நான் முதன்முதலில் எந்தத் தேர்தலில் வாக்களித்தேன் என்பதே மறந்துவிட்டது. 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் வாக்களித்தேன் என்பது மாத்திரம் நினைவில் இருக்கிறது. அதுவும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்தேனா சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்தேனா நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தேனா என்னும் தெளிவு இல்லை. அது ஒரு மங்கிய சித்திரமாகவே மனத்தின் ஒரு மூலையில் முடங்கிக்கிடக்கிறது. அண்மையில் 2014ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வாக்களித்து வருகிறேன். பாஜக ஆட்சி அமைந்தபிறகுதான் வாக்களிப்பது எவ்வளவு பெரிய பொறுப்பு என்பதை உணர முடிந்திருக்கிறது.
ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது சிலருக்கு ஒரு சடங்கு. ஆனால், உண்மையில் வாக்களிப்பது வெறும் சடங்கு அல்ல. அது நமது ஜனநாயக உரிமை. அதை நிறைவேற்ற வேண்டியது நம் கடமை. பொதுவாக, வாக்களிப்பது குறித்து பெரிய புரிதல் பெரும்பாலானோரிடம் இருப்பதில்லை. நாம் வாக்களித்து என்ன பெரிய மாற்றம் வந்துவிடப் போகிறது என்னும் விட்டேத்தியான மனநிலையிலேயே உள்ளதைப் பார்க்க முடிகிறது. இந்த மனநிலையிலிருந்து விடுபட்டால் மட்டுமே நூறு சதவீத வாக்களிப்பு என்பதை நம் நாடு சாத்தியமாக்கும் என்பது உறுதி. மிகப் பெரிய ஜனநாயக நாடு என்னும் பெருமை கொண்ட நமது நாடும் தேர்தல் என்பதை மிகப் பெரிய பொருள்செலவுடனும் ஆள்பலத்துடனும் தொடர்ந்து நிறைவேற்றிவருகிறது.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 26 முதலே வாக்களிப்பதன் அவசியத்தை மனம் குறித்துவைத்துக்கொண்டது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் என வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் பீடு நடைபோட்டது. பத்தாண்டுகளாக ஆட்சி வாய்ப்பை இழந்திருந்த திமுக எப்படியும் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்னும் முனைப்புடன் தேர்தலை எதிர்கொண்டது. திமுக கூட்டணியில் மிகப் பெரிய சிக்கல் ஏற்படும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் எல்லாவற்றையும் சமாளித்தது திமுக. நாடாளுமன்றக் கூட்டணியை எந்தச் சேதாரமுமின்றி அப்படியே தக்கவைத்துக்கொண்டது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது.
அதிமுக கூட்டணியில் தொடக்கத்திலிருந்து சிக்கல்தான். நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடன் இருந்த தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை இம்முறை தவறவிட்டது அதிமுக. பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. பாஜக என்பது அதிமுகவுக்கு மிகப் பெரிய சவால். தமிழ்நாட்டில் பாஜக என்பது பெரும்பாலான மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்து வைத்துள்ள கட்சி. இதனுடன் கூட்டணி சேர்வது என்பது கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதிப்பதுபோல்தான். மீள்வது பெருங்கடினம். ஆனால், அதிமுகவுக்கு வேறு வழியில்லை. பாஜகவைத் தவிர்த்துவிடவோ தள்ளிவைக்கவோ முடியவில்லை. இது அந்தக் கட்சிக்குப் பெரிய பின்னடைவு.
இது தவிர, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒரு கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. இந்தக் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பது பெரிய கேள்விக் குறி. ஆனால், அதிமுகவின் வாக்குகளைப் பெரிய அளவில் சிதைக்கும் கூட்டணியாக இது பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் இந்தக் கட்சி அதிகப்படியான வாக்குகளை அதுவும் அதிமுக வாக்குகளைப் பெறும் எனும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்தக் கட்சி பெறும் ஒவ்வொரு வாக்கும் அதிமுகவின் வெற்றியைப் பாதிக்கும் என்பது உறுதி. இது போக, நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான கூட்டணி ஒன்றும் தேர்தல் களத்தில் உள்ளது. இந்தக் கட்சியுடன் சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் பெற்ற தொகுதிகளில் மூன்றைத் திரும்பக் கொடுத்து சாதனை புரிந்தது. நாம் தமிழரும் இந்தக் களத்தில் போட்டியிடுகிறது.
![]() |
2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் |
இப்படியான தேர்தலில் காலையிலேயே வாக்களித்துவிட வேண்டும் என்று முடிவுசெய்திருந்தேன். தென்காசி பகுதியில் நேற்று பெய்த மழை காரணமாகக் காலையில் வெயில் இல்லை. இதமான சூழலே நிலவியது. காலையில் ஏழே கால் அளவில் புறப்பட்டு நன்னகரத்தில் உள்ள எனது வாக்குச்சாவடியில் (வாக்குச்சாவடி எண்:28) வாக்களிக்கச் சென்றேன். கறுப்புச் சட்டை அணிந்து சென்றிருந்தேன். அருகருகே இரண்டு வாக்குச் சாவடிகள் இருந்தன. முதல் வாக்குச்சாவடியில் ஆண், பெண் இருபாலர் வரிசையில் பலர் நின்றிருந்தனர். நான் இரண்டாவதாக இருந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டியதிருந்தது. அதில், பெண்கள் ஓரிருவர் மட்டுமே வரிசையில் நின்றிருந்தனர். ஆண்கள் வரிசையில் பத்து பேருக்கு மேலே நின்றிருந்தனர். நான் எனது முறைக்காகக் காத்திருந்தேன்.
வாக்குச்சாவடிக்கு வெளியே பூத் சிலிப்பைச் சோதிப்பதற்காகவும், சானிடைஸர், கையுறை வழங்குவதற்காகவும் சிலர் அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்து பூத் சிலிப்பைச் சோதித்து உள்ளே வாக்களிக்க அனுப்பினர். உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படவில்லை. முதியவர் ஒருவர் வந்திருந்தார். அவரால் நிற்க முடியாத காரணத்தால் எல்லாருடமும் அனுமதி பெற்று வரிசையில் நிற்காமல் முன்னால் சென்றார். வாக்களித்த பின்னர் எல்லாருக்கும் இருகை கூப்பி நன்றி தெரிவித்துவிட்டுச் சென்றார்.
வாக்குச்சாவடியில் சுவரில் வாக்குச்சாவடி குறித்த விவரங்களும், வாக்காளர் குறித்த விவரங்களுக்கும் சுவரொட்டியாக ஒட்டப்பட்டிருந்தன. தென்காசி தொகுதியில் 18 வேட்பாளர்கள் போட்டியில் இருக்கிறார்கள். இது போக நோட்டாவும் உண்டு. ஆக, மொத்தம் 19. என்னுடைய பூத் சிலிப்பைச் சோதித்துவிட்டு சானிடைஸர் வழங்கினார்கள். கைகளில் அதைப் பரவச் செய்தேன். பின்னர் கையுறையை அணிந்துகொண்டேன். பாலிதீன் கவர் போன்றிருந்தது கையுறை. சிறிது நேரத்துக்குப் பின்னர் வாக்குச்சாவடிக்குள் அழைத்தார்கள். உள்ளே நுழைந்ததும், எதிரே அலுவலர்கள் மூவர் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் தனியே அவர்களுக்கு எதிரே அவர்களுக்கு இடப்புற மூலையில் அமர்ந்திருந்தார். ஆக மொத்தம் நான்கு அலுவலர்கள் இருந்தனர். அனைவருமே பெண்கள்தாம்.
வரிசையாக அமர்ந்திருந்த அலுவலர்களில் எனக்கு வலப்புறம் முதலில் அமர்ந்திருந்த அலுவலர் பூத் சிலிப்பையும், வாக்காளர் அடையாள அட்டையையும் பெற்று சோதித்தார். சோதித்தபின் என் பெயருக்கு எதிரே டிக் செய்து விட்டு, ரோஸ் கலர் கூப்பன் ஒன்றைக் கொடுத்தார். அடுத்து அமர்ந்திருந்த அலுவலர் என்னிடம் கையெழுத்துப் பெற்றுக்கொண்டார். அடுத்து இறுதியாக அமர்ந்திருந்த அலுவலரிடம் ரோஸ் நிற கூப்பனைக் கொடுத்தேன். அவர் வாக்களிக்கும் இயந்திரத்தைக் காட்டி வாக்களிக்கச் சொன்னார். வாக்கு இயந்திரம் ப வடிவ தடுப்பால் தடுக்கப்பட்டிருந்தது. இந்தத் தடுப்பு காரணமாக நான் யாருக்கு வாக்களிக்கிறேன் என்பதைப் பிறர் அறியாமல் பாதுகாக்க முடிந்தது.
வாக்கு இயந்திரத்தில் நான் யாருக்கு வாக்களிக்க விரும்பினேனோ அந்த வேட்பாளருக்கு எதிரே இருந்த பொத்தானை அழுத்தினேன். அழுத்திவிட்டு அருகிலிருந்த விவிபாட் இயந்திரத்தைப் பார்த்தேன். அதில் நான் வாக்களித்த வேட்பாளர் பெயரும் சின்னமும் தாங்கிய சீட்டு தோன்றி, மறைந்தது. அதன் பின்னர் இயந்திரத்திலிருந்து பீப் ஒலி எழுந்தது. வெளியே வந்துவிட்டேன். இந்த முறை வாக்களித்துவிட்டேன். எனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டேன். வீட்டுக்கு வந்து வாக்களித்ததை அறிவிக்கும் வகையில் ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட்டேன்.
வாக்காளர்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிக்கிறார்கள். காலை ஒன்பது மணிக்கெல்லாம் பத்து சதவீதத்துக்கு மேலே வாக்குப் பதிவாகியுள்ளது. மக்கள் வாக்களிக்கும் உற்சாகத்தைப் பார்த்தால் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளாக அவை இருக்கும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த நிலை நீடித்தால் வாக்கு சதவீதம் எண்பது வரை செல்லலாம் என்று நினைக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக