மெய்ப்பொருள் காண்பதறிவு

"உண்மையைக் காண முயலும் தனி மனிதன் சமூகத்தின் விதிவிலக்கு:
வாழ்க்கையின் பலிபீடம்" - புதுமைப்பித்தன்
திரைப்பட வரலாற்றில் தனக்கென ஓரிடம்பிடித்துவிட வேண்டுமென்ற விருப்பம்தான் திரைப்பட இயக்குநர்களின் உந்துசக்தி. அதுதான் அவர்களைப் படத்தை இயக்கவைக்கிறது. அந்த உந்துசக்தியின் வீரியம் எப்போதுமே காத்திரமானதுதான். என்றபோதும் எல்லாப் படங்களும் வரலாற்றுப் பக்கங்களின் வரிகளாக மாறிவிடுவதில்லை. தங்களது மனத்தில் வரித்துக்கொண்ட திரைப்படத்திற்கும் தங்களால் உருவாக்கப்பட்டுத் திரையில் காட்சிகளாக விரிந்துநிற்கும் படத்திற்கும் உள்ள இடைவெளியைப் பெருமளவுக்குக் குறைக்கும் போதுதான் படம் பார்வையாளனின் மனத்தை ஆக்கிரமிக்கிறது. அந்த இடைவெளியை எந்த அளவுக்குக் குறைக்கிறார்களோ அதைப் பொறுத்தே அவர்களது படங்களின் தரம் அமையும். இதுவரை சொல்லப்படாத கருவை மாறுபட்ட முறையில் படமாக்கித் தங்களை வேறுபட்டவர்களாகக் காட்டிக்கொள்ளும் முனைப்பு இருந்தபோதும் ஏதோ ஓரிடத்தில் ஏற்படும் சறுக்கலால் நினைத்ததை நிறைவேற்றுவதில் சிலர் தவறிவிடுகிறார்கள். அதிலும் குறிப்பாக இயக்குநர்களின் பெயரைப் பார்வையாளர்கள் மனத்தில் நிலைக்கவைக்கும்படி முதல் திரைப்படம் அமைய வேண்டும். இயக்குநர்கள் முன்னுள்ள பெரும் சவால் அது. மௌன குரு இயக்குநர் சாந்தகுமார் அந்தச் சவாலை எதிர்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.
தனக்குரிய உரிமையை நிலைநாட்டுவதில் வேட்கை கொண்ட சராசரி தெக்கத்தி இளைஞனான கருணாகரனுக்குச் சமூகத்தோடு ஏற்படும் முரணையும் அதன் காரணமாக அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் எடுத்துக்காட்டி தற்போதைய சமூக அமைப்பின் தவறான புரிதலை, உண்மையின் காட்சிப் பிழையை உணர்த்துகிறார் மௌன குரு. சமூகத்தின் மிக முக்கியப் பொறுப்பு வகிக்கும் காவல் துறை அதிகாரிகள் சிலர் தனிமனிதப் பலவீனங்களுக்கு இரையாகிக் குற்றமிழைத்து, அதற்கான தண்டனையிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளச் சாதாரணக் குடிமகனான கருணாகரனைக் காவு கொடுக்கிறார்கள். தங்களது கல்வியறிவைத் தவறான வழியில் பயன்படுத்தி அவனுக்கு Recurrent persistent non-bizarre delusion, persecutory subtype என்னும் கற்பிதங்களுக்கு இரையாகும் மன நோய் இருப்பதாகச் சொல்லிச் சமூகத்தையும் நம்பவைத்துவிட அவர்களால் முடிகிறது. உயர் அந்தஸ்துக்காரர்களின் பொய்யான கூற்றை எந்தவிதக் கேள்வியுமின்றி அப்படியே நம்பத் தலைப்படும் சமூகம் எளியவர்கள் கூறும் அப்பட்டமான உண்மையை உதாசீனப்படுத்துகிறது. இதன் விளைவாகச் சமூகத்தின் ஒழுங்கு குலைக்கப்படுகிறது. பழி எளிதாகப் பலம் குறைந்தவன்மீது சுமத்தப்படுகிறது. இந்த அபத்தத்தை உணர்த்துவதைக் கருவாகக் கொண்டுள்ள மௌன குரு குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒன்றே. சாந்தகுமார் உருவாக்கிய களம், கதாபாத்திரங்கள், திரைக்கதை ஆகியவற்றைச் சுவாரஸ்யமான ஒரு திரைப்படமாக மாற்றுவதன் பின்னணியில் செயல்பட்ட அவரது ஆளுமை, தொழில்நுட்பக் குழுவினரின் ஒத்துழைப்பு ஆகியவைசார்ந்ததே இப்படத்தின் வெற்றி.
ராஜேந்திரன் வேடமேற்றிருக்கும் மதுவின் முகத்தில் இயலாமை, எரிச்சல், கோபம் என அநேக உணர்ச்சிகள் மிக இயல்பாக வெளிப்படுகின்றன. ஜான்விஜய், பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மாரிமுத்து, செல்வம், பெருமாள்சாமி ஆகிய பாத்திரங்களுக்குத் தேவையான உணர்ச்சிகளைத் தகுந்த அளவுக்கு வெளிப்படுத்தியுள்ளனர். பாபுவாக நடித்திருந்த முருகதாஸின் நடிப்பில் சார்லி, சின்னி ஜெயந்த் போன்றவர்களது சாயல் தென்படுகிறது. எதிர்பார்ப்பற்ற உதவிகளைப் புரியும் பாபு போன்ற கதாபாத்திரங்களைச் சாகடிக்கும் சாபம் இப்படத்திலும் தொடர்கிறது. கருணாகரன் பாத்திரமேற்றிருக்கும் அருள்நிதி மௌன குரு என்னும் தலைப்புக்கேற்ற விதத்தில் ஒரு ஞானியாகவே மாறிவிட்டார். அவரது முகபாவம் பெருமளவில் மாறுவதேயில்லை. கிட்டத்தட்ட அனைத்துக் காட்சியிலும் ஒரேவிதமான பாவத்தையே வெளிப்படுத்துகிறார். ஏற்ற இறக்கங்கள், கோபதாபங்கள், நெழிவுசுளிவுகள் அனைத்தையும் குரல்தான் ஓரளவு சரிப்படுத்துகிறது. சிபி மலயில் இயக்கத்தில் 1987இல் வெளியான தனியாவர்த்தனத்தில் மன நலம் சரியாக உள்ளவனைச் சமூகம் மனநலம் பாதிக்கப்பட்டவனாக நம்பும் சூழல் ஏற்படும். வேறு வழியற்று அவனே தன்னை மனநலம் பாதித்தவனாகக் காட்டிக்கொள்ள நேரிடும். கருணாகரனுக்கும் அதே விஷயம் நடக்கிறது. ஆனால் கதாபாத்திரம் பிரதிபலிக்க வேண்டிய உணர்ச்சிகள் கதாநாயகத்தனத்திற்குப் பலியாகிவிட்டன. மன நலம் பாதித்தவர்களை நகைச்சுவைக்குப் பயன்படுத்தும் குரூரம்தான் பல தமிழ்ப்படங்களில் காணக்கிடைக்கிறது. ஆனால் அதைத் தவிர்த்து ஓரளவு ஆக்கபூர்வமாக இப்பிரச்சினையைக் கையாண்டுள்ளதால் இயக்குநரின் புரிதல் மேம்பட்டதாகத் தோன்றுகிறது.
இயக்குநரின் மனத்தில் ஒளிந்துள்ள காட்சிகளை அவரது விவரிப்புகளைக் கொண்டு காட்சிப்படுத்தும் வல்லமைகொண்ட ஒளிப்பதிவாளரால் மட்டுமே இயக்குநரின் மனக்காட்சியைத் திரைக்காட்சியாக மாற்ற இயலும். மகேஷ் முத்துசாமி அவ்வேலையைத் திறம்படச் செய்துள்ளார். படமாக்கத்தில் இயக்குநருக்கும் ஒளிப் பதிவாளருக்குமான இணைவு உச்சத்தில் உள்ளது. எனவே இயக்குநரின் மனத்திலிருந்து காட்சிகளை உரித்து உரித்துப் படச்சுருளுக்குள் அநாயசமாகச் சிறைப்பிடித்து விடுகிறார் ஒளிப்பதிவாளர். ஒரு த்ரில்லருக்குத் தேவையான கோணங்கள், ஒளி ஆகியவற்றைப் பிரயோகித்துப் பார்வையாளனுக்குகந்ததாகப் படத்தை மாற்றிவிடுகிறார் அவர்.
அரசு மனநலக் காப்பகத்தில் வகுப்பெடுக்கப்படும் காட்சியில் ஆர்த்தியின் கைபேசி அதிர்வு நிலையில் ஒலிப்பதை உணர்த்தும் அளவுக்கு நுட்பமாக இருக்கும் பின்னணி இசை சில காட்சிகளில் பொருத்தமாக அமையாமல் பார்வையாளனைத் திகிலூட்டுவதற்குப் பதிலாகப் பயமுறுத்துகிறது. இயக்குநருக்கு ஒளி கைகொடுத்த அளவுக்கு ஒலி கைகொடுக்கவில்லை. அவரது ஆளுமைத் திறன் இசை விஷயத்தில் தளர்ந்துள்ளது. பொறுமையாக மௌனங்களைக் கையாண்டு அடுக்கப்படும் துண்டுக் காட்சிகளால்கூடப் பார்வையாளனின் மனத்தில் அழுத்தமான உணர்வலைகளை எழுப்ப முடியும். திகிலைப் பார்வையாளன் மனத்தில் உணர வேண்டும் செவியிலல்ல.
கிரைம் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், ரத்தப் பரிசோதனை செய்வதற்குப் போடப்பட்ட ஊசித்துவார ரத்தக்கசிவை நிறுத்த அதில் வைத்து அழுத்திக்கொண்டிருந்த பஞ்சை எடுத்துப்போடுவதைக்கூடப் போகிற போக்கில் காண முடிகிறது. இப்படி அட்சரம் பிசகாமல் திரைக்கதை பயணித்துள்ள படத்தில் ஒருசில விஷயங்கள் தவிர்க்கப்பட்டிருந்தால் தமிழின் முக்கியமான படங்களில் ஒன்றாக அமைந்திருக்கும் மௌன குரு. முதலாவது நம்பகத்தன்மையற்ற அந்தக் காதல். படத்தின் தொடக்கத்தில் தீவிரமான ஒரு விஷயம் வர இருக்கிறது என்பதை உணர்த்திவிட்டு ஏறக்குறைய நாற்பது நிமிடங்கள் படம் சுவாரஸ்யமற்ற காதல்வழியே நகர்கிறது. அடுத்தது ஈர்க்கும்படியாய் அமையாத சில வசனங்கள். ‘சனிக்கிழமை எண்ணெய் தேய்ச்சிக் குளி’ என்பதைச் சொல்லிச் சொல்லி அந்த இடம் தேய்ந்து அதிலிருந்து நீர் சுரக்கத் தொடங்கிவிட்டது. அப்படிப்பட்ட வசனங்கள் வாழ்க்கையில் வழக்கத்தில் இருந்தால்கூடத் திரைப்படத்தில் நிறுத்திவிடலாம். ஆந்திர மாநில வனப்பகுதி, கல்லூரி என அநாவசியமாகப் பல இடங்கள் துணைத்தலைப்புகள் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. பார்வையாளனுக்குப் புரியாமல் போய்விடுமோவென்ற பதற்றமா? அருள்தாஸ் கல்லூரி முதல்வரின் மகன் செய்யும் சிறு சிறு திருட்டுகளுக்குப் பின்னணியாக அப்படியொரு நீதிபோதனைக் கதை அவசியமல்ல. அது அவனது இயல்பாகக்கூட இருக்கலாம். கதையில் அவனது திருட்டு என்னவித பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது தான் முக்கியமே தவிர அதற்குப் பின்னணி அவசியமல்ல.
ஓரிரு காட்சிகளைத் தவிர அனைத்துக் காட்சிகளிலும் அமர் மனைவியின் நெற்றியில் குங்குமம் கொட்டப்பட்டுள்ளது. பாலியல் வறுமை போக்கும் தொழில் புரியும் மாயாவோ நடு வீட்டில் அமர்ந்து புகைபிடிக்கிறாள். குடும்பப் பெண் இப்படி இருப்பாள், பரத்தை இப்படி இருப்பாள் என்னும் வகையில் காட்சிப்படுத்தும் சிந்தனைகளில் மூழ்கிக் கிடக்கும் தமிழ்த் திரைப் படத்தைப் புது இயக்குநர்கள் தாம் விடுவிக்க வேண்டும். அதிகக் கவனத்துடனும் சிரத்தையுடனும் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் இன்னும் துணிச்சலுடன் கையாளப்பட்டிருந்திருக்கலாம். படத்தில் சிறு சிறு குறைகள் தென்பட்டபோதும் நேர்த்தியான தமிழ்ப் படமொன்றைத் தரும் திறனுள்ளவராகத்தான் தெரிகிறார் சாந்தகுமார். அதனால் தான் மைனா, ஆரண்யகாண்டம் போன்ற மாறுபட்ட முயற்சிப் படங்களின் வரிசையில் இந்த மௌன குருவையும் வைத்துவிட முடிகிறது. நேர்த்தியான படைப்பு என்னும் இலக்கை அடைவதை நோக்கமாகக்கொண்ட எத்தனிப்பே இப்படத்தைக் கவனத்துக்குரியதாக மாற்றுகிறது.
காலச்சுவடு பிப்ரவரி இதழில் வெளிவந்த விமர்சனம் இது : http://kalachuvadu.com/issue-146/page75.asp