எந்தக் காரியத்தையும் ஜோதிடத்தின் அடிப்படையிலேயே முடிவுசெய்கிறார் தனுசு ராசிக்காரரான அர்ஜுன் (ஹரிஷ் கல்யாண்). அவருக்குக் கன்னி ராசிப் பெண்ணுடன் திருமணம் நடைபெறுவது நல்லது என ஜோதிடர் கூறியதால் அந்தப் பெண்ணைத் தேடுகிறார் அவர். காதலியின் திருமணத்தன்று அவர் சந்திக்கும் கே.ஆர்.விஜயாவுக்கும் (டிகங்கனா சூரியவன்ஷி) அவருக்கும் முதல்நாளன்றே உறவு ஏற்பட்டுவிடுகிறது. செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்ல வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்ட விஜயாவுக்கும் அர்ஜுனுக்கும் காதல் மலர்ந்ததா கல்யாணம் நடந்ததா இல்லையா என்பதே திரைக்கதை.
பரிகாரம் செய்யாமல் தந்தை மணமுடித்துக்கொண்டதால் தன் தாய் பாண்டியம்மாள் (ரேணுகா) இளம்வயதிலேயே கைம்பெண்ணாகிவிடுகிறார் என்பதை அறிந்ததிலிருந்து ஹரிஷுக்கு ஜோதிடத்தில் திடமான நம்பிக்கை ஏற்படுகிறது. பார்க்கும் எல்லாப் பெண்களையும் ராசி கேட்டே பழகுகிறான். இதனாலேயே எந்தப் பெண்ணுக்கும் அவனைப் பிடிக்காமல் போய்விடுகிறது. அனிதாவுடனான (ரெபா மோனிக்கா ஜான்) காதலும் முறிந்துபோய்விடுகிறது. பார்த்த மாத்திரத்தில் காதல் வருவதற்குப் பதில் பார்த்த மாத்திரத்தில் காமம் வந்துவிடுகிறது. அதன் பின்னரே காதலிக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கிறார்கள் இருவரும். இது கொஞ்சம் திரைக்கதையில் புதிதாக இருக்கிறது. உறவு கொண்டுவிட்டோமே எனப் பெரிதாக இருவரும் கவலைகொள்ளவில்லை. மூடநம்பிக்கைக்கும் முற்போக்குச் சிந்தனைக்கும் இடையிலான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறது திரைக்கதை.
ஹரிஷ் கல்யாணுக்கு வழக்கம்போல் துறுதுறுப்பான இளைஞன் வேடம். காதல் காட்சிகளில் கவர்கிறார். சோகக் காட்சிகளில் பெரியாத ஈர்க்கவில்லை. காதலியைக் கடலுக்குள் அழைத்துச் சென்று வெகுளிக் காதலனாக வெளிப்படுத்தும் அன்பு அழகு.
தன் பிரியத்துக்குரிய காதலனுடன் சேர்ந்துவாழும் வாய்ப்பு எளிதாகக் கிடைத்தாலும் தன் லட்சியத்திலேயே உறுதியாக இருந்து செவ்வாய்க் கிரகத்துக்குப் போக முடிவெடுத்துவிட்ட பெண் வேடம் தமிழுக்குப் புதிது. இந்த வேடத்தில் தமிழில் அறிமுகமாகியுள்ள டிகங்கனா சூரியவன்ஷி வசீகரிக்கிறார். ரெபா மோனிக்கா ஜானுக்குப் பெரிய வேலை இல்லை. ஒரு பாடலிலும் சில காட்சிகளில் தலைகாட்டிப் போகிறார்.
பிரியாணிப் பிரியரான, முற்போக்குச் சிந்தனைகொண்டவராக அர்ஜுனின் தாய்மாமா வேடத்தில் முனீஸ்காந்த் உற்சாகப்படுத்துகிறார். எங்கெங்கே என்ன பிரியாணி கிடைக்கும் என்பதைப் பட்டியில் போட்டு உண்ணும் பழக்கம் கொண்ட வேடம் கலகலப்பு. இறுதியாக, குணச்சித்திர நடிப்பிலும் முத்திரை பதிக்கிறார்.
பாண்டியம்மாளாக நடிகை ரேணுகா பாந்தமான அம்மா வேடத்தில் இயல்பாகப் பொருந்துகிறார். செக்யூரிட்டியாக வரும் நடிகர் சார்லி கனமான கதாபாத்திரத்தில் ஆழமான நடிப்பைத் தந்திருக்கிறார். பரிகாரம் எல்லாம் செய்து, மணமுடித்துக் கொடுத்த மகளை இழந்து வருந்தும் காட்சியில் உருகவைக்கிறார்.
கட்டியக்காரன் போல் படத்தின் போக்கைக் கதையாகச் சொன்னபடி வரும் யோகிபாபுவின் கதாபாத்திரம் படத்தில் தேவையற்ற ஒன்று. ஷெல்வி முதலான பிரபல சோதிடர்கள் வந்துபோகும் படத்தில் சோதிடராக நடித்திருக்கிறார் பாண்டிய ராஜன். பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஜிப்ரானின் பின்னணி இசை சுமார் ரகம். ஒளிப்பதிவு பளிச்சென்று இருக்கிறது.
காதல் என்பதற்காகவே உருகிய காலம் போய் லட்சியத்துக்குக் குறுக்கே காதல் வந்தால் விலகத் தெரிய வேண்டும் என்பதை உணர்த்திய வகையில் கவனிக்கவைக்கிறார் சஞ்சய் பாரதி. தன்னை நம்பாமல் ஜோதிடம் முதலான விஷயங்களை நம்பித் திரிவதன் அபத்தத்தை எளிதாக எடுத்துவைத்திருக்கும் இந்த தனுசு ராசிக்காரனைப் பொழுதுபோக்காகப் பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக