நான் இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது, கோடை விடுமுறைக்குக் குடும்பத்துடன் கோவில்பட்டிக்குச் செல்வோம். கோவில்பட்டியில் அப்போது சரஸ்வதி, ராமசாமி, நாராயணசாமி என மூன்று திரையரங்குகள் இருந்தன. கடைசியாக 1987 ஆம் ஆண்டு சென்றோம். அதன்பின்னர் அங்கே செல்வது இல்லை. சில உறவுகளும் நட்புகளும் அப்படியே சில பல காரணங்களால் அறுந்துபோவதுபோல் கோவில்பட்டியுடனான தொடர்பும் அறுந்துவிட்டது. ஆனால், பால்யத்தில் அங்கே பார்த்த பல படங்கள் அவ்வப்போது நினைவில் எழும். இந்த ஊரடங்கு காலத்தில் அப்படி எழுந்த நினைவுகளால் சில படங்களைப் பார்த்தேன்.
சிறு வயதில் ஏன் அந்தப் படத்தில் என்ன காட்சிகள் நினைவில் பதிந்திருந்தன, அவை ஏன் நினைவில் நின்றன போன்றவற்றை ஆராய்ந்து பார்ப்பதில் மனம் ஏதோ ஒருவகை ஆறுதல் கொள்கிறது. கோவில்பட்டியில் பார்த்த படங்களென ஒரே ரத்தம், ராமன் ஸ்ரீராமன், சாட்டை இல்லாத பம்பரம், அம்மன் கோவில் கிழக்காலே, பூவிழி வாசலிலே எனச் சில மனத்தின் மேல் வரிசைக்கு அடிக்கடி வந்து செல்லும். அப்போது கோவில்பட்டி நாடார் பள்ளியில் பொருட்காட்சி நடைபெறும். பொருட்காட்சியிலும் தினந்தோறும் சினிமா ஒன்று திரையிடுவார்கள். பொருட்காட்சியில் பட்டணம் பொடி விளம்பரத்துக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய ஆள் உட்கார்ந்து கொண்டு கையில் உலக்கையைப் பிடித்துக்கொண்டிருப்பது போன்ற உருவம் ஒன்று இப்போதுகூட நினைவிலாடுகிறது.
சாட்டை இல்லாத பம்பரம் படத்தைத் திடீரென்று சில நாட்களுக்கு முன்னர் பார்த்தேன். மிகவும் சாதாரணப் படம். நாயகன் வெகுளியான பணக்கார இளைஞன். அவன் வீட்டு வேலையாட்களே அவனை வேலை வாங்குகிறார்கள். அந்த அளவுக்கு அப்பாவி அவன். அவன் வீட்டுக்கு எதிரே கடைவைத்திருக்கும் பொன்னம்மா என்னும் பெண்மணி, ஒரு விவரமான பொண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துகொண்டால் அவனது வாழ்வு உருப்படும் என்கிறாள். அவனும் அப்படி ஒரு பெண்ணைப் பார்த்து, அவளைக் காதலித்துத் திருமணம்செய்துகொள்கிறாள். அவள் ஏழைக் குடும்பத்துப் பெண். அவர்களது வாழ்வு திருமணத்துக்குப் பிறகு என்னவானது என்பது தான் படத்தின் கதை. யூடியூபில் படம் கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக