இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், அக்டோபர் 05, 2015

கல்லுக்குள் ஈரம்

அவனும் அவளும் இடையில் இவனும்



அது ஒரு அழகிய கிராமம். தன் கதியில் இயங்கிக்கொண்டிருக்கும் அதன் சுபாவத்தைக் கிழித்து, புழுதி பரப்பி வாகனங்கள் விரைந்துவருகின்றன. கிராமத்தினர் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார்கள். அந்தக் கிராமத்துக்கு தனது புதுப்படத்தைப் படமாக்க பரிவாரங்களுடன் வருகிறார் இயக்குநர் பாரதிராஜா. இப்படித் தான் தொடங்குகிறது நிவாஸின் இயக்கத்தில் வெளிவந்த கல்லுக்குள் ஈரம் படம். 

முழுக்க முழுக்க காதல் கதை என்றே சொல்லிவிடலாம். படத்தின் பிரதான கதாபாத்திரங்கள் காதியும் சோலையும். காதி அவ்வூரின் கூத்து வாத்தியாரின் மகள். சோலை சலவைத் தொழிலாளியின் மகள். இருவருக்குமே அம்மா இல்லை. நிவாஸின் படத்தில் பாரதிராஜா நாயகன் என்றால் பாரதிராஜாவின் படத்தில் நாயகன் சுதாகர். தன் காதலியைப் பிரிந்த நினைவுகளில் வாடும் பாரதிராஜா அந்தக் கதையை ஒட்டியே தனது படத்தையும் எடுக்கிறார். காதலியைப் பிரிந்த பின்னர் பாரதிராஜா வைராக்கியத்துடன் இயக்குநர் ஆகிவிடுகிறார். ஆனால் அவரது படத்திலோ நாயகனுக்குப் பித்துப் பிடித்துவிடுகிறது. 


படத்தில் பல காதல்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. சோலை பாரதிராஜாவைக் காதலிக்கிறாள். காதி சுதாகரைக் காதலிக்கிறாள். அவ்வூரின் பள்ளிக்கூட வாத்தியார் காதியைக் காதலிக்கிறார். சோலையின் முறைமாமன் கறுப்பு அவள் மீது உயிராக இருக்கிறான், பித்துப் பிடித்து அலையும் சந்திரசேகருக்கும் சோலை மீது பிரியம். அவளது உடைந்த வளையலை எடுத்துப் பத்திரப்படுத்துகிறான். 

சோலை பாரதிராஜாமீது கொள்ளும் பிரியத்தை வெளிப்படுத்தும் காட்சி ஒவ்வொன்றும் புதிது புதிதான மலர்கள். பாரதிராஜா கோபக்காரர் என்ற பிம்பம் தான் அவளுக்கு. படத்தின் படமாக்கத்தின்போது அவள் காட்சியில் கவனிக்காமல் நுழைந்ததால் சோலையைப் பாரதிராஜா திட்டிவிடுகிறார்.  இப்படித்தான் அவளுக்கு பாரதிராஜா அறிமுகமாகிறார். மெல்ல மெல்ல ஒரு செடி வளர்வது போல் அவளுக்குள் பிரியம் கிளைவிடுகிறது. தான் அறியாமலேயே அதற்கு நீர் வார்க்கிறார் பாரதிராஜா. 


கிராமச் சூழலுக்குப் பொருத்தமான இசையை வாரி வழங்குகிறார் இளையராஜா. சில காட்சிகளில் பூவாய் வருடுகிறது சில காட்சிகளில் முள்ளாய் நெருடுகிறது. எந்தக் காட்சிக்கு என்ன தேவையோ அதை வழங்கும் இசை கல்லுக்குள் பசுமையை போர்த்திவிடுகிறது. சிறு பொன்மணி பாடல் படத்தில் பல கதாபார்த்திரங்களுக்கு பின்னணியாக ஒலிக்கிறது. படத்தின் அந்தராத்மாவின் உருக்கம் இந்தப் பாடலில் கலந்துகிடக்கும். பிரியங்களின் கிளையில் மலர்ந்து நிற்கும் மலர்களை இலக்கே இல்லாமல் பிடுங்கி எரிகின்றன சில பொல்லாத கரங்கள். ஏன் எதற்கு என்று எந்தக் காரணத்தையும் சொல்ல இயலாது என்பதைப் படம் சொல்கிறது. 

இது ஒரு யதார்த்தமான படம் என்று சொல்வதற்கில்லை. ஆனால் கிராம வாழ்க்கையின் பல யதார்த்தமான நிகழ்வுகள் படத்தில் பதிவாகியுள்ளன. ஆண் மீதான ஒரு பெண்ணின் பிரியத்தை இழை இழையாகப் பிரித்தெடுத்து மிருதேறிய ரசனையில் தோய்த்து காட்சிகளாக்கியிருக்கிறார் நிவாஸ். அநேகமாக அது பாரதிராஜாதான். ஏனெனில் படத்தின் டைரக்‌ஷன் மேற்பார்வை பாரதிராஜாவே. 


பாரதிராஜாவுக்கு மீனாட்சி பாட்டி வழியே கடலை தருவது, மலையடிவாரத்தில் இரவு முழுவதும் தனது தாவணியை அவருக்குப் போர்த்திவிட்டு குளிரில் நடுங்கியபடியே சோலை இரவைக் கழிப்பது, பாரதிராஜா தன் பெயரைக்  கேட்கும்போது அப்படியே உயிரே வழிந்து தன் மேல் விழுவது போன்று சோலை இளகுவது எனக் காதல் காட்சிகள் அனைத்தும்  பரப்பும் வாசம் நாசியை விட்டு எளிதில் அகலாதது.    

படத்தின் எந்தக் காதலும் கைகூடுவதில்லை. காதல் நிறைவேறா சோகத்தில் காதி தன்னை மாய்த்துக்கொள்கிறாள். இறுதியிலே சோலையும் பாரதிராஜாவும் ஒருவர் கையை ஒருவர் பிடித்து சந்தோஷத்தில் சஞ்சரிக்கும் வேளையில் பித்துப் பிடித்த சந்திரசேகர் பாரதிராஜாவைக் குத்திக் கொன்றுவிடுகிறார். இப்படித்தான் ஏதோ ஒரு மனநிலைபிறழ்வுக்கு ஆளானவனால் எல்லாக் காதல்களும் பிய்த்து எறியப்படுகின்றன. 


பாரதிராஜா - பாரதிராஜா
சுதாகர் - சுதாகர்
சோலை - அருணா
காதி - விஜயசாந்தி
கறுப்பு - ராமநாதன்
பள்ளிக்கூட வாத்தியார் - ஜனகராஜ்
சோலையின் தந்தை - கவுண்டமணி

2015 அக்டோபர் 4 அன்று இரவில் படத்தைப் பார்த்தால் இதை எழுத நேர்ந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்