செப்டம்பர் 8, 2025 நாளிட்ட தினமலர் நாளிதழில் ஒரு செய்தி கண்ணில் பட்டது. அகழாய்வுகள் குறித்த செய்தி அது. வாசிக்கத் தொடங்கினேன். அந்தச் செய்தியிடையே ஒரு பெட்டிச் செய்தி கண்ணில் பட்டது. அந்தப் பெட்டிச் செய்தியில், தமிழ்நாட்டின் இரும்புப் பயன்பாடு குறித்த தகவல்கள் இருந்தன. அதில், மயிலாடும்பாறை தேனி மாவட்டம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தேனி மாவட்டத்தில் ஒரு மயிலாடும்பாறை உள்ளது போல. ஆனால், சுமார் 4300 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட இரும்புப் பொருள்கள் அகழாய்வில் கிடைத்தது கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில்.
மயிலாடும்பாறையில் 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அகழ்வாய்வில் நுண்கற்காலத்திலிருந்து இடைக்காலத்தின் பிற்பகுதி வரையிலான பல்வேறு பண்பாட்டுப் பொருள்கள் கிடைத்தன. அவை நுண்கற்காலக் கருவிகள், புதிய கற்காலக் கருவிகள், புதிய கற்காலக் கருவிகளை மெருகேற்றும் தேய்ப்புக் குழிகள், பாறை ஓவியங்கள், இரும்புக் கால ஈமக்குழிகள், தமிழி (தமிழ- பிராமி) பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், நடுகற்கள், வணிகக்குழுக் கல்வெட்டு ஆகியவை.
புதிய கற்காலக் கருவி மெருகேற்றும் தேய்ப்புக் குழிகளுக்கு அருகில் மலை மேல் போடப்பட்ட அகழாய்வுக் குழிகளிலிருந்து 120 செ.மீ., 140 செ.மீ. ஆழத்தில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இம்மண்ணடுக்கில் கருப்பு-சிவப்பு பானை ஓடுகளும் இரும்புப் பொருள்களும் கிடைத்துள்ளன. அருகில் ஒரு பாறை ஓவியமும் இருந்துள்ளது. இங்கே கிடைத்த மாதிரிகளை ஆய்வுசெய்ததில் கி.மு. 2172இல், ஏறத்தாழ 4200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் இரும்பு பயன்படுத்தப்பட்டது என்று முடிவுசெய்யப்பட்டது. இந்தத் தகவல்கள் எல்லாம் இரும்பின் தொன்மை நூலில் உள்ளன. இந்நூல் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்னூலகத்தில் கிடைக்கிறது.
தினமலர் செய்தது கவனக்குறைவான பிழைதான். ஆனாலும் பிழை பிழைதானே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக