இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், மார்ச் 03, 2011

ஆனாலும் அவன் என் நண்பன்

பெரும்பாலான நேரங்களில் என்னை எனக்குப் பிடிக்காது. மனத்திற்குள் சில நேரங்களில் சஹாரா குடிகொண்டுவிடும். உலகத்தின் ஒட்டுமொத்த ஹெச்டூஓவும் ஒரே நொடியில் ஆவியாகிவிட்டது போன்ற எண்ணம் தோன்றும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கானல் நீரைத் தவிர எதுவும் தென்படாது. ஒரு துளி நீருக்கான ஏக்கம் அதிகமாகும். நிறைவேறா ஏக்கம் கடும் சுமையாக மனத்தை வருத்த கண்கள் கலங்கும். வறண்ட தொண்டைக்கு கிடைக்காத நீர் வழிந்தோடும் இளகிய கண்களிலிருந்து. அத்தகைய நேரங்களில் எல்லாம் எப்படித்தான் அவனுக்கு மூக்கு வியர்க்குமோ வந்துவிடுவான். என்ன தான் தனிமையை ரசித்தாலும் விரும்பினாலும் சில நேரங்களில் ஆதரவான ஒரு சொல்லோ பார்வையோ தேவைப்பட்டுவிடுகிறது, அது எங்கிருந்தும் கிடைப்பது அரிது என்பதை உணர்ந்தபோதும் மனம் அறியாக் குழந்தையாக ஆசைப்பட்டுவிடும். அதற்கென்ன தெரியும் அப்பனின் ஒட்டுக்கோவண நிலைமை? இழுத்துப்போர்த்தத் தான் அது சொல்லும்.



சஹாராவில் தண்ணீர் வார்க்க அவன் வந்திருப்பான் என எண்ணிவிடாதீர்கள். அது அவனது பழக்கமில்லை. ஒரு நாளும் அவன் ஆறுதலாகப் பேசியதில்லை ஆனால் என்ன மாயமோ மந்திரமோ அவனது வசைமொழிகூட அவ்வளவு ஆறுதல் தரும். வேதனைப் பொழுதுகளின் வெம்மையைத் தான் அவன் கூட்டுவான். ஆனால் அந்தச் செயலில் ஒரு குளுமை இருக்கும். அது ஒரு விநோதமான மனோபாவம்தான். அவனைக் கொல்ல முடிந்தால் கொன்றுவிடத் துணியும் முதல் மனிதன் நானாகத்தான் இருப்பேன். ஆனால் எனது துக்கங்களிலிருந்து என்னைக் காப்பாற்ற முதலில் நீளும் கரத்திற்கு அவன் தான் சொந்தக்காரன். என் கிணற்றில் மிக ஆழத்தில் யாரும் அறிய மாட்டார்கள் என்னும் நம்பிக்கையில் நான் மறைத்து வைத்திருக்கும் குற்றங்களையும் அவனது மாயக் கண் கண்டுகொள்ளும்.  நான் குற்றம் செய்வதில் சமர்த்தன். அவனை எப்படியாவது ஏமாற்றிவிட்டு குற்றம்புரிவேன். நான் குற்றம்புரிய வேண்டும் என்பதற்காகவே ஏமாந்தவனாக நடித்தவனைப்போல் அடுத்த கணம் வந்திடுவான். முதலிலேயே என்னைத் தடுத்திருக்கலாமே என்பேன் ஒன்றுமே அறியாதவன் போல் மெல்ல நகைப்பான். அவன் முன் தோற்றுப்போய் அவமானத்தைத் தாங்கியபடி நிற்க வேண்டும். அவன் சாட்டையை எடுப்பதில்லை. ஆனால் அவன் சாட்டையை நினைத்தாலே உடம்பில் சுளீரென்றிருக்கும்.


வெளிச்சத்தில் சண்டையிட்டு இருட்டில் இணைந்துகொள்ளும் வெட்கமற்ற கணவன் மனைவி போன்ற உறவுதான் அவனுக்கும் எனக்கும். அவன் வந்தால் எரிச்சலாக இருக்கும். அவன் வராவிடிலோ அவன் நினைப்பாகவே இருக்கும். என்னை வெறுத்து எங்கும் போய்விட்டானோ எனக் கவலையாக இருக்கும். அவனிடம் சொன்னால், என்னை நீ நிம்மதியாக விட்டுவிடுவாயா என்ன, என்பது போல் பார்ப்பான். அவன் குறித்த என் நினைவுதான் அவனை இழுத்து வந்ததோ என்றுகூடத் தோன்றும். யாரிடமும் அவனைப் பற்றிக் குறைகூற முடியாது. ஏனெனில் இப்படிப்பட்ட ஒருவனோடு உனக்கென்ன நட்பு அவனை வெட்டிவிடு என வெடுக்கென சொல்லக்கூடும். அந்தச் சொல் அவனை வாட்டாது ஆனால் என்னை வாட்டிவிடும். உலகத்திலேயே மிக அதிகமாக நான் வெறுப்பது அவனைத்தான் ஆனாலும் அவன் என் நண்பன். என்னைவிட அவனை யாரும் நேசிக்க இயலாது. அவனைத் தவிர வேறு யாராலும் என்னை நேசிக்க முடியாது. எனவே தான் காத்திருக்கிறேன் அவனுக்காக... அவனது பிரியத்துக்காக... கிட்டப்போகப்போக எட்டப்போகும் அவனது தோழமைக்காக...       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்