இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, ஜூலை 16, 2017

பண்டிகை

நல்லவர் வாழ்வார் தீயவர் அழிவார் என்னும் பழம் பஞ்சாங்க நீதியின் டிஜிடல் வடிவம் பண்டிகை.

நேர்மையான வழியில் உழைத்து தனக்கொரு நல்ல வாழ்வு அமைத்துக்கொள்ள முயல்கிறான் வேலு (கிருஷ்ணா). குடும்பத்தை நிம்மதியாக வைத்துக்கொள்ளச் சூதாடினாலும் தப்பில்லை என்று எண்ணுகிறான் முனி (சரவணன்). சமூகம் எக்கேடு கெட்டாலும் தன் கருவூலம் நிரம்பினால் போதும் என்று செயல்படுகிறான் தாதா (மதுசூதனன் ராவ்). சூதாட்ட சூழ்ச்சி காரணமாகத் தாதாவிடம் தான் இழந்த பணத்தை வேலு உதவியுடன் பெற்றுவிட ஒரு திட்டம் தீட்டுகிறான் முனி. இதற்கு ஒரு ஐடியா கொடுக்கிறான் முந்திரி (நிதின் சத்யா). இதில் வென்றது யார் தாதாவா, முனியினரா என்பதே இந்தப் பண்டிகை.
கதை பழைய பாடாவதி கதைதான். திரைக்கதையில் கொஞ்சம் வேலை செய்திருக்கிறார்கள். அது ஒன்றுதான் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறது. அதிலும் அநியாயத்துக்கு ஓட்டைகள். அவ்வளவு பெரிய தாதாவின் வீட்டில் பணத்தைப் பாதுகாக்க ஜிஎஸ்டிக்குப் பின்னான தியேட்டரில் இருப்பதைப் போல் பலவீனமான நாலைந்து பேரா இருப்பார்கள்? வீட்டுக்கு உள்ளே மட்டும்தான் கேமரா வைப்பார்களா? திக்கும்வாயன் என அடையாளப்படுத்தப்படும் ராட்டின குமார் (கருணாஸ்) போன்ற கதாபாத்திரங்கள்தான் இப்படியான திரைக்கதையைச் சுவாரசியமாக நகத்தும். மற்றபடி, பாண்டி நகைச்சுவை என்ற பெயரில் பண்ணும் கேலிக்கூத்து வெறும் அவஸ்தை.

பண்டிகை என்னும் பெயரில் இருவரை எதிரெதிரே மோதவிட்டு அதில் பந்தயம் நடத்துகிறார்கள். இது சூதாட்டம் அல்ல; சூழ்ச்சியான ஆட்டம். இதில் தாதா, முந்திரி, மாலிக், விக்டர் எனப் பல கதாபாத்திரங்களின் பங்கு இருக்கிறது. கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங்கை அம்பலப்படுத்த பண்டிகை ஒரு களம் அமைத்துத் தந்திருக்கிறது. வேலு பண்டிகைக் களத்தில் எதிரியின் மீது தரும் அடியை உணர்த்த அவரைவிட அதிகமாக சவுண்ட் எஃபக்ட் உழைத்திருக்கிறது. கதாநாயகி காவ்யா (ஆனந்தி) வாராது வந்த விருந்தாளி போல் ஓரிரு முறை வந்துவிட்டு ஓடிப்போய்விடுகிறார். அந்த செல்ஃபிய ஏம்மா எடுத்த காவ்யா? கொள்ளையைத் துப்புத் துலக்க வரும் இருவரில் ஒருவர் பயன்படுத்தும் அந்த ஆயுதம். பார்வையாளரைக் கிழிப்பது போல் இருக்கிறது. அநிச்சையாக உடம்பைத் தடவிப்பார்க்க வைக்கிறது. திரையில் ஒரு விஷயத்தைக் காட்டுவதால் ஏற்படும் மனரீதியான பாதிப்பு பற்றிய அக்கறையுடன் படம் எடுப்பது அவசியம் என்பதை பெரோஸ் உணர்ந்துகொள்வது நல்லது. 
வேலு பெற்றோரை இழக்கிறார், அவருக்கு எதுவுமே அடித்தால்தான் கிடைக்கிறது. திடீரெனக் காதல் கொள்கிறார், திடீரெனப் பிறருக்கு உதவுகிறார், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் முடித்துவிட்டு அடிதடியில் புகுந்துவிளையாடுகிறார். கைதேர்ந்த கொள்ளைக்காரர் போல் நடந்துகொள்கிறார், அவ்வப்போது பாடல்களும். முத்தாய்ப்பான சில வசனங்களும் வேறு வருகின்றன. சூதாட்டத்தின் பின்னணியில் காவல் துறை இருப்பதை பால்ராஜ் (சண்முகராஜா) கதாபாத்திரம் வழியே சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் தொழில்நுட்ப உதவியுடன் திரையில் அழகாகக் காட்டியிருக்கிறார்கள். எல்லாம் துண்டு துண்டாக இருக்கிறதே என நினைக்கிறீர்களா படத்திலும் அப்படித்தான் இருக்கிறது. மொத்தத்தில் பண்டிகை என்னும் பெயரில் ஒரு படம் காட்டியிருக்கிறார்கள். அதில் கொண்டாட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை வைத்தே தனி சூதாட்டம் நடத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்