தேர்தல் என்றதும் முதலில் நினைவில் எழுவது 1984-ம் ஆண்டின் தேர்தலே. அப்போது நான் ஆறாம் வகுப்போ ஏழாம் வகுப்போ படித்துக்கொண்டிருந்ததாக ஞாபகம். பரதனில் இங்கேயும் ஒரு கங்கை படம் பார்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தேன். தென்காசி பேருந்து நிலையம் அருகே வரும்போது தென்பட்ட நபர் ஒருவரின் கையில் விரித்து வைக்கப்பட்டிருந்த நாளிதழ் அதிமுக அமோக வெற்றி என்னும் செய்தியைத் தாங்கியிருந்தது. வேறெதுவும் பெரிதாய் ஞாபகமில்லை. அப்போது எம்.ஜி.ஆர் உடல் சரியில்லாமல் அமெரிக்காவில் இருந்தார்.
![]() |
1984 தேர்தலின் போது காண்பிக்கப்பட்ட வீடியோ படக் காட்சி |
அவரது உடல் ஆரோக்கிய நிலைமையை விளக்கும் வீடியோவை கிராமம் கிராமமாக வந்து காண்பித்தார்கள். கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் அருகருகே அமர்ந்து பேசுவது போன்ற புகைப்படத்தைப் போட்டு, நண்பரின் நலிவு நீங்கிட நலமார்ந்த வாழ்த்துகள்! நாட்டின் நலிவு நீங்கிட உதயசூரியனுக்கு வாக்குகள்! என்று திமுக வால்போஸ்டரைப் பார்த்தது நினைவில் பதிந்துள்ளது.
அதற்கு முந்தைய ஆண்டு ஜூலையில் இலங்கையில் கலவரம் நடந்ததோ, அதன் பொருட்டு கருணாநிதி 1984 தேர்தலில் போட்டியிடவில்லை என்று சொன்னதோ எதுவுமே அப்போது தெரியாது. ஆனால் இலங்கைத் தமிழருக்கு நிதி திரட்டுவதற்காக இராமசாமிப் பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்தபோது உதய கீதம் திரைப்படத்தை வீடியோவாகப் பார்த்திருக்கிறேன்.
அதற்கடுத்து நடந்த 1989-ம் ஆண்டின் தேர்தல் ஓரளவு நினைவுதெரிந்து நடந்த முதல் தேர்தல். அப்போது பிளஸ் 1 முடித்து பிளஸ் செல்லும் தருணம். தேர்தலுக்கு முந்தைய நாள் வகுப்பறையில் மாரியப்பன் சார் வகுப்பறையில் கழக ஆட்சியில் சந்திப்போம் என்று சொல்லிவிட்டுச் சென்றார். ஓர் ஆசிரியர் வகுப்பறையில் அரசியல் பேசியது ஆச்சரியமாக இருந்தது. வகுப்பறை என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்ற எண்ணத்தை யார் விதைத்தது எனத் தெரியவில்லை. அவரது கணிப்போ ஆசையோ அப்படியே நடந்தது. தமிழகத்தின் முதலமைச்சராக கருணாநிதி பதவியேற்றுக்கொண்டார்.
அந்தத் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஜெயலலிதா தமிழ்நாடு முழுவதும் தெருத்தெருவாக வந்தார். இலஞ்சியில் நாங்கள் வசித்த முக்கடி வீட்டருகே வேனில் இருந்தபடி ஜெயலலிதா பிரச்சாரம் செய்ததும், வாக்காளர்களுக்கு அன்புப் பரிசாகப் போர்வைகளைத் தந்ததாகவும் ஞாபகம். அந்தத் தேர்தலில் ஜெயா தலைமையிலான அதிமுக சேவல் சின்னத்தில் போட்டியிட்டது. வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவை மத்தியில் ஆட்சியமைத்தது. அதை ஒட்டி அப்போது தமிழ் இந்தியா டுடேயில் மத்திய அமைச்சரவை குறித்து விரிவாக செய்திகள் வெளியாயிருந்தன. அந்தப் புத்தகத்தில் என்னவெல்லாம் இடம்பெற்றிருந்தன என்பது மறந்துபோயிருந்தாலும் அப்படியொரு புத்தகம் கண்டது ஏனோ அப்படியே ஞாபகப் பக்கத்தில் நிலைத்துவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக