்) விடப் பட்டிருக்கிறது. அவர் முன்னால் உள்ள பெரிய சவால் என்னவென்றால், ஃப்ரான்ஸ் கிண்ட்லர் தனது எல்லா அடையாளங்களையும் அழித்துவிட்டார். ஆகவே, அவர் எங்கே இருக்கிறார் எப்படி இருக்கிறார் யாராக இருக்கிறார் என்பவற்றைத் தெரிந்துகொள்வது அவ்வளவு எளிதன்று. ஆனாலும், அவரைக் கண்டுபிடித்தாக வேண்டும். 

படம் தொடங்கும்போது, அந்நியர் ஒருவர் கப்பலில் இருந்து இறங்குகிறார். கான்ரெட் மெய்னகி என்னும் அந்த மனிதர் தன்னை போலந்தைச் சார்ந்தவர் என்றும் தனது உடல்நலத்தின் பொருட்டு அங்கே வந்திருப்பதாகவும் தெரிவிக்கிறார். அவரை வில்ஸன் நியமித்த ஆள் தொடர்கிறார். மெய்னகி தேடி வந்த மனிதர் அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தின் ஹார்பர் நகரத்தில் வசிப்பதாகத் தகவல் கிடைக்கிறது. ஆகவே, மெய்னகி அங்கே செல்கிறார். அவரைத் தொடர்கிறார் வில்ஸன். 

ஹார்பர் நகரத்தில் மெய்னகி ஒருவரைச் சந்திக்கிறார். அவர் அங்குள்ள கல்லூரியில் பணியாற்றும் சார்லஸ் ரேன்கின் என்னும் பேராசிரியர். அன்று அந்தப் பேராசிரியருக்கும் அவரைக் காதலித்த மேரிக்கும் (லோரெட்டா யங்) திருமணம் நடைபெறுகிறது. அந்தத் திருமணத்துக்கு இடையே தன்னை வந்து சந்தித்த பேராசிரியரிடம் தன்னைத் தொடர்ந்த மனிதரைத் தான் கொன்றுவிட்டதாகக் கூறுகிறார் மெய்னகி. சிறிது நேரத்தில், பேராசிரியர் மெய்னகியைக் கொன்று புதைத்துவிடுகிறார். பேராசிரியர் யார், அவர் ஏன் மெய்னகியைக் கொல்கிறார், பேராசிரியருக்கும் மெய்னகிக்கும் என்ன உறவு, ஃப்ரான்ஸ் கிண்ட்லரை வில்சன் கண்டுபிடித்தாரா போன்ற கேள்விகளுக்கு விடை தேடி மீதிப் பயணத்தை மேற்கொள்கிறது திரைக்கதை. 

ஆர்சன் வெல்ஸ் பேராசிரியர் வேடத்தை ஏற்றிருக்கிறார். திருமண நாளன்று ஒரு கொலையைச் செய்துவிட்டு அதை மறைக்க எத்தனையோ பொய்களைக் கூறுகிறார் அவர். ஒவ்வொரு நெருக்கடி வரும்போதும், அவர் சிறிது சிறிதாக உண்மையைச் சொல்வதுபோல் தொடர்ந்து தன் மனைவியிடம் கூடப் பொய்யையே கூறுகிறார். மிதமிஞ்சிய காதலின் காரணமாக மேரியால் கணவன் கொலைகாரன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் எது செய்தாலும் அது நல்லதுக்கே என்று நம்புகிறார். 

பார்வையாளர்களுக்குப் பேராசிரியர் யார் என்பதை இயக்குநர் தெளிவுபடுத்திவிடுகிறார். ஆனால், மேரிக்கு அவர் யார் என்பது இறுதியில்தான் தெரியவருகிறது. திரைக்கதையின் சுவாரசியம் குன்றாமல் படம் முழுக்கவும் பயணப்படுகிறது. பேராசிரியருக்கும் கடிகாரம் பழுதுபார்த்தல் என்பதன் மீது பேரார்வம். அதை அவர் தொடர்ந்து செய்துவருகிறார். அந்தப் பேரார்வம்தான் அவர் யார் என்பதையும் காட்டிக்கொடுக்கிறது.

மரங்களடர்ந்த பகுதி, டவுன் கிளார்க் நடத்தும் ஸ்டோர், அங்கே போன் செய்துகொள்ளலாம், மதுவருந்தலாம், சூதாடலாம், பொருள்களை வைத்துச் செல்லலாம், தேவாலயம், மேரியின் வீடு இப்படிச் சில இடங்களே படத்தில் மீண்டும் மீண்டும் வருகிறது. கொலையாளிக்கும் துப்பறிவாளருக்கும் இடையே உள்ள சிறிய தூர இடைவெளியைத் திரைக்கதை சிறிதுசிறிதாக நிரப்பிவருகிறது. அந்த இடைவெளி முற்றாக இல்லாமல்போகும்போது படம் நிறைவடைந்துவிடுகிறது. 

விக்டர் ட்ரைவாஸ் எழுதிய கதைக்குத் திரைக்கதையை எழுதியிருக்கிறார் அந்தோனி வெய்ல்லர். ரஸ்ஸல் மெட்டி ஒளிப்பதிவை மேற்கொண்ட இந்தப் படத்தின் இசை ப்ரோனிஸ்லா காப்பர். சுவாரசியமாகப் பார்ப்பதற்கு உகந்த படம் இது. நல்ல சினிமா பார்க்க விரும்புவர்களுக்கான விருந்து இந்தப் படம். இந்தப் படத்துக்கான ஐஎம்டிபி ரேட்டிங் 7.4.  யூடியூபிலேயே படம் கிடைக்கிறது. பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்