இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, ஜூன் 24, 2018

அறுபத்தியெட்டு அங்குலத் தொப்பைக்காரர்

ஓவியம் வெங்கி

நிலைக்கண்ணாடி முன்னே நின்று தன்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டான் வெகுளி வெள்ளைச் சாமி. தன்னை எல்லோரும் வெகுளி என அழைப்பதை எண்ணிச் சிரித்தானோ என்னவோ. சிரித்தபடியே நின்றுகொண்டிருந்த அவனை அவனுடைய உதவியாளன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டான். செல்ஃபி பிரியனான வெள்ளைக்கு செல்ஃபி எடுக்க சிரமாக இருக்கும் என்பதால் அதற்காக ஓர் உதவியாளனை வைத்திருந்தான். அவன்தான் வெள்ளையை விதவிதமாக செல்ஃபி எடுப்பான். செல்ஃபிக்களைத் தனது சுவீட்டர் பக்கத்தில் வெள்ளை பகிர்ந்துகொள்வான். பகிர்ந்த உடனேயே அது பத்தாயிரம் பேரால் விரும்பப்படும். ஒவ்வொரு க்ளிக்கும் பத்தாயிரமாகப் பெருக சில மணித்துளிகளில் கோடிக்கணக்கான பேரால் அது பார்க்கப்பட்டதாகக் காட்டிக்கொள்வதில் ஒரு பெருமை வெள்ளைக்கு. அவனுடைய வளர்ச்சி தத்துவமும் அதுதான்.

இன்று ஆணவபுரத்தின் நகராட்சித் தலைவராகத் தலைநிமிர்ந்து நடக்கும் வெள்ளச்சாமி ஒரு காலத்தில் ஆணவபுரத்தின் பஜாரில் எடுபிடியாக இருந்திருக்கிறான். டீ வாங்கி வருவது, கடைகளைப் பெருக்குவது போன்ற எடுபிடி வேலைகளைத் தான் முதன்முதலில் செய்தான். அந்தப் பழக்கம் காரணமாக ஊரில் உள்ள வர்த்தகர்களின் நண்பனான் வெள்ளை. அதை வைத்தே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அந்த நகராட்சிக்கே தலைவராகிவிட்டான். முதன்முதலாக அவன் நகராட்சித் தலைவராக ஆன போது பயபக்தியுடன் நகராட்சி வாசலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கும்பிட்டு முத்தமிட்ட காட்சியைப் பார்த்தவர்களுக்கு அவனுடைய கடமை உணர்வு மெய்சிலிர்க்கச் செய்தது. அந்த அர்ப்பணிப்பு உணர்வுதான் வெள்ளைச்சாமியின் பலம். தான் அடைய விரும்பியதை அடைய என்ன வேண்டுமானாலும் செய்வான்; வெட்கப்படவே மாட்டான். இல்லாவிட்டால் யார் யாரோ போட்டி போட்ட நகராட்சிக்கு அவன் தலைவராகியிருக்க முடியுமா?

ஆணவபுர நகராட்சியின் தலைவராக விரும்பிய பெரியவர் குத்போனியை அவன் ஓரங்கட்டியதை எல்லாம் குத்போனியால்கூட நம்ப முடியவில்லை. இவ்வளவுக்கும் டவுசர் போட்டுக்கொண்டு அந்த ஊரின் ’பிறர் சேவை மன்ற’த்தில் வெள்ளை எடுபிடியாக இருந்தபோதே குத்போனி அதன் தலைவராக இருந்தவர். ஆனாலும் இன்று வெகுளி வெள்ளைச்சாமி நாடறிந்த நகராட்சித் தலைவர். அவனுடைய சுவீட்டர் பக்கம் உலகத்திலேயே அதிகம் பேரால் பின் தொடரப்படுகிறது. அவன் போகாத நகரங்களே நாட்டில் இல்லை. புதிதாக உருவாகும் பக்கத்து மாநில நகரத்துக்கு அடுத்த ஆண்டு வரப் போவதாக இப்போதே முன் பதிவு செய்துகொண்டான் வெள்ளை. என்னதான் பெரிய ஆளானாலும் வெள்ளையின் மனசில் அந்த டவுசர் காலம் நிறைந்திருந்தது. தான் போட்டிருந்த டவுசரைப் பத்திரமாக வைத்திருந்தான். அதைத் தினம் தோறும் தொட்டுக் கும்பிட்டுவிட்டுத்தான் வெளியவே கிளம்புவான்.

மாதந்தோறும் நகராட்சி வானொலியில் பேசுவது வெள்ளைச்சாமிக்கு வாடிக்கை. அந்தப் பேச்சுகளை ஊரில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் கேட்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருந்தான் வெள்ளை. எடுபிடியாக இருந்த தன்னாலேயே இந்த அளவு உயர முடிந்தால் ஒழுங்காகப் படிக்கும் மாணவர்கள் எந்த அளவு உயர முடியும் என்ற தன்னம்பிக்கையை அவர்களுக்கு அந்தப் பேச்சின் வழியே அளித்தான் வெள்ளை.

தான் மூணாங்கிளாஸ் தான் படித்திருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மை வெள்ளைக்குக் கிடையவே கிடையாது. உலகத்திலேயே தான்தான் அறிவாளி என்று காட்டிக்கொள்வான். அவன் மூணாங்கிளாஸ் படித்ததற்கே ஆதாரம் இல்லை என எதிர்க்கட்சியினர் சொல்வார்கள். அதை எல்லாம் காதிலேயே போட்டுக்கொள்ள மாட்டான் வெள்ளை. வெள்ளையின் மூளைதான் காலியாக இருக்குமே தவிர வெள்ளையின் வயிறு எப்போதும் நிறைந்தே இருக்கும். அவனது தொப்பையின் அளவைப் பத்திரிகைகளில் கிண்டலடிப்பார்கள். உணவு சாப்பிடுவதற்கு முன்னர் இருப்பதைப் போல் இரு மடங்கு அதிகமாகிவிடும் சாப்பிட்ட பின்பு அவனது தொப்பை. 68 அங்குலத் தொப்பைக்காரன் என்பதில் அவனுக்கு பெரிய மகிழ்ச்சி.

இந்த நேரத்தில் தான் பக்கத்து ஊர் கபடி ஆட்டக்காரர் பிரட் போளி வெள்ளையால் ஏதாவது உடற்பயிற்சியில் ஈடுபட முடியுமா என்று விளையாட்டாகக் கேட்டுவிட்டார். அதை ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்ட வெள்ளை தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவைத் தனது சுவீட்டர் பக்கத்தில் வெளியிட்டான். அதைப் பார்த்த ஆணவபுரத்துக்காரர்களே அசந்து போய்விட்டார்கள். உடற்பயிற்சியின் ஒரு பகுதியாக அமைதியாட்சி கோவிலின் மரத்தை வெள்ளை சுத்திவரும் காட்சியைக் கண்ட பலர்மீது அம்பாளே வந்து இறங்கிவிட்டார். அந்த அளவு ஆன்ம சுத்தியுடன் உடற்பயிற்சி செய்தான் வெள்ளை. ஒரு பெரும் பாறை மீது மல்லாக்கப்படுத்து அந்தப் பாறையுடன் சேர்ந்து பத்து முறை உருண்டான் வெள்ளை. ஆனாலும் அவனுடைய தொப்பைக்கு எந்தக் கோளாறும் ஏற்படவில்லை. அது பாறைக்கே சவால்விட்டது. சின்ன வயதில் டவுசர் போட்டுக்கொண்டு ’பிறர் சேவை மன்ற’த்தில் உடற்பயிற்சி செய்த காலம் அவன் நினைவில் எழுந்தது. இந்த வீடியோவை சுவீட்டர் பக்கத்தில் உலக நாட்டில் உள்ளவர்கள் எல்லாம் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தனர். சுவீட்டர் தொடங்கிய காலம் முதல் இதுவரை வெளியான அனைத்து  வீடியோக்களையும்விட அதிகம் பேரால் பார்க்கப்பட்டது வெள்ளையின் உடற்பயிற்சி வீடியோ.

செவ்வாய், ஜூன் 19, 2018

அவரை நீங்க பாத்திருக்கீங்களா?

ஓவியம்: வெங்கி

வெகுளி வெள்ளச்சாமி எப்படியோ யார் யாரையோ, கையைக் காலைப் பிடித்து ஒரு செய்தியாளர் ஆகிவிட்டான். ஒரு முறை தற்செயலாக செண்டிரல் ரயில் நிலையத்தில் நடிகர் குஜினியைச் சந்தித்தான். அவர் அவசர அவசரமாக சமயமலைக்குத் தியானத்துக்குச் சென்று கொண்டிருந்தார். வழக்கமாக விமானத்தில் செல்லும் குஜினி ஒட்டுத்தாடி, முகத்தில் மரு என்ற மாறுபட்ட கெட்டப்பில் இருந்தாலும் வெள்ளச்சாமியின் கண்களின் கூர்மைக்கு முன்னர் அவர் தப்பிக்க இயலவில்லை. சட்டென்று அவர் முன் சென்று மைக்கை நீட்டினான் வெள்ளை. ’என்ன என்ன’ என்று பதறினார் நடிகர். ’ஒண்ணுமில்ல சார் இங்கே கிடைக்காத அமைதி சமயமலையில் உங்களுக்குக் கிடைக்கிறதா?’ என்று முதல் கேள்வியை ஒரு கத்தியைப் போல் சொருகினான் வெள்ளை. குஜினிக்கு ஒரு நிமிஷம் உடம்பே சுத்தியிருச்சு. கிறு கிறுன்னு வந்துருச்சு. அவர் பதற்றத்தில் ’ஏய் ஏய்’ என்று மட்டும் சொன்னார். வெள்ளை பயந்து நடுங்கிவிட்டான். ’என்னடா வம்பாப் போச்சு நாம ஏதோ கேக்கப் போய் இந்த ஆளு கையக் கால நீட்டிட்டாருன்னா நம்ம பாடு பெரும்பாடாப் போயிருமே’ன்னு சத்தமில்லாம, பதில் பற்றிக் கவலைப்படாமல் மைக்கை எடுத்துட்டு வந்துட்டான். தன்னோட சேனலில் கூடச் சொல்லல. ஆனால், இதை எவனோ வீடியோ எடுத்து வேஸ்ட் அப்பில் பரப்ப வெள்ளை நாடறிந்த செய்தியாளர் ஆகிவிட்டான்.

அதன் பின்னர் நடிகர் சீஸ்அர் லூஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டார். அந்தப் பதிவை அவருடைய நண்பர் பேரிக்காவிலிருந்து அனுப்பியிருந்தார். அதைப் படித்த நடிகர் சீஸ்அர் அது என்ன ஏது என்று புரிந்துகொள்ளாமல் அதை அப்படியே லூஸ்புக்கில் பகிர்ந்துவிட்டார். அவ்வளவுதான். அதைப் பார்த்த அனைவரும் கொதித்து எழுந்தார்கள். நடிகர் சீஸ்அருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்கள். அவர்கள் கோரிக்கையில் இருந்த உண்மையைக் கண்டு நடிகர் சீஸ்அரே தன்னைக் கைது செய்வதுதான் சரியான நடவடிக்கை என்று அறிக்கை வெளியிட்டார். ஆனால், அவர் எங்கே இருக்கிறார் என்பதைக் காவல் துறையால் கண்டே பிடிக்க இயலவில்லை. இவ்வளவுக்கும் அவர் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். ஒட்டுத்தாடி, மரு போன்ற மாறுபட்ட கெட்டப்பில் எல்லாம் அவர் நம்பிக்கை வைக்கவில்லை. அதனால் எந்த மேக்கப்பும் இன்றி நடமாடினார். அதனாலோ என்னவோ அவருடன் வரும் காவலருக்குக்கூட அவரை அடையாளம் தெரியவில்லை.

காவல் துறையும் அவரது அடையாளத்தைச் சொல்லி பத்திரிகையில் விளம்பரம் எல்லாம் கொடுத்தது. அவரது சட்டையில் கீழ் பொத்தான் கிடையாது என்றும் வலது கையை ஆட்டிக்கொண்டே இருப்பார் என்றும் தகவல்கள் எல்லாம் தந்திருந்தனர். ஆனாலும் காவல் துறையினரால் மட்டும் அவரைப் பார்க்கவே இயலவில்லை. சாதாரண மனிதர்களின் கண்களுக்குத் தட்டுப்படும் சீஸ்அர் காவல் துறையின் கண்களுக்குத் தெரியாதவாறு அன்னை பாராசக்திதான் அவருக்குச் சக்தி கொடுத்திருக்க வேண்டும்.

நடிகர் சீஸ்அரைத் தான் ஏன் ஒரு பேட்டி எடுக்கக் கூடாது என நினைத்தான் வெள்ளை. அவருடைய வீட்டுக்கு நேரடியாகச் சென்றான். அப்போது சீஸ்அர் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அவர் உடற்பயிற்சி செய்கிறார் என்பதே அவனுக்கு வியப்புக்குரிய தகவலாக இருந்தது. பொறுமையாகக் காத்திருந்தான். நடிகர் சீஸ் அர், சுத்தமான பசும் பாலில் தயாரித்த சுவையான வடிப்புக் காப்பியைத் தருவித்து அவனுக்குத் தந்தார். குடித்து முடித்த வெள்ளை, உங்களை ஏன் காவல் துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றான். அதற்கு நடிகர் அவர்கள் வழக்கம் போல் பிற இடங்களில் எல்லாம் தேடுகிறார்கள் நானோ எனது வீட்டிலேயே இருக்கிறேன் அதனால் அவர்களால் என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்.

நீங்களே சென்று ஏன் சரணடையக் கூடாது என்றான் வெள்ளை. சட்டென்று கடுங்கோபம் கொண்டார் நடிகர் சீஸ்அர். நீங்கள் நமது காவல் துறையை அவ்வளவு இழிவுபடுத்துவதை என்னால் தாங்கிக்கொள்ள இயலாது என்று சொல்லிவிட்டு, நானே சென்று சரணடைந்தால் காவல் துறையினரின் திறமையைக் குறைத்து மதிப்பிடுவது போல் ஆகாதா என்று எதிர்க்கேள்வி கேட்டார். அவரது பதிலிலிருந்த நேர்மையை ரசித்தான் வெள்ளை. ஆகவே, எத்தனை காலம் ஆனாலும் காவல் துறை வந்து தன்னைக் கைது செய்வதுவரை தான் பொறுத்திருக்கப் போவதாகவும், தன் ஆயுள் முடிவதற்குள் கண்டிப்பாகக் காவல் துறை தன்னைக் கண்டுபிடித்து கைதுசெய்யும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் நடிகர் சீஸ்அர் முத்தாய்ப்பாக முடித்தார்.    

லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்

பார்வையாளர்

41,779