ஆர்.கே.சண்முகம் செட்டியார்
இராஜா அண்ணாமலை மன்றத்தில் நுழைகையில் எதிர்ப்படும் மார்பளவு சிலை ஆர் கே சண்முகத்தின் சிலை. இச்சிலையைத் திறந்துவைத்தவர் நாராயணசாமி. தமிழிசைச் சங்கத்தின் தலைவராக 1948முதல் 1953வரை இருந்துள்ளார் சண்முகம் செட்டியார். சுதந்தர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார். இவர் 1892 அக்டோபர் 10ஆம் நாள் பிறந்தார். பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தலைமையில் சுதந்தர இந்தியாவின் முதல் அமைச்சரவை உருவாக்கப்பட்டபோது அதில் காங்கிரஸ் கட்சியில் இல்லாத இருவர் பங்குபெற்றனர். ஒருவர் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார்; மற்றவர் சட்ட அமைச்சர் அம்பேத்கர்.
நிதியமைச்சராக இருந்த சண்முகம், ஒரே ஆண்டில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கோயம்புத்தூர் திரும்பிவிட்டார். இவர் காங்கிரஸில் இருந்திருக்கிறார். பிராமணர்-பிராமணரல்லாதார் பிரச்சினை வலுத்தபோது காங்கிரஸிலிருந்து விலகியுள்ளார். நீதிக்கட்சியின் ஆதரவில் தேர்தலில் நின்றுள்ளார். பிறகு அந்தக் கட்சியுடனான தொடர்பை நீட்டிக்கவில்லை. பெரியாருடன் நெருங்கிய நட்பு பாராட்டி, சுயமரியாதை இயக்கத்தில் இருந்துள்ளார். ஆனால் சுயமரியாதை இயக்கத்தின் கடவுள் எதிர்ப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் அந்த இயக்கத்திலிருந்து விலகியுள்ளார். அடிப்படையில் பெரியாரின் பிற சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்ட இவர், கடவுள் நம்பிக்கையை விடத் தயாராக இல்லை.
இந்தியாவுக்கு சுதந்தரம் வேண்டும் என்று கேட்டுப் போராடிய பலருள் இவர் இருந்திருக்கிறார். ஆனால் தெருவில் இறங்கிப் போராடி ஜெயிலுக்குப் போகவில்லை. கடைசிவரை ஆங்கிலேய அரசாங்க அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். ஆனால் அதே நேரம், இந்தியா சுய நிர்ணய உரிமை பெற்று தன்னாட்சி அதிகாரத்துடன் விளங்க வேண்டும் என்பதில் இவர் கடுமையாக உழைத்திருக்கிறார். இந்திய நிதியமைச்சராக இருந்தபோது பிரிட்டன் இந்தியாவுக்குத் தர வேண்டிய பேலன்ஸ் ஆஃப் பேமெண்ட் சுமார் 1,500 கோடி ரூபாயைப் பெறுவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். கோயமுத்தூர் பகுதியைத் தொழிற்சாலைகள் நிறைந்த இடமாக்கியதில் முக்கியமான பங்கு இவருக்கு இருந்திருக்கிறது. கொச்சி சமஸ்தான திவானாக 7 ஆண்டுகள் இருந்து, அந்த இடத்தில் பெரும் வளர்ச்சியைக் கொண்டுவந்துள்ளார். தமிழிசை இயக்கத்தில் முக்கியமானவராக இருந்துள்ளார். ராஜா அண்ணாமலை செட்டியாருடன் சேர்ந்து தமிழிசை இயக்கத்தை ஆரம்பித்து, அண்ணாமலை செட்டியாருக்கு அடுத்து அந்த இயக்கத்தின் இரண்டாவது தலைவராக இருந்துள்ளார். அண்ணாமலைப் பலகலைக்கழகத்தின் துணைவேந்தராக இரண்டு ஆண்டுகள் இருந்துள்ளார். சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து உரை எழுதியுள்ளார். தமிழ்க் கல்விக்காக பேரூரில் ஒரு கல்லூரி உருவாக்கியுள்ளார். தாழையூத்துவிலும் சங்ககிரியிலும் சிமெண்ட் தொழிற்சாலைகள் அமைய பெருமுயற்சி மேற்கொண்டு, அதற்கான உரிமமும் வழங்கியுள்ளார். 1920ஆம் ஆண்டு நீலகிரி தொகுதியின் எம்.எல்.சி ஆனார். இவரது நேர்மையான, தூய வாழ்வையும் பெரியார் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசியும், எழுதியும் பாராட்டியுள்ளார். சுமார் 60 ஆண்டுகள் வாழ்ந்த இவரது வாழ்க்கை வரலாற்றை இவரது பேரன் ஆர்.சுந்தரராஜ், ஆய்வுக்கட்டுரையாக எழுதியுள்ளார். வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி சண்முகம் செட்டியாரது சிலை கோவை நகரில் நிறுவப்பட வேண்டுமென கோவை மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இவர் மே 5, 1953இல் காலமானார்.
சர் டி முத்துசாமி ஐயர்
சர் டி முத்துசாமி ஐயருக்கு சென்னை உயர் நீதிமன்ற கட்டட மாடியில் மூல விக்கிரகம் போல் சலவைக் கல்லில் சிலை நிறுவப்பட்டுள்ளது. 1862இல் உருவாக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் இவர். முத்துசாமி ஐயர் திருவாரூரைச் சார்ந்தவர். மிக ஏழைக் குடும்பத்தில் ஜனவரி 28, 1832இல் பிறந்த இவர் பல இன்னல்களிடையே போராடி படித்து படிப்படியாக அரசாங்க உத்தியோகத்தில் முன்னேறினார். 1878இல் ஹாலோவே என்னும் வெள்ளைக்கார நீதிபதி ஓய்வுபெற்றபோது அந்த இடத்திற்கு அன்றைய பிரிட்டிஷ் அரசு இவரை நியமித்தது. முத்துசாமி ஐயர் 17 ஆண்டுகள் உயர் நீதிபதியாக பணிபுரிந்தார்.
மாவட்ட முன்சீப் பதவியிலிருந்து வளர்ந்து வந்தவர் என்பதால் இவருக்கு எல்லா வகையான சட்டதிட்டங்களின் நுணுக்கங்களும் தெரிந்திருந்தது. நிலவரிச் சட்டங்கள், கொடுக்கல் வாங்கல் சட்டங்கள், கிரிமினல் வழக்குச் சட்டங்கள், சொத்து சம்பந்தமான சட்ட நுணுக்கங்கள் போன்ற எல்லாவற்றிலும் ஆழமான அறிவு உடையவர் இவர். எட்வர்டு அரசர் செய்த ஒரு குற்றத்திற்கு என்ன தண்டனை தருவது என்பதில் நிலவிய குழப்பத்தை இவர் தான் தீர்த்துவைத்தார். தவறு செய்தவர் மன்னர் என்பதால் அவரது படம் போட்டு வெளியிடப்படும் நாணயத்தில் கிரீடம் இல்லாத மன்னரின் தலை இடம்பெற வேண்டும் என்பது இவரது யோசனை. இதுதான் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அழியாப் புகழைப் பெற்ற இவர் 1895 ஜனவரி 25 அன்று மரணமடைந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தினுள்ளே நீதிமன்றத்தைப் பார்த்தபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் சிலை தான் வெம்பாக்கம் பாஷ்யம் அய்யங்காருடையது. 1927 இல் எம் எஸ் நாகப்பா வழங்கிய சிலை இது. பாஷ்யம் அய்யங்கார் வசதியான வைஷ்ணவக் குடும்பத்தில் பிறந்தவர். அந்தக் கால பிராமணர்களிடையே அரசாங்க உத்தியோகத்திற்கு மவுசு அதிகம். அதற்கேற்ப இவரும் சில ஆண்டுகள் சப்ரிஜிஸ்ட்ரராக பணி புரிந்தார். அவ்வேலையின் கெடுபிடிகள், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் ஏற்படும் மனச்சோர்வு ஆகியவற்றின் காரணமாக அவ்வேலையிலிருந்து வெளியேறினார். சட்டம் படித்தார். மாகாணத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார். 1872இல் பார் கவுன்சிலில் பதிவு செய்தார். அன்றைய சென்னை அட்வகேட் ஜெனரலான பாரிஸ்டர் ஓ. சல்லிவன் என்னும் வெள்ளையரிடம் ஜூனியராகச் சேர்ந்தார். பாஷ்யம் அய்யங்கார் சிவில் வழக்குகளுக்கு மட்டும்தான் வாதாடுவார். தென் இந்தியாவின் பிரமுகர்கள் பெரும்பாலானோர் இவரது கட்சிக்காரர்கள். அக்காலத்திலேயே இவரது வருமானம் பல ஆயிரம் ரூபாய்களாக இருந்தது. இவர் சட்ட மேதை ஆனால் சுவையான பேச்சாளர் அல்ல. மிகவும் நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக தாழ்ந்த குரலில் தான் பேசுவார். பாஷ்யம் அய்யங்காருக்கு சட்டம், வழக்கு, நீதிமன்றம் இவற்றைத் தவிர வாழ்க்கையில் வேறு எதிலுமே ஈடுபாடு கிடையாது. பிப்ரவரி 1897 முதல் மார்ச் 1898வரை, செப்டம்பர் 1899முதல் மார்ச் 1900வரை ஆகிய கால கட்டங்களில் இந்திய அட்வகேட் ஜெனரலாக இருந்துள்ளார். இப்பதவி வகித்த முதல் இந்தியர் இவர். 1901 முதல் 1904வரை உயர் நீதிமன்ற நீதிபதியாக சேவையாற்றினார். மயிலாப்பூரில் இவர் வாழ்ந்த வீடுதான் இன்றைய காமதேனு தியேட்டர். பாஷ்யம் அய்யங்கார் நவம்பர் 18, 1908 இல் காலமானார்.
பகதூர் சுப்பிரமணிய அய்யர்
சென்னைப் பல்கலைக் கழக செனட் கட்டடத்தின் முன்னே அமர்ந்தபடி இருக்கும் சிலை சர் எஸ் சுப்பிரமணிய அய்யருடையது. முதல் இந்தியத் துணைவேந்தராக இருந்ததால் 1935இல் இவரது சிலை செனட் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. முதல் இந்திய உயர் நீதிபதி முத்துசாமி ஐயர் 1895இல் மறைந்ததும் அப்பதவிக்கு மணி அய்யர் நியமிக்கப்பட்டார். இவர் மதுரை மாவட்டத்தில் அக்டோபர் 1, 1842இல் பிறந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றிருந்தும் முதலில் வக்கீலாகாமல் மதுரை மாவட்ட துணை ஆட்சியாளர் அலுவலகத்தில் குமாஸ்தாவாகப் பணிபுரிந்தார் சில காலம். பின்னர் 1869இல் தனது வக்கீல் தொழிலைத் தொடங்கினார். 1875இல் வேல்ஸ் இளவரசர் மதுரை வந்தபோது மதுரை மக்கள் சார்பாக வரவேற்புரை நிகழ்த்தியுள்ளார் இவர். மதுரை நகராட்சி துணைத் தலைவராக 1882லிருந்து சென்னைக்கு குடிபெயரும் வரை இருந்துள்ளார். 1884இல் இவரது மனைவி லக்ஷ்மி அம்மாள் இறந்தபிறகு 1885இல் சென்னைக்கு வந்து குடியேறினார். குறுகிய காலத்திலேயே சென்னையின் பிரபல வக்கீலானார். 1888 இல் அரசாங்க வக்கீலாக நியமிக்கப்பட்டார். இப்பதவியை வகித்த முதல் இந்தியர் இவர்தான். மணி அய்யர் 1895இல் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார். கண் பார்வையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பதவிக்காலம் முடியும் முன்பே நீதிபதி பதவியிலிருந்து விலகிக்கொண்டார். ஓய்வு பெற்ற பிறகு மணி அய்யர் பொது வாழ்வில் தீவிரமாக ஈடுபட்டார். 1885இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக நியமிக்கப்பட்ட இவர் 1896இல் அதன் துணைவேந்தரானார். அச்சமயத்தில் பல கல்வித் திட்டங்களை நிறைவேற்றினார். அன்னிபெசண்ட் அம்மையார் நடத்திய ஹோம் ரூல் இயக்கத்தில் தீவிரமாகப் பங்குகொண்டார். 1893இல் திவான் பகதூர் பட்டமளித்துச் சிறப்பிக்கப்பட்டார். நாட்டில் தலைவிரித்தாடிய அடக்குமுறைகளைக் கண்டித்து தனக்கு அரசாங்கம் அளித்த பட்டங்களை எல்லாம் உதறித் தள்ளினார். தியோஸோபிக்கல் சொஸைட்டியின் துணைத் தலைவராக 1907முதல் 1911வரை இருந்துள்ளார். 1908இல் சென்னைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டமளித்தது இவருக்கு. சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் கௌரவ பட்டம் இவருக்குத் தான் அளிக்கப்பட்டது. 1917இல் இந்திய விடுதலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்ஸனுக்கு ஒரு கடிதம் எழுதினார். இக்கடிதம் இந்தியாவின் தேசிய சரித்திரத்தில் பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தியது. மணி அய்யர் டிசம்பர் 5, 1924இல் காலமானார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக